Labels

Thursday, July 14, 2011

சிங்கள அரசின் தமிழ் இனக்கொலை என்ற சி.டி.,யை மாணவர்களுக்கு வழங்கினார் வைகோ



இலங்கை ராணுவத்தால் ஈழத்தமிழர்கள் சித்ரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்டது குறித்து தயாரிக்கப்பட்ட சிங்கள அரசின் தமிழ் இனக்கொலை, ஐ.நா.,வின் மூவர் குழு அறிக்கை' என்ற சி.டி.க்களை ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ கல்லூரி மாணவ, மாணவிகளை சந்தித்து நேரில் வழங்கி வருகிறார்.

தாம்பரத்தில் சென்னை கிறிஸ்துவ கல்லூரி வாயிலில் 12.07.2011 அன்று ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ மாணவிகளை நேரில் சந்தித்து இலங்கை ராணுவத்தினர் தமிழர்களை கொன்று குவித்தது தொடர்பான சி.டி.க்களை வழங்கினார்.

அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வைகோ,


ஈழ தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டது குறித்த லட்சக்கணக்கான குறுந்தகடுகள் (சி.டி.) தமிழகம் முழுவதும் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த குறுந்தகடுகளை பார்த்து விட்டு சாப்பிட முடியாது; தூங்க முடியாது; கண்ணீர் விட்டு அழாமல் இருக்க முடியாது. சின்னஞ்சிறு பிஞ்சு குழந்தைகள் படுகொலை செய்யப்பட்டது; பெண்கள் கொடூரமாக கற்பழிக்கப்பட்ட அவலம்; தமிழ் இளைஞர்கள் அம்மணமாக இழுத்து வரப்பட்டு கண்கள் கட்டப்பட்டு கைகள் கட்டப்பட்டு சிங்கள ராணுவத்தினர் எட்டி மிதித்து சுட்டு படுகொலை செய்கின்ற கோரக்காட்சிகள்; உண்மையில் நடைபெற்ற சம்பவங்கள்.

அதில் இசைப்பிரியா என்ற இளநங்கை சிங்கள் ராணுவத்தினரால் கற்பழிக்கப்பட்டு கொல்லப்பட்டார் என்பதை ஆங்கில தொலைக்காட்சியில் பார்த்திருப்பீர்கள். அதை சிங்கள ராணுவம் மறுத்துள்ளது.

இந்த காட்சிகள் போலிக்காட்சிகள்; புலிகள் அதை செய்தார்கள் என்ற சகிக்க முடியாத பொய்யை சிங்கள ராணுவ பிரதிநிதி கூறியுள்ளார். சிங்கள பெண்ணிடம் விடுதலைப்புலிகள் பாலியல் பலாத்காரம் செய்ததாக இது வரை எந்த குற்றச்சாட்டையும் சிங்களவர்கள் கூட சொன்னதில்லை.


நம் தொப்புள் கொடி உறவுகள் இப்படி கொல்லப்பட்டார்களே என்பதை மாணவர் சமுதாயம் அறிந்து கொள்ள காணொலியை ஒவ்வொரு கல்லூரி
வாயிலிலும் நேரில் சந்தித்து கொடுத்துள்ளேன்.

மாணவர் சமுதாயத்தினருக்கு நான் கேட்பதெல்லாம் இந்த குறுந்தகடுகளை உங்கள் சக்திகேற்ப பிரதி எடுத்து மற்றவர்களுக்கு தாருங்கள். ஒவ்வொருவரும் இதை செய்தால் கோடிக்கணக்கான மக்களிடம் இந்த செய்தியை கொண்டு சேர்க்க முடியும்.

நிச்சயமாக இந்த படுகொலைகளை செய்தவன் தப்ப முடியாது. குழந்தைகளையும், பெண்களையும், இளைஞர்களையும் படுகொலை செய்தவன் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் குற்றவாளிக் கூண்டில் ஏற்றப்படுவது உறுதி. கொலைகார ராஜபக்சே கூட்டம் தண்டிக்கப்படுவது உறுதி.


இந்த பிரச்சினைக்கு ஒரே தீர்வுதான். சுதந்திர தமிழ்ஈழ தேசம்தான் தீர்வு. பொது ஜன வாக்கெடுப்பின் மூலமாக தெற்கு சூடான் உருவானது போல தமிழ் ஈழம் உருவாக வேண்டும் என்பதை உலகநாடுகள் முன்வைக்க வேண்டும்
என்றார்.

No comments:

Post a Comment