Labels

Friday, December 31, 2010

தெரியாமல் ஒரு முத்துக்குமரனை இழந்தோம்! தெரிந்தே ஒரு பேரறிவாளனை இழக்கலாமா ?





ராசீவ் கொலை வழக்கில் பல்லாண்டுகளாக சிறையில் வாடும் பேரறிவாளனை விடுதலை செய்யக்கோரி ஈரோடை நாம் தமிழர் கட்சியினர் “தெரியாமல் ஒரு முத்துக்குமரனை இழந்தோம்! தெரிந்தே ஒரு பேரறிவாளனை இழக்கலாமா ?” என்ற துண்டறிக்கையினை வெளியிட்டுள்ளனர்

தமிழர்களுக்கென்று உலகில் ஒரு நாடு தேவை என்ற உணர்வைத்தான் சிங்கள அரசின் செயல்பாடுகள் ஏற்படுத்துகின்றன - கி. வீரமணி அறிக்கை



தமிழில் தேசிய கீதம் பாடக் கூடாது; சிங்கள மொழியில்தான் பாடவேண்டும் என்ற நிலையை இலங்கை அரசு மேற்கொண்டுள்ள நிலையில், அதனை எதிர்த்த தமிழின அதிகாரி மா. சிவலிங்கம் சுட்டுக் கொல்லப் பட்டுள்ளார். போர் ஓய்ந்து தமிழர்கள் மீதான அழிவு வேலை தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது என்பதைச் சுட்டிக் காட்டி, ஈழத்தில் தமிழர்கள் உரிமை மீட்கப்பட, உலக அளவில் தமிழர்களுக்கென்று ஒரு நாடு தேவை என்ற உணர்வை ஏற்படுத்துகிறது என்று திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

சிங்கப்பூர் முன்னாள் அதிபர் லீக் வான்யூ - இலங்கை அதிபர் ராஜபக்சே பற்றி கூறியது நூற்றுக்கு நூறு உண்மை என்பது அன்றாடம் இலங்கைத் தீவில் தமிழர் களுக்கு எதிராக நடைபெற்றுவரும் கொடுமைகள் நிரூபித்து வருகின்றன.


சிங்கள இனவெறி இன்னும் அடங்கவில்லை


லட்சக்கணக்கான ஈழத் தமிழர்கள் கொன்றொழிக் கப்பட்டும், இன்னும் சிங்கள வெறியர்களின் தமிழர் களுக்கு எதிரான படுகொலைப் பசியின் வெறி இன்னும் தீரவில்லை என்றே தெரிகிறது.
இலங்கையில் தமிழில் தேசிய கீதம் பாடக் கூடாது; சிங்கள மொழியில் மட்டுமேதான் அது இருக்கவேண்டும் என்ற ஒரு நிலையை சிங்கள அரசு மேற்கொண்டது. கடும் எதிர்ப்பு ஈழத் தமிழர்கள் மத்தியிலும், உலகத் தமிழர்கள் மத்தியிலும் வெடித்தெழுந்தது. இந்த நிலையில் அவ்வாறு முடிவெடுக்கப்படவில்லை என்று இலங்கை அமைச்சர் ஒருவர் சமாதானம் கூறினர்.
ஆனாலும், நடைமுறையில் சிங்கள மொழியில்தான் தேசிய கீதம் பாடப்பட்டு வருகிறது.

தமிழின அதிகாரி படுகொலை

யாழ்ப்பாணம் வலிகாமம் பகுதியைச் சேர்ந்த கல்வித் துறை துணை இயக்குநர் மா. சிவலிங்கம் - சிங்கள மொழியில் மட்டும் தேசிய கீதம் பாடுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து வந்த நிலையில் கடந்த ஞாயிறன்று சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார் என்ற செய்தி தமிழர்களின் ரத்தம் மட்டுமல்ல; மனிதநேயம் கொண்ட ஒவ்வொருவரின் ரத்தமும் உறைகிறது.
தமிழர்கள் எந்த வகையிலும் உரிமைகளுக்காகக் குரல் கொடுக்கக் கூடாது; அப்படிக் குரல் கொடுத்தால் இந்தச் சிவலிங்கத்துக்கு ஏற்பட்ட கெதிதான் அவர்களுக்கும் என்று எச்சரிக்கின்ற அபாய அறிவிப்புதான் இது.

விபீஷணன் பிறந்த மண்ணில்...

சிங்கள அரசால் உருவாக்கப்பட்ட துரோகிகளான கருணா அல்லது டக்ளஸ் தேவானந்தாவின் ஆள்கள் தான் இதனைச் செய்திருக்கவேண்டும். அல்லது சிங்கள இராணுவத்தினரேகூட மாற்றுடையில் இந்தக் கேவல மான படுகொலையைச் செய்திருக்கவேண்டும் என்று கருதப்படுகிறது.

அந்த இலங்கைத் தீவிலேதானே இராவணனோடு உடன் பிறந்து, காட்டிக் கொடுத்து ஆழ்வார் பட்டம் பெற்ற விபீஷணர்கள் தோன்றினார்கள் - அந்தக் கதை இன்னும் தொடர்வது வெட்கக்கேடு!

துரோகிகள் செய்திருந்தாலும் சரி, இராணுவத்தினரே செய்திருந்தாலும் சரி, அதற்குப் பின்புலமாகவும், பலமாக வும் இருந்து வருவது - இலங்கையின் சிங்கள அரசு - ராஜபக்சே என்னும் 21 ஆம் நூற்றாண்டின் ஹிட்லர்.

உலகம் முழுவதும் கடுமையான கண்டனத்துக்கும், வெறுப்புக்கும் ஆளாகியும்கூட, இந்த மனிதன் திருந்துவ தாகக் காணோம்.

லண்டனில் அவமானப்பட்டும் புத்தி வரவில்லையே!

சில நாள்களுக்குமுன் லண்டன் சென்று - அங்குள்ள தமிழர்களால் அவமானப்படுத்தப்பட்டு நாடு திரும்பிய நிலையில்கூட புத்தி கொள்முதல் பெறவில்லை.
போர்க் குற்றவாளியாக உலக நீதிமன்றத்தின் முன் நிறுத்தப்பட்டு, தண்டனை அளிக்கப்பட்டாலொழிய இதற் கொரு தீர்வைக் காணமுடியாது.

இதில் மிகவும் வருத்தப்படவேண்டியது - இந்த ஹிட்லரை போர்க் குற்றவாளியாக அறிவிப்பதற்குத் தடையாக இருப்பது இந்திய அரசுதான். இத்தகைய இந்திய அரசின் நடவடிக்கை மூலம் உலக அரங்கில் இந்தியாவின் மரியாதையில் கறை படிந்துவிட்டது. என்றாலும் அதைப்பற்றியெல்லாம் கவலைப்படாமல் 2011 ஆம் ஆண்டில் இலங்கை, இந்தியக் கடற்படையினர் இணைந்து இலங்கைக் கடற்பரப்பில் பயிற்சி நடவடிக்கை களை மேற்கொள்ள முடிவு எடுக்கப்பட்டுள்ளதாம்!

இந்திய அரசின் வருந்தத்தக்க செயல்பாடு!

இந்திய அரசுக்கு தமிழக முதலமைச்சர் அவர்கள் பல வகைகளிலும் வேண்டுகோள் விடுத்தும், உலகத் தமிழர்கள் வலியுறுத்தியும், மனித உரிமை அமைப்புகள் எடுத்துச் சொல்லியும் இந்தியா ஒட்டக்கூத்தன் பாட்டுக்கு இரட்டைத் தாழ்ப்பாள் என்ற ரீதியில் செயல்பட்டு வருவது மிகவும் கண்டிக்கத்தக்கதாகும்.

பன்னாட்டுப் பொது மன்னிப்புப் பேரவையும் (International Amnesty), ஆசிய இயக்குநர் சாம் ஜெர்பி விடுதலைப் புலிகள் அழிப்பு என்ற பெயரில் பெரும் அளவுக்குப் பொதுமக்கள் கொல்லப்படுகிறார்கள் என்று தெரிந்திருந்தும்கூட, இந்தியா இலங்கையை ஆதரித்தது என்று கூறவில்லையா?

தமிழர் இறையாண்மை மாநாடு

சென்னையை அடுத்த மறைமலை நகரில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் நடைபெற்ற தமிழர் இறையாண்மை மாநாட்டில் (26.12.2010) நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களின் அடிநாதம் எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்பது இவற்றின் மூலம் பெறப்படும் உண்மையாகும்.

உலகில் தமிழனுக்கென்று ஒரு நாடு இருந்தால், ஈழத்தில் இவ்வளவுப் பெரிய கொடுமை தமிழர்களுக்கு எதிராக நடந்திருக்க வாய்ப்புண்டா?

இலங்கை சிங்கள அரசும், இந்திய அரசும் நடந்து கொண்டுவரும் போக்கு - இதுபற்றிய உரத்த சிந்தனையை உலகத் தமிழின மக்கள் மத்தியில் ஏற்படுத்தித்தான் தீரும் என்று சுட்டிக்காட்டுவது நமது முக்கிய கடமையாகும்.

விடுதலை பிறக்கும் இடம்!

கொடுமைகளின் மத்தியிலும், உரிமைகள் பறிப்பின் இடத்திலிருந்தும்தானே உரிமை முழக்கம் என்ற விடுதலைக் குழந்தை பிறக்கிறது. வரலாறு கற்பிக்கும் இந்தப் பாடத்தை அறிந்திராவிட்டால், அதற்கு உலகத் தமிழர்கள் பொறுப்பல்ல!





தலைவர்,
திராவிடர் கழகம்.

Monday, December 27, 2010

தனித் தமிழ்நாடு கோரிக்கைக்கான காரணங்களும் தேவைகளும் இன்றும் அப்படியே இருக்கின்றன! தமிழர் இறையாண்மை மாநாட்டில் தொல்.திருமாவளவன் ஆவேசம்!









