Labels

Wednesday, October 27, 2010

புலிகள் மீதான தடையை நீக்க போராட்டம்

தேசிய பாதுகாப்பு சட்டத்தில் சீமான் அவர்களை கைது செய்ய பிறப்பிக்கப்பட்ட ஆணை

11 உறுப்பினர்கள் கொண்ட அமைச்சரவை! விபரங்கள் வார இறுதிக்குள் வெளியாகும் - பிரதமர் ருத்ரகுமாரன்


பிரதமர், மூன்று துணைப் பிரதமர்கள், ஏழு அமைச்சர்கள் உட்பட பதினொரு உறுப்பினர்களைக் கொண்ட நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் அமைச்சரவையின் விபரங்கள் அடுத்த சில நாட்களில் வெளியிடப்படவுள்ளதாகவும் தெரிவு செய்யப்படவுள்ள மூன்று துணைப் பிரதமர்களுக்கும் ஏழு அமைச்சர்களுக்கும் ஒவ்வொரு அமைச்சுக்கள் ஒதுக்கப்படும் எனவும் இதைவிட ஒவ்வொரு அமைச்சுக்கும் துணை அமைச்சர்களும் தெரிவு செயய்யப்படவுள்ளதாகவும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் திரு.வி.ருத்ரகுமாரன் பொங்குதமிழுக்கு அளித்த செவ்வியில் தெரிவித்துள்ளார்.

உறுப்பினர்களிடையே அமைச்சர் பதவியைப் பெற்றுப் பணியாற்றும் திறமையும் தகுதியும் கொண்டவர்களை முன்வருமாறு அழைப்பு விடுத்தோம். குறிப்பிட்ட பொறுப்புகளுக்குத் தாங்கள் எவ்வகையில் தகுதியானவர்களெனக் கருதுகிறார்கள் என்பதனை எழுத்து மூலம் முன்வைக்கும்படி கேட்டு இவ்விருப்பத் தெரிவிப்புப் பத்திரத்தில், அவரவர் கல்விப் பின்னணி, மற்றும் வேலை, பட்டறிவுப் பின்னணி, கடந்த காலத்தில் தமிழீழ விடுதலைப் போராட்டத்துக்காக அவர்கள் வழங்கியிருந்த பங்களிப்பு, குறிப்பிட்ட அமைச்சின் ஊடாக முன்னெடுக்க உத்தேசிக்கும் திட்டங்கள், நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்காக அவர்கள் ஒதுக்கத் தயாராகவுள்ள நேரம் என்ற பல்வேறு விபரங்களை உள்ளடக்கும்படியும் கேட்டிருந்தோம்.

உற்சாகத்தோடு பலரும் பங்குபற்றியுள்ளார்கள்.
இவர்களிடையேயிருந்து தகுதியின் அடிப்படையில் தெரிவு செய்யப்படவுள்ள அமைச்சரவையின் விபரங்கள் அடுத்த சில நாட்களில் வெளியிடப்படவுள்ளன என்ற செய்தியை மகிழ்வோடு இவ்விடத்தில் தெரிவிக்க விரும்புகிறேன் என இச்செவ்வியில் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

நாடுகடந்த அரசாங்கத்தின் தோற்றம்


நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் முதன்முறை ஒரு கருத்துருவாக்கமாக அறிவிக்கப்பட்டபோது ஒரு புதிய எண்ணக்கருவாக இருந்த இதன் சாத்தியப்பாடு குறித்துப் பலதரப்பிலும் பல்வேறுவகையான சந்தேகங்கள் இருந்தன.
நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் சுதந்திரமான தனித்துவமான அமைப்பு வடிவமாக உருவெடுப்பதற்குரிய வகையில் தனது திட்டங்களை வகுத்திருந்த போதும் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பினால் இத் திட்டம் முதலில் அறிவிக்கப்பட்டமையால் வரக்கூடிய சட்டச்சிக்கல்கள் தொடர்பான அச்சங்கள் எழுப்பப்பட்டிருந்தன. சிறிலங்கா அரசாங்கத்திடமிருந்து அச்சுறுத்தல்கள் இருந்தன. நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் தொடர்பான கூட்டங்களை நடாத்துவதிலும் கூட இடையூறுகள் இருந்துன. நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தினை உருவாக்குவதற்கான நாடு தழுவிய செயற்குழுக்களை அமைப்பதிலும் தடங்கல்கள் வந்தன. தேர்தல்களை நடாத்துவதிலும் சவால்கள் எழுந்தன. இவ்வாறு பல்வேறு வகையான சவால்கள் இருந்த போதும் அவை எல்லாவற்றையும் தாண்டி, ஒரு வருட காலத்தில் நாம் நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் என்ற குழந்தையை ஆரோக்கியமான குழந்தையாகவே ஈன்றெடுத்துள்ளோம்.

நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் நிதானமாக அதேவேளை திடமாகத் தனது காலடிகளை முன்னெடுத்து வைக்கத் தொடங்கியுள்ளது. எமது கருத்துக்களை அனைத்துலக கொள்கை வகுப்பாளர்கள் உன்னிப்பாக அவதானிக்கத் தொடங்கியுள்ளனர். ஊடகங்கள், குறிப்பாக இந்தியாவிலும் அமெரிக்காவிலும் உள்ள பிரதான ஊடகங்கள், நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் கருத்துக்களையும் வெளிப்படுத்த ஆரம்பித்துள்ளன.
நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் என்ற குழந்தையை உலகத் தமிழ் மக்கள் ஆதரவு கொடுத்து நன்றாக வளர்த்தெடுக்கும்போதுதான் ஈழத் தமிழ் மக்களுக்கானதும் ஏன் உலகத் தமிழ் மக்களுக்கானதுமான முதலாவது தமிழர் அரசை – சுதந்திரமும் இறைமையும் கொண்ட தமிழீழத் தனியரசை வென்றடைவதில் வெற்றியடையும் என நான் உறுதியாக நம்புகிறேன்.

சமமான ஒரு வலுமையம்

நாடு கடந்த தமிழீழ அரசாங்கம், அனைத்துலக அரங்கில் சிறீலங்கா அரசை எதிர்கொள்ளக்கூடிய சமமான ஒரு வலுமையமாக உருவெடுப்பதற்கான அடிப்படைகளை நாம் நிலைநிறுத்துவோம் என நம்புகிறோம். தென்னாசியாவினதும் இந்து சமுத்திரப் பிராந்தியத்தினதும் புவிசார் அரசியலில் நாடு கடந்த தமிழீழ அரசாங்கமும் தவிர்க்க முடியாத ஒரு திடகாத்திரமான அங்கமாக நிலைபெறுவதற்கான சூழலை உருவாக்கமுடியும் எனவும் நாம் நம்புகிறோம்

ஈழத் தமிழ் மக்கள்மேல் இனவழிப்புப் போர்க்குற்றங்களைப் புரிந்தவர்களை அனைத்துலக அரங்கிலோ அல்லது நாடுகள் சார்ந்தோ அமைக்கப்படும் விசாரணை மன்றங்களில் நிறுத்துவதற்கான நிலைமைகளை உருவாக்குவதற்கும் தமிழர்களது பாரம்பரிய நிரப்பரப்பில் சிங்களக் குடியேற்றங்களை மேற்கொள்ளும், தமிழர்களை இனக்கபளீகரம் செய்ய முனையும் சிங்கள அரசின் முயற்சிகளை முறியடிப்பதிலும் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் கைது செய்யப்பட்ட போராளிகள் விடுவிக்கப்பட்டும் இடம் பெயர்ந்த மக்கள் மீளக் குடியேற்றப்பட்டும் தமது வாழ்க்கையை முன்னேற்றகரமாகக் கொண்டு நடாத்துவதற்கு எம்மால் ஆன முயற்சிகளை நாம் மேற்கொண்டு வருவோம்.

இனப்படுகொலைக்குள்ளாகியுள்ள நமது மக்கள் சுதந்திரமாக வாழ்வதற்கு சுதந்திரத் தமிழீழ அரசினை உருவாக்குவதனைத் தவிர வேறுவழியில்லை என்ற கருத்துக்கு கூடுதலான அனைத்துலக ஆதரவினை நாம் தேடுவதில் வெற்றியடைவோம். தமிழீழத் தனியரசு அமைவது பிராந்திய மற்றும் அனைத்துலக சக்திகளின் நன்மைகளோடும் ஒத்துப்போகக்கூடியது என்பதனையும் தென்னாசியாவினதும் இந்து சமுத்திரப் பிராந்தியத்தினதும் அமைதிக்கும் உறுதிப்பாட்டுக்கும் துணைபுரியக்கூடியது என்பதனையும் கருத்துநிலையில் உறுதியாக முன்வைத்து எமது நிலைப்பாட்டுக்குக் கூடுதலான ஆதரவினை வென்றெடுக்கும் வகையில் முன்னேறியிருப்போம்.

இவற்றையெல்லாம் நாம் மேற்கொள்வதென்பது நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்துக்குத் தமிழ் மக்கள் கொடுக்கும் ஆதரவிலும் பங்களிப்பிலுமே கணிசமாகத் தங்கியுள்ளது. நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் வெற்றிக்குரிய முதலாவது அடித்தளம் அதன் நிதித்தேவைகள் உறுதியானமுறையில் நிறைவு செய்யப்படுவதிற்தான் தங்கியுள்ளது. இது முதலாவதும் முக்கியமானதும் உடனடியானதுமான ஒரு சவாலாகும் என, நாடுகடந்த அரசாங்கத்தின் எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பான கேள்விக்குப் பதிலளிக்கையில் பிரதமர் ருத்ரகுமாரன் தெரிவித்தார்.

செனட்சபை


அவர் மேலும் தெரிவிக்கையில், நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசியலமைப்பு விதிகளின்படி ஒரு செனற்சபை உருவாக்கப்படவுள்ளது. இந்த செனற்சபை நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தில் மக்கள் பிரதிநிதிகளாகவுள்ள உறுப்பினர்களால் நிறைவேற்றப்படவுள்ள அரசியல் திட்டங்களை எவ்வகையிலும் தடுத்து நிறுத்தும் அதிகாரம்; கொண்டதாக இருக்க மாட்டாது. ஆதலால் மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகளிடையே செனற்சபை பற்றி அதிருப்திகள் எதுவும் எழுவதற்கோ அல்லது தேர்தல் மூலம் வெளிப்படுத்தப்பட்ட மக்களின் இறைமையை நலிவடைய வைப்பதற்கோ இங்கு இடமில்லை.

அறிவாளர்களும் துறைசார் நிபுணர்களும் உட்பட்ட சமூகத்தின் பல்வேறு பகுதியினரையும் உள்ளடக்கியதாக நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் அமையும்போது அது மக்களின் உண்மையான பிரதிநிதித்துவத்தைக் கொண்ட அமைப்பாக இயங்கும். இது நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தினைப் பலப்படுத்துவதற்கு உதவுவதோடு அனைத்துலக அரசாங்கங்களின் பார்வையிலும் கூடுதலான ஏற்புடைமையைப் பெறுவதற்கு உதவும்.

கனடாவில் வெளிவந்த சுவரொட்டிகள்


நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் உறுப்பினர்களைப் பொறுத்தவரை இவர்கள் தமது இலக்கில் எவ்வகை மாறுபட்ட நிலைப்பாட்டினையும் கொண்டவர்கள் அல்ல என்பதனை நான் முதலில் உறுதியாக எடுத்துரைக்க விரும்புகிறேன். அதனால் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தில் எதிர்க்கட்சியென ஒன்று இல்லை என்பதுதான் என் நிலைப்பாடு. இதேவேளை உறுப்பினர்களுக்கிடையே மூலோபாயங்களிலும் தந்திரோபாயங்களிலும் மாறுபட்ட கருத்துக்களும் எண்ணங்களும் சிந்தனைகளும் இருக்கலாம். தோன்றலாம். என்னைப் பொறுத்தவரை இவை மிக இயல்பானவையும் ஆரோக்கிமானவையும் ஆகும்.

நான் இந்தச் சந்தர்ப்பத்தில் கனடாவில் வெளிவந்த சுவரொட்டிகள் தொடர்பாகவும் எனது கருத்தினைப் பதிவு செய்ய விரும்புகிறேன். நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் உறுப்பினர்கள் ஒருசிலரை மையப்படுத்தி அவர்கள் இரண்டாவது அமர்வின் இறுதியில் அவையினைவிட்டு வெளிநடப்பு செய்ததைக் கண்டித்து சுவரொட்டிகள் வெளிவந்ததாக அறிகிறேன். ஏற்கெனவே நான் அவையில் குறிப்பிட்டிருந்தது போல உறுப்பினர்கள் தமது விருப்பின்மையை வெளிப்படுத்தும் ஒரு முறையாக வெளிநடப்பு செய்வது பாராளுமன்ற மரபுப்படி சனநாயக வழிமுறைகளில் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒன்றுதான். இந்த சனநாயக உரிமையைப் பயன்படுத்தியமைக்காக எந்தவொரு உறுப்பினரையும் கண்டனம் செய்யமுடியாது. வெளிநடப்பு செய்தவர்கள் உட்பட ஒவ்வொரு உறுப்பினரும் தமிழ்மக்களால் அவர்கள் ஒவ்வொருவரும் தமிழின விடுதலைமேல் கொண்டுள்ள பற்றுறுதியின் அடிப்படையிலும் எமது சுயநிர்ணய உரிமையையும் இறையாண்மையையும் நிலைநாட்டப் போராடுவதில் கொண்டுள்ள அர்ப்பணிப்பின் அடிப்படையிலும் தெரிவுசெய்யப்பட்டவர்களே.

தெரிவு செய்தோர் தாம்தெரிவு செய்து அனுப்பிய உறுப்பினர்களின் செயற்பாடுகள் பற்றிக் கருத்துத்தெரிவிக்கும் உரிமை அம்மக்களுக்கும் உண்டு. ஆனால் அக்கருத்துக்களைத் தெரிவிக்கும் முறையில் பண்புடன் நடந்து கொள்வதும் அவசியமானது. வேறுபாடுகளின் மத்தியிலும் அரசியல் வாதப்பிரதிவாதங்களின்போது தனிமனிதனின் கௌரவம் பாதுகாக்கப்படவேண்டும்.

யாப்பு தொடர்பான விவாதங்கள்


உங்கள் இணையத்தளத்தில் யாப்பு தொடர்பாக இடம் பெற்ற விவாதத்தைக் கவனித்தேன். நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசியலமைப்புத் தொடர்பாக இரு விடயங்கள் கண்டனமாக முன்வைக்கப்பட்டிருந்தன. ஒன்று எமது அரசியலமைப்பு விதிகள் சாதாரண பெரும்பான்மை வாக்குகளின் மூலம் இலேசாக மாற்றி அமைக்கப்படக்கூடியவை என்பது. இத் தகவல் சரியானதொன்றல்ல.

நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசியலமைப்பு தொடர்பான மாற்றங்கள் மூன்றில் இரண்டு பெரும்பான்மையின் மூலம் மட்டுமே மாற்றி அமைக்கப்படலாம் என்பது வரைவில் மிகத் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. சட்ட அவையின் சாதாரண வேலைகளான தீர்மானங்கள் நிறைவேற்றுதல், வரவு செலவுத் திட்டங்களை நிறைவேற்றுதல் போன்றவை சாதாரண பெரும்பான்மை மூலம் ஏற்றுக் கொள்ளப்படலாம் என்ற கூற்றினை அரசியலமைப்பு மாற்றத்துடன் இணைத்துப் பார்ப்பது தவறாகும். மேலும் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசியலமைப்பின் ஒரு சில விதிகள் தொடர்பாக மாறுபட்ட கருத்துக்கள் உறுப்பினர்களிடையே இருந்தமையால் இவ்விடயத்தில் ஒரு முடிவை எடுப்பதற்கு சாதாரண பெரும்பான்மை அடிப்படையை நாம் கடைப்பிடித்தோம். ஆனால் அரசியலமைப்பானது அமர்வுக்கு சமூகமளித்த அனைத்து உறுப்பினர்களாலும் ஏகமனதாகவே நிறைவேற்றப்பட்டது என்பதனையும் நாம் இங்கு கவனத்திற் கொள்ள வேண்டும்

இரண்டாவது, நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் நிறைவேற்றுக் குழுவினை சாதாரண பெரும்பான்மை மூலம் மாற்றிக் கொள்ள முடியாது என்பது பற்றியது. இங்கு இவ்விடயத்தினை நடைமுறைத் தேவைகளோடு பொருத்திப் பார்த்தே நாம் முடிவுக்குப் போக வேண்டும்.

பொதுவாக நாடுகளில் ஒரு அரசாங்கம் அமைய வேண்டுமானால் சாதாராண பெரும்பான்மையின் ஆதரவு பெறுதல் வழமையானது. ஆனால் சாதாரண பெரும்பான்மையினை அரசாங்கங்கள் பெறுவது நடைமுறைச்சாத்தியமாகாத நிலை உருவாகியபோது சிறுபான்மை அரசுகள் அமையும் நடைமுறையும் மக்களாட்சியின் ஒரு அங்கமாகியது. சில நாடுகளில் சாதாரண பெரும்பான்மையினை அரசுகள் கூட்டணி அமைத்தும்கூட பெறமுடியாவிடத்தில் மீள்பொதுத்தேர்தல்கள் நடாத்தும் நடைமுறையுள்ளது. வேறு சில நாடுகளில் சிறுபான்மை அரசாங்கங்கள் மாறி மாறி அமைந்தாலும்கூட குறிப்பிட்ட காலம் நிறைவடையும் வரை மீள்பொதுத்தேர்தல் நடாத்தப்படுவதில்லை.

