Labels

Sunday, July 31, 2011

ராஜபக்சேவை தண்டிக்க கோரி சென்னை ஐகோர்ட் வளாகத்தில் திருமாவளவன் கையொப்பம் பெற்றார்









இனப்படுகொலைக் குற்றவாளி ராஜபக்சே கும்பலை அனைத்துலக நீதிமன்றம் தண்டிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் முன்னெடுக்கும் நடவடிக்கைகளுக்கு ஆதரவாக விடுதலைச் சிறுத்தைகளின் கெயொப்ப இயக்கம் தொடங்கும் நிகழ்ச்சி 12.07.2011 அன்று சென்னையில் தொடங்கியது. இதனை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் தொடங்கி வைத்தார்.

29.07.2011 அன்று காலை 10.30 மணிக்கு சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் ஆவின் மையம் அருகே விடுதலைச் சிறுத்தைகளின் கையொப்ப இயக்கம் சார்பில் 13ஆம் நாளாக கையொப்பம் பெறும் நிகழ்ச்சி தொடங்கியது. கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் கலந்துகொண்டு வழக்கறிஞர்கள், உயர்நீதிமன்றப் பணியாளர்கள், சட்டக்கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்களிடையே துண்டறிக்கைகளை வழங்கி ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக கையொப்பமிடுமாறு கேட்டுக்கொண்டார். ஏராளமான வழக்கறிஞர்களும், அரசுப் பணியாளர்களும் வரிசையில் நின்று கையொப்பமிட்டனர்.


மூத்த வழக்கறிஞர் ஒருவர், தன்னை ஒரு காங்கிரஸ்காரர் என்று அறிமுகப்படுத்திக்கொண்டு, 1974லிருந்து ஈழத் தமிழருக்கு ஆதரவாக தான் செயல்பட்டு வருவதாகவும், காங்கிரஸ் கட்சியிலும் இனவுணர்வு உள்ளவர்கள் இருக்கிறோம் தம்பி, என்று சொன்னபடியே கையொப்பமிட்டார்.


திமுக, பாமக வழக்கறிஞர்களும் கையெழுத்திட்டனர். வழக்குகளுக்காக நீதிமன்றம் வந்திருந்த பொதுமக்களும், ஆட்டோ ஓட்டுனர்களும், மாணவர்களும் ராஜபக்சேவை தண்டித்தே தீரவேண்டும் என்று வெளிப்படையாகச் சொல்லியவாறு கையொப்பமிட்டனர்.


அப்போது செய்தியாளர்களிடம் பேசிய விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன்,


விரைவில் கையொப்ப இயக்கத்தை முடித்து அனைத்துப் படிவங்களையும் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பொறுப்பாளர்களிடம் ஒப்படைக்க இருக்கிறோம். அதற்கென ஓர் அரங்க நிகழ்ச்சியை ஏற்பாடு செய்து நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் அமைச்சர் ஒருவரை வரவழைத்து அவரின் மூலமாக ஐ.நா. பேரவைக்கு படிவங்களை அனுப்பவிருக்கிறோம். 10 லட்சம் பேரிடம் கையொப்பம் பெறுவது எங்கள் இலக்கு. 15 லட்சம் கையொப்பம் பெறுவதற்கான அளவில் படிவங்கள் விநியோகிப்பட்டுள்ளன. 10 லட்சத்திற்கும் மேலாக கையொப்பங்களை பெறுவோம் என நம்புகிறோம் என்றார்.

No comments:

Post a Comment