திசம்பர் 26, 2010 அன்று மலைநகரில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் தமிழர் இறையாண்மை மாநாடு நடைபெற்றது. மாநாட்டிற்கு கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் தலைமை தாங்கினார். திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி சிறப்புரையாற்றினார். முன்னதாக மாலை 4 மணி முதல் இசையரசு ஒருங்கிணைப்பில் பின்னணிப் பாடகர்கள் புதுவை சித்தன் செயமூர்த்தி, சிறுத்தை சின்னப்பொண்ணு, ஆபிரகாம் ஆகியோர் பங்கேற்ற இசை நிகழ்ச்சி நடைபெற்றது. மாலை 6 மணியளவில் மாநாட்டுக் கொடியை தொல்.திருமாவளவன் ஏற்றி வைத்ததையடுத்து, மாநாட்டு நிகழ்ச்சிகள் தொடங்கின. காஞ்சிபுரம் மாவட்டச் செயலாளர் சூ.க. விடுதலைச் செழின் வரவேற்புரையாற்றினார். கட்சியின் பொதுச்செயலாளர்கள் சிந்தனைச்செல்வன், இரவிக்குமார், கா.கலைக்கோட்டுதயம், பொருளாளர் முகம்மது யூசுப் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநாட்டு சிறப்பு மலரை தொல். திருமாவளவன் வெளியிட,

கி. வீரமணி அவர்கள் பெற்றுக்கொண்டார். பின்னர் ஐ.நா. அவை போல் அமைக்கப்பட்டிருந்த மேடையில் தமிழர்க் கொடியை கி.வீரமணி ஏற்றி வைத்து சிறப்புரையாற்றினார்.

பல லட்சக் கணக்கானோர் திரண்டிருந்த தமிழர் இறையாண்மை மாநாட்டில் தொல். திருமாவளவன் ஆற்றிய நிறைவுரை வருமாறு:

அனைவருக்கும் வணக்கம்.

என்னுடைய அழைப்பை ஏற்று இலட்சக்கணக்கில் திரண்டு வந்திருக்கும் உங்களுக்கு முதலில் என் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். தேர்தல் நெருங்குகிற சூழலில் எல்லாக் கட்சிகளும் தேர்தல் பணிகளில் தீவிரமாக இருக்கிறார்கள். ஆனால் நாமோ தமிழர்க்கு இறையாண்மை வேண்டுமென்று கடந்த ஆறு மாத காலமாக தமிழகமெங்கும் தீவிரமாகப் பிரச்சாரம் செய்து இந்த மாபெரும் மாநாட்டை நடத்திக் கொண்டிருக்கிறோம். இந்த மாநாட்டைப் பற்றி பலரும் பலவிதமான கருத்துகளைப் பரப்பி வருகின்றனர். தனித்தமிழ்நாடு வேண்டுமென்று கோருகிற மாநாடாக விடுதலைச் சிறுத்தைகள் நடத்துகிறார்கள் என்று சிலர் கருத்துப் பரப்பி உள்ளனர். எப்படியாவது தி.மு.க. கூட்டணியில் குழப்பம் ஏற்படுத்த வேண்டுமென்பதும், விடுதலைச் சிறுத்தைகளைத் தனிமைப்படுத்த வேண்டுமென்பதும் சிலருடைய விருப்பமாக இருக்கிறது. அதனால் இந்த மாநாட்டின் அடிப்படை நோக்கத்தைத் திசைதிருப்புகிற வகையில் இவ்வாறு வதந்திகளைக் கிளப்பியுள்ளனர். நாங்கள் தனித் தமிழ்நாடு கோரவில்லை. ஆனால் அவ்வாறு கோருவதற்கு காரணங்களும் தேவைகளும் இருப்பதை மட்டும் நான் சுட்டிக்காட்டுகிறேன். திராவிட நாடு கோரிக்கையைக் கைவிட்டபோது, பேரறிஞர் அண்ணா அவர்கள், ""கோரிக்கையை நாங்கள் கைவிட்டாலும், அதற்கான காரணங்கள் அப்படியே உள்ளன'' என்று கூறினார். ஆனால் விடுதலைச் சிறுத்தைகள் தனித்தமிழ்நாடு கோரிக்கையை வைக்கவுமில்லை, கோரிக்கையை கைவிடவுமில்லை. கோருவதற்கான காரணங்கள் இருக்கின்றன என்பதையே சுட்டிக்காட்டுகிறோம்.

இந்த உலகில் தமிழருக்கு ஒரு நாடு வேண்டுமென்றும், அது தமிழீழமாக மலர வேண்டும் என்றும், அதனைச் சர்வதேசச் சமூகம் அங்கீகரிக்க வேண்டுமென்றும் கோருவதே இம்மாநாட்டின் முதன்மையான நோக்கம். ஈழத் தமிழர்கள் வாழும் வடகிழக்கு மாநிலங்கள் அவர்களது பூர்வீகத் தாயகமாகும். அதனை அங்கீகரிக்க வேண்டுமென்பதே ஈழத் தமிழர்களின் கோரிக்கை. அதன் அடிப்படையில்தான் தாயகம், தேசியம், தன்னாட்சி என்கிற கொள்கை முழக்கங்களை விடுதலைப் புலிகள் முன்வைத்தனர். தொடர்ந்து அதனை உலகம் தழுவிய அளவில் முன்னெடுத்துச் செல்வது ஒவ்வொரு தமிழரின் கடமை என்று விடுதலைச் சிறுத்தைகள் உணருகிறது. அதன் வெளிப்பாடாகவே இம்மாநாட்டை ஒருங்கிணைத்திருக்கிறோம்.

தமிழீழம் வேண்டுமென்பது ஈழத் தமிழர்களுக்கு மட்டும் உரிய கோரிக்கை அல்ல. ஒட்டுமொத்தத் தமிழர்களுக்குமான கோரிக்கை. இந்திய இறையாண்மை என்கிற பெயரில் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாகக் குரல் கொடுக்கக்கூட முடியாத நிலையில் தமிழ்நாட்டுத் தமிழர்கள் சிக்குண்டு கிடக்கிறோம். தமிழ்நாட்டில் வாழ்கிற தமிழ்த் தேசிய இனத்திற்கும் இறையாண்மை வேண்டுமென்பதே நமது கோரிக்கையாகும். தமிழர்க்கு இறையாண்மை வேண்டுமென்றால் ஒவ்வொரு தேசிய இனத்திற்குமான இறையாண்மையையும் மதிக்கிறோம் என்றே பொருளாகும். தமிழர்கள் பெரும்பான்மையாக வாழும் தமிழ்நாட்டில் பிறமொழி பேசுகிறவர்களும் கணிசமாக வாழ்கின்றனர். குறிப்பாக, தெலுங்கு, கன்னடம், மலையாளம், பஞ்சாபி, உருது போன்ற மொழிகளைப் பேசும் மக்களும் இருநூறு, முந்நூறு ஆண்டுகளுக்கு மேலாக இங்கு வாழ்ந்து வருகின்றனர். அவர்களின் மொழி உரிமை, கலாச்சார உரிமை பாதுகாக்கப்பட வேண்டுமென்பதில் விடுதலைச் சிறுத்தைகள் தெளிவாகவும் உறுதியாகவும் உள்ளோம். இன்னும் சொல்லப்போனால், தமிழ்நாடுதான் அவர்களுக்குத் தாயகமும் ஆகும். இந்நிலையில் தமிழர் இறையாண்மை என்பது தமிழ்த்தேசிய இனத்தின் இறையாண்மையாகும். என்றாலும் தமிழகத்தில் வாழும் அனைவருக்குமான இறையாண்மையாகவும் அமையும். அதாவது தமிழக அரசின் இறையாண்மையையே நாம் இங்கு வலியுறுத்துகிறோம்.

மாநில அரசுகளின் அதிகாரங்களிலும் உரிமைகளிலும் குறுக்கீடுகளும் தலையீடுகளும் இருக்கக் கூடாது. இன்று நிலைமை அவ்வாறு இல்லை. மாநில அரசுகளின் உரிமைகளை இந்திய அரசு பறித்து வருகிறது. மத்திய அரசின் ஏஜெண்டுகளாகவே மாநில அரசுகளை இந்திய அரசு நடத்துகிறது. அமெரிக்காவில் உள்ளதுபோல் ஒவ்வொரு மாநில அரசுக்குமான இறையாண்மையோடு மத்தியில் ஒரு கூட்டாட்சியை இங்கு உருவாக்க வேண்டும். இந்திய அரசு தற்போது பல கட்சிகளின் கூட்டணி அரசாக இயங்குகிறது. ஆனால், அது கூட்டரசாக இயங்கவில்லை. ஒவ்வொரு மாநிலத்திற்கும் முழு அதிகாரங்களையும் உரிமைகளையும் வழங்க வேண்டும். அதுதான் ஒவ்வொரு தேசிய இனத்திற்குமான இறையாண்மையாகும். ஆனால், காவல்துறை, கல்வித்துறை போன்ற பல துறைகளிலும் இந்திய அரசின் மேலாண்மையே மேலோங்கி இருக்கிறது. அண்மையில் தேசியப் புலனாய்வுக் கழகம் என்ற ஓர் அமைப்பை இந்திய அரசு உருவாக்கியுள்ளது. இது மாநிலக் காவல்துறையின் அதிகாரங்களில் தலையிடும் அமைப்பாக உள்ளது. இந்த அமைப்பை உடனடியாகக் கலைக்க வேண்டும். மருத்துவக் கல்வி மற்றும் உயர் கல்வி தொடர்பாக முடிவெடுக்கும் அதிகாரத்தைப் பறிக்கிற வகையில் இந்திய அரசு ஓர் அமைப்பை உருவாக்கியுள்ளது. இதுவும் மாநில அரசுகளின் உரிமைகளைப் பறிக்கும் செயலாகும். இந்த அமைப்பையும் உடனடியாகக் கலைக்க வேண்டும் என்பதுடன் கல்வி தொடர்பான அதிகாரங்களை மாநிலப் பட்டியலில் சேர்க்க வேண்டும். அரசமைப்புச் சட்டத்தை உருவாக்குகிறபோதே மாநில அரசுகள், மத்திய அரசின் ஏஜெண்டுகளாக இருக்க முடியாது என்று புரட்சியாளர் அம்பேத்கர் தெளிவுபடுத்தியிருக்கிறார். அதிகாரங்களை மத்திய பட்டியல், மாநிலப் பட்டியல், பொதுப்பட்டியல் என்று வகைப்படுத்தியிருக்கிறார். பொதுப்பட்டியல் என்றால் அவை முழுவதும் மத்திய அரசுக்கே உரியது என்று இந்திய அரசு கருதுகிறது.