இங்கு இவ் விடயத்தில் உலக நாடுகளிடையயே பொது வழமையைக் காணமுடியவில்லை. இங்கு பொதுவான ஒரு அடிப்படையே உண்டு. அதாவது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளால் வகுக்கப்பட்ட அரசியலமைப்புக்கேற்பவே அவை தீர்மானிக்கப்படுகின்றன. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் தத்தமது நாடுகளின் சூழலுக்கேற்ப இத்தகைய முடிவுகளை எடுத்துக் கொள்கிறார்கள். நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் மக்கள் பிரதிநிதிகள் அரசாங்கத்தின் நிலையானதன்யையும் இயங்குதிறனையும் கவனத்திற்கொண்டு அமைச்சரவையைக் கலைப்பதானால் மூன்றில் இரண்டு பெரும்பான்மை வேண்டும் என அரசியலமைப்பை நிறைவேற்றியுள்ளனர். இது அனைத்துலக அங்கீகாரத்துக்கு தடையாக அமையும் என்ற கருத்துடன் நான் உடன்படவில்லை.

பிரான்ஸ் நிகழ்வு

நாடு கடந்த தமிழீழ அரசாங்கமும் மக்களவைகளும் இணைந்து பிரான்சில் நிகழ்வொன்றை நடத்துவதாகச் செய்திகள் வெளியாகியுள்ளமை பற்றி எனக்கு எதுவும் தெரியாது. இது தொடர்பாக என்னுடன் எவரும் தொடர்பு கொள்ளவுமில்லை. நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் அலுவலுகத்திடம் அனுமதி பெறாத நிகழ்வுகளை நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் பங்கு பற்றும் நிகழ்வுகளாக நாம் பார்க்கமுடியாது. இதனால் நடைபெறுவதாகக்கூறப்படும் நிகழ்வுக்கும் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்துக்கும் எதுவித தொடர்புகளும் இல்லை.

இங்கு ஒரு விடயத்தை நாம் பிரித்துப் பார்க்க வேண்டும். நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் உறுப்பினர்கள் வெவ்வேறு நிகழ்வுகளில் பங்கு பற்றக்கூடும். இந் நிகழ்வுகளையெல்லாம் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் நிகழ்வுகளாக நாம் கொள்ள முடியாது. நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ நிகழ்வுகள் அமைச்சரவையின் ஊடாகவே தீர்மானிக்கப்படும். நாம் இந்தவார இறுதிக்குள் அமைச்சரவையை அறிவிக்கவுள்ளோம். அதுவரையிலான இடைக்காலத்துக்கு பிரதமர் அலுவலகம்தான் இவ்விடயங்களைக் கவனித்து வருகிறது என பிரதமர் ருத்ரகுமாரன் பொங்குதமிழுக்கு அளித்த பிரத்தியேக செவ்வியில் தெரிவித்துள்ளார்.

நன்றி: பொங்குதமிழ்

கேட்பது உயிர்ப்பிச்சை அல்ல, மறுக்கப்பட்ட நீதி - அ.ஞா. பேரறிவாளன் - மரண தண்டனைச் சிறைவாசி


அன்புக்குரியீர்,

வணக்கம். ராஜீவ் கொலை வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டு தற்போது உச்சநீதிமன்றத்தால் மரணதண்டனை உறுதி செய்யப்பட்டவர்களுள் நானும் ஒருவன். வேதனையோடும் வேண்டுதல் செய்தும் இந்த முறையீட்டு மடலை தங்களுக்கு அனுப்புகிறேன்.

எந்தவிதக் குற்றமும் செய்யாத நான் இன்று தூக்குக் கயிற்றை நோக்கி நிறுத்தப்பட்டிருக்கிறேன். இறுதியில் நீதி வெல்லும் என்ற நம்பிக்கை இருக்கிறது, என்றாலும் மனிதநேய அமைப்பினர், சட்டமறிந்த வழக்கறிஞர்கள் என்ற முறையில் உங்களோடு எனது காவல் துறை துன்பங்கள், வாக்குமூலத்தில் என் கையொப்பம் பெறப்பட்ட முறையை, எனது மனநிலையை, சிறைக் கொடுமைகளை வாழ்கின்ற தன்மையை பகிர்ந்து கொள்ள ஆசைப்படுகிறேன்.
அக்கறையோடும், உள்ளன்போடும் படித்தறிந்து எனது தரப்பு நியாயத்தை உணர்வீர்கள் என்று நம்புகிறேன். அவ்வாறு இம்முறையீட்டின் மூலம் உங்களது மனதை நான் வென்றுவிட வேண்டும் என்றே ஆசை கொள்கிறேன். அதுவே எனது நீதிக்கான போராட்டத்தில் வெற்றியின் படிக்கல்லாக கருதுகிறேன்.
கைது செய்யப்பட்டதன் பின்னணி

1991ஆம் ஆண்டு சூன் மாதம் 11ஆம் தேதி இரவு 10.30 மணிக்கு சென்னை, எழும்பூர், எண்.50. ஈவெ.கி.சம்பத் சாலை, பெரியார் திடல் என்ற முகவரியில் எனது பெற்றோர் என்னை விசாரணைக்கென சிபிஐ அதிகாரிகள், ஆய்வாளர்கள் கங்காதரன், இராமசாமி மற்றும் ஒருவரிடம் ஒப்படைத்தனர். அப்போது பெரியார் திடல் பிரமுகர்கள் பலர் இருந்தனர்.

ஏற்கனவே 10-6-1991 மற்றும் 11-6-1991இல் எமது சொந்த ஊரான சோலையார்பேட்டையில் (வேலூர் மாவட்டத்தில்) தமிழீழ விடுதலை ஆதரவாளர்கள், திராவிடர் கழகத்தவர் வீடுகளில் விசாரணை மேற்கொண்டபோது எமது இல்லத்திற்கும் சென்று விசாரித்துள்ளனர். அப்போது என்னைப் பற்றியும் கேள்வி எழுப்ப, எனது பெற்றோர் நான் சென்னை பெரியார் திடல், விடுதலை அலுவலகம் கணினிப் பிரிவில் பணியாற்றும் விவரத்தையும், அங்கு தங்கியுள்ள விவரத்தையும் கூறி அழைத்து வந்தனர்.

சட்டவிரோதக் காவல்

என்னை மல்லிகை அலுவலகத்திற்கு அழைத்துச் சென்றபோது, நாளை காலை, அதாவது 12-6-1991 அன்று அனுப்பி வைப்பதாக வாக்குறுதி, கூறியே அழைத்துச் சென்றனர். நேரே மாடியில் உள்ள ஒரு அறைக்கு என்னை அழைத்துச் சென்றனர். அங்கு துணை தலைமை ஆய்வாளர் ராஜு, காவல்துறை கண்காணிப்பாளர்கள் தியாகராசன், சலீம் அலி மற்றும் பலர் இருந்தனர். என்னைப் பற்றியும் எனது கல்வி, குடும்பப் பின்னணி பற்றியும் விசாரித்தனர்.
எனது கல்வித்தகுதி மின்னணுவியல் மற்றும் தொடர்பியல் தொழிநுட்பப் பட்டயம் என்று கூறியவுடன், துணை தலைமை ஆய்வாளர் ராஜு கேட்டார். நீதான் வெடிகுண்டு செய்தவனா? நான் மிரண்டு விட்டேன். எனது படிப்போடு வெடிகுண்டு எந்தவகையில் தொடர்பு என்பது விளங்காமல் தவித்தேன். அப்போது நான் போட்டிருந்த சட்டையின் கீழ்ப்பக்கம் சிறிய துளை இருந்தது. அதைப் பார்த்தபடியே இந்தத் துளை ஸ்ரீபெரும்புதூர் குண்டு வெடிப்பில் ஏற்பட்டதுதானே, என்று கூறினார். நான் மறுத்தேன். ஆனால் என்னை சரியான முறையில் கவனித்தால் ஒப்புக்கொள்வேன் என்று கூறி இரண்டு ஆய்வாளரிடம் ஒப்படைத்தனர்.

கீழ்தளத்திற்குக் கொண்டுவரப்பட்டேன். அப்போது ஆய்வாளர்கள் சுந்தரராசன் மற்றும் இருவர் (பெயர் நினைவில்லை) எனது வெற்றுடம்பில் உள்ளங்கையினால் அடித்தனர். ஒருவர் ஷீ காலால் எனது கால் விரல்களை மிதித்தார். திடீரென ஆய்வாளர் சுந்தரராசன் தனது முழங்கால்களால் எனது விதைப்பையில் கடுமையாகத் தாக்கினார். நான் வலியால் துடித்துக் கீழே விழுந்தேன். எனக்குத் தெரியாத, சம்பந்தமில்லாத பல சம்பவங்களைக் கேட்டு துன்புறுத்தினர்.

அடுத்த நாள் காலை, மல்லிகை அலுவலத்தின் சித்ரவதைக் கூடம் என அழைக்கப்படும் மேல் மாடிக்குக் கொண்டு செல்லப்பட்டு ஆய்வாளர்கள் ரமேஷ், மாதவன், செல்லத்துரை, காவல்துறை துணை கண்காணிப்பாளர் சிவாஜி ஆகியோரிடம் ஒப்படைக்கப்பட்டேன். இவர்கள்தான் அப்போது மல்லிகையில் துன்புறுத்தலில் பெயர் பெற்றிருந்தனர். அங்கு சென்றவுடன் எனக்குக் குடிக்க நீர் மறுக்கப்பட்டது, உணவு மறுக்கப்பட்டது, சிறுநீர் கழிக்கவும் அனுமதி மறுக்கப்பட்டது.

ஆய்வாளர்கள் மாதவன், ரமேஷ் ஆகியோர் முழங்காலை மடக்கியபடி கைகளை நீட்டியவாறு நிற்கச் சொல்வர். (அதாவது இருக்கையில் அமர்வது போன்ற பாவனையில்). அவ்வாறு நின்று கொண்டே இருக்க வேண்டும். அப்போது, எனது பின்னங்கால்களில் (ஆடுதசை) கழியால் அடிப்பார்கள். ஆய்வாளர்கள் செல்லத்துரை ஒரு பிவிசி பைப்பில் சிமெண்ட் அடைத்து, அதன் மூலம் எனது கை முட்டிகளை நீட்டச் சொல்லி அடிப்பார். இதில் ஆய்வாளர்கள் மாதவன், செல்லத்துரை ஆகியோர் மிகவும் கீழ்த்தரமான வார்த்தைகளை பயன்படுத்துவதில் புகழ் பெற்றிருந்தனர். மற்றவர்களும் பயன்படுத்துவது உண்டு, என்றாலும் இவ்விருவரும் அதில் உயரத்தில் நின்றனர் என்றே கூறவேண்டும். அவை கூறுவதற்கும் கூசக்கூடியவை என்பதால் அவற்றை குறிப்பிடுவதை தவிர்க்க விரும்புகிறேன்.

காவல்துறை துணை கண்காணிப்பாளர் கிருட்டிணமூர்த்தி என்றொருவர் இருந்தார். அவரும் என்னைத் துன்புறுத்தினார். அவரின் பாணி வேறுபட்டது. சுவர் ஓரமாக முதுகை சாய்த்து உட்காரச் சொல்வார். பின்னர் ஒரு காலை ஒரு பக்கச் சுவற்றுடன் ஒட்டினார்போல் ஒரு காவலரை பிடிக்கச் சொல்வார். மற்றொரு காலை மற்ற பக்கச் சுவற்றுக்கு அதாவது 180 பாகைக்கு விரிப்பார். அவ்வாறு விரியும்போது ஏற்படும் வேதனை அளவிடமுடியாததாக இருந்தது.
ஆய்வாளர் டி.என். வெங்கடேசுவரனும் என்னைத் துன்புறுத்தியவர். அவர் பென்சில் அல்லது சிறு கட்டைகளை விரல் இடுக்கில் வைத்து அழுத்திப் பிடித்துத் திருகுவார். ஊசிகளை விரல் நகங்களுக்கிடையே ஓட்டுவார். ஷீ கால்களால் எனது கால்களின் சுண்டு விரல்களில் ஏறி மிதிப்பார். இதுபோன்ற நுணுக்கமான கொடுமைகளைச் செய்வார்.

சிபிஐ துறையினர் எம்மை துன்புறுத்துவதில் ஏற்படும் இன்பத்தை எவ்வாறு விரும்பினர் என்பதற்கு எனக்கு ஏற்பட்ட உதாரணம் ஒன்று உண்டு. ஒருநாள் ஓர் ஆய்வாளர் என்னை அழைப்பதாகக் கூறி நானிருந்த அறையிருந்து துன்புறுத்தல் அறைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு என்னைக் கீழே உட்காரச் சொன்னார்கள். பின்னர் திடீரென எனது இடதுபக்க முகத்தில் செருப்புக் காலால் எட்டி உதைத்து ஒரு அதிகாரி கூறினார், ஏன்டா நாடு விட்டு நாடு அகதியா வந்த நீங்கள் இங்கு எங்கள் தலைவரை கொலையா செய்கிறீர்கள்? என்றார். எனக்கு அழுகை வந்தது. அருகில் அமர்ந்திருந்த ஆய்வாளர் மாதவன் சிரித்தபடியே இவன் சிலோன்காரன் இல்லை, தமிழ்நாட்டுக்காரன்தான் என்றார். உடனே என்னைத் திரும்பவும் உள்ளே அனுப்பி விட்டனர்.
இதை ஏன்? கூறுகிறேன் என்றால், நான் யார் என்ற விவரம்கூடத் தெரியாமல், என்ன குற்றமிழைத்தார்? என்றும் அறியாமல் யாரையாவது அப்பாவிகளைத் துன்புறுத்தி குற்றவாளிகளாக்கி பெயரெடுக்கும் மனப்பான்மையோடு காவல் துறையினர் இருந்தனர் என்பதைக் காட்டவே குறிப்பிட்டேன். அவ்வாறு என்னை உதைத்த அதிகாரியின் பெயர் ஆய்வாளர் மோகன்ராஜு.

மல்லிகையின் கீழ் தளத்தில் காவல்துறைக் கண்காணிப்பாளர் தியாகராசனின் அலுவலகம் இருந்தது. அவர் திடீரென இரவு 2 அல்லது 3 மணிக்குதான் அழைப்பார். எதையாவது கேட்பார். நாம் பேசிக் கொண்டே இருக்க வேண்டும். தூங்கினால் அடிப்பார். இதுபோல உடல் ரீதியான, மன ரீதியான இன்னல்களைக் கொடுத்தனர்.

ஒரு மனிதனை எந்தளவிற்குக் கேவலமான முறையில் நடத்த முடியுமோ, பேச முடியுமோ அவ்வாறு நடத்தினர், பேசினர். விசாரணைக்கென்று சட்டப்புறம்பாக அழைத்துச் சென்று நீதிமன்றம் முன்பு ஆஜர்படுத்திய 19ஆம் தேதி வரை என்னைக் குளிக்கவும் பல் தேய்க்கவும் கூட அனுமதிக்கவில்லை. 19ஆம் தேதி ஆய்வாளர் ரமேஷ் என்னருகில் வரும்போது என்னிடமிருந்து வீசிய கெட்ட வாடையை பொறுக்க முடியாமலே குளிக்க அனுமதித்தார். மேலும் அன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டியிருந்ததாலும் அனுமதி வழங்கப்பட்டது.

குடிப்பதற்குத் தண்ணீர் தர மறுத்தனர், தாங்கள் கூறும் பொய்யான குற்றச்சாட்டுகளை நான் ஏற்றுக் கொள்ளாதவரை குடிக்க நீர் தரமாட்டோம் என்று கூறுவார்கள். பின்னர் அவர்களாகவே சிறிது நீர் ஊற்றுவர். இரவுகளில் தூங்கவிட மாட்டார்கள். அவ்வாறு நான் தூங்காமல் இருக்க இரவுக் காவலர்கள் வசம் பொறுப்பு ஒப்படைக்கப்படும். தூங்கினால் முகத்தில் தண்ணீர் ஊற்றுவர். உணவையும் தங்கள் ஆயுதமாகப் பயன்படுத்தினர். இவ்வாறு அந்த சட்டவிரோதக் காவல் நாட்களில் நான் துன்புறுத்தப்பட்டேன்.

இவ்வழக்கில் எவ்வாறு பல நிரபராதிகள் குற்றம் சாட்டப்பட்டனர் என்பதற்கு மேலும் ஒரு உதாரணம் கூற முடியும். எனது சட்டவிரோத காவலின்போது ஒருநாள் துணை தலைமை ஆய்வாளர் சிரிகுமார் என்பவர் என்னிடம் வந்து, டேய், உன் ஊருக்கு பக்கத்தில் உள்ள கோலார் தங்கவயல் தான் எனது ஊரும். நான் கூறும் மூன்று பொருட்களில் ஒன்றை இருக்கும் இடம் கூறு. உன்னை விடுதலை செய்துவிடுகிறேன் என்றார். நான் என்னிடம் எதை சார் கேட்கிறீர்கள் என்றேன். அவர் கூறினார், ஒன்று ஏ.கே.47 துப்பாக்கி அல்லது ஒயர்லெஸ் கருவி அல்லது தங்கக் கட்டிகள் புதைத்து வைத்துள்ள இடம், இவற்றில் ஒன்றை கொடுத்துவிட்டால் விட்டுவிடுகிறேன் என்றார். நான் என்னிடம் இருந்தால்தானே கொடுப்பேன். இல்லாமல் எவ்வாறு கொடுப்பது என்று கேட்டேன். அப்படியானால் உன்னை யாரும் காப்பாற்ற முடியாது என்று கூறிவிட்டுச் சென்று விட்டார்.

இந்தத் துணைத் தலைமை ஆய்வாளர்தான் கோடியக்கரை சண்முகம் கொலையான சம்பவத்தில் தொடர்புபடுத்தப்பட்டவர் என்பதையும், இலண்டனில் இவ்வழக்கு தொடர்பான ஆவணங்களை திருட விட்டுவிட்டேன் என்று கூறியவர் என்பதையும் இங்கு தங்களுக்கு நினைவுபடுத்த விரும்புகிறேன்.
இரவு, பகல் 24 மணி நேரமும், காலைக் கடன்களை முடிக்கும்போதும் கூட கைகளில் விலங்குகளோடுதான் வைக்கப்பட்டிருந்தேன். சாப்பிடும்போது மட்டும் ஒரு கையை தளர்த்தி விடுவர். படுக்கும்போதுகூட விலங்கு பூட்டியே இருக்கும். இவ்வாறான கொடுமைகள் புரிந்தனர். மேலும் பல அதிகாரிகள் பல மாறுபட்ட பாணியில் துன்புறுத்தினர். அனைவரின் துன்புறுத்தலும் கடுமையானதாக, இரக்கமற்றதாக இருந்தது.

இந்த நேரத்தில் என்னை சட்டவிரோதக் காவலில் வைத்திருந்ததற்கான சில அத்தாட்சிகளைக் குறிப்பிட விரும்புகிறேன். முதலாவதாக, புலனாய்வு அதிகாரி காவல்துறை துணை கண்காணிப்பாளர் இரகோத்தமன் தனது சாட்சியம் பக்கம் 942-ல், 11.6.1991 அன்று எனது சொந்த ஊரான சோலையார்பேட்டையில் உள்ள எனது வீட்டில் சோதனை செய்து, எட்டு பொருட்களைக் கைப்பற்றியதை ஒப்புக் கொள்கிறார். 11.6.1991 அன்று என்னைப் பற்றி விசாரணை செய்ய அதிகாரிகளை அனுப்பியதாகவும் பக்கம் - 451ல் கூறுகிறார். 13.6.1991 அன்று எனது தாயார், மல்லிகைக்கு எனது மாற்றுடை கொண்டுவந்தபோது, அவரை சந்திக்க அனுமதி தராமல் துணியை மட்டும் பெற்றுக் கொடுத்தனர் என்பதையும் அவர் மறுக்கவில்லை.

இவற்றுக்கெல்லாம் மேலாக எனது ஒப்புதல் வாக்குமூலம் என்பதில் 11.6.1991 அன்றைய சம்பவத்திற்குப் பின் 19.6.1991 வரை எந்த விவரமும் காணப்படவில்லை. மேலும், வாக்குமூலப்படி என்னை 18.6.1991 அன்று கைது செய்ததாக உள்ளது. ஆனால் காவலறிக்கையில் 19.6.1991 அன்று காலை 9.00 மணிக்கு பெரியார் திடல் அருகில் கைது செய்ததாக உள்ளது.

இவையே என்னை எவ்வாறு எட்டு நாட்கள் சட்டவிரோதக் காவலில் வைத்து துன்புறுத்தி, பொய் வழக்குத் தொடுத்தனர் என்பதற்கு சான்றாக உள்ளது.
முதல் நீதிமன்ற ஆஜர் படுத்தல் இவ்வாறு மறுநாள் காலை விசாரித்துவிட்டு அனுப்பிவிடுவோம் என்று பொய்கூறி அழைத்துவந்து எட்டு நாட்கள் சட்டவிரோதக் காவலில் வைக்கப்பட்டு கடுமையான சித்ரவதைகளுக்குப் பின்னர் 19.6.1991 அன்று செங்கல்பட்டு நோக்கி என்னையும், எமது வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டு தற்போது ஆயுள் தண்டனை அனுபவிக்கும் இராபர்ட் பயஸு என்பவரையும் அழைத்துச் சென்றனர். அப்போது காவல்துறை துணை கண்காணிப்பாளர்கள் இரகோத்தமன், இராமகிருஷ்ணன், ஆய்வாளர்கள் இக்பால், ரமேஷ் மற்றும் சிலர் உடன் வந்தனர். அப்போது நான், இன்றுடன் என்னை விடுதலை செய்துவிடப் போகிறார்கள். தொல்லைகள், சித்ரவதைகள் முடிந்தன என்ற நம்பிக்கையுடன் இருந்தேன். காரணம், அப்போது எனக்கு எந்த சட்டமும் தெரியாது. அதற்கு முன்னர் எந்தக் குற்றத்திலும் ஈடுபட்டிருக்கவில்லை. நீதிமன்ற நடைமுறைகள் தெரியாது.

இந்த நிலையில் செங்கை நீதிமன்றத்தினுள் எமது வேன் நுழைந்தது. அப்போது மேற்சொன்ன அதிகாரிகள் நீதிமன்றத்தில் எங்களை வாய் திறக்கக்கூடாது என்றும் அவ்வாறு அமைதியாக இருந்தால் விட்டு விடுவதாகவும், இல்லையயன்றால் மீண்டும் மல்லிகை அழைத்துச் சென்று துன்புறுத்துவோம் என்றும் கூறி மிரட்டினர். எனவே நாங்கள் மிரண்ட நிலையில் இருந்தோம். பின்னர் உள்ளே அழைத்துச் சென்றனர். நீதிபதி எமது பெயர்களை கூறி அழைத்தார். பின்னர் காவல்துறை துணை கண்காணிப்பாளர் இரகோத்தமனிடம் ஏதோ கூறினார். எம்மை அங்கு இருந்த வேறு அறைக்குள் அனுப்பி விட்டனர். பின்னர் நீதிமன்ற கூண்டிலேறி காவல்துறை துணை கண்காணிப்பாளர் ஏதோ வாதம் புரிந்தார். பின்னர் மீண்டும் நீதிபதி முன்பு நாம் அழைத்துச் செல்லப்பட்டோம். அப்போது அவர் எனக்கு 18.7.1991 வரை காவல் நீட்டிப்பு கொடுப்பதாகக் கூறினார் எனக்குக் காரணம் புரியவில்லை. மீண்டும் மல்லிகை சித்ரவதைக் கூடத்திற்கே அழைத்து வரப்பட்டோம்.

அந்த ஒரு மாத காலத்தில் தொடர்ச்சியாக அல்லாமல் விட்டுவிட்டு சித்ரவதைகள் தொடர்ந்த வண்ணம் இருந்தன. காயம் ஏற்படாவண்ணம் உள்ளங்கால்களில் கம்பால் அடிப்பர் பின்னர் குதிக்கச் சொல்வர். இவ்வாறு சித்ரவதைகள் தொடர்ந்தன.

இரண்டாவது நீதிமன்ற ஆஜர்படுத்தல்

இரண்டாம் முறையாக உயர்நீதிமன்ற வளாகத்தில் அமைந்திருந்த தடா நீதிமன்றத்தில் நீதிபதி திரு. சித்திக் முன்பு நான், ராபர்ட் பயஸ், கோடியக்கரை சண்முகம் ஆகியோர் ஆஜர்படுத்தப்பட்டோம். அப்போது எனது உறவினர்கள் 200 பேர் அல்லது 300 பேர் வெளியே கூடியிருந்தனர். என் பெயர் கூறி அழைத்தனர். அப்போது காவல்துறை துணை கண்காணிப்பாளர்கள் இரகோத்தமன், இராமகிருஷ்ணன் மற்றும் சில ஆய்வாளர்கள் வந்திருந்தனர். மேல் மாடியில் நீதிபதி அமர்ந்திருந்த அறைக்கு வெளியே நிற்க வைக்கப்பட்டோம். அப்போது காவல்துறை துணை கண்காணிப்பாளர்கள் இருவரும் எம்மிடம் நீதிபதி முன்பு அமைதியாக நின்றுவிட்டு அவர் கூறுவதைக் கேட்டு தலையசைத்துவிட்டு வரவேண்டும் என்றும் தவறினால் மீண்டும் தங்கள் வசம் ஒப்படைக்கும்போது துன்புறுத்துவோம் என்றும் கூறி மிரட்டினர்.

நாங்களும் ஒவ்வொருவராக ஆஜர்படுத்தப்பட்டபோது நீதிபதி 16.8.1991 வரை காவல் நீட்டிட்பு செய்திருப்பதாகக் கூறியதைக் கேட்டு அமைதியாக வெளியேறினோம். ஒரு அரை வினாடி கூட எமக்கு அங்க நிற்க அவகாசமிருக்கவில்லை. நீதிபதி எம்மை நிமிர்ந்துகூட பார்க்கவில்லை. எனவே பயத்தின் காரணமாகவும், நீதிபதி எவ்வித விசாரிப்புகளும் செய்யாததாலும் எம்மால் எந்த முறையீடும் செய்ய முடியவில்லை.

பின்னர் மல்லிகை அலுவலகம் அழைத்து வந்த பின்பு காவல்துறை துணை கண்காணிப்பாளர் இரகோத்தமன் என்னிடம் நீதிமன்ற வளாகத்தின் வெளியே கூடியிருந்த கூட்டம் யார்? 200,300 பேர் இருந்தனரே, அவர்கள் யார்? நீ வரச் சொன்னாயா? என்றார். எனக்குத் தெரியாது என்றும் எனது உறவினர்களாக இருக்கலாம், என்னால் சரியாகப் பார்க்க அவகாசமில்லாததால் கூற முடியாது என்றும் சொன்னேன். மேலும் கடந்த ஒரு மாத காலத்திற்கும் மேலாக என்னை உங்கள் காவலில் வைத்திருக்கும்போது நான் எவ்வாறு வரச் சொல்ல முடியும் என்று கேட்டேன். அதற்கு அவர் ஆத்திரமுற்று எனது கன்னத்தில் அறைந்தார். பக்கத்தில் இருந்த ஆய்வாளர்களிடம் என்னை அடிக்குமாறு கூறினார். எனது உறவினர்கள் எனக்கு ஆதரவாக வந்ததுகூட பொறுக்காமல் துன்புறுத்தினார்.

மூன்றாவது நீதிமன்ற ஆஜர் படுத்தல் மற்றும் வாக்குமூலத்தில் கையயாப்பம் பெற்ற முறை

மூன்றாம் முறையாக நாங்கள் அடைக்கப்பட்டு துன்புறுத்தப்பட்ட பூவிருந்தவல்லி தனி கிளைச் சிறையிலேயே நீதிமன்ற அமர்வு நடந்தது. அந்தக் கிளைச் சிறை வளாகம் சிபிஐ துறையினரால் தத்தெடுக்கப்பட்டு எங்களை அடைத்து வைத்துத் துன்புறுத்தப் பயன்படுத்தப்பட்டது. என்னை மல்லிகையிலிருந்து 3.8.1991 அன்று கொண்டு சென்று பூவிருந்தவல்லி கிளைச் சிறையில் அடைத்தனர். அன்று காவல்துறை துணை கண்காணிப்பாளர் இராமகிருஷ்ணன்தான் பொறுப்பிலிருந்தார். தினமும் அதிகாரிகள் முறைவைத்து துன்புறுத்துவர்.

அங்கிருந்த அலுவலகத்தில் (அப்போது அது சித்ரவதைக் கூடம்) வைத்துதான் சாட்சி 52 காவல்துறை கண்காணிப்பாளர் தியாகராசன் என்னைத் துன்புறுத்தி எழுதிய பல பக்கங்களில், பல நாட்களைக் குறிப்பிட்டுக் கட்டாய கையயழுத்துகள் பெற்றார். அப்போது உடன் சில ஆய்வாளர்களும் துன்புறுத்தினர். அதில் என்ன இருக்கிறது எனப் படித்தறிய அனுமதிக்கவில்லை. கையெழுத்திட்டால் என்னை விட்டுவிடுவதாகவும் கூறினர். எனக்கும் தடா சட்டம் தெரியாது. எனக்கு மட்டுமன்று தமிழகத்திற்கே அன்று தடா சட்டம் புதிதானது. இந்த நிலையில் துன்புறுத்தல் தாங்காமல் எனது உயிரைக் காத்துக் கொள்ளும் பொருட்டு அவர்கள் கூறியபடி கையொப்பமிட்டேன். ஆனால் பரிதாபம் என்னவெனில் அவருக்கும் தடா பற்றி ஏதும் தெரியாது. சாதாரண சட்டமுறைகளை அறிந்தவர் என்ற ரீதியிலேயே அவர் கூற்று இருந்தது.

எனவே, தடா சட்டம் தெரியாது; ஒப்புதல் வாக்குமூலம் தெரியாது; அதன் சட்ட ரீதியான தாக்கம் தெரியாது, என்றாலும் கையெழுத்திட்டு விட்டேன். கையெழுத்திடக் கட்டாயப்படுத்தப்பட்டேன்.

எந்த அறையில் என்னைத் துன்புறுத்திக் கையெழுத்துப் பெற்றனரோ அதே அறையில் 16.8.1991 அன்று நீதிபதி அமர்வு நடத்தினார். முழுக்க முழுக்க சிபிஐ-யினரின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதி அது. நீதிபதி முன்பு ஆஜர்படுத்துமுன் காவல் துறை துணை கண்காணிப்பாளர் இரகோத்தமன் மற்றும் அதிகாரிகள் இவ்வாறு என்னை எச்சரித்தனர்: நீ ஏதும் துன்புறுத்தியது பற்றிக் கூறினால், மீண்டும் உன்னைக் கொடுமைப்படுத்துவோம், சுட்டுக் கொன்றுவிட்டு, தப்பி ஓடியதால் சுட்டோம் என்று கூட கணக்குக் காட்டிவிடுவோம் என்று மிரட்டினர். இவ்வாறான மிரட்டல்களுக்கு அஞ்சியும், கிளைச்சிறை இருந்த சூழலும், அச்சமும், சட்ட அறியாமையும் எனது வாயை அடைத்து விட்டன.

வாக்குமூலம் பற்றிய எனது முறையீடுகளும் உச்சநீதிமன்றத் தீர்ப்புரையும்

அன்றே நானும், ராபர்ட்பயஸும் செங்கல்பட்டு கிளைச்சிறையில் அடைக்கப்பட்டோம். அங்கு தண்டனைச் சிறைவாசிகள் அணியும் வெள்ளுடை தரப்பட்டது. வேறு எந்த உடையும், பொருட்களும் அனுமதிக்கப்படவில்லை. ஓலைப் பாயும், தலையணையும், போர்வையும் மட்டுமே தரப்பட்டன. இவை அனைத்தும் ஒரு மரண தண்டனை சிறையாளிக்கான நடத்தை விதிகள் என்பதை பின்னரே அறிந்தோம். அப்போது எமக்கு சிறை விதிகள் தெரியாது.
சிபிஐ அதிகாரியான காவல்துறை துணை கண்காணிப்பாளர் இரகோத்தமன் ஒவ்வொரு விசாரணை சிறைவாசியை கொண்டு வரும்போதும் எமது அடைப்பிற்கு வந்து வழக்கு பற்றி விசாரணை மேற்கொள்வார். அப்போது எமக்கு அவ்வாறு விசாரிக்க போலீஸ் அதிகாரிக்கு அதிகாரமில்லை என்பது தெரியாது. எனவே சிபிஐ-யின் காவலில் இருப்பது போன்ற உணர்வு இருந்தது. சிறை என்ற உணர்வே இல்லை.

இந்தக் கொடுமைகள் கொடுத்த அதிர்ச்சியிலிருந்து மீண்டு வருவதற்கே நீண்ட நாட்கள் பிடித்தன. அவ்வாறு மீண்டு, தடா சட்டம் பற்றி, வாக்குமூலங்கள் பற்றி அறிய நேர்ந்தபோது நான் கையெழுத்திட்ட முறையை, எனக்கு நேர்ந்த துன்புறுத்தல்களை விளக்கி 11.2.1992 தேதியிட்டு மனு கொடுத்து, அது கு.ப. மனு எண்.137/92 என தடா நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டுள்ளது.

குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு எமக்கு ஒப்புதல் வாக்குமூலங்கள் என்பனவற்றின் பிரதிகள் தரப்பட்டவுடனே மனு ஒன்றைச் சமர்ப்பித்தேன். அதிலும் துன்புறுத்திக் கையெழுத்துப் பெற்ற விவரத்தையும், எனவே அவற்றை ஏற்கக்கூடாது எனக் கோரியும் கொடுத்தேன். இது 26.8.1992ஆம் தேதியில் என்னால் தரப்பட்டு கு.ப. மனு எண்.582/92 என தடா நீதிமன்றத்தால் விசாரிக்கப்பட்டுள்ளது.

இந்த இடத்தில் ஒரு வருத்தத்திற்குரிய வியத்தைக் குறிப்பிட விரும்புகிறேன். உச்சநீதிமன்ற நீதியரசர் வாத்வா அவர்கள் பக்கம் 87-ல்,
“ஏதேனும் வலுவந்தம், அச்சுறுத்தல் அல்லது எவ்வகையிலும் மூன்றாம் தரமுறையை பயன்படுத்தியதால்தான் அல்லது எதிரியின் உளவியலை பாதிக்கச் செய்ததால்தான் ஒப்புதல் வாக்குமூலம் தரப்பட்டது என்று வழக்கை விசாரித்த நீதிமன்றத்தின் முன் முறையீடு ஏதும் செய்யப்படவில்லை.”
என்று தெள்ளத் தெளிவாகவே நாம் புகார் கூறவில்லை என்று கூறுகிறார். உண்மையில் 11.2.1992 மற்றும் 26.8.1992 ஆகிய தேதிகளில் மனுக்களாகவும், சாட்சி 52 காவல்துறை கண்காணிப்பாளர் தியாகராசனிடம் குறுக்கு விசாரணை செய்யும்போதும், 313 குற்றவியல் நடைமுறைச் சட்டம். கேள்விகளின் போதும் எவ்வாறு துன்புறுத்தி, கட்டாயப்படுத்தி கையெழுத்துப் பெற்றனர் என்பதைக் கூறியுள்ள நிலையில் நீதியரசர் இவற்றை கவனத்தில் கொள்ளாமை எமக்கு மிகுந்த வேதனை தருகிறது.

சிறைத் துன்பங்கள்

1.9.1991 அன்று எனது மூத்த சகோதரியின் திருமணம் நடந்தது. அதில் கலந்து கொள்ள என்னை அனுமதிக்க வேண்டும் எனக் கூறி சிறப்பு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தேன். ஒரே சகோதரனான எனது தேவை மிகுதியாக இருந்தும் அனுமதி மறுக்கப்பட்டது. வேதனைகளை சுமந்துதான் அவரது திருமணம் நடந்தது.

எம்மைப் பொறுத்தளவில், சிறையில் நாம் சாதாரண சிறைவாசிகளாக பார்க்கப்படவில்லை. எமது சிறை நடவடிக்கைகள் எதுவும் கணக்கிலெடுக்காமல், வழக்கில் இறந்துபோன நபர்களின் சமூக அந்தஸ்து மட்டுமே கணக்கிலெடுக்கப்பட்டது. எமக்காக புதிய விதிகள் இயற்றப்பட்டன.

உதாரணமாக, இன்றளவும் நாம் தனிமைச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளது, ஒரு மரணதண்டனை சிறைவாசியைக் கூட தனிமைப்படுத்திவிடக் கூடாது என்று உச்சநீதிமன்ற ஆணைகள் இருந்தும்கூட, ஏற்கனவே தனிமைச் சிறையில் இருந்த ஒரே காரணத்தினால் மரணதண்டனை இரத்து செய்யப்பட்ட முன் உதாரணங்கள் உள்ள நிலையிலும் நாம் மட்டும் கடந்த எட்டரை ஆண்டுகளாக தனி அடைப்பில், தனிமைச் சிறையில் வதைக்கப்படுகிறோம். இது குறித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் ரிட் மனு (எண் 13359/91) தாக்கல் செய்தோம். சில பரிகாரங்கள் கிடைத்தும் அவை நடைமுறையில் கிடைக்காவண்ணம் தடுக்கப்பட்டன.

1992ஆம் ஆண்டு முதல் மூன்று ஆண்டுகளாக இரத்த உறவினர்கள் மட்டுமே (அதாவது பெற்றோர், உடன்பிறந்தோர், மனைவி, பிள்ளைகள் மட்டுமே) பார்க்க அனுமதி உண்டு என்று ஆணையிட்டது அரசு. எனது தாத்தா, பாட்டிகள்கூட பார்க்க அனுமதி மறுத்தனர். எனது பாட்டி என்னைச் சந்திக்க அரசிடம் அனுமதி கேட்டு எத்தனையோ மனுக்கள் கொடுத்து போராடினார். பின்னர், சென்னை உயர்நீதிமன்றத்தால் அந்த அரசு ஆணை செல்லத்தக்கது அல்ல என்று தீர்ப்பு வந்த பின்னரே பார்க்க முடிந்தது.

என்னைப் பார்க்க எனது பெற்றோர், நெருங்கிய உறவினர்களே அனுமதிக்கப்பட்டனர். அவர்களுக்கும் பாதுகாப்பு என்ற பெயரில் மிகுந்த தொல்லைகள் தரப்பட்டன. இந்த தொல்லைகளுக்கு அஞ்சியே பலரும் வருவதைத் தவிர்த்தனர். அவ்வாறு எனது பெற்றோர் என்னைப் பார்க்க வந்தாலும் கண்ணாடி கூண்டினுள்தான் பார்க்க வேண்டிய பரிதாப நிலை. காரணம் பார்வையாளர் அறை கண்ணாடி இழைத் தடுப்பால் தடுக்கப்பட்டிருந்தது. நேரடியாகப் பேச முடியாத நிலை. சைகையால் மட்டுமே பேச முடிந்தது. தனது மகனின் விரல்களைக் கூட தாயினால் அன்போடு தொட முடியாத கொடுமை.
இந்தக் கண்ணாடிக் கொடுமை எமது உறவினர்க்கு மட்டுமல்ல, எம்மைப் பார்க்க வரும் எமது வழக்குத் தொடர்பான வழக்கறிஞர்களுக்கும் இருந்தது. இதனால் எமது வழக்கை நாங்கள் விளக்க முடியாமல் தவித்தோம். இதுகுறித்து சிறப்பு நீதிமன்றம் உயர்நீதிமன்றம் ஆகியவற்றில் முறையீடு செய்தோம். எந்தஒரு சிறைவாசிக்கும் இந்த சட்டரீதியான அடிப்படை உரிமை, தனது வழக்கறிஞருடன் சுதந்திரமாக பேசும் உரிமை மறுக்கப்பட்டிருக்காது என்று என்னால் கூறமுடியும். உயர்நீதிமன்றம் ஆணையிட்டும் எமது வழக்கறிஞருடனான ஒருவருக்கொருவர் படித்துக் காட்டும் வசதி கடைசி வரை மறுக்கப்பட்டே வந்தது.

1993ஆம் ஆண்டு எம்மை பூவிருந்தவல்லி சிறையில் அடைத்த பின்னர், எக்காரணமிட்டும் சிறைவளாகத்தை விட்டு வெளியே அழைத்துச் செல்லக் கூடாது என அரசு ஆணையிட்டது. இதனால் பல துன்பங்களை எதிர்கொண்டோம். மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லவும் கூட நீண்ட சட்ட போராட்டங்கள் நிகழ்த்த வேண்டியிருந்தது.

சிறை மதிலை ஒட்டியே நீதிமன்றம் என்பதால் நாம் மற்ற சிறை வாசிகளைப் போல வீதிகளை கூட பார்க்க முடியாமல் முடக்கப்பட்டோம். சிறை மாற்றங்கள், மருத்துவ பரிசோதனை என்பவற்றுக்காக 7 முறை மட்டுமே 8 ஆண்டுகளில் நாம் வீதிகளை, மக்களைப் பார்த்துள்ளேன்.
பூவிருந்தவல்லி சிறைவளாகம் முழுக்க மேலே இரும்பு கம்பிகளால் போர்த்தப்பட்டும், கீழே காங்கிரீட் தளம் போடப்பட்டும் இருந்தது. வெயில் காலங்களில் சொல்லொன்னா வேதனைகளுக்கு உள்ளானேன். தூக்கத்தை இழந்தேன். மனஅழுத்தத்திற்கு உள்ளானேன். இந்த அழுத்தமே 24வது வயதிலேயே எனக்கு உயர் ரத்த அழுத்த நோயை பரிசாகக் கொடுத்தது. தற்போது மாத்திரைகள் சாப்பிட்டு வருகிறேன். இந்த நோய் தொடர்பாக 1996ஆம் ஆண்டு மற்றும் 1999 ஆம் ஆண்டில் கேளா ஒலி அலைக் கதிர் பகுப்பாய்வு பரிசோதனையும் 1997ஆம் ஆண்டில் எதிரொலி இதய பகுப்பாய்வு பரிசோதனையும் செய்துள்ளேன். தற்போது மாத்திரைகளுடன்தான் உயிர்வாழ்வு. இது பற்றி தேசிய மனித உரிமை கமிசனுக்கு முறையிட்டுள்ளேன். 1996ல் திரு.சர்மா என்ற கமிசன் அதிகாரி சிறை நிலையைப் பார்வையிட்டுச் சென்றுள்ளார்.

கடந்த 15 ஆண்டுகளாக எனது துன்பத்திற்கும் மேலாக எனது பெற்றோர் எனது நிலையால் மிகுந்த துன்பம் அனுபவிக்கின்றனர். 20 வயதே நிறம்பாத (பிறந்த நாள் 30-7-71) தங்களது ஒரே மகனை சட்டத்தின் காவலர்கள் என்று நம்பி விசாரணைக்கு என சி.பி.ஐயிடம் தாங்களே முன்வந்து ஒப்படைத்து விட்டு இன்று துன்பத்தைச் சுமந்து நிற்கின்றனர். கடந்த 15 ஆண்டுகளாக அவர்களது வாழ்விலும் இன்ப நிகழ்வுகள் எதுவும் நிகழ்ந்து விடவில்லை. அவர்கள் மட்டுமல்ல 26 வயது நிறைவடைந்த கனிணிவியல் பொறியாளர் படித்து முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்று இன்று தனது திருமணத்தை எனது விடுதலைக்காக ஒத்திவைத்திருக்கும் எனது இளைய சகோதரியின் வாழ்வும் துயரத்தில் நிற்கிறது.

ஒப்புதல் வாக்குமூலத்தின் நம்பகத் தன்மை

ஒரு குற்றமும் செய்யாத எனக்கு இன்று இந்த நிலை ஏற்பட்டது மட்டமல்ல, என்னைச் சார்ந்த அனைவருக்குமே இதே தண்டனை தரப்பட்ட நிலையிலேயே காணப்படுகிறது. இவற்றிற்கு காரணம் என்ன? ஒப்புதல் வாக்குமூலம் என்று சொல்லப்படுகிற காவல் அதிகாரிகள் எழுதி எம்மிடம் துன்புறுத்தி பெற்ற கையொப்பங்களை நம்பி அளிக்கப்பட்ட தண்டனை அல்லவா காரணம்.

இன்று தடா சட்டப்படி நாம் குற்றமேதும் இளைக்கவில்லை. இவ்வழக்கிற்கு தடா பொருந்தாது என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அதே நேரம் இந்த கொடூரச் சட்டத்தின் ஒரு அங்கமான காவல் அதிகாரி பெறும் வாக்குமூலம் செல்லுபடி ஆகும் என்ற பிரிவை மட்டும் செல்லாததாக அறிவித்து அதனடிப்படையில் தண்டனை, அதிலும் மரண தண்டனை என்பதுதான் வேதனை அளிக்கிறது.

இன்று நடைமுறையில் இல்லாத, எமது வழக்கிற்கு பொருந்தாது எனக்கூறப்பட்ட இச்சட்டத்தினால் 60 நாட்கள் போலீஸ் காவல் (அதிலும் 30+30) குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய ஓராண்டு காலம், பிணையில் விடாமை, உயர்நீதிமன்ற வாய்ப்பு பறிப்பு, மூடிய அறை விசாரணை, ரகசிய சாட்சிய முறை, போலீஸ் அதிகாரி முன் கொடுக்கும் வாக்குமூலம் செல்லும், குற்றமற்றவர் என நிரூபிக்கும் பொறுப்பு என எத்தனை அடிப்படை உரிமைகளை நாங்கள் இழந்துவிட்டோம். இவற்றை யாரால் எமக்கு திருப்பி அளிக்க முடியும்?

இருந்தாலும் இவை அனைத்தையும் நீதி அரசர்கள் கட்டாயம் மறுசீராய்வு மனுவில் கணக்கில் எடுப்பார்கள், திறந்த மனதுடன் பார்ப்பார்கள், தடா சட்டமே பொருந்தாது என கூறியவர்கள் இதையும் தெளிந்த மனதுடன் ஆராய்ந்து எமக்கு நீதி வழங்குவார்கள் என்று நம்பினேன். முடிவில் மிக மோசமாக ஏமாற்றப்பட்டேன்.

இந்த நேரத்தில் எனது ஒப்புதல் வாக்குமூலம் என்று கூறப்படுவதன் நம்பகத்தன்மை பற்றி சிலவற்றை குறிப்பிட விரும்புகிறேன்.
1. 60 நாட்களுக்கும் மேலான காவலின் பின்பு 14.8.1991 மற்றும் 15.8.1991 அன்று, அதாவது போலீஸ் காவல் முடியப் போகும் 16.8.1991 அன்றைக்கு முந்தைய நாளில் வாக்குமூலம் எடுத்ததாகக் கூறுவதை எவ்வாறு நம்புவது? இவ்வழக்கில் வாக்குமூலம் அளித்ததாகக் கூறப்படும் 17 பேரும் காவல் முடியும் ஒரு நாளுக்கு முன்புதான் வாக்குமூலம் அளித்துள்ளனர்.

2. ராஜீவ் கொலை வழக்கை விசாரிக்கவென அமைக்கப்பட்ட குழுவில் (சிபிஐ / எஸ்.ஐ.டி) அங்கமாகச் செயல்பட்ட சாட்சி 52 காவல்துறைக் கண்காணிப்பாளர் தியாகராசனின் சாட்சியம் எவ்வாறு ஏற்கத்தக்கது? (நீதியரசர் தாமஸ் பக்கம் 35)

இந்த இடத்தில் ஒப்புதல் வாக்குமூலங்களைப் பதிவு செய்ததாகச் சாட்சியளித்த சாட்சி 52 தியாகராசனின் சாட்சியம் ஏற்கத்தக்கதா என்பதற்கு, அவர் தொடர்புடைய வேறு வழக்கு பற்றிக் கூறிட விரும்புகிறேன். கேரள மாநிலத்தில் நடந்த அவ்வழக்கு பற்றியும், அவ்வழக்கில் சாட்சி 52 நடந்து கொண்ட முறை பற்றியும் பிரண்ட் லைன் ஏட்டில் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. இதுவே சாட்சி 52 தியாகராசனின் நம்பகத்தன்மையை எடுத்துக் கூறுமென நம்புகிறேன். இவ்வாதத்தை நான் எனது 313. குற்றவியல் நடைமுறைச் சட்டம். பதிலுரையில் தாக்கல் செய்துள்ளேன்.

3. சாட்சி 52 தியாகராசன் தனது சாட்சியத்தில் 14.8.1991 அன்று இரவு 11 மணிக்கு சற்று முன்னதாக, பூந்தமல்லி கிளைச் சிறைக்கு வந்து எதிரி ராபர்ட் பயஸ் என்பவரிடம் வாக்குமூலம் தொடர்பான முதல்நாள் நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகக் கூறுகிறார். இந்த நடவடிக்கை அரை மணி நேரம் நீடித்தது என்றும் கூறுகிறார்.

ஆனால் இவரே வேறு இடத்தில் எனது வாக்குமூலம் தொடர்பாக சாட்சியமளிக்கும்போது, 14.8.1991 அன்று இரவு 11.30 மணிக்குச் சற்று முன்னதாக, பூந்தமல்லி கிளைச் சிறை வந்து எனது வாக்குமூலம் தொடர்பான முதல்நாள் நடவடிக்கை மேற்கொண்டதாகக் கூறுகிறார்.
இதிலிருந்தே இவர் முன்பே தயார் செய்யப்பட்ட ஆவணங்களைக் கொண்டு இயந்திரத்தனமாக சாட்சியமளித்துள்ளது தெரிகிறது.
4. எனது ஒப்புதல் வாக்குமூலம் எனப்படுவதன் முதல் நாள் நடவடிக்கையின் இறுதியில் எனது பெயருக்கு பதிலாக ராபர்ட் பயஸ் பெயர் எழுதப்பட்டுள்ளது. என்னை முன்னிலையில் வைத்துக் கொண்டு முறையாக இந்த ஆவணம் தயார் செய்யப்பட்டிருந்தால் பெயர் மாற்றம் வருமா?

5. ஒப்புதல் வாக்குமூலப்படி 3.5.1991, 4.5.1991 ஆகிய நாட்களில் நான் சென்னையில் இருப்பதாக உள்ளது. ஆனால் சாட்சி 75 வசந்தகுமார் என்பரின் சாட்சியப்படி 3 அல்லது 4ம் தேதி அவருடன் நான் திருச்சியில் இருப்பதாக உள்ளது.

6. எனது வாக்குமூலத்தின்படி ஹரிபாபுவிற்கு நான் படச்சுருள் கொடுத்ததாகவும், பாக்கியநாதனின் வாக்குமூலத்தில் அவர் கொடுத்ததாகவும், சாட்சி 72 இராமமூர்த்தி என்பவரின் 164-குற்றவியல் நடைமுறைச் சட்டம். வாக்குமூலப்படி சுபாசுந்தரம் கொடுத்தார் எனவும் உள்ளது. சம்பவ இடத்தில் ஹரிபாபு பயன்படுத்தியது ஒரு படச்சுருள் என்று கூறப்படுகிறது. இறுதியில் என் மீது குற்றம் சாட்டப்படுகிறது. எப்படி?

7. வாக்குமூலத்தின்படி நான் மே மாதம் முதல் வாரம் இரண்டு 9 வோல்ட் மின்கலம் வாங்கியதாக உள்ளது. இதன் அடிப்படையிலேயே என் மீது மே மாதம் முதல் வாரம் எனக் குறிப்பிட்டு குற்றச்சாட்டு வரையப்படுகிறது. நீதியரசர் வாத்வா பக்கம் 300) ஆனால் சாட்சி 91 மொய்தீன் என்ற கடைக்காரர் சாட்சியப்படி மே மாதம் இரண்டாம் வாரம் என்றுள்ளது.

8. வாக்குமூலத்தில் சிவராசன் அந்த இரண்டு மின்கலங்களையும் குண்டு வெடிக்கச் செய்யப் பயன்படுத்தியதாகக் காணப்படுகிறது. ஆனால் நிபுணர்களான சாட்சிகள் 252 சீனிவாசன், 257 மேஜர் சபர்வால், 280 சந்திரசேகரன் ஆகியோர் சாட்சியப்படி ஒரு பேட்டரிதான் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.

9. சாட்சி 75 வசந்தகுமார் சிவராசனின் நெருங்கிய கூட்டாளி என்று வாக்குமூலத்தில் உள்ளது. ஆனால் அவரோ தனக்கு சிவராசனின் பெயர்கூடத் தெரியாது என சாட்சியமளித்துள்ளார்.

10. 22.5.1991 அன்று பாக்கியநாதன் வீட்டிலிருந்து எனது பொருட்களை கொண்டு சென்றதாக வாக்குமூலத்தில் உள்ளது. ஆனால் விசாரணை அதிகாரி சாட்சி 288 இரகோத்தமன் சாட்சியம், சான்றாவணம் 1344 என்பவற்றில் 24.5.1991 என்று காணப்படுகிறது.

11. எனது வாக்குமூலப்படி 23.5.1991 அன்று ஹரிபாபுவின் உடலை எடுப்பது தொடர்பாக சுபா சுந்தரத்திடம் கூறுமாறு சிவராசன் கேட்டுக் கொண்டதாக உள்ளது. ஆனால் பாக்கியநாதனின் வாக்குமூலப்படி ஹரிபாபுவின் வீட்டு முகவரியை அறிவதற்காக சுபாசுந்தரத்திடம் சென்றதாக உள்ளது.மேற்சொன்னவை சில உதாரணங்களே. இதுபோல் பலவும் உண்டு. காரணம், நடந்தவற்றை எழுதியிருந்தால் முரண்பட வாய்ப்பில்லை.

வாக்குமூலத்தில் உள்ள அனைத்துமே பொய் என்று கூறிவிட முடியாது. ஒரு சில உண்மைகளைக் கொண்டு தங்களது வழக்கிற்கு ஏற்ப எழுதிய கதைதான் இந்த வாக்குமூலங்கள். இத்தனை முரண்பாடுகளைக் கொண்ட வாக்குமூலத்தை நம்பித்தான் தூக்குத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
சாதகமாய்ப் பேசும் ஆவணக் குறிப்புகள்

எமது கடுமையான மறுப்பிற்குப் பின்னரும், வாக்குமூலங்கள் ஏற்கப்பட்டாலும் கூட ஒரு வாதத்திற்காக அவற்றை ஏற்றுக்கொண்டாலும் எனக்குச் சாதகமான சங்கதிகள் பலவும் அதில் உள்ளன. அவற்றைத் தங்களது பார்வைக்குக் கொண்டுவர விரும்புகிறேன்.

1. வாக்குமூலத்தில் உள்ளபடி நான் எல்.டி.டி.ஈ.க்காக மாதச் சம்பளத்திற்கு வேலை செய்கிறேன். பல எல்.டி.டி.ஈ. உறுப்பினர்களுக்கு வேலை செய்ததாகவும், சிவராசன் ஒரு சீனியர் எல்.டி.டி.ஈ. ஆள் என்பதால் வேலை செய்ய ஒப்புக் கொண்டேன் என்றும் காணப்படுகிறது. எங்கும் கொலைச் செயலுக்கு ஒப்புக் கொண்டு வேலை செய்ததாகக் காணப்படவில்லை.

2. எக்ஸ்.பி.392 என்ற 7.5.1991 தேதியிட்ட கம்பியில்லாச் செய்தியின்படி சிவராசன், சுபா, தனு ஆகிய மூவருக்கு மட்டுமே சதித் திட்டம் தெரியும் என்ற உள்ளது. இதை நீதியரசர்களும் ஒப்புக் கொள்கின்றனர். எனது வாக்குமூலப்படி நான் 7.5.1991க்கு முன்பு தான் சிவராசனுக்கு மோட்டார் சைக்கிள், கார் பேட்டரி, 9 வோல்ட் பேட்டரி ஆகியவை வாங்கித் தருகிறேன். எனவே உள்நோக்கம் தெரிந்து வாங்கித் தர நியாயமில்லை.

3. 21.5.1991 அன்று இரவு 9.30 மணிக்கு அதாவது சம்பவம் நடைபெறும்போது பாக்கியநாதனுடன் சினிமா பார்க்கச் சென்றதாக வாக்குமூலத்தில் உள்ளது. உண்மையில் எனக்கு சம்பவத்தின் விவரம் முன்பே தெரிந்திருந்தால், சதியாளனாக இருந்தால், குற்றம் நடக்கும் நேரத்தில் நண்பருடன் சினிமா பார்க்க முடியுமா?
(சினிமா பார்த்துவிட்டுத் திரும்பி வரும் வழியில்தான் ராஜீவ் கொலை பற்றி அறிந்ததாக வாக்குமூலத்தில் உள்ளது.)

4. 23.5.1991 அன்று காலை சம்பவ விவரங்களை சிவராசன் கூறுவதாகவும், மாலை நளினி விவரித்தார் எனவும் வாக்குமூலத்தில் காணப்படுகிறது. உடனே நான் பாக்கியநாதன் வீட்டில் தங்கியிருப்பது உசிதமாகப் படவில்லை என்று கருதி இடம் மாறிச் சென்றுவிடுவதாக உள்ளது. எனவே சம்பவத்தைப் பற்றி முன்பே தெரிந்திருந்தால் 21.5.1991க்கு முன்பே வேறு இடம் சென்றிருப்பேன். சிவராசன், நளினி ஆகியோர் மூலம் 23.5.1991 அன்று தெரியவந்ததால்தான் அன்று இடம் மாறுவதாக உள்ளது.

5. அவ்வாறு பாக்கியநாதன் வீட்டிலிருந்து நான் எனது சொந்த ஊரான சோலையார் பேட்டையில் உள்ள எனது வீட்டிற்குச் சென்றுவிட்டதாகவே வாக்குமூலத்தில் காணப்படுகிறது. நான் குற்றம் இழைத்திருந்தால், குற்ற மனப்பான்மையோடு இருந்திருந்தால் சொந்த வீடு செல்லாமல் வேறு மறைவிடம் நோக்கித்தானே சென்றிருப்பேன்.

6. இவ்வழக்கில் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் வெடிகுண்டு பற்றி எந்தப் புலனாய்வும் மேற்கொள்ளப்படவில்லை. இதை நீதிபதி ஜெயின் கமிசனும் குறிப்பிட்டு இன்று அமைக்கப்பட்டுள்ள பல்நோக்கு கண்காணிப்புக் குழு இது குறித்து ஆராயக் கோரப்பட்டுள்ளது. எனவே எதிர்காலத்தில் வெடிகுண்டு பற்றி புலனாய்வு செய்து சம்பந்தப்பட்ட நபர்கள் விசாரிக்கப்பட்டு நான் நிரபராதி எனத் தெரிந்தால் எனது நிலை விசாரிக்கப்பட்டு நான் நிரபராதி எனத் தெரிந்தால் எனது நிலை என்ன?

இவ்வழக்கில் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் வெடிகுண்டு தொடர்பான புலனாய்வில் எத்தனை ஓட்டைகள் உள்ளன என்பது குறித்து இந்தியா டுடே, மே 21, சூன் 5, 1996 (தமிழ்) இதழில் கட்டுரை வெளியிட்டுள்ளது. இதையும் நான் எனது 313- குற்றவியல் நடைமுறைச் சட்டம் பதிலுரையில் தாக்கல் செய்துள்ளேன். மேற்சொன்னவை மட்டுமே என்னை நிரபராதி என எடுத்துக்கூற போதுமானது எனக் கருதுகிறேன்.

எனது வேண்டுதல்

அன்புக்குரியீர், மேற்சொன்னவற்றை எல்லாம் மறுசீராய்வு மனுவில் எடுத்துரைத்திருந்தால் நீதியரசர்கள் உண்மை உணர்ந்திருப்பார்களே என்று எம்மை நோக்கி கேள்வி எழுப்பக்கூடும். உண்மை என்னவெனில் இதைவிடக் கூடுதலாகவே எமது வழக்கறிஞர் மறுசீராய்வு வாதுரையில் எடுத்துரைத்தார். எமது குற்றமற்ற தன்மையை, எமக்கு இழைக்கப்பட்ட அநீதியை எழுத்து வடிவில் மறுசீராய்வு மனுவில் சமப்பித்தோம். ஆயினும் கூட நீதி மறுக்கப்பட்டு விட்டது.

கொடுமை வென்னவெனில், மறு சீராய்வு மனு மீதான தனது உத்தரவில் நீதியரசர் வாத்வா.
(“Mr. Natarajan, who appeared for the convict review peritioners, submitted that he convict was not challenging the finding of guilt of the peritioners and was confining the review petitions only on question of award of death sentence)

தண்டிக்கப்பட்டுள்ள மறுசீராய்வு மனுதாரர்களுக்காக வாதிட்ட திரு. நடராசன் அவர்கள் குற்றமிழைத்தவர்கள் என்ற முடிவை எதிர்க்கவில்லை என்றும் மரணதண்டனை விதிப்பது தேவைதானா என்று அளவோடு மறுசீராய்வு மனுக்களை கட்டப்படுத்திக் கொள்வதாகவும் எடுத்துரைத்தார்.
என்று குறிப்பிட்டுள்ளார். எமது எழுத்துப்பூர்வமான மறுசீராய்வுக்கான மனுவை படித்தறிந்தாலே இதற்கான விளக்கத்தை தாங்கள் உணர்வீர்கள் என்று நம்புகிறேன்.

உச்ச நீதிமன்றத்தின் நீதியில் நான் மிகுந்த நம்பிக்கை கொண்டிருந்தேன். ஆனால் மிக மோசமான முறையில் ஏமாற்றமடைந்தேன். தயவுகூர்ந்து இதை நீதித்துறை மீதான குற்றச்சாட்டாக தாங்கள் பொருள் கொள்ள மாட்டீர்கள் என்று நம்புகிறேன்.

உண்மை என்னவெனில் எமது வழக்கைப் பொருத்தளவில் நீதிமன்றம் நீதி வழங்குதலில் சற்றுத் தடுமாற்றம் கண்டுவிட்டது என்பதை உறுதியோடு சொல்வேன். அதேவேளை, பொதுவில் நீதிமன்றம் கூறுவதையே உலகம் ஏற்கும், நம்பும் என்பதையும் அறிந்துள்ளேன்.

குறைந்தபட்சம் உங்களைப் போன்ற அறிவிற் சிறந்தவர்களிடமும் மனித உரிமைப் போராளிகளிடமாவது உண்மையை நிலைநாட்டி விட வேண்டும் எனத் துடிக்கிறேன். என்னை விடுதலை செய்யும் உத்தரவை வழங்கத் தங்களால் இயல முடியவில்லையானாலும் நான் குற்றமற்றவன் என்பதை நீங்கள் எந்தக் கணத்திலாவது உணர்வீர்களேயானால் அதுவே எனது விடுதலைக்கான வெற்றி என்பதை உறுதியோடு சொல்வேன்.

என் வழக்குத் தொடர்பான உச்ச நீதிமன்ற தீர்ப்புரை பக்கங்களையும் நீதியரசர்கள் அவற்றில் செய்துள்ள பிழைகளையும் எழுதி இணைத்துள்ளேன். படித்தறிந்து எனது தரப்பு உண்மைகளை உணர்வீர்கள் என்று நம்புகிறேன்.

தடா எனும் ஆள்தூக்கிச் சட்டம் எத்துணை எதிர்ப்பைப் பெற்றது என்பதை நீங்கள் அறிவீர்கள். அந்தச் சட்டம் அத்தனை எதிர்ப்பையும் பெறுவதற்கான காரணமாய் அமைந்தது தடா சட்டப்பிரிவு 15 என்ற ஒப்புதல் வாக்குமூலப் பிரிவு என்பதையும் நன்கறீவீர்கள்.

இந்தக் கொடூரச் சட்டத்தின் கீழ்தான் எமது வழக்கும் தொடுக்கப்பட்டது. ஆயினும் இறுதியில், நாங்கள் பயங்கரவாதிகளில்லை என்றும் தடா சட்டம் இவ்வழக்கில் பொருந்தாது என்றுரைத்த உச்ச நீதிமன்றம் ஒப்புதல் வாக்குமூலம் மட்டும் செல்லும் என்று தீர்ப்பளித்திருப்பதும் அந்த வாக்குமூலம் என்பதை மட்டுமே கொண்டு உயர்ந்தபட்ச தண்டனையான மரண தண்டனை விதிப்பதும் மிகுந்த வேதனையளிக்கும் செயலாகும். 12,15 என எண்களின் விளையாட்டிற்கு எமது உயிர் விலையாக்கப்பட்டுவிட்டது என்பதே வருத்தத்திற்குரிய உண்மை.

எனவே உச்ச நீதிமன்ற உத்தரவுச் செய்தியை அறிந்தபோது, உலகத்தின் மிகக் கொடிய குற்றங்களை நீதிபதிகள் ஆதரித்துள்ளனர். ஆகவே, இரு தரப்பு வழக்கையும் நீதிபதிகள் விசாரித்தறிகிறார்கள் என்பதால் உண்மைதான் வெளிப்படும் என்று எண்ணிவிடாதீர்கள் என்ற லெனின் அவர்களின் கூற்றைத்தான் வருத்தத்தோடு எண்ணிப்பார்த்தேன்.

சட்டப்படி நான் எந்தக் குற்றமும் செய்தவனல்ல. நியாயப்படியும் குற்றமற்றவனே. என்றாலும் எமதுத் தரப்பு நியாயங்களைவிட மறைந்தவர் உயர் பதவி வகித்தவர் என்பதுதான் முன் நின்று வழக்கின் முடிவைத் தீர்மானித்து விட்டது.

தனிமனித விருப்பு வெறுப்புக்கள்தான் பல நேரங்களில் பலரின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கியுள்ளது. இதற்கான கடந்தகால சான்றுகள் பலவுண்டு. அன்று கேகர் சிங் கொடூரமான முறையில் தூக்கிலிடப்பட்ட போது யாரும் குரல் கொடுத்துவிடவில்லை. ஆனால் இன்று எமக்கான நிலைமை அவ்வாறில்லை என்பதை உணர்ந்துள்ளேன். அதையிட்டு நான் மகிழ்சசி கொள்கிறேன். எமக்காக ஒலிக்கும் அந்தக் குரல்களே எமக்கு உற்சாகத்தைத் தருகிறது. எதிர்காலத்தின் மீதான நம்பிக்கையை விதைக்கிறது.

எனது இந்த முறையீடு வெற்றுப் புலம்பல்கள் அல்ல. ஒரு நிரபராதியான மனிதனின் உள்ளத்து உண்மைகள். இறுதியில் உண்மை வெல்லும் என்ற நம்பிக்கையிருக்கிறது என்றாலும், நான்கு சுவற்றுக்குள் நடந்தேறிய உண்மைகள் பலரால் அறியப்பட வேண்டும் என்று ஆவல் கொள்கிறேன். அதன் விளைவுதான் இந்த முறையீடு.

சிலவேளை, எனது நீதிக்கான நெடும் போராட்டத்தில் இந்த மடல் வேறு பல மனித நேயங்கொண்ட இதயங்களையும் இணைக்கக்கூடும். அதை எதிர்பார்த்தே நான் ஆவலோடு இதை எழுதுகிறேன்.

எனது வேண்டுதல் எல்லாம், திறந்த மனதுடன் அணுகுங்கள், சட்டத்தின் அடிப்படையில் மட்டுமே எம்மைப் பாருங்கள் என்பதுதான்.
கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக தனது மகனின் நியாயத்திற்காகப் போராடும் ஒரு தாயின் அர்ப்பணிப்பை, உறுதியைப் பாருங்கள். அவரின் உழைப்பிற்காகவாவது உண்மை வெல்லத்தான் வேண்டும். உறுதுணை செய்யுங்கள்.

எந்த ஒரு மனிதனும் இந்த நாட்டின் வரலாற்றில் உச்ச நீதிமன்றம் உறுதி செய்துவிட்ட பிறகும் நிரபராதி என நீதி கேட்டதாக உதாரணமிருப்பதாக எனக்குத் தெரியவில்லை. ஆனால் நாம் கேட்கிறோம். அத்தனை மோசமாக நாம் அநீதிகளை சுமந்து நிற்கிறோம். சுமையை இறக்க வாருங்கள்.
வேதனைகள் எம்மோடு முடியட்டும். விடியப் போகும் காலைப் பொழுதிலாவது நீதி அனைவர்க்கும் சமமாக மாறட்டும். சட்டத்தின் மூலம் நிரபராதிகளைக்
கொன்றொழிக்கும் கொடுமை சாகட்டும்.

இறுதியாக உலகப் பொதுமறை தந்த பெருநாவலரின் மேற்கோளோடு நீதிக்கான இம்முறையீட்டை முடிக்கிறேன்.

எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு

நீதி வெல்லட்டும்!

இப்படிக்கு
அ.ஞா. பேரறிவாளன்
மரண தண்டனைச் சிறைவாசி
த.சி.எண். 13906
நடுவண் சிறை
வேலூர் - 2

Thursday, October 14, 2010

பிரதமர் உருத்திரகுமாரன் பிரத்தியேகப் பேட்டி ஜூனியர் விகடனில் இருந்து...


நாடு கடந்த தமிழ் ஈழ அரசாங்கத்தின் முதல் பிரதமராக உருத்திரகுமாரன் தேர்ந்தெடுக்கப்பட்டு இருக் கிறார். அடியோடு வீழ்த்தப்பட்ட ஈழத் தமிழ் இனத்தின் இப்போதைய நம்பிக்கை, நாடு கடந்த தமிழ் ஈழ அரசுதான்! அதேசமயம், 'இந்த முயற்சியெல்லாம் சாத்தியமா?' என்ற கேள்விகளும் இருக்கவே செய் கின்றன.

அமெரிக்காவில் இருக்கும் உருத்திரகுமாரனிடம் பேசினோம். புதிய 'அரசின்' பிரதமரான பிறகு முதன் முறை யாக அவர் நமக்கு அளித்த பிரத்தியேகப் பேட்டி இது...



'' நாடு கடந்த தமிழ் ஈழ அரசை சட்ட விரோத அரசாக இலங்கை அறிவித்து இருக்கிறதே?''

''ஸ்ரீலங்கா அரசின் பயத்தையே இது வெளிப் படுத்துகிறது. ஸ்ரீலங்கா அரசின் சட்டங்கள், தமிழர்களின் சம்மதமும் பங்களிப்பும் இன்றி நிறை வேற்றப்பட்டவை. தமிழர்கள் அவற்றை சட்டங்களாக என்றுமே ஏற்கவில்லை. நாடு கடந்த தமிழ் ஈழ அரசாங்கம் அவர்களின் சட்டங்களுக்கு முரணாக இருப்பதாகச் சொல்வதில் ஆச்சர்யப்படுவதற்கு ஒன்றும் இல்லை. எமது அரசாங்கம் அனைத்து நாடுகளின் சட்டங்களுக்கும், குறிப்பாக அனைத்துலக மனித உரிமை சட்டங்களுக்கும் பொருந்துவதாகவே அமைக்கப்பட்டு உள்ளது. இந்த சட்டங்களை ஓர் ஆயுதமாக ஏந்திய வண்ணம், தமிழ் ஈழ மக்களுக்கான சுதந்திரத் தமிழ் ஈழ அரசினை அமைப்பதற்காக எமது அரசாங்கம் அயராது உழைக்கும்!''

''நாடு கடந்த தமிழ் ஈழ அரசு, இன்று இலங்கை அரசுக்கு ஆதரவாகிவிட்ட கே.பி-யின் சிந்தனையில்தான் முதலில் உருவெடுத்ததாகப் பரபரப்பு கிளம்பி வருகிறதே?''

''மே மாதம் 19-ம் தேதிக்குப் பின்னர் தோற்றம் பெற்ற புதிய சூழலில், தமிழ் ஈழ விடுதலைப் போராட்டத்தின் அடுத்த கட்டம் குறித்த நகர்வுகளை முன்னெடுப்பதற்கு தாயகத்திலும் புலத்திலும் உள்ள அரசியலாளர்கள், அறிஞர்கள் ஒன்றுகூடி விவாதித்தே இந்த 'அரசாங்கம்' என்ற அரசியல் அமைப்பை உருவாக்குவது என்ற முடிவுக்கு வந்தோம். இதற்கு விடுதலைப் புலிகள் அமைப்பின் அனைத்துலக உறவுகள் பொறுப்பாளர் என்ற பொறுப்பு நிலையில் இருந்து, கே.பி. களம் அமைத்துத் தந்தார். அதே வேளை, இந்த அமைப்பு உருவாக்கப்படும் முறையிலும், செயற்படும் முறையிலும் சுயாதீனமாகவே இருக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டையும் அவர் ஏற்றுக்கொண்டார். அந்த அடிப்படையில், இதை உருவாக்கும் முயற்சிக்குத் தலைமை தாங்க, நான் உடன்பட்டேன். மலேசியாவில் கே.பி. கைது செய்யப்பட்டு ஸ்ரீலங்கா அரசிடம் கையளிக்கப்பட்ட பின்னர் நாடு கடந்த தமிழ் ஈழ அரசாங் கம் தொடர்பாக அவருக்கு எந்த சம்பந்தமும் இல்லை.

எமது அரசாங்கம் வெளிப்படையாக... தனது அமர்வுகளில் மக்களும் அவதானிப் பாளர்களாகப் பங்கு பெறக்கூடிய வகையில் தனது செயற்பாடுகளை மேற்கொண்டு வருகிறது. மக்களால் நேரடியாக வாக்களித்துத் தேர்வு செய்யப்பட்ட பிரதிநிதிகளின் முடிவுக்கு ஏற்பவே இது தனது செயற்பாடுகளை முன்னெடுத்து வருகிறது!''

''கே.பி-க்கு மிக நெருக்கமானவராக உங்களைச் சொல்கிறார்கள். சிங்கள அரசின் கைப்பாவையாக மாறி அவர் பரப்பும் கருத்துகளை எப்படிப் பார்க் கிறீர்கள்?''

''நான் போராட்டத்துக்குத்தான் நெருக்கமானவன். உண்மையில் கே.பி. அனைத்துலக உறவுகள் பொறுப் பாளராக நியமிக்கப்பட்ட பின்னர், மிகக் குறுகிய காலமே அவருடன் எனக்குத் தொடர்பு இருந்தது. அவருடன் மட்டுமல்ல... அரசியல் துறைப் பொறுப்பாளர் நடேசன், அனைத்துலகத் தொடர் பகப் பொறுப்பாளர் காஸ்ட்ரோ ஆகியோருடன் இதே காலப் பகுதியில் தொடர்புகள் இருந்தன. மக்கள் மீது சிங்கள அரசால் மேற்கொள்ளப்பட்டு வந்த இனப் படுகொலையை, எவ்வாறு தடுத்து நிறுத்தலாம் என்பதே இந்தத் தொடர்புகளுக்குக்காரணமாக இருந்தன.

சிங்களத்தின் பிடியில் உள்ள கே.பி-யால் சுதந்திரமாக இயங்க முடியாது. ஸ்ரீலங்காவின் சிறைகளுக்குள் இருக்கும் எவராலும் தமிழ்த் தேசியத்துக்குப் பங்காற்ற முடியாது!''

''நாடு கடந்த தமிழ் ஈழ அரசின் பிரதமராக எப்போது தமிழகத்துக்கு வரப்போகிறீர்கள்?''

''அதற்கான வாய்ப்புகளை உருவாக்குவதற்கான சக்தி தமிழக மக்களுக்கு உண்டு என்றே நான் கருதுகிறேன்!''

''விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் - இந்நாள் தலைவர்கள், நாடு கடந்த தமிழ் ஈழ அரசை ஆதரித்து உங்களிடம் பேசினார்களா?''

''தமிழ் ஈழ விடுதலைப் போராட்டத்தை... நாடு கடந்த தமிழ் ஈழ அரசாங்கத்தின் ஊடாக அடுத்த கட்டம் நோக்கி முன்னெடுக்க விரும்பும் அனைவரும் எங்களின் முயற்சியை ஆதரிக்கிறார்கள். உங்கள் கேள்வியின் நோக்கத்தை இந்த வார்த்தைகள் பூர்த்தி செய்யும் என நினைக்கிறேன்!''

''புலித் தலைவர் பிரபாகரன் இருக்கிறாரா...?''


''எதிர்காலம் இதற்கு பதில் சொல்லும்!''

- இரா.சரவணன்


நன்றி ஜூனியர் விகடன்

Monday, October 11, 2010

ஈழத் தமிழர்களைக் கொன்ற பொன்சேகா! சிறையில் கதறல்! விரைவில் ராஜபக்சே?


யுத்த நெறிகளை புறம் தள்ளிவிட்டு ஈழத் தமிழர்களைக் கொன்று குவித்த முன்னாள் ராணுவத் தளபதி சரத் பொன்சேகா, தற்போது அலுமினிய தட்டுடன் சிறைக் கம்பிகளை எண்ணிக் கொண்டிருக்கிறார். உடலும் மனதும் களைப்படைந்து போய், கடந்த கால சம்பவங்களை நினைத்து விம்மிவிம்மி அழுது கொண்டிருக்கிறார்.

இலங்கையின் ராணுவத் தளபதி யாக இருந்த சரத் பொன்சேகா, போரின் வெற்றி யாருக்குச் சொந்தம் என்கிற பஞ்சாயத்தில் ராஜபக்சே சகோதரர்களிடம் மல்லு கட்டினார். இந்த மல்லுக்கட்டில் இருதரப்பும் ஒருவர் மீது ஒருவர் குற்றச்சாட்டுகளை அள்ளி வீசினர். இதனால் ராஜபக் சேவும் பொன்சேகாவும் எதிரிகளானார்கள்.

போருக்குப் பின்பு நடந்த அதிபர் தேர்தலில் ராஜபக்சேவை எதிர்த்து களமிறங்கிய பொன் சேகா, தேர்தலில் தோல்வி அடைந்தார். வெற்றி பெற்று அதிபர் பொறுப்பை ஏற்றதும் முதல் வேலையாக பொன்சேகாவை கைது செய்தார் ராஜ்பக்சே. ராணுவத்திற்கு ஆயுதங்களை கொள்முதல் செய்ததில் பொன்சேகா ஊழல் செய்தார் என்கிற குற்றச்சாட்டு அவர் மீது சுமத்தப் பட்டது.

இந்த குற்றச்சாட்டின்படி ராணுவ சிறையில் அடைக்கப்பட்டார் பொன் சேகா. இந்த வழக்கை சுமார் ஒரு வருட மாக விசாரித்து வந்த ராணுவத்தின் இரண்டாம் நிலை நீதிமன்றம், பொன்சேகா மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டிருப்பதால் அவருக்கு 3 வருட கடும் சிறை தண்டனை விதிக்கப் படுகிறதுஎன்று சமீபத்தில் தீர்ப்பு வழங்கியது.

ராணுவ நீதிமன்றத்தின் தீர்ப்பு என்பதால் அதனை அதிபருக்கு அனுப்பி வைக்க வேண்டும். அதன்படி ராஜபக்சேவின் பார்வைக்கு தீர்ப்பினை அனுப்பி வைத்தது கோர்ட். அப்போது அமெரிக்காவில் ராஜபக்சே இருந்த தால் இந்த தீர்ப்பு குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. அமெரிக்காவிலிருந்து கடந்த 30-ந்தேதி இலங்கை திரும்பியதும், பொன்சேகாவிற்கு கொடுக்கப்பட்ட தீர்ப்பு ஃபைலை அன்று இரவு ஆராய்ந்த ராஜபக்சே, ராணுவ கோர்ட் தந்துள்ள 3 வருட சிறைத் தண்டனையை இரண் டரை வருடமாக (30 மாதங்கள்) குறைத்து ஒப்புதல் அளித்தார்.

பொன்சேகாவிற்கு கோர்ட் தந்த சிறை தண்டனையை ராஜபக்சே ஏற்று ஒப்புதல் அளித்ததால் ராணுவ சிறை கொட்டடியிலிருந்து கொழும்பில் உள்ள வெலிக்கடை சிறைக்கு மாற்றப் பட்டார் பொன்சேகா என்கிறது அதிபர் மாளிகை.

வெலிக்கடை சிறைக்கு பொன் சேகா கொண்டு செல்லப்பட்டதும் வெள்ளை நிறத்தில் அவர் அணிந் திருந்த தேசிய ஆடையை அகற்றி விட்டு கைதிகளுக்கான ஆடை கொடுக்கப்பட்டது. அந்த ஆடை மிகவும் லூசாக- தொளதொள வென்று இருந்ததால் அதனை அணிய பொன்சேகா மறுக்க, இதனைத்தான் நீ போட்டுக்கொள்ள வேண்டும். மறுத்தால் டெய்லர் வந்து அளவு எடுத்து சரியான ஆடையை தைத்து கொண்டு வரும்வரை அரை நிர்வாண மாகத்தான் இருக்க வேண்டும். தேசிய ஆடையுடன் சிறையில் இருக்க அனுமதிக்க முடியாது. இது அதிபரின் உத்தரவு என்று ஒருமையில் அதட்டி னார் ஜெயில் வார்டன். தன் நிலையை நினைத்து நொந்த வாறு அந்த ஆடையை வாங்கி கொண்டார் பொன்சேகா. அவருக்கு 0/22032 எண் கொண்ட கைதி எண்ணை ஆடையில் குத்தி விட்டுப் போனார் ஜெயில் வார்டன்.
சிறையில் எஸ் பிரிவில் அடைக்கப் பட்டுள்ளார் பொன்சேகா. இது ஒரு தனிமைச் சிறை. ஜெயவர்த்தனா அதிபராக இருந்தபோது, தீவிரவாதி களுடன் தொடர்பு இருந்ததாக கைது செய்யப்பட்ட விஜயதுங்கே அடைக்கப் பட்ட அதே அறைதான் பொன்சேகா விற்கு தற்போது ஒதுக்கப்பட்டுள்ளது என்று சிறைத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சிறையில் அடைக்கப்பட்ட பொன் சேகா, இரவு தூக்கம் இன்றி தவித்தார். மின் விசிறிகள் எதுவும் அந்த அறையில் இல்லை. நூற்றுக்கணக்கான எறும்பு கள் அந்த அறையில் குடியிருந்தன. காற்று வசதி இல்லாமலும் எறும்புகளின் கடியிலும் இரவு முழுக்க அவஸ்தை பட்டார். விடியற்காலை 5 மணிக்கு எல்லா கைதிகளையும் எழுப்புவது போல பொன்சேகாவையும் எழுப்ப வந்தார் சிறை பணியாளர். ஆனால் அவர் கொட்ட கொட்ட விழித்துக் கொண்டி ருந்ததை பார்த்து எழுந்துட்டீங்களா? என்று மட்டும் சொல்லிட்டு அந்த இடத்தைவிட்டு நகர்ந்து போனார்.

அந்த அறையில் இருந்த கழி வறையை பயன்படுத்த அவர் நினைத்த போது அதில் தண்ணீர் வரவில்லை. அப்போது அங்கு வந்த வார்டனிடம் இதனை அவர் சொன்னபோது, ஒரு அலுமினிய ஜக்கை கொடுத்து அதோ அங்கிருக்கிற தொட்டியில் தண்ணீ இருக்கு. அதிலிருந்து தண்ணீயை எடுத்து பொது கழிவறையை யூஸ் பண்ணிக்கோங்க என்று வார்டன் சொல்ல, அதே போல ஜக்கில் தண்ணீர் எடுத்துக்கொண்டு போனார் பொன்சேகா. பிறகு மற்ற கைதிகளைப் போலவே கியூவில் நின்று குளித்தார். குளித்து விட்டு வந்த பொன்சேகாவின் கையில் ஒரு அலுமினிய தட்டும் ஒரு டம்ளரும் கொடுக்கப்பட்டது. அந்த அலுமினிய தட்டை ஏந்தியவாறு கியூவில் நின்று சோறு வாங்கி சாப்பிட்டார். 10 மணிக்கு வந்த டெய்லர் அவருக்கு சரியான ஆடை தைக்க அளவு எடுத்துக் கொண்டு போனார்.
முதல் நாளில் அவருக்கு எந்த வேலையும் கொடுக்கவில்லை. காலை போலவே மதியமும் இரவும் கியூவில் நின்று சோறு வாங்கி சாப்பிட்டார். மாலை 6 மணிக்கெல்லாம் அறைக்குள் போகச் சொல்லி அவரை பூட்டினர். பகலில் மற்ற கைதிகள் யாரிடமும் பொன்சேகாவை பேச அனுமதிக்க வில்லை சிறை நிர்வாகம். முதல் நாளை போலவே இரண் டாவது இரவிலும் அவஸ்தைப்பட்டார் பொன்சேகா. சிறையில் சொகுசாக பொன்சேகா இருக்கக்கூடாது. அதனால் அச்சகத்தில் பணிபுரியும் வேலையைக் கொடுக்கலாமா அல்லது தோட்டத்தை பராமரிக்கும் வேலையை கொடுக்கலாமா என்று 4 ஆம் தேதி வரை சிறை நிர்வாகம் ஆலோசித்துக் கொண்டிருந்தது.

வெலிக்கடை சிறைக்குள் வந்ததிலி ருந்து யாரிடமும் பேசுவதற்கு அவர் முயற்சிக்கவில்லை. நிறைய நேரம் அழுது கொண்டே இருந்தார். ஒருமுறை தனது அறையின் கம்பிகளை பிடித்துக் கொண்டு கதறினார் பொன்சேகா. இவரை சிறைக்குள் கொண்டுவருவ தற்கு முதல் நாள் வரை அந்த அறையில் இரண்டு மின்விசிறிகள் இருந்தன.
திடீரென்று அதனை அகற்றி விட்டனர். ஏன் என்று வார்டனிடம் கைதிகள் சிலர் கேட்க, இந்த அறையில் தான் நாளை இரவு பொன்சேகா அடைக்கப்படவிருக்கிறார். மின் விசிறிகளை அகற்ற சொல்லி அர சாங்கம் உத்தரவிட்டிருக்கிறதுன்னு சொன்னார் வார்டன் என்கின்றன சிறையிலிருந்து கிடைக்கும் தகவல்கள்.

சிறையில் அடைக்கப்பட்ட பொன் சேகாவை அவரது மனைவி அனோமா சென்று சந்தித்தார். அவரிடம் தான் அணிந்திருந்த தேசிய ஆடையையும் இதுநாள்வரை பயன்படுத்திக் கொண் டிருந்த கருப்பு பேக்கையும் கொடுத்தார் பொன்சேகா. கணவனின் நிலையை கண்டு கதறிய அனோமாவிடம் தனது அறையை பற்றியும் தூக்கமில்லா இரவுகளையும் தெரிவித்திருக்கிறார் நொந்து போய். பொன்சேகாவை சந்தித்து விட்டு வெளியே வந்த அனோமா,ஒரு போர் வீரனாக நின்று இந்த நாட்டை மீட்டுக் கொடுத்த என் கணவருக்கு கடைசி யில் மிஞ்சியது ஒரு அலுமினிய தட்டும் ஒரு டம்ளரும்தான். அந்த நிலையை பார்க்க முடியவில்லை. காற்று வசதி யில்லாமலும் எறும்புக் கடியிலும் கொடு மையை அனுபவிக்கிறார் என் கணவர். அவர் அடைத்து வைக்கப்பட்டுள்ள அறை சுகாதாரமின்றி அசுத்தமாக இருக்கிறது. இதற்கெல்லாம் இந்த அரசாங்கம் விரைவில் பதில் சொல் லியே ஆக வேண்டும் என்றார்.
பொன்சேகாவை ஆதரிக்கும் சிங்கள கட்சியான ஜே.வி.பி.யின் நாடா ளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்து நெத்தி,பொன்சேகாவை பார்த்து அச்சம் கொண்டுள்ளது இந்த அரசு. அதனால்தான் கோர்ட் தீர்ப்பில் அவசரம் அவசரமாக ஒரு முடிவெடுத்து அவரை வெலிக்கடை சிறையில் அடைத்திருக்கிறார் அதிபர் என்கிறார். ஆனால் மற்றொரு சிங்கள கட்சி யான ஜாதிஹெல உறுமயவின் செய்தி தொடர்பாளர் நிசாந்தஸ்ரீவர்ண சிங்கே,இந்த தண்டனை பொன் சேகாவிற்கு சரியான, நியாயமான தண்டைனைதான். இவர் ராணுவ தளபதியாக இருந்த போது ராணுவ அதிகாரிகள் பலருக்கும் இதே போல தணடனை கொடுத்திருக்கிறார். அதே சட்டத்தில்தான் இவருக்கும் தண் டனை கொடுக்கப்பட்டிருக்கிறது என்கிறார்.
இதற்கிடையே,குற்றங்களை ஒப்புக்கொண்டு பொன்சேகா மன்னிப்பு கேட்கட்டும். அவருக்கு பொது மன் னிப்பு கொடுக்க தயாராக இருக்கிறார் அதிபர் ராஜபக்சே என்கிறார் பொன்சேகாவின் தண்டனை குறித்து கருத்து தெரிவிக்கும் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்சே. ஆனால் அனோமா பொன் சேகாவோ, என் கணவர் குற்றம் செய்யவில்லை. குற்றம் செய்யாத அவர் எதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும்? மன்னிப்பு கேட்க மாட்டார். அவரை கைது செய்து சிறையில் அடைத் ததற்காக இந்த அரசாங்கம் ஒரு நாள் வருந்தப் போகிறது என்கிறார் ஆவேச மாக.

இந்நிலையில், பொன்சேகாவின் இன்றைய நிலை அறிந்து மகிழ்ச்சியை தெரிவிக்கும் ஈழத்தமிழர்கள், சர்வதேச நெறிகளுக்கு எதிராகவும் மனித நேயமின்றியும் கொடூரமான யுத்தம் நடத்தி பல லட்சக்கணக்கான மக்களை படுகொலை செய்ததில் முதல் குற்றவாளி ராஜபக்சே. இரண்டாவது குற்றவாளி பொன்சேகா. இரண்டாவது குற்றவாளிக்கு தண்டனை கிடைத்தி ருக்கிறது. அதேபோல முதல் குற்றவாளிக்கும் தண்டனை கிடைக்கும். அதிலிருந்து ராஜபக்சே தப்பிக்க முடியாது. கொன்ற வனுக்கு தண்டனை என்றால் கொல்ல ஏவியவனையும் (ராஜ பக்சே) நிச்சயம் காலம் தண்டிக்கும் என்கிறார்கள்.

- கொழும்பிலிருந்து எழில்
நன்றி: நக்கீரன்
(2010 அக். 6-8)

தமிழ் ஈழத்தில் மலர்ந்தது சிங்கள தேசம்! - விகடன்





மட்டக்களப்பு பன்குடா பகுதியைச் சேர்ந்த சீனித்தம்பி பத்மநாபனை, தமிழ் ஈழப்
பகுதியில் பெரும்பாலானவர்கள் அறிவார்கள். அந்தப் பகுதியில் மிக வசதியான குடும்பத்துக்காரர். தன்னுடைய செல்வத்தை எல்லாம் போராளிகளுக்கு உணவு தயாரித்துக் கொடுப்பதற்காகவே செலவு செய்தார். காட்டுப் பகுதியில் பதுங்கி இருக்கும் புலிகளுக்கு சாப்பாடு செய்து அனுப்பிவைப்பதுதான் அவரது வேலையாக இருந்தது. இந்திய ராணுவம் அங்கு இருந்தபோதும், அதே காரியத்தை சீனித்தம்பி செய்தார். அதைக் கண்டுபிடித்த ராணுவம், காலில் சுட்டு அவரைக் கைது செய்தது. ராணுவ முகாமில் சிறைவைக்கப்பட்ட நிலையில், அவர் இறந்துபோனார். உடலைக்கூட, அவரது குடும்பத்தினருக்குத் தர வில்லை!

அப்பாவுக்கு ஏற்பட்ட நிலையை, அவரது மகள் ஷகிலா உணர்ந்தார். உடனே, அவரும் நாட்டுக்காகப் போராட புலிகள் அமைப்புக்குள் இணைந்தார். புலிகளின் மிகப் பெரிய வெற்றியாகச் சொல்லப்படும் ஆனையிறவு சமரில் சித்திரா என்று பெயரிடப்பட்டு, இவர் களத்தில் இறங்கினார். அதில் சித்திராவுக்கு விலா எலும்பில் பலத்த காயம் ஏற்பட்டது. அதன் பிறகு, அவர் புலிகள் அமைப்பில் இருந்து விலகினார். அதே அமைப்பைச் சேந்த உருத்தி என்பவரைக் காதலித்துத் திருமணம் செய்துகொண்டார். இருவருக்கும் இரண்டு பிள்ளைகள் பிறந்தனர். 2007 ஜூலையில் மேஜர் உருத்தி, சிங்கள ராணுவத்தால் கொலை செய்யப்பட்டார். அப்பா, கணவர் இருவரையும் நாட்டுக்காகக் கொடுத்த அந்தப் பெண், மாவீரர் குடும்பங்களுக்கு மாதம்தோறும் தரப்படும் தொகையை மட்டும் வாங்கி, தானும் உண்டு தனது குழந்தைகளையும் காப்பாற்றி வந்தார். அவரது உடலில் ஏற்பட்ட பாதிப்பு காலப்போக்கில் அதிகமாகி, அறுவை சிகிச்சை செய்தால் மட்டுமே பிழைக்க முடியும் என்று சொன்னார்கள். அதற்கான செலவு ` 38 ஆயிரம் என்றும் சொல்லப்பட்டது.

அதற்காகப் பல இடங்களில் அலைந்தார். வெளிநாட்டில் இருக்கும் தனது உறவினர் மூலமாக அதை வாங்க முயற்சித்தார். அங்கே இருந்து பணத்தை அனுப்பிவைக்கும் சிரமத்தால், தொகை வந்து சேரவில்லை. சிகிச்சைக்கு வழி இல்லாமல், கடந்த 17-ம் தேதி சித்திரா செத்துப்போனார். அவரது இரண்டு பிள்ளைகளும் அநாதையாக நிற்கின்றன. இது தனிப்பட்ட ஒரு சித்திராவின் கதை அல்ல; ஓர் இனத்தின் கதை. ஒவ்வொரு குடும்பத்திலும் உழைக்க முடிந்தவர் அனைவரையும் போர் தின்று துப்ப... மற்றவர்கள் பிழைக்க வழி தெரியாமல் கிடப்பதுதான் இன்றைய ஈழத் தமிழனின் நிலை!

சொந்த தேசத்து மக்களை இப்படிச் சூன்யத்தில் தள்ளிவிட்ட இலங்கை அரசாங்கம், மகிழ்ச்சியாக இருக்கிறது. 'ஓர் இனத்தை அழிக்க வேண்டுமானால், அம்மக்களைக் கொல், அவர்கள் வாழும் மண்ணைக் கைப்பற்று' என்பதுதான் அரசியல் பாசிசத்தின் அரிச்சுவடி. இன்றைய ஈழத்தில் அதுதான் நடந்தது. இன்னும் ஒரே ஆண்டில், 'மலர்ந்தது சிங்கள தேசம்' என்ற அறிவிப்பை அவர்கள் செய்ய இருக்கிறார்கள். பயங்கவாதத்துக்கு எதிரான போர் என்று சொல்லி, விடுதலைப் புலிகள் அமைப்பின் மீது போர் தொடுக்கப்பட்டது. அந்த அமைப்பை முழுமையாக ஒழித்துவிட்டோம் என்று கடந்த ஆண்டு மே மாதம் அறிவித்தார்கள். அதற்குப் பிறகாவது வடக்கு, கிழக்கு, யாழ்ப்பாணம் பகுதி வாழ் தமிழ் மக்களை நிம்மதியாக வைத்திருக்கலாம். ஆனால், அதைச் செய்யவில்லை. அதாவது, அங்கே நடந்துகொண்டு இருப்பது பயங்கரவாதத்துக்கு எதிரான போர் அல்ல; ஓர் இனத்துக்கு எதிரான போர் என்பதால்தான், ஈழத் தமிழர்களை இன்னும் சிறுகச் சிறுகச் சித்ரவதை செய்து கொன்று தீர்த்து வருகிறார்கள் என்றே அங்கே இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. "தமிழர்கள் அதிகம் வாழும் பகுதிகளில், 55 சதவிகிதத்துக்கு மேல் சிங்களவர்களைக் குடியமர்த்த வேண்டும். அடுத்த தேர்தலில் இந்தப் பகுதிகளில் சிங்கள எம்.பி-க்களே அதிகமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு நாடாளுமன்றத்துக்கு அனுப்பிவைக்க வேண்டும்" என்ற முடிவோடு, இந்தக் காரியங்கள் செய்யப்படுகின்றன.

"வடக்கு மாகாணத்தில் சிங்களவர்கள்தான் முன்னர் பெருமளவில் வாழ்ந்தார்கள். பின்னர், அவர் கள் தமிழர்களால் விரட்டி அடிக்கப்பட்டார்கள். சிங்களவர் விரும்பினால், மீண்டும் வடக்குப் பகுதிக் குப் போய் வாழலாம்" என்று பகிரங்கமாக அறிவித்து உள்ளார் ஜனாதிபதி மகிந்தா ராஜபக்ஷே. "வட கிழக்கின் பாதுகாப்பு கருதி, அங்கு நிரந்தர ராணுவ முகாம்களும் படைத் தளங்களும் அமைக்கப்படும். அதில் பணிபுரியும் ராணுவத்தினர் தங்கி வாழ, அந்தப் பிரதேசத்தில் ராணுவக் குடியிருப்புகள் அமைக்கப்படும்" என்று ராணுவத் தளபதி லெப்.ஜெனரல் ஜெகத் ஜெயசூர்ய அறிவித்தார். இப்போது வடக்கில் மட்டும் ஒரு லட்சம் ராணுவ வீரர்கள் உள்ளனர். அதையட்டி, ஒரு லட்சம் குடியிருப்புகள் கட்டப்பட உள்ளன. இவர்கள் அனைவருக்கும் போர் வெற்றிக்குத் துணை புரிந்ததற்காக நிலங்கள் கொடுக் கப்பட உள்ளன. பல்வேறு வளர்ச்சித் திட்டங்கள் என்ற பெயரால், சிங்கள நிறுவனங்களுக்கு பல நூறு ஏக்கர் நிலங்கள் தாரை வார்க்கப்படுகின்றன. கடலோரப் பகுதி அனைத்தும் சுற்றுலாத்தலங்களாக மாற்றப்பட்டு, பீச் ரிசார்ட்ஸ் அமைக்க சிங்கள நிறுவனங்கள் உள்ளே நுழைந்துவிட்டன. மாவட்ட நிர்வாகத்தைக் கவனிக்க, அனைத்து இடங்களிலும் சிங்களவர்கள் நியமிக்கப்பட்டு உள்ளார்கள். ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரிகள் இதை மேற்பார்வை செய்கிறார்கள். மாவட்டக் காணி அதிகாரிகளாக நியமிக்கப்படும் சிங்கள அலுவலர்கள், ஏதாவது ஒரு திட்டத்தின் பெயரை எழுதி, நிலங்களைத் தாரை வார்க்கும் வேலையை நித்தமும் பார்த்து வருகிறார்கள். இன்னும் ஆறு மாதங்களில் தமிழர் நிலங்கள் அனைத் தும் கபளீகரம் செய்யப்பட்டு இருக்கும். இங்கு ஒரு சென்ட் நிலத்துக்கு போலிப் பத்திரம் வைத்திருந்தால், 20 ஆண்டுகளுக்கு வழக்கு நடக்கும். ஆனால், அங்கு ஓர் இனம் வாழ்ந்த நிலப் பகுதியே வேறு பெயர்களுக்கு பட்டப் பகலில் பட்டா மாற்றம் செய்யப்பட்டு வருகிறது!

60 ஆண்டுகளுக்கு முன்னால் திரிகோணமலையை தமிழர் தாயகத்தின் தலைநகர் என்றே பிரகடனம் செய்தார்கள். இதைத் தொடர்ந்தே, அந்தப் பகுதியில் சிங்களவர்களை அதிகமாகக் குடியேற்ற பல்வேறு திட்டங்களைப் போட்டார்கள். 1.3 சதவிகிதமாக இருந்த சிங்கள மக்கள்தொகை, கடந்த ஆண்டு 30 சதவிகிதம் ஆனது. 81.76 சதவிகிதமாக இருந்த தமிழர் தொகை, 23.5 சதவிகிதமாக சுருங்கிப்போனது. இன்று திரிகோணமலையை, தமிழர் பிரதேசமாகவே சொல்ல முடியாது. இதே நிலைமையை மட்டக்களப்பும் அம்பாறையும் நெருங்கிக்கொண்டு இருக்கின்றன. முல்லைத் தீவும் கிளிநொச்சியும் அதே கதியை அடையப்போகின்றன. தமிழர்களின் வீடுகள் இருந்த இடங்கள் இடிக்கப்பட்டு நிலங்களாகவும், நிலமாக இருந்த பகுதிகள் வீடு கட்டும் இடங்களாகவும் வழங்கப்படுகின்றன. தன்னுடைய இடம், வீட்டைச் சட்டரீதியாக யாரும் இனி திரும்பப் பெறுவதற்கான வாய்ப்பே இல்லை.


மட்டக்களப்பு பன்குடா பகுதியைச் சேர்ந்த சீனித்தம்பி பத்மநாபனை, தமிழ் ஈழப்


பகுதியில் பெரும்பாலானவர்கள் அறிவார்கள். அந்தப் பகுதியில் மிக வசதியான குடும்பத்துக்காரர். தன்னுடைய செல்வத்தை எல்லாம் போராளிகளுக்கு உணவு தயாரித்துக் கொடுப்பதற்காகவே செலவு செய்தார். காட்டுப் பகுதியில் பதுங்கி இருக்கும் புலிகளுக்கு சாப்பாடு செய்து அனுப்பிவைப்பதுதான் அவரது வேலையாக இருந்தது. இந்திய ராணுவம் அங்கு இருந்தபோதும், அதே காரியத்தை சீனித்தம்பி செய்தார். அதைக் கண்டுபிடித்த ராணுவம், காலில் சுட்டு அவரைக் கைது செய்தது. ராணுவ முகாமில் சிறைவைக்கப்பட்ட நிலையில், அவர் இறந்துபோனார். உடலைக்கூட, அவரது குடும்பத்தினருக்குத் தர வில்லை!

அப்பாவுக்கு ஏற்பட்ட நிலையை, அவரது மகள் ஷகிலா உணர்ந்தார். உடனே, அவரும் நாட்டுக்காகப் போராட புலிகள் அமைப்புக்குள் இணைந்தார். புலிகளின் மிகப் பெரிய வெற்றியாகச் சொல்லப்படும் ஆனையிறவு சமரில் சித்திரா என்று பெயரிடப்பட்டு, இவர் களத்தில் இறங்கினார். அதில் சித்திராவுக்கு விலா எலும்பில் பலத்த காயம் ஏற்பட்டது. அதன் பிறகு, அவர் புலிகள் அமைப்பில் இருந்து விலகினார். அதே அமைப்பைச் சேந்த உருத்தி என்பவரைக் காதலித்துத் திருமணம் செய்துகொண்டார். இருவருக்கும் இரண்டு பிள்ளைகள் பிறந்தனர். 2007 ஜூலையில் மேஜர் உருத்தி, சிங்கள ராணுவத்தால் கொலை செய்யப்பட்டார். அப்பா, கணவர் இருவரையும் நாட்டுக்காகக் கொடுத்த அந்தப் பெண், மாவீரர் குடும்பங்களுக்கு மாதம்தோறும் தரப்படும் தொகையை மட்டும் வாங்கி, தானும் உண்டு தனது குழந்தைகளையும் காப்பாற்றி வந்தார். அவரது உடலில் ஏற்பட்ட பாதிப்பு காலப்போக்கில் அதிகமாகி, அறுவை சிகிச்சை செய்தால் மட்டுமே பிழைக்க முடியும் என்று சொன்னார்கள். அதற்கான செலவு ` 38 ஆயிரம் என்றும் சொல்லப்பட்டது.



அதற்காகப் பல இடங்களில் அலைந்தார். வெளிநாட்டில் இருக்கும் தனது உறவினர் மூலமாக அதை வாங்க முயற்சித்தார். அங்கே இருந்து பணத்தை அனுப்பிவைக்கும் சிரமத்தால், தொகை வந்து சேரவில்லை. சிகிச்சைக்கு வழி இல்லாமல், கடந்த 17-ம் தேதி சித்திரா செத்துப்போனார். அவரது இரண்டு பிள்ளைகளும் அநாதையாக நிற்கின்றன. இது தனிப்பட்ட ஒரு சித்திராவின் கதை அல்ல; ஓர் இனத்தின் கதை. ஒவ்வொரு குடும்பத்திலும் உழைக்க முடிந்தவர் அனைவரையும் போர் தின்று துப்ப... மற்றவர்கள் பிழைக்க வழி தெரியாமல் கிடப்பதுதான் இன்றைய ஈழத் தமிழனின் நிலை!

சொந்த தேசத்து மக்களை இப்படிச் சூன்யத்தில் தள்ளிவிட்ட இலங்கை அரசாங்கம், மகிழ்ச்சியாக இருக்கிறது. 'ஓர் இனத்தை அழிக்க வேண்டுமானால், அம்மக்களைக் கொல், அவர்கள் வாழும் மண்ணைக் கைப்பற்று' என்பதுதான் அரசியல் பாசிசத்தின் அரிச்சுவடி. இன்றைய ஈழத்தில் அதுதான் நடந்தது. இன்னும் ஒரே ஆண்டில், 'மலர்ந்தது சிங்கள தேசம்' என்ற அறிவிப்பை அவர்கள் செய்ய இருக்கிறார்கள். பயங்கவாதத்துக்கு எதிரான போர் என்று சொல்லி, விடுதலைப் புலிகள் அமைப்பின் மீது போர் தொடுக்கப்பட்டது. அந்த அமைப்பை முழுமையாக ஒழித்துவிட்டோம் என்று கடந்த ஆண்டு மே மாதம் அறிவித்தார்கள். அதற்குப் பிறகாவது வடக்கு, கிழக்கு, யாழ்ப்பாணம் பகுதி வாழ் தமிழ் மக்களை நிம்மதியாக வைத்திருக்கலாம். ஆனால், அதைச் செய்யவில்லை. அதாவது, அங்கே நடந்துகொண்டு இருப்பது பயங்கரவாதத்துக்கு எதிரான போர் அல்ல; ஓர் இனத்துக்கு எதிரான போர் என்பதால்தான், ஈழத் தமிழர்களை இன்னும் சிறுகச் சிறுகச் சித்ரவதை செய்து கொன்று தீர்த்து வருகிறார்கள் என்றே அங்கே இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. "தமிழர்கள் அதிகம் வாழும் பகுதிகளில், 55 சதவிகிதத்துக்கு மேல் சிங்களவர்களைக் குடியமர்த்த வேண்டும். அடுத்த தேர்தலில் இந்தப் பகுதிகளில் சிங்கள எம்.பி-க்களே அதிகமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு நாடாளுமன்றத்துக்கு அனுப்பிவைக்க வேண்டும்" என்ற முடிவோடு, இந்தக் காரியங்கள் செய்யப்படுகின்றன.

"வடக்கு மாகாணத்தில் சிங்களவர்கள்தான் முன்னர் பெருமளவில் வாழ்ந்தார்கள். பின்னர், அவர் கள் தமிழர்களால் விரட்டி அடிக்கப்பட்டார்கள். சிங்களவர் விரும்பினால், மீண்டும் வடக்குப் பகுதிக் குப் போய் வாழலாம்" என்று பகிரங்கமாக அறிவித்து உள்ளார் ஜனாதிபதி மகிந்தா ராஜபக்ஷே. "வட கிழக்கின் பாதுகாப்பு கருதி, அங்கு நிரந்தர ராணுவ முகாம்களும் படைத் தளங்களும் அமைக்கப்படும். அதில் பணிபுரியும் ராணுவத்தினர் தங்கி வாழ, அந்தப் பிரதேசத்தில் ராணுவக் குடியிருப்புகள் அமைக்கப்படும்" என்று ராணுவத் தளபதி லெப்.ஜெனரல் ஜெகத் ஜெயசூர்ய அறிவித்தார். இப்போது வடக்கில் மட்டும் ஒரு லட்சம் ராணுவ வீரர்கள் உள்ளனர். அதையட்டி, ஒரு லட்சம் குடியிருப்புகள் கட்டப்பட உள்ளன. இவர்கள் அனைவருக்கும் போர் வெற்றிக்குத் துணை புரிந்ததற்காக நிலங்கள் கொடுக் கப்பட உள்ளன. பல்வேறு வளர்ச்சித் திட்டங்கள் என்ற பெயரால், சிங்கள நிறுவனங்களுக்கு பல நூறு ஏக்கர் நிலங்கள் தாரை வார்க்கப்படுகின்றன. கடலோரப் பகுதி அனைத்தும் சுற்றுலாத்தலங்களாக மாற்றப்பட்டு, பீச் ரிசார்ட்ஸ் அமைக்க சிங்கள நிறுவனங்கள் உள்ளே நுழைந்துவிட்டன. மாவட்ட நிர்வாகத்தைக் கவனிக்க, அனைத்து இடங்களிலும் சிங்களவர்கள் நியமிக்கப்பட்டு உள்ளார்கள். ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரிகள் இதை மேற்பார்வை செய்கிறார்கள். மாவட்டக் காணி அதிகாரிகளாக நியமிக்கப்படும் சிங்கள அலுவலர்கள், ஏதாவது ஒரு திட்டத்தின் பெயரை எழுதி, நிலங்களைத் தாரை வார்க்கும் வேலையை நித்தமும் பார்த்து வருகிறார்கள். இன்னும் ஆறு மாதங்களில் தமிழர் நிலங்கள் அனைத் தும் கபளீகரம் செய்யப்பட்டு இருக்கும். இங்கு ஒரு சென்ட் நிலத்துக்கு போலிப் பத்திரம் வைத்திருந்தால், 20 ஆண்டுகளுக்கு வழக்கு நடக்கும். ஆனால், அங்கு ஓர் இனம் வாழ்ந்த நிலப் பகுதியே வேறு பெயர்களுக்கு பட்டப் பகலில் பட்டா மாற்றம் செய்யப்பட்டு வருகிறது!

60 ஆண்டுகளுக்கு முன்னால் திரிகோணமலையை தமிழர் தாயகத்தின் தலைநகர் என்றே பிரகடனம் செய்தார்கள். இதைத் தொடர்ந்தே, அந்தப் பகுதியில் சிங்களவர்களை அதிகமாகக் குடியேற்ற பல்வேறு திட்டங்களைப் போட்டார்கள். 1.3 சதவிகிதமாக இருந்த சிங்கள மக்கள்தொகை, கடந்த ஆண்டு 30 சதவிகிதம் ஆனது. 81.76 சதவிகிதமாக இருந்த தமிழர் தொகை, 23.5 சதவிகிதமாக சுருங்கிப்போனது. இன்று திரிகோணமலையை, தமிழர் பிரதேசமாகவே சொல்ல முடியாது. இதே நிலைமையை மட்டக்களப்பும் அம்பாறையும் நெருங்கிக்கொண்டு இருக்கின்றன. முல்லைத் தீவும் கிளிநொச்சியும் அதே கதியை அடையப்போகின்றன. தமிழர்களின் வீடுகள் இருந்த இடங்கள் இடிக்கப்பட்டு நிலங்களாகவும், நிலமாக இருந்த பகுதிகள் வீடு கட்டும் இடங்களாகவும் வழங்கப்படுகின்றன. தன்னுடைய இடம், வீட்டைச் சட்டரீதியாக யாரும் இனி திரும்பப் பெறுவதற்கான வாய்ப்பே இல்லை.



"இலங்கைத் தீவின் எந்த இடத்திலும் தமிழ் மக்கள் பெரும்பான்மையாக வாழக் கூடாது என்பதற்கு ஏற்ப மகிந்தா அரசு மறைமுகத் திட்டத்தை அமல்படுத்தி வருகிறது. தமிழ் மக்கள் பெரும்பான்மையாக வாழும் பிரதேசங்கள் இருந்தால், தமிழ் மக்கள் தமது பாரம்பரியத் தாயகம், அதற்கான சுயநிர்ணய உரிமை, தன்னாட்சி கோருவார்கள். அதனை இல்லாமல் செய்வதற்கான நடவடிக்கையே இது!" என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத் தலைவர் இரா.சம்பந்தம் சொல்கிறார்.

இதைத் தமிழர்கள் மட்டும் சொல்லவில்லை. அந்த நாட்டின் மிக முக்கியப் பத்திரிகையான சண்டே லீடர் (கொலை செய்யப்பட்ட லசந்தாவின் பத்திரிகை!) 'மகிந்தாவின் சிங்களக் குடியேற்றம்' என்ற தலைப்பில் கட்டுரை வெளியிட்டது. 'தமிழர்கள் அதிகம் வாழும் முறிகண்டியில் 12 ஆயிரம் சிங்களவர்கள் குடியேற்றப்பட்டு இருக்கிறார்கள். இது மீண்டும் ஓர் இனக் கலவரத்தை ஏற்படுத்துவதற்கான திட்டம்' என்று சொல்கிறது அந்தப் பத்திரிகை. இந்த முறிகண்டி பிள்ளையார் கோயிலுக்கு அருகில் வேண்டும் என்றே புத்த விகார் நிறுவப்பட்டது. நில உரிமையாளர் புத்த விகார் அமைக்கக் கூடாது என்று நீதிமன்றம் போய் தடை வாங்கி இருக்கிறார். ஆனால், வட கிழக்கு மாகாணத்தின் அனைத்துப் பகுதிகளிலும் புத்த விகார்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. 'யாழ்ப்பாணத்தில் அரச மரங்கள் இருக்கும் இடங்களில் எல்லாம் புத்தர் சிலைகளை வைக்கிறார்கள்' என்று சொல்கிறார் ஒரு பத்திரிகையாளர்.

மன அழுத்தம் போக்கவும் நம்பிக்கையை ஏற்படுத்தவும், புத்த பிட்சுக்கள், தமிழர் பகுதியில் மனநல வகுப்புகளை நடத்திக்கொண்டு இருக்கிறார்கள். 'இது தமிழர்களை மதம் மாற்றும் முயற்சி' என்று இந்து அமைப்புகள் குற்றம் சாட்டுகின்றன. பௌத்தர் கள் கொண்டாடும் பொசன் பண்டிகை, வெசாக் பண்டிகைக் கொண்டாட்டங்கள்தான் தமிழர் பகுதிகளில் அதிகமாக நடக்கின்றன. கிளி நொச்சியில் நடந்த பொசன் பண்டிகையை ராணுவத் தளபதி ஊறுஊ ராஜகுரு தலைமை தாங்கி நடத்தினார்!

சகல இடங்களிலும் உயர் அதிகாரிகளாக சிங்களர்கள் நியமிக்கப்படுகிறார்கள் என்பதைவிட, பள்ளிக்கூடங்களில் சிங்கள ஆசிரியர்களே அதிகமாக வேலைக்கு அமர்த்தப்படுகிறார்கள். இவர்களிடம் பேசுவதற்காக சிங்களம் படித்தாக வேண்டிய நெருக் கடி அனைவருக்கும் ஏற்பட்டுள்ளது. காலப்போக்கில் சிங்கள வழிக் கல்வியைக் கொண்டுவரவும், தமிழ்க் கல்வியை முற்றிலுமாகத் தடைபோடுவதற்கும் இது வழிவகுக்கும். முல்லைத் தீவு, அளம்பில், செம்மலை, வட்டுக்கால், முள்ளிவாய்க்கால், மாத்தளம், சாலை ஆகிய தமிழ்ப் பகுதிகள் அனைத்திலும் சிங்கள மீனவர்களே மீன் பிடிக்கிறார்கள். தமிழ் மீனவர்களுக் குப் படகும் இல்லை. வலையும் இல்லை. இருந்தும், மீன் பிடிக்கச் சென்றால், அவர்களைக் கடல்பகுதிக்கு ராணுவம் விடுவது இல்லை. இப்படி தமிழன் மொத்த மாக தண்ணீர் தேசத்தில் தத்தளிக்கிறான். "சண்டை நேரத்துல செத்திருந்தா, நிம்மதியாப் போயிருக்கும்!" என்றே ஒவ்வொரு தமிழனும் ஒப்பாரிவைக்கிறான். சமாதியில் போய் உட்கார்ந்துகொண்டு சாவை அழைப்பதுபோலவே அவர்களது வாழ்க்கை.

இருக்கட்டும், நமக்குத்தான் 'எந்திரன்' ரிலீஸ் ஆகிவிட்டதே!

- ப.திருமாவேலன்
நன்றி : ஆனந்த விகடன்

Tuesday, October 5, 2010

சரத்பொன்சேகா-கைதி எண்.0/22032


இலங்கை ராணுவ தளபதியாக இருந்து, விடுதலைப்புலிகளுக்கு எதிரான போரில் வெற்றிக்கு வழி வகுத்தவர், சரத் பொன்சேகா. போர் முடிவடைந்தவுடன், ராஜபக்சேவுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால், ராணுவ பதவியில் இருந்து விலகி, அரசியலில் குதித்தார்.

அதிபர் தேர்தலில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். பின்னர், கைது செய்யப்பட்டு, கடற்படை தலைமையகத்தில் உள்ள தடுப்பு காவல் மையத்தில் அடைக்கப்பட்டார்.

அவருக்கு எதிராக ராணுவ கோர்ட்டில் 2 வழக்குகள் தொடரப்பட்டன. ராணுவத்துக்கு ஆயுத கொள்முதல் செய்ததில் ஊழல் செய்ததாக தொடரப்பட்ட வழக்கில், அவருக்கு 3 ஆண்டுகள்வரை ஜெயில் தண்டனை விதிக்க ராணுவ கோர்ட்டு கடந்த 17-ந் தேதி சிபாரிசு செய்தது. இதற்கு, முப்படை தளபதி என்ற முறையில், அதிபர் ராஜபக்சே ஒப்புதல் அளித்தார்.

இதையடுத்து, கடந்த வியாழக்கிழமை நள்ளிரவு, தடுப்பு காவல் மையத்தில் இருந்து கொழும்பில் உள்ள வெளிக்கடை சிறைக்கு பொன்சேகா மாற்றப்பட்டார்.

`எஸ்' வார்டில் உள்ள தனிமை `செல்'லில் அவர் அடைக்கப்பட்டார். அவருக்கு கைதி உடை தரப்பட்டது. அது, அவரது உடம்புக்கு பொருத்தமாக இல்லை. சிமெண்ட் தரையில் பாய் விரித்து அவர் படுத்துக்கொண்டார். ஒரு தலையணை மட்டுமே அவருக்கு கொடுக்கப்பட்டுள்ளது.

மறுநாள் வெள்ளிக்கிழமை, அதே பிளாக்கில் உள்ள மற்ற கைதிகளை போலவே, அதிகாலை 5 மணிக்கு பொன்சேகா எழுந்து விட்டார். அவரது அறையில் கழிவறை உள்ளது. ஆனால் தண்ணீர் வசதி இல்லை.

இதனால், பொன்சேகா, தனது வார்டுக்கு வெளியே உள்ள தண்ணீர் தொட்டியில் வாளியில் தண்ணீர் எடுத்து பயன்படுத்தினார். குளிப்பதற்கும், மற்ற பயன்பாட்டுக்கும் அவர் இப்படித்தான் தண்ணீர் எடுக்க வேண்டி இருந்தது.

பின்னர், காலை உணவுக்காக, மற்ற கைதிகளை போலவே, பொன்சேகாவும், கையில் தட்டும், குவளையும் ஏந்தி வரிசையில் நின்றார். பின்னர், பொன்சேகா செய்ய வேண்டிய வேலையை முடிவு செய்வதற்காக, அவரது உடல்நிலையை டாக்டர் பரிசோதித்தார். அவருக்கு பொருத்தமான உடைகள் தைப்பதற்காக, அவரது உடலை டெய்லர் அளவெடுத்தார்.

மதிய உணவுக்காக, பொன்சேகா மறுபடியும் வரிசையில் நின்றார். அரிசி சாதம், வெள்ளரிக்காய் கறி, பருப்பு, காய்கறி கூட்டு, சிறிய மீன் துண்டு, மசாலா ஆகியவை வழங்கப்பட்டன. பிறகு, மதியம் 2 மணிவரை, தனது அறையில் பொன்சேகா இருந்தார். பிறகு, தனக்கு ஒதுக்கப்பட்ட வேலையை செய்தார்.

இரவு 7 மணிஅளவில், அறைக்கு திரும்பினார். அப்போது, விளக்குகள் அணைந்து விட்டன. இதனால் இருட்டிலேயே பொன்சேகா தரையில் பாய் விரித்து தூங்கினார். பொன்சேகாவின் தினசரி ஜெயில் வாழ்க்கை இதேபோன்று கழிந்து வருகிறது.

சிறையில் அவருக்கு கைதி எண். 0/22032 வழங்கப்பட்டுள்ளது. சிறையில் அவருக்கு உரிய வேலை கொடுக்கப்பட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி வெலிக்கடை சிறைக்கு வரும் தபால்களை பிரித்து உரியவர்களுக்கு வினியோகிக் கும் வேலை கொடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தபால்களை பிரிக்கும் வேலையில் தொடர விரும்பாவிட்டால் அவருக்கு சிறையில் உள்ள அரசு அச்சகத்தில் நோட்டீஸ் அச்சடிக்கும் வேலை கொடுக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.

தபால் பிரிக்கும் வேலை அல்லது நோட்டீஸ் அச்சடிக்கும் வேலையை சரத்பொன்சேகா ஏற்றுக் கொள்வாரா? என்பதில் கேள்விக்குறி நிலவுகிறது. அவர் இந்த வேலைகளை செய்யாவிட்டால் கடுமை யான வேலை ஒன்றில் அவர் ஈடுபடுத்தப்படுவார் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

Saturday, October 2, 2010

நாடு கடந்த தமிழ் ஈழ அரசின் பிரதமராக ருத்திரகுமாரன் தேர்வு!


நாடு கடந்த தமிழ் ஈழ அரசின் பிரதமராக ருத்திரகுமாரன் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதுகுறித்து இலங்கை தமிழர் ஆதரவு இணையதளங்களில் வெளியாகி உள்ள செய்தியில்,


நாடுகடந்த தமிழ் ஈழ அரசின் பிரதிநிதிகள் செப்டம்பர் 29ம் தேதி முதல் அக்டோபர் 1ம் தேதி வரை 3 நாட்கள் கூடி அரசுக்கான அரசியலமைப்பினை அங்கீகரித்ததுடன் பிரதமரையும் தேர்வு செய்தனர். இதனைத்தொடர்ந்து அமைச்சரவையினை உருவாக்கும் செயற்பாடுகள் தொடர்ந்தன.


நியூயார்க் நகரில் ஐநா சபைக்கு அருகேயுள்ள பிளாசா ஹோட்டலில் ஒன்றுகூடிய பிரதிநிதிகளுடன் பாரீஸ், லண்டன் நகரங்களில் உள்ள பிரதிநிதிகளும் விடியோ கான்ஃபிரன்ஸ் மூலம் தொடர் கொண்டு விவாதித்தனர்.


இந்த விவாதத்தில், பிரதமருக்கு உதவியாக 3 துணை பிரதமர் பதவிகளும் 7 அமைச்சர் பதவிகளும் உருவாக்கப்படவேண்டும் என தீர்மானிக்கப்பட்டது.


நாடுகடந்த தமிழ் ஈழ அரசின் நாடாளுமன்றம் இரண்டு அவைகளைக் கொண்டதாக இருக்கும். இது தேர்வு செய்யப்பட்ட பிரதிநிதிகளைக் கொண்ட நாடாளுமன்றத்தையும், செனட் என்னும் நியமன உறுப்பினர்களைக் கொண்ட ஆலோசனைச் சபையையும் கொண்டிருக்கும்.


நாடுகடந்த தமிழ் ஈழ அரசுக்கான அரசியலமைப்பினை அங்கீகரித்து ஏற்றுக்கொண்டதனைத் தொடர்ந்து, கனடாவைச் சேர்ந்த பொன் பாலராஜன் நாடாளுமன்ற சபாநாயகராகவும், சுவிட்சர்லாந்து நாட்டைச் சேர்ந்த சுகன்யா புத்திரசிகாமணி துணை சபாநாயகராகவும் தேர்வு செய்யப்பட்டனர்.


விஸ்வநாதன் ருத்திரகுமாரன் நாடுகடந்த தமிழ் ஈழ அரசின் முதலாவது பிரதமராக நாடாளுமன்றத்தால் தேர்வு செய்யப்பட்டார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.