இந்நிலையில் பொதுப்பட்டியல் என்ற பட்டியலையே நீக்கிவிட்டு அதிலுள்ள அதிகாரங்களை மாநிலப் பட்டியலில் சேர்க்க வேண்டும். அமெரிக்காவில் உள்ளதுபோல் மாநில அரசுக்கு என்று மாநிலக் கொடி வைத்துக்கொள்ள அனுமதிக்க வேண்டும். ஒவ்வொரு ஆகஸ்டு 15 அன்றும் மாநிலக் கொடிகளை கோட்டையில் ஏற்ற வேண்டும். சனவரி 26 குடியரசு நாளில் மட்டும் இந்திய அரசின் கூட்டரசாக தேசியக் கொடியை ஏற்றலாம். ஆளுநர் பதவியை இந்திய அரசு, மாநில அரசுகளைக் கண்காணிக்கும் ஒரு கங்காணியாகவே நடத்துகிறது. எனவே ஆளுநர் பதவியை இந்திய அரசு திரும்பப் பெற வேண்டும். மாநிலக் கல்வித் துறை அமைச்சர்களே பல்கலைக்கழக வேந்தர்களாகச் செயல்பட அனுமதிக்க வேண்டும். வெளியுறவுக் கொள்கையிலும் தேசிய இனச் சிக்கல் தொடர்பான பிரச்சினைகளிலும் அந்தந்த மாநில அரசுகளுடன் கலந்துபேசித்தான் முடிவெடுக்கவேண்டும். ஈழ விவகாரத்தில் தமிழக அரசுடன் அல்லது தமிழக மக்களுடன் கலந்துபேசாமல் இந்திய அரசு முடிவுகளை எடுத்தது. சிங்கள வெறியர்களை ஆதரித்தது. இது தமிழர் இறையாண்மைக்கு எதிரான செயலாகும்.

இவ்வாறு மாநில அரசுகளின் உரிமைகளைக் கோருவது இம்மாநாட்டின் நோக்கங்களில் ஒன்றாகும். தமிழக அரசுக்கும் இந்த மாநாட்டின் மூலம் தோழமையுடன் ஒரு கோரிக்கையை முன்வைக்கிறோம். உழைக்கும் ஏழை எளிய மக்களை வெகுவாகப் பாதிக்கிற டாஸ்மாக் மதுக்கடைகளை உடனடியாக இழுத்து மூட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம். எண்ணற்ற நலத் திட்டங்களைத் தீட்டி அவற்றை வெற்றிகரமாக நடத்தும் மாண்புமிகு முதல்வர் அவர்களை விடுதலைச் சிறுத்தைகள் நெஞ்சாரப் பாராட்டுகிறோம். அதே வேளையில் இளைய தலைமுறையினரைப் பாழ்படுத்துகின்ற மதுக் கடைகளை மூட வேண்டியதையும் சுட்டிக்காட்டுகிறோம்.

தமிழகத்தின் நீர்வளத்தை வெகுவாகப் பாதிக்கச் செய்யும் காரணத்தால் ஆறுகளில் மணல் அள்ளுவதைத் தடுக்க வேண்டும் என்றும், மணல் பயன்பாட்டிற்குப் பதிலாக மாற்றுப் பொருளை கண்டறிய வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறோம். அத்துடன் தமிழக நிலவளங்களைப் பாதிக்கச் செய்வதுடன் நீர் ஆதாரத்தையும் பாதிக்கிற வகையில் தமிழகமெங்கும் வேலிக் கருவைக் காடுகளை முற்றிலுமாக ஒழித்திடச் சிறப்புத் திட்டம் ஒன்றை உருவாக்கிடக் கேட்டுக்கொள்கிறோம்.

மதுவிலக்குக் கொள்கையில் காந்தியடிகளை தேசத் தந்தை என்று போற்றும் காங்கிரசார் இதை ஏன் ஒரு தேசியக் கொள்கையாக அறிவிக்கக் கூடாது. மதுவிலக்குத் தொடர்பாக தேர்தல் முடிந்த கையோடு விடுதலைச் சிறுத்தைகள் தீவிரப் பிரச்சாரத்தை மேற்கொள்ளும். இந்தத் தேர்தலில் திமுகவுடன் தேர்தல் கூட்டணி தொடரும். விடுதலைச் சிறுத்தைகள் அனைவரும் தேர்தல் பணிகளைத் தொடங்க வேண்டும். இந்தத் தேர்தலில் தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரத்தை வென்றாக வேண்டும். 2011ஆம் ஆண்டை விடுதலைச் சிறுத்தைகளின் ஆண்டு என்று நாம் பிரகடனப்படுத்தியிருக்கிறோம். தை முதல் நாள் அன்று 2011ஆம் ஆண்டை வரவேற்கும் வகையில் ஆங்காங்கே இனிப்புகள் வழங்க வேண்டும். கடந்த 6 மாத காலத்தில் உறுப்பினர் சேர்க்கையில் இதுவரை 45 இலட்சம் உறுப்பினர்கள் பதிவு செய்துள்ளனர். இதில் 15 லட்சம் பேர் தலா 10 ரூபாய் கட்டணம் செலுத்தி தங்களைத் தீவிர உறுப்பினர்களாகப் பதிவு செய்துள்ளனர். தமிழகமெங்கிலும் 20 ஆயிரம் கிளைகளைக் கொண்ட பேரியக்கமாக நாம் வளர்ந்திருக்கிறோம். தலித்துகளின் விடுதலையும் தமிழீழ விடுதலையும் நமது முதன்மையான இலட்சியம் என்பதை நெஞ்சில் நிறுத்தி களப்பணியைத் தொடருவோம்.

நன்றி வணக்கம்.

கி. வீரமணி அவர்களின் உரை

தமிழர்களின் எழுச்சி வரலாற்றில் திருப்புமுனை மாநாடு இது. தமிழர்களின் உணர்வைப் பதிவு செய்யும் மாநாடு (பலத்த கரவொலி!). தமிழர்களின் உணர்வினை உலகம் உணர்ந்து கொள்ளச் செய்யும் அச்சாணி மாநாடு.

இங்கு நிறைவேற்றப்பட்ட 30 தீர்மானங்கள் ஒவ்வொன்றும் உலகத் தேசிய இனங்களால் ஆராயப்படக் கூடியவை.

நானும் வழிமொழிகிறேன்!

பல கோடி தமிழர்கள் சார்பாகவும், தந்தை பெரியாரின் தொண்டன், அண்ணல் அம்பேத்கரின் மாணவன் என்ற முறையிலும் இந்தத் தீர்மானங் களை நானும் ஒருமுறை வழிமொழிகிறேன்.
தமிழினம் தளர்ந்து போய்விட்டது என்று நம் எதிரிகள் கணக்குப் போட்டுக் கொண்டிருக்கும் ஒரு காலகட்டத்தில் அது தப்புக் கணக்கு; சோதனைகளை வெல்லுவோம் தோள் தூக்கிப் புறப்பட்டோம் என்று காட்டுகிற மாநாடு இது! புலிகளை அடக்கிவிட்டோம் என்று மனப்பால் குடித்தவர்களுக்கு இதோ கருஞ்சிறுத்தைகளும், விடுதலைச் சிறுத்தைகளும் இணைந்து புறப்பட்டு விட்டன என்று காட்டக்கூடிய வரலாற்றுச் சிறப்புமிக்க எழுச்சி மாநாடு இது!
மிகப்பெரிய போர்ப் படையை நடத்தும் தளபதியாக எனது அருமைச் சகோதரர் தொல். திருமாவளவன் இந்த எழுச்சி மாநாட்டைக் கூட்டியுள்ளார்.
வெள்ளம்போல் தமிழர் கூட்டம் இது. உடலால் பலராய்க் காண்பினும், உள்ளத்தால் ஒருவராய்க் கூடியிருக்கிறோம்.

பேச்சல்ல - திட்டங்களும் செயல்களுமே முக்கியம்!

நிறைய பேச வேண்டிய அவசியம் இல்லை. இந்த முப்பது தீர்மானங்களையும் எப்படி செயல்படுத்தப் போகிறோம் என்று திட்டம் தீட்டுவதுதான் மிக முக்கியம்.
இத்தீர்மானங்கள் நாடெங்கும் விவாதிக்கப்படும் - விவாதிக்கவும்படட்டும். இன்று இல்லாவிட்டாலும், நாளை அரசு சட்டங்களாக வெளிவர வாய்ப்புள்ள தீர்மானங்கள் இவை.
இதே செங்கற்பட்டு மாவட்டத்தில் செங்கற் பட்டில் 1929 இல் தந்தை பெரியார் அவர்களால் கூட்டப்பெற்ற முதல் மாகாண சுயமரியாதை மாநாட்டில் தந்தை பெரியார் நிறைவேற்றிய தீர்மானங்கள் பிற்காலத்தில் சட்டமானதுண்டு. தமிழ்நாட்டில் மட்டுமல்ல; இந்தியாவில் மட்டுமல்ல; அந்தத் தீர்மானங்களில் பல வெளிநாடு களிலும் கூட சட்டமாகியுள்ளன. அதேபோல்தான் இத்தீர்மானங்களும் செயல்படுத்தப்பட வேண்டி யவை - நாட்டின் சட்டங்களாக ஆகவேண்டியவை.

நான் கலந்துகொள்வதேன்?

இந்த மாநாட்டில் நான் பங்கேற்க வேண்டும் என்று சகோதரர் தொல்.திருமாவளவன் தொலைப்பேசியில் கேட்டார் - உடனே ஒப்புக் கொண்டேன்.
கருஞ்சிறுத்தைகளாகிய எங்களுக்கும், விடுதலைச் சிறுத்தைகளுக்கும் அதிக வேறுபாடு கிடையாது. ஒரே ஒரு கோடுதான் இடையில் வித்தியாசம்.
நாங்கள் சட்டசபைக்கோ, நாடாளுமன்றத் துக்கோ போகக் கூடியவர்கள் அல்லர் - தேர்தலில் நிற்கக் கூடியவர்களும் அல்லர்.
ஆனால், நாங்கள் சட்டமன்றம், நாடாளுமன்றம் செல்லாவிட்டாலும், யார் அந்த இடத்துக்குச் செல்ல வேண்டுமோ, அவர்களை அனுப்பி வைக்கக் கூடியவர்கள் நாங்கள். தி.க.வும் - தி.மு.க.வும் இரட்டைக் குழல் துப்பாக்கி என்பதுபோலவேதான் விடுதலைச் சிறுத்தைகளும் எங்களுக்கு.
தமிழர்களுக்கு ஒரு தாயகம் வேண்டும்; ஈழத்தில் தனிக்கொடி பறக்கவேண்டும் என்ற உணர்வை வெளிப்படுத்திடும் வண்ணம் இந்தக் கொடியை நானும், சகோதரர் திருமாவளவனும் இணைந்து ஏற்றியிருக்கிறோம். இந்தக் கொடி தாழாது - வீழாது. இது ஒரு தொடக்கம்!

மதுரையில் நடத்திய ஈழ விடுதலை மாநாடு

மதுரையிலே தமிழ் ஈழ விடுதலை மாநாட் டினைத் திராவிடர் கழகம் நடத்தியது (1983 டிசம்பர் 18) அந்த மாநாட்டிலே ஈழத்துத் தோழன் குமரி நாடன் ஈழ விடுதலைக் கொடியை ஏற்றினான். அதற்கடுத்து அதே உணர்வோடு இங்கு இந்தக் கொடியை ஏற்றியிருக்கிறோம். இது ஒரு அடையாளம்தான் என்றாலும், நாளையோ, நாளை மறுநாளோ கட்டாயம் நடக்கப் போவதுதான்! (பலத்த கரவொலி!).

உலகிலேயே தலைசிறந்த நிருவாகி என்று பெயர் எடுத்தவர் சிங்கப்பூர் அதிபராகயிருந்த லீக்வான்யூ - அவர் ஒன்றும் நம் இனத்துக்காரர் அல்ல; பொதுவான மனிதர்; அவர் எழுதி வெளிவந்துள்ள நூலில் மிகத் தெளிவாகவே குறிப்பிட்டுள்ளார். தமிழர்களை அழித்துவிடலாம் என்று ராஜபக்சே நினைக்கலாம் - ஆனாலும், அதில் அவர் வெற்றி பெற முடியாது. ஈழத்திலே ஒரு நாள் தமிழர்கள் தங்கள் நாட்டை அடைந்தே தீருவார்கள் என்று எழுதியுள்ளாரே!

அய்.நா. ஏற்றுக்கொண்ட ஒன்றுதான்!

உலக மக்களின் இனவழி தேசிய உணர்வை, இன வாரியான தேசியத்தை அய்.நா. ஏற்றுக் கொண்டி ருக்கிறது. மக்களின் வாழ்வுரிமைக்கு உத்தரவாதம் தேவை என்பதும் உலகம் ஒப்புக்கொண்ட ஒன்றுதான். ஈழத் தமிழர்கள் அதில் விதிவிலக்கல்ல.
அந்த அடிப்படை உரிமை உணர்வோடுதான் இந்த மாநாடு இங்கே நடத்தப்படுகிறது. தீர்மானங் களும் வடிக்கப்பட்டுள்ளன.

மேக்னகார்ட்டா!

இவை உலகத் தமிழினத்தின் பேரறிக்கை ஆயபயேஉயசவய (பலத்த கைதட்டல்!). எங்கள் தமிழர் எடுத்த வியூகத்தில் தோற்று இருக்கலாம்; சில களங்கள் தோல்வியிலும் முடிந்திருக்கலாம். அதற்காகப் போரில் தோற்று விட்டோம் - இனி எழ மாட்டோம் என்று அதற்கு அர்த்தமல்ல! எங்கள் தமிழர் மீண்டும் எழுவார்கள் - உரிமைகளை மீட்பார்கள் என்பதற்கான அடை யாளமே இம்மாநாடு.


நானும், திருமாவளவனும் சேர்ந்து பேசுவோம்!


இந்தத் தீர்மானங்கள் இந்த மாநாட்டில் நிறைவேற்றப்பட்டதோடு முடிந்துவிட்டதாகக் கருதக்கூடாது. இது மக்கள் மத்தியில் கொண்டு செல்லப்படவேண்டும். நானும், சகோதரர் திருமாவளவனும் தமிழ்நாட்டின் முக்கிய இடங்களில் இந்தத் தீர்மானங்களை விளக்கிப் பேசுவோம்! (பலத்த கரவொலி! ஆரவாரம்!!)

ஒரு நெல்சன் மண்டேலா 27 ஆண்டுகள் சிறையில் இருக்கவில்லையா? அதனால் என்ன தனி நாடு கிடைக்காமலா போயிற்று? சிறைக்குச் செல்ல வேண்டுமானாலும், உயிரைக் கொடுக்கவேண்டு மானாலும் அதற்காகத் தயாராக இருக்கக் கூடியவர்கள்தான் நாங்கள்.
அதற்காக ஆத்திரப்பட்டு எங்கள் உயிரைக் கொடுத்துவிடுவோம் என்று பொருளல்ல. வெற்றி கிட்டுவதற்காக - ஒருக்கால் அந்த வெற்றியைக் காண முடியாத நேரத்தில், நீங்கள் எல்லாம் அந்த வெற்றியை அனுபவிக்கும் நிலை ஏற்பட்டால், அதற்காக எங்கள் உயிரையும் கொடுக்கத் தயார்.


விகற்பத்தை விதைக்காதீர்கள்!


திராவிடர் கழகமோ, விடுதலைச் சிறுத் தைகளோ, ஈழத் தமிழர் பிரச்சினையைக் கைகழுவி விட்டதாக சிலர் பிரச்சாரங்களைச் செய்து கொண்டிருக்கிறார்கள். இது தேவையற்ற ஒன்று. தயவு செய்து சகோதரர்கள் மத்தியில் விகற்பத்தை ஏற்படுத்த முயலாதீர்கள் - அது தேவையில்லாத ஒன்று. அவரவர்களும் அவரவர்கள் உசிதப்படி அவரவர்களின் எல்லையில் நின்று பணிகளைச் செய்யட்டும். வீண் விமர்சனங்களால் எந்தப் பயனும் இல்லை; தமிழர்களின் ஒற்றுமை உணர்வைக் குலைக்கத்தான் அது பயன்படும்.
தமிழர்களுக்காக ஒரு நாடு!

விடுதலைச் சிறுத்தைகளும், கருஞ்சிறுத்தைகளும் ஒன்றுபட்டு ஒரே களத்தில் நிற்கிறோம் - அவ்வாறு நிற்போம் என்று ஒரு மாநாடு கூட்டி அறிவித்தி ருக்கின்ற விடுதலைச் சிறுத்தைகளுக்கு நன்றி!

பூமிப் பந்தில் தமிழர்களுக்கு ஒரு நாடு உருவாக ஒன்றுபட்டு உழைப்போம்; உறுதி கொள்வோம்!

வாழ்க பெரியார்!
வாழ்க அம்பேத்கர்!
வருக தமிழ் ஈழம்!

என்று தமிழர் தலைவர் கி. வீரமணி அவர்கள் உணர்ச்சிப் பிழம்பாக உரையாற்றினார்.

Sunday, December 26, 2010

தமிழ்நாட்டில் தங்கி இருந்த ‘காட்டிக் கொடுப்பு’ கருணா?- அதிரவைக்கும் விக்கிலீக்ஸ்



விடுதலைப் புலிகளை ஒழித்துகட்டவேண்டும் என்ற செயலலிதாதான் அப்போதைய முதல்வர்

அப்போதைய முதலமைச்சருக்கு (செயலலிதா) தெரியாமலா இருந்திருக்கும். எத்தனை துரோகிகள் இத்தமிழினத்திற்கு....


=====

‘விட்டேனா பார்!’ எனக் கிளம்பி உள்ள விக்கிலீக்ஸ் இணையதளம், இலங்கையில் நடந்தஈனத்தனமான செய்கைகளையும் வெளிச்சத்துக்குக் கொண்டுவந்துள்ளது. இலங்கைக்கான அமெரிக்க தூதராகப் பணியாற்றிய ராபர் ஓ பிளேக் என்பவர், 2007 மே 18-ம் தேதி தூதரகத் தகவலாக அமெரிக்க அரசுக்கு அனுப்பிய தகவலை விக்கிலீக்ஸ் கடந்த வாரம் வெளியிட்டது. இதில் ஈ.பி.டி.பி. தலைவர் டக்ளஸ் தேவானந்தா, புலிகள் அமைப்பில் இருந்து விலகிய கருணா ஆகியோரைப்பற்றிய அதிர்ச்சி யான தகவல்கள் இடம்பெற்றுள்ளன!
ஆயுதக் குழுக்களான ஈ.பி.டி.பி., கருணா குழு ஆகியவற்றுக்கும் இலங்கை ராணுவத்துக்கும் இடையே நெருக்கம் இருந்ததையும், இவர்களுக்கு சந்திரிகா காலத்தில் இருந்து தொடர்ந்து நிதி உதவி அளிக்கப்பட்டதையும், விக்கிலீக்ஸ் ஆதாரங் களுடன் வெளியிட்டுள்ளது. ‘புலிகள் என்று சந்தேகப் படுபவர்களைக் கடத்திச் சென்று கொலை செய்தார். சிறுவர்களைத் தனது ஆயுதக் குழுவில் கட்டாயப்படுத்தி கருணா சேர்த்தார். வியாபாரிகளிடம் பணத்தை வசூலித்துக்கொள்ள இந்த இரு ஆயுதக் குழுக்களுக்கும் கோத்தபய ராஜபக்ஷே அங்கீகாரம் அளித்தார்!’ என்று சொல்கிறது விக்கிலீக்ஸ். உச்சகட்டமாக, ‘போரினால் இடம்பெயர்ந்து ஓடிக்கொண்டு இருந்த அப்பாவித் தமிழ்ப் பெண்களை, சிங்கள ராணுவத்தினரின் தேவைக்காகப் பலவந்தப்படுத்தி கருணா அனுப்பிவைத்தார்!’ என்று அமெரிக்க தூதர் தெரிவிப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.

2005 கிறிஸ்துமஸ் தினத்தில், மட்டக்களப்பு தமிழ் எம்.பி-யான ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை செய்யப்பட்டதிலும், 2006 நவம்பர் 10-ம் தேதி இன்னொரு எம்.பி-யான நடராஜா ரவிராஜ் கொல்லப்பட்டதிலும்… கருணா ஆட்களின் பங்கு இருப்பதாகத் தன்னிடம் சிலர் கூறியதாக அமெரிக்க தூதர் குறிப்பிட்டு உள்ளதை விக்கிலீக்ஸ் அம்பலப்படுத்தி உள்ளது.

டக்ளஸைப் பற்றியும் விலாவாரியாக விவரிக்கும் ஓ ப்ளேக், கருணாவைப் பற்றிய முக்கிய தகவலைச் சொன்னதுதான் இந்த தகவலில் ஹைலைட்! ‘தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இருந்து 2004-ல் பிரிந்த கருணா, 4,000 பேருடன் வெளியில் வந்தார். இதனால், புலிகளுக்குப் பின்னடைவு ஏற்பட்ட நிலையில், கருணாவைப் பாதுகாப்பாக இந்தியாவின் தமிழ் நாட்டுக்கு அனுப்பிவைத்தார் அப்போதைய இலங்கை ஜனாதிபதி சந்திரிகா. பிறகு, தமிழ்நாட்டில் இருந்து 2006 ஜூலையில்தான் கருணா இலங்கைக்குத் திரும்பினார். இலங்கையில் இல்லாத காலகட்டத்திலும், கருணா வெளிநாட்டில் இருந்தபடியே தன் ஆயுதக் குழுவை இயக்கிக்கொண்டு இருந்தார்!’ என்று அமெரிக்கத் தூதரே சொல்லி இருக்கிறார்.

இதுபற்றி நான்கு ஆண்டுகளுக்கு முன்பே தமிழகத்தில் உள்ள விடுதலைப் புலி ஆதரவாளர்கள் பிரச்னையைக் கிளப்பினார்கள். ஆனால், அந்த விவகாரம் பெரிதாக எழுந்துவிடாமல் அமுக்கப்பட்டது. இப்போது அமெரிக்க தூதர் ஒருவரே அதை உறுதிப்படுத்தி இருக்கிறார்.

கருணா, தமிழகத்துக்கு வந்ததாகக் குறிப்பிடப்படும் 2004-ம் ஆண்டில் தமிழகத்தில் ஜெயலலிதா ஆட்சி நடந்துகொண்டு இருந்தது. அப்போது, இங்கு பரந்தன் ராஜன் என்பவரின் தலைமையிலான ‘ஈழ தேசிய ஜனநாயக விடுதலை முன்னணி’ எனப்படும் ஈ.என்.டி.எல்.எஃப்-ம், கருணாவின் ‘தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள்’ எனப்படும் டி.எம்.வி.பி-யும் இணைந்து ‘தமீழீழ ஐக்கிய விடுதலை முன்னணி’ எனும் கூட்டு முன்னணியை உருவாக்கினார்கள். இலங்கை அரசுக்கும், புலிகளுக்கும் இடையில் சமாதான ஒப்பந்தம் ஏற்பட்டு, அமைதித் தீர்வுக்கான முயற்சிகள் நடந்துகொண்டு இருந்தபோது, தமிழகத்தில் இந்த சேர்க்கை மிகத் தீவிரமாகச் செயல்பட்டது. தமிழகத்தில் நிலவிய புலி ஆதரவை உடைக்கும்படியாக நேரடியாகவும், மறைமுகமாகவும் பல காரியங்கள் நடத்தப்பட்டன.

இங்கு நடக்கும் ஈழத் தமிழர் தொடர்பான நிகழ்ச்சிகளில், இந்தக் குழுவினர் கலந்துகொண்டு ‘கருணா வெளியேறியது நியாயமே’ என்று விளக்கும் துண்டுப் பிரசுரங்களையும், வெளியீடு களையும் விநியோகம் செய்வதில் தீவிரம் காட்டினர். சென்னை அண்ணா சாலை தேவநேயப் பாவாணர் அரங்கில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கருணாவைப் பற்றிய பிரசுரத்தை இக்குழுவினர் விநியோகிக்க முயன்றபோது, பெரியார் தி.க. அமைப்பினர் அதை எதிர்த்ததால், பிரச்னை ஏற்பட்டது. கடைசியில் கருணா ஆதரவாளர்கள் அங்கு இருந்து விரட்டப்பட்டனர். ம.தி.மு.க. ஊர்வலம் ஒன்றிலும் இதேபோலப் பிரசாரம் நடத்த முயன்றபோது கருணா ஆதரவாளர்களுக்கும், ம.தி.மு.க-வினருக்கும் மோதல் ஏற்பட்டது. மாவீரர் நாளில் புலிப் போராளிகளின் தலைவர் பிரபாகரன் நிகழ்த்தும் உரையைப்போலவே, கருணாவும் மட்டக்களப்பு மக்கள் மத்தியில் உரையாற்றுவதைப் போன்ற ஒரு வீடியோ தயாரிக்கப்பட்டது. ‘தமிழகத்தில் 150 வீடியோ கேசட்டுகள் தயாரிக்கப்பட்டு, 30 ஆயிரம் படிகள் எடுக்கப்பட்டன. மாநிலம் முழுவதும் உள்ள அகதி முகாம்களில் இவற்றை விநியோகிக்கவும் செய்தனர். பிரபாகரனை ஹிட்லராகச் சித்தரித்து போஸ்டர்கள் அடிக்கப்பட்டு, அகதி முகாம் உள்ள பகுதிகளில் ஒட்டப்பட்டன. கருணா ஆதரவாளர்களின் இந்தச் செயல்பாடுகளை அறிந்த தமிழீழ ஆதரவாளர்கள் கோபமும் ஆவேசமும் அடைந்தனர். கருணா ஆதரவாளர்களுக்கும் அவர்களுக்கும் பல இடங்களில் மோதலும் ஏற்பட்டது. இதனால் சட்டம் – ஒழுங்கு பிரச்னை ஏற்படும் ஆபத்து உண்டானது!’ என இலங்கை ஆய்வாளர் ஒருவரே அப்போது எழுதினார்.

கருணா குழுவின் இந்த எதிர்ச் செயல்பாடுகளால் புலிகளின் தலைமை கடும் கோபமடைந்தது. ‘எதிரி’களின் செயல்பாடுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் நடவடிக்கைகளில்இறங்கியது.

இதற்கிடையில், தமிழகத்தில் சேர்ந்து இயங்கிய கருணா, பரந்தன் ராஜன் குழுவினர் இங்கு இருந்தபடியே இலங்கையிலும் நடவடிக்கையை விரிவுபடுத்தினார்கள். இதற்காக, தமிழகத்தில் 18 ஆண்டுகள் தங்கி இருந்த பரந்தன் ராஜன் குழுவின் முக்கிய ஆளான ரங்கப்பா என்பவர் இலங்கைக்குச் சென்றார். அங்கு போய் சிறிது காலத்திலேயே கொழும்பு புறநகர்ப் பகுதியில் அவர் கொல்லப்பட்டார். ராஜன் குழுவின் முக்கிய மூளையாக செயல்பட்ட மனோ மாஸ்டர் என்பவரும் தமிழ்நாட்டில் இருந்து யாழ்ப்பாணத்துக்குச் சென்றார். திடீரென அவரும் கடத்தப்பட்டார். கருணாதான் அவரைக் கடத்தியதாக மனோவின் தாயார் யாழ்ப்பாணம் மனித உரிமை கவுன்சிலில் முறையிட்டார். அவர் விஷயத்தில் இன்று வரை சரியான தகவலே இல்லை.

இலங்கையில் இப்படி கருணா ஆதரவாளர்களுக்கு எதிரான ‘நடவடிக்கைகள்’ தொடர்ந்த நிலையில், தமிழகத்தில் 2004 டிசம்பர் 5-ம் தேதி பரந்தன் ராஜன் உள்பட அவரது குழுவினர் ஒன்பது பேர் திடீரெனக் கைது செய்யப்பட்டு செங்கல்பட்டு சிறப்பு முகாமில் வைக்கப்பட்டனர். ‘அங்கு அவர்களுக்கு சகல வசதிகளும் செய்து தரப்பட்டன. குடும்பத்தினருடன் பல மணி நேரம் உரையாட அனுமதிக்கப்பட்டது. வீட்டில் இருந்து கொண்டுவரப்பட்ட உணவை அவர்கள் சாப்பிட்டனர். டெல்லி தரப்பில் இருந்து அவர்களுக்கு நல்ல கவனிப்பு கிடைத்தது. பதிலுக்கு அவர்கள், ‘விடுதலைப் புலிகளை எதிர்த்துப் போராட 3,500 போராளிகள் தயார், என ஆதரவு கேட்டனர் என்று இலங்கை பத்திரிகைகளில் வெளிப்படையாகவே எழுதினார்கள்.

சிறப்பு முகாம்களில் அடைக்கப்பட்டு இருந்தவர்கள், மீண்டும் இந்தியாவுக்குள் வர மாட்டோம் என்ற உத்தரவாதத்தின் பேரில் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். போன மச்சான் திரும்பிவந்த கதையாக, சில மாதங்களில் கருணாவின் ஆதரவாளர்கள் இந்தியாவுக்குத் திரும்பி வந்தனர். ஈழத்தில் படுகொலை கள் அதிகரிக்க அதிகரிக்க, தமிழகத்தில் புலிகளுக்கான ஆதரவு அதிகரித்துக்கொண்டேபோனது. இந்த நிலையில், தமிழ்நாட்டில் தொடர்ந்து இயங்க முடியாமல் கருணா ஆதரவாளர்கள் தவித்தனர். அந்த நேரத்தில், பரந்தன் ராஜன் பெங்களூருவில் ‘இந்திரா சர்வதேச அகடமி’ என்ற நிறுவனத்தைத் தொடங்கினார். அநாதைக் குழந்தைகள் காப்பகத்தை உள்ளடக்கிய இந்த நிறுவனத்துக்கு, டெல்லியில் இருந்து ஆசியும், ஆதரவும், உதவிகளும் பெருமளவில் வழங்கப்பட்டன என்பதை அந்தக் குழுவினரே பகிரங்கமாகச் சொல்கிறார்கள்.

இப்படியான சூழலில், தமிழகத்தில் ஜெயலலிதா ஆட்சி முடிந்து தி.மு.க. ஆட்சிக்கு வந்தது. இதன் பிறகு, ’2006 ஜூலைவாக்கில் கருணா மீண்டும் இலங்கைக்குச் சென்றார்’ என்கிறது விக்கிலீக்ஸ் தகவல்.

‘விடுதலைப் புலிகளுக்கு எதிராக இங்கு கருணா ஆதரவாளர்கள் வெளிப் படையாகவே இயங்கினார்கள்’ என்று சொல்லும் இலங்கை ஆய்வாளர் ஒருவர், சமாதான ஒப்பந்தத்தை புலிகள் மீறியதாக நார்வே அமைதிக் குழுவுக்கு கோடம்பாக்கம் முகவரியில் இருந்து மனோ மாஸ்டர் புகார் அனுப்பியதாகக் குறிப்பிடுகிறார்.

”சென்னையைப் பொறுத்தவரை கே.கே.நகர், கோடம் பாக்கம் பகுதிகளிலும், அகதி முகாம்களில் சேலத்தை மையமாகவைத்தும் கருணா ஆதரவாளர்கள் செயல்பட்டு இருக்கிறார்கள். இதைத் தவிர, கருணா குழுவுக்கு வேண்டப்பட்ட ஒருவருக்கு நீலகிரி மாவட்டத்தில் 90 கோடி மதிப்புள்ள ஒரு எஸ்டேட் இருக்கிறது. தேடப் படும் பட்டியலில் இடம்பெற்றுள்ள அந்தக் குழுவைச் சேர்ந்தவர்கள் சிறிது காலம் தலைமறைவாக இருக்க வேண்டுமானால், நீலகிரி எஸ்டேட்தான் அவர்களின் முக்கிய மறைவிடம். ஐந்து ஆண்டுகளுக்கு முந்தைய காலகட்டத்தில், ‘எதிரி’களின் கண்ணிலும் படாமல் அந்த எஸ்டேட்டில் பல ஆண்டுகள் பாதுகாப்பாகத் தங்குவதற்கான ‘ஏற்பாடுகள்’ பலமாக வழங்கப்பட்டு இருந்தன. இதில்தான் கருணா தங்கி இருந்திருக்க வேண்டும்’ என்கிறார்கள் உளவுப் பிரிவு அதிகாரிகள்.

‘காட்டிக் கொடுத்த கருணா இரண்டு ஆண்டுகளுக்கும் மேல் தங்கியது தமிழ்நாட்டிலா?’ என்ற அதிர்ச்சியில் இருந்து மீளாத தமிழ் உணர்வாளர்களுக்கு, இன்னும் என்னென்ன அதிர்ச்சிகளைத் தரக் காத்திருக்கிறதோ விக்கிலீக்ஸ்!

- ஜூ.வி. ஸ்பெஷல் டீம்

ஜூனியர் விகடன்

=====

தமிழர் இறையாண்மை மாநாடு - தீர்மானங்கள்







காஞ்சிவரம் மாவட்டம், செங்கல்பட்டு அருகேயுள்ள மறைமலை நகரில் (26-12-2010 ) இன்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் தலைமையில் தமிழர் இறையாண்மை மாநாடு நடைபெற்றது.

தமிழர் இறையாண்மை மாநாடு - தீர்மானங்கள்


1.தமிழக மீனவர்கள் பாதுகாப்பு மற்றும் கட்சத் தீவு மீட்பு

தமிழக மீனவர்கள் மீது இலங்கை இராணுவத்தாலும், இந்திய கடலோர பாதுகாப்புப் படையினராலும் கடல் எல்லை பாதுகாப்பு எனும் பெயரில் தாக்குதல்களும் ஒடுக்குமுறைகளும் தொடர்கதையாகி வருகிறது. கடல் வளத்தில் மீனவர்களுக்குள்ள இயற்கையான உரிமைகளை பறிக்கும் வகையில் இந்திய கூட்டரசின் கடல்சார் சட்டங்கள் உள்ளன. இச்சட்டங்கள் உடனடியாக திரும்பப்பட பெறவேண்டும்.


மேலும் சர்வதேச கடல் பரப்பில் தமிழக மீனவர்கள் மீன்பிடிக்கும் உரிமையை நிலைநாட்டும் வகையில் சிறப்பு சட்டம் ஒன்று இயற்றப்பட வேண்டும். தென்தமிழக மீனவர்களுக்குத் தொடர்ந்து அச்சுறுத்தலாக இருக்கும் இலங்கை அரசு மீது இந்தியக் கூட்டரசு பொருளாதாரத்தடையை விதிக்க வேண்டும். கச்சத்தீவை இலங்கைக்கு தாரை வார்த்த இந்திய இலங்கைக்கு இடையே ஏற்படுத்திக்கொண்டு ஒப்பந்தம் தமிழக மீனவர்களின் பாதுகாப்பையும் - இந்திய கூட்டரசின் எல்லைப் பாதுகாப்பையும் கருத்தில் கொண்டு ரத்து செய்யப்பட்டு, கச்சத்தீவு தமிழக எல்லைக்கு மீட்டுத்தர வேண்டுமென இந்திய அரசை இம்மாநாடு வலியுறுத்துகிறது.

2.இந்தியாவில் உள்ள தேசிய இனங்களுக்கு அங்கீகாரம்

இந்தியா என்பது ஆங்கிலேயர்களின் சுரண்டலுக்கு வசதியாக ஒருங்கிணைக்கப்பட்டு, உருவாக்கப்பட்ட ஒரு நிர்வாகக் கட்டமைப்பேயாகும். வெள்ளையனால் உருவாக்கப்பட்ட இன்றைய இந்தியாவில், தேசிய இன உணர்வுகள் மேலோங்கி வருகின்றன. அதன் அடையாளமாகவே இங்கு மொழிவழி மாநிலங்கள் 1956 இல் உருவாக்கப்பட்டன.

அதாவது தேசிய இனங்களுக்கிடையிலான முரண்பாடுகள் கூர்மையடைந்து வருவதால், இவ்வாறு மொழிவழி மாநிலப் பிரிவினைகள் தோன்றின ஒவ்வொரு தேசிய இனத்திற்குமான மொழி, இன உரிமைகளும், மண்ணுரிமை, கனிமவள உரிமை, ஆற்றுநீர் உரிமை, போன்ற பிற உரிமைகளும் இங்கே இன்னும் கேள்விக்குறிகளாகவே இருக்கின்றன. இவ்வாறான நிலையில், தேசிய இனங்களுக்குரிய அனைத்து உரிமைகளும் அதிகாரங்களும் பகிர்ந்தளிக்கும் வகையில் அரசியலமைப்புச் சட்டத்தில் திருத்தம் செய்து, ஒவ்வொரு தேசிய இனமும் இறையாண்மையுள்ள தேசிய இனமாக அங்கீகரிக்கப்பட வேண்டும்.

அதனடிப்படையில் முழுஅதிகாரம் பெற்ற மாநில அரசுகளைக்கொண்ட கூட்டரசாக இந்திய அரசு அமைந்திட மையத்தில் கூட்டாட்சி முறையைக் கொண்டு வர வேண்டுமென விடுதலைச்சிறுத்தைகளின் இம்மாநாடு முன் மொழிகிறது.

3.மாநிலங்களுக்கு தன்னாட்சி அதிகாரம்

மத்திய - மாநில பொதுப் பட்டியலில் உள்ளடக்கப் பட்டுள்ள அதிகாரங்கள் தவிர ஏனையவை குறித்து சட்டமியற்றும் அதிகாரத்தை மத்திய அரசுக்கே அரசமைப்புச் சட்;டம் வழங்கியுள்ளது.

இந்த அதிகாரத்தை மாநில அரசின் வரம்புக்குள் கொண்டு வரவேண்டும் எனவும் குறிப்பாக, இத்தகைய இனங்களின் மீது வரிவிதிப்பு அதிகாரத்தை மாநில அரசிடம் வழங்க அரசமைப்புச் சட்டத்தில் திருத்தம் செய்யப்பட வேண்டும் எனவும் மாநாடு வலியுறுத்துகிறது. தற்போது திரட்டப்படும் மத்திய வரிகளிலும் கூடுதல் வரிகளிலும் மாநிலங்களுக்கு எழுபத்தைந்து விழுக்காடு வழங்கப்பட வேண்டும் என்று இம்மாநாடு வலியுறுத்துகிறது.



4.மாநிலங்களின் அரசு கொடி

ஆகத்து -15 இந்திய விடுதலை நாள் மற்றும் சனவரி26, இந்தியக் குடியரசு நாளில் இந்திய தேசியக் கொடியுடன் மாநிலத்தின் கொடியை தலைமைச்செயலகம் மற்றும் அனைத்து அரசு அலுவலகங்களிலும் ஏற்றி வைத்திட வேண்டுமெனவும் இம்மாநாடு இந்திய அரசைக் கேட்டுக் கொள்கிறது.

5.கனிம வளங்கள் மீது மாநிலங்களுக்கு உரிமை

ஒவ்வொரு மாநில எல்லைகளுக்கும் உள்ள கனிம வளங்கள் மீதுள்ள உரிமை அந்தந்த மாநிலங்களுக்கே உரிய உயிராதார உரிமையாகும். இத்தகைய கனிம வளங்கள் மீது மாநிலங்கள் பயன்பெற வேண்டுமெனில், இந்தியக் கூட்டரசு ஒரு குறிப்பிட்ட விழுக்காட்டின் அடிப்படையில் பயன்படுத்திக் கொள்ளலாம், ஆனால் அதற்கான வருவாயை மாநில அரசுகளே பயன்படுத்திக்கொள்ளவும் வகை செய்யப்பட வேண்டும்.

இதற்கு ஏதுவாக இந்தியக்கூட்டரசு கனிம வளங்களின் மீது செலுத்தும் மேலாண்மையை விலக்கிக்கொள்ளும் பொருட்டு, கனிம வளங்கள் மேலாண்மையை மாநில அரசுகளின் அதிகாரப்பட்டியலுக்கு மாற்றி அறிவிக்க வேண்டுமென இந்திய அரசை இம்மாநாடு வலியுத்துகிறது.

6.மருத்துவம், உயர்கல்வி மற்றும் உயராய்வுக்கல்வி

மத்தியில் ஆளும் காங்கிரசு தலைமையிலான கூட்டணி அரசு மாநிலங்களின் உணர்வை மதிக்காமல் உயர்கல்வி மற்றும் மருத்துவக்கல்வி தொடர்பான அதிகாரங்களை மத்தியில் குவித்துக்கொள்ளும் நோக்கோடு உருவாக்கியிருக்கும் மருத்துவம், உயர்கல்வி மற்றும் உயராய்வுக்கல்வி தொடர்பான அமைப்புகளைக் கலைத்திட வேண்டும் என இம்மாநாடு வலியுத்துகிறது.

7.தேசிய புத்தக ஆதரவுக் கொள்கை

நூல்களின் அச்சு, விநியோகம் உள்ளிட்டவற்றை மேலாண்மை செய்யும் வகை யில் தற்போது மத்திய அரசு உருவாக்கியிருக்கும் தேசிய புத்தக ஆதரவுக்கொள்கை (யேவழையெட டீழழமள Pசழஅழவழைn Pழடiஉல) மாநில உரிமைகளைப் பறிக்கும் நிலையில் இருப்பதால் அதைக்கைவிட வேண்டும் என இம்மாநாடு கோருகிறது. அதற்கு பதிலாக அந்தக் கொள்கையை மாநில அரசே உருவாக்க வேண்டுமென இம்மாநாடு வலியுறுத்துகிறது.

8.தேசிய புலனாய்வு நிறுவனம் கலைக்கப்பட வேண்டும்

தேசிய புலனாய்வு நிறுவனம் என்ற அமைப்பு மாநில அரசுகளின் கட்டுப்பாட்டில் இயங்கும் மாநில காவல்துறை தொடர்பான உரிமைகளை பறிப்பதாக உள்ளது. எனவே இந்த அமைப்பை கலைத்திட வேண்டுமென இந்திய அரசை இம்மாநாடு வற்புறுத்திக் கேட்டுக்கொள்கிறது.

9.வெளியுறவுக் கொள்கை முடிவுகளில் மாநிலங்களின் நலன்

மத்திய அரசு வெளியுறவுக்கொள்கை தொடர்பான முடிவுகளை எடுக்கும் போதும் அண்டை நாடுகளுடன் ஒப்பந்தங்கள் செய்து கொள்ளும் போதும் சம்பந்த்தப்பட்ட மாநிலங்களில் உள்ள தேசிய இனங்களின் உரிமைகள் தொடர்புடையவையாக இருந்தால் அந்த தேசிய இனத்தைச் சார்ந்த மக்களின் கருத்தைக் கேட்ட பிறகே முடிவை எடுக்க வேண்டும். இதற்கு மாநில அரசு மட்டுமின்றி அங்கீகாரம் பெற்ற அனைத்து அரசியல் கட்சிகளும் இடம்பெறக்கூடிய அமைப்பு ஒன்று உருவாக்கப்பட வேண்டும்.

10. தமிழக நிலங்கள் பாதுகாப்பு

தமிழகத்தில் உள்ள நிலங்கள் அனைத்தும் இன்றைக்கு கேட்பாரின்றி வடஇந்தியர்கள், அன்னிய நாட்டு முதலாளிகள் மற்றும் இவர்களின் நிறுவனங்களால் அபகரிக்கப்பட்டு வருகின்றன. மேலும், வேளாண் விளைநிலங்களும் “ரியல் எஸ்டேட்” என்ற பெயரில் ஊக வணிகத்திற்கு உட்படுத்தப்பட்டு, வீட்டு மனைகளாகவும் தொழில் வளாகங்களாக மாற்றுவதாக் கூறி தரிசாக்கப்பட்டு வருகின்றன.

இதனால் வேளாண் தொழில் தழைக்கும் என்பதற்கான நம்பிக்கை கொஞ்சம் கொஞ்சமாய் மறையத் தொடங்கி விட்டது.

இந்நிலை தொடருமானால் சமூக உணவுச் சங்கிலி என்பது அற்றுப்போய்விடும் என்கிற மாபெரும் அச்சுறுத்தல் பெருகிவருகிறது. எனவே, தமிழக நிலங்களின்மீது தமிழ்நாடு அரசு தன்னுடைய சட்டப்பூர்வமான ஆளுமையை கொண்டுவர வேண்டும். அதற்கு ஐந்து பரிந்துரைக்கான இம்மாநாடு முன்வைக்கிறது.

அ) தமிழகத்தில் உள்ள அனைத்து நிலங்களையும் மாநில அரசின் மேலாண்மைக்கு உட்படுத்தும் வகையில் “தமிழக நில ஆணையம்” ஒன்று உருவாக்கப்பட வேண்டும். இவ்வாணையத்தின் வழியாக விளைநிலங்கள் மற்றும் குடியிருப்புகளுக்கான நிலங்கள் அனைத்தும் பட்டியலிடப்பட்டு கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட வேண்டும்.

இவ்வகை நிலங்களின் விற்பனை மற்றும் பரிமாற்றங்கள் எதுவாயினும் இவ்வாணையத்தின் இசைவின்றி இறுதி செய்யப்படக்கூடாது. இவ்வாணையத்தில் அரசியல் கட்சிகளின் பிரதிநிகள், சுற்றுச்சூழல் விஞ்ஞானிகள், விவசாயிகள் சங்க பிரதிநிதிகள் முதலானோர் இடம் பெற்றிருக்க வேண்டும்.

ஆ) விவசாய நிலங்களை விவசாய பயன்பாடுகளுக்கு மட்டும் விற்கவோ - வாங்கவோ முடியும் என்ற சட்டத்தை தமிழ்நாடு அரசு கொண்டுவர வேண்டும். நிலங்கள் தொடர்ச்சியாக வடஇந்திய, வெளிநாட்டு நிறுவனங்கள் கைப்பற்றுவதைத் தடுக்க, சீனாவில் நிகழ்ந்த அந்நிய நிறுவனங்களின் நிலபறிப்பு மோசடியை படிப்பினையாகக் கொண்டு நிதி மூலதன நோக்கிலான தமிழ்நாடு அரசின் தொழிற்கொள்கை மாற்றியமைக்கப்பட வேண்டும். பெரிய அளவுகளிலான தொழில் முனைவுகள், மாபெரும் பொருளாதார அச்சுறுத்தல்களை உருவாக்கியுள்ள இச்சூழலில், நகர்புறம் சார்ந்த தொழில்துறை வளர்ச்சி என்பது புதுவித காலனியத்தை உருவாக்கியுள்ளது.

இது, தமிழர்களின் வாழ்வுரிமையை கேள்விக் குறியாக்கி யுள்ளதால், பெருநகர் சார்ந்த தொழில்கள் பரவலாக்கப்பட வேண்டும்.

இ) தமிழ்நாடு முழுவதும் தொழில் முனைவுகள் பரவலாக்கப்படும் நிலையில் அதற்கு “நில ஆணையம்” அங்கீகரிக்கும் தரிசு நிலங்களையே பயன்பாட்டிற்காக அனுமதிக்கப்பட வேண்டும்.


ஈ) கோயில் நிலங்கள் அனைத்தும் நாட்டுடைமையாக்கப்படவேண்டும். நாட்டுடமையாக்கப்பட்ட அந்நிலங்கள் ஏழைத் தமிழ் விவசாயிகளுக்கு பகிர்ந்தளிக்கப்பட வேண்டும். அதற்கு ஏதுவாக இந்திய அறக்கட்டளைகள் சட்டம் மற்றும் தமிழ்நாடு அரசின் இந்து அறநிலையத்துறை சட்டங்களில் திருத்தங்கள் ஏற்படுத்த வேண்டும்.

உ) தமிழகத்தின் வேளாண் தொழிலை சீர்குலைத்து, விதைகள் மற்றும் உணவு உற்பத்தி முறையை ஏகாதிபத்திய மூலதன மற்றும் விதை நிறுவனங்களை சார்ந்து இருக்கும்படி உருவாக்கப்பட்டதன் விளைவாக தமிழகத்தில் வேலிக் கருவை மரங்கள் விதைக்கப்பட்டன என்பதை சுற்றுச்சூழல் ஆய்வுகள் நிறுவியுள்ளன.

இதனால் தமிழகத்தின் தென்கிழக்குக் கடலோர மாவட்டங்களின் ஒட்டுமொத்த வேளாண் நிலங்களும் தரிசாகிப் போயின. மேலும் இது தமிழகத்தி;ன் பிற மாவட்டங்களுக்கும் பரவிக் கிடக்கிறது எனவே, தமிழக விவசாயிகளின் வாழ்வுரிமையைப் பாதுகாக்கவும், நிலத்தடி நீராதாரத்தைப் பாதுகாக்கவும் வேலிக்கருவை மரங்களை ஒழிக்க சிறப்பு திட்டத்தை உருவாக்க வேண்டுமென தமிழ்நாடு அரசை இம்மாநாடு வலியுத்துகிறது.

11. சென்னை குடிசைப் பகுதி மக்களின் வாழ்வுரிமைப் பாதுகாப்பு

சென்னை மாநகர் உருவாக்கப்பட்ட நாள் முதல் தலித் மற்றும் மத சிறுபான்மையினர் மாநகரின் உருவாக்கத்திற்கும் வளர்ச்சிக்கும் ஆதார ஆற்றலாக இருந்து வருகின்றனர். இம்மக்கள் இல்லையெனில் சென்னை என்பது இன்று உலகம் முழுவதும் தமிழர்களின் பெருமைமிகு பெருநகரமாக மாறியிருக்காது, ஆனால் எந்த மக்கள் இம்மாநகரை உருவாக்கினார்களோ அவர்கள் சென்னை மாநகரை விட்டு வெளியேற்றப்படுவது இன்று தொடர்ந்து கொண்டிருக்கிறது.

சென்னை நகராக இருந்த போதும் மாநகராக வளர்ந்த போதும் பின்பு பெருநகராக மாறிய போதும் ஒவ்வொரு வளர்ச்சிப் படிநிலையிலும் இம்மக்கள் வெளியேற்றப்பட்டு வந்துள்ளனர்.

குடிசை மக்களின் வாழ்விடங்களை மேம்படுத்த தொடங்கப்பட்ட தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் இம்மக்களை சென்னையை விட்டு வெளியேற்றும் வாரியமாக மாறியுள்ளது. எனவே சென்னையில் உள்ள குடிசைப்பகுதி மக்களுக்கு அவர்கள் வாழுகின்ற பகுதியிலேயே வீடுகளைக் கட்டிக்கொள்ள தமிழக அரசு ஆவண செய்ய வேண்டும்.

அப்படி கட்டாயமாக வெளியேற்றப்படும் குடிசைப் பகுதி மக்களுக்கு அவர்கள் குடியிருந்த இடத்திற்கு அருகிலேயே கலைஞர் வீட்டு வசதி திட்டத்தின் கீழ் வீடுகளைக் கட்டித்தர வேண்டும் என தமிழக அரசை இம்மாநாடு வலியுறுத்திக் கொள்கிறது.


12. முழு மதுவிலக்கு


மது உள்ளிட்ட போதைப் பழக்கவழக்கங்களால் நாடு தழுவிய அளவில் ஏழை எளிய மக்களின் வாழ்வு வெகுவாகப் பாதிக்கப்படுகிறது. எண்ணற்ற பல குடும்பங்களின் உறவுகள் சிதைந்து சிதறும் நிலை ஏற்படுகிறது.

குறிப்பாக இளைய தலைமுறையினர் பள்ளிப்பருவத்திலிருந்தே குடிப்பழக்கத்திறகும் இன்னும் பிற போதைப் பழக்கங்களுக்கும் அறிமுகமாகின்றனர்.

இதனால் அவர்களின் எதிர்காலம் இருண்டு பாழாகிறது. இதற்கு அரசின் கொள்கை முடிவுகளே காரணமாக அமைகின்றன என்பதை வேதனையோடு விடுதலைச்சிறுத்தைகள் சுட்டிக்காட்டுகிறது.

தமிழகத்தில் ஏழை எளியோரின் நலன்களுக்கென எண்ணற்ற பல திட்டங்களைத்தீட்டி தமிழக அரசு அவற்றை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தி வருகிறது. எனினும் தமிழக அரசு டாஸ்மாக் மதுக்கடைகள் தலித்துகள், மீனவர்கள் மற்றும் பிற மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களை வெகுவாக பாதிக்கச் செய்கின்றன.

எனவே மாண்புமிகு முதல்வர் கலைஞர் அவர்கள் அடித்தட்டு மக்களின் நலன்களைக் கருத்தில் கொண்டு முழு மதுவிலக்குக் கொள்கையை ஏற்று அனைத்து மதுக்கடைகளையும் உடனடியாக இழுத்து மூட வேண்டுமெனவும் பிற போதைப்பொருட்களின் புழக்கத்தை தீவிரமாக தடுத்திட வேண்டுமெனவும் இம்மாநாடு தோழமையோடு வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது. அத்துடன், டாஸ்மாக் மதுக்கடைகளில் பணியாற்றும் அனைவருக்கும் பிற துறைகளில் தகுதிக்குரிய மாற்று வேலைகளை வழங்க வேண்டுமெனவும் இம்மாநாடு கேட்டுக்கொள்கிறது.

தேசத்தந்தை என காந்தியடிகளைப் போற்றும் இந்திய ஆட்சியாளர்கள் காந்தியடிகளின் மதுவிலக்குக் கொள்கையை இந்திய அரசின் தேசியக் கொள்கையென ஏன் அறிவிக்கக்கூடாதென இம்மாநாடு கேள்வியெழுப்புகிறது. இந்நிலையில் முழு மதுவிலக்குக் கொள்கையை அனைத்திந்திய அளவில் நடைமுறைப்படுத்திட சட்டம் இயற்ற வேண்டுமென இந்திய அரசை இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது.

13. விக்கிலீக்ஸ் அசாங்கேவுக்கு பாராட்டு

உலகிலுள்ள ஒவ்வொரு நாட்டின் இறையாண்மைக்குள்ளும் மூக்கை நுழைத்து, தனது வல்லாதிக்கத்தை திணித்து வரும் அமெரிக்க வல்லரசின் உச்சந்தலையில் இடி இறக்கியதைப்போல் அமெரிக்கா மற்றும் அதன் கூட்டாளி நாடுகளின் அதிஉயர் கமுக்க நடவடிக்கைகளை விக்கிலீக்ஸ் எனும் இணைய தளத்தினூடாக அம்பலப் படுத்தியிருக்கிறார், ஆஸ்திரேலியாவைச் சார்ந்த இணையத்தள ஊடக வியலாளர் ஜுலியன் அசாங்கே!

அவரின் இந்த அளப்பெரிய செயல் ஊடகவியல் அறத்திற்கு எதிரானது அல்ல! தனிநபரின் கமுக்கங்களை அம்பலப்படுத்துவதில் அரசும் ஆட்சியாளர்களும் ஊடகவியல் அறத்திற்கு ஊறு விளைவிக்காது என்று ஞாயப்படுத்தப்படுமேயானால் அமெரிக்க போன்ற வல்லரசியல் கொடு நெறியாளர்களின் கமுக்கங்களை அம்பலப்படுத்துவதிலும் ஞாயமுண்டு என விடுதலைச்சிறுத்தைகள் நம்புகிறது.

எனவே, அமெரிக்க வல்லரசின் வல்லாதிக்க இடுப்பை முறித்து, வளரும் நாடுகளின் இறையாண்மைக்கு வலுவான பாதுகாப்பை ஏற்படுத்தியுள்ள ஜுலியன் அசாங்கேவை இம்மாநாடு நெஞ்சார பாரட்டுகிறது. அவருடைய உயிருக்கு உரிய பாதுகாப்பை வழங்கிட வேண்டுமெனவும் ஐ.நா பேரவைக்கு இம்மாநாடு வேண்டுகோள் விடுக்கிறது.

14.வீரவணக்கம்

அன்னைத் தமிழையும் அருந்தமிழ் இனத்தையும் ஆதித்தமிழ் மண்ணையும் பாதுகாத்திடவும் மேம்படுத்திடவும், முதல் மொழிப்போர் தொடங்கிய காலமான 1938 இலிருந்து இதுவரையிலும் தமிழகம், தமிழீழம் உள்ளிட்ட அனைத்துலக நாடுகளெங்கிலும் அரசியல், இலக்கியம், பண்பாடு உள்ளிட்ட அனைத்துத் தளங்களிலும் பாடாற்றித் தம்வாழ்வை ஈகம் செய்த அனைத்துச் சான்றோருக்கும், அற வழியிலும் ஆயுத வழியிலும் போராடி களப்பலியான தமிழகத்தைச் சார்ந்த கரும்புலி முத்துக்குமார் உள்ளிட்ட போராளிகளுக்கும் தமிழீழ விடுதலைப்போரில் உயிரீந்த பொதுமக்கள் உள்ளிட்ட அனைத்து மாவீரர்களுக்கும் விடுதலைச்சிறுத்தைகளின் வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த இம்மாநாடு தமது செம்மாந்த வீரவணக்கத்தைச் செலுத்துகிறது.

அத்துடன், புரட்சியாளர் அம்பேத்கர், தந்தை பெரியார், போன்ற மாமனிதர்களின் மகத்தான கொள்கை வழியில், தமிழகத்திலும் பிற இந்திய மாநிலங்களிலும் தீண்டாமை உள்ளிட்ட இந்துத்துவ வன் கொடுமைகளை எதிர்த்து, சாதி ஒழிப்புக் களத்தில் போராடிக் களப்பலியான சாதி ஒழிப்புப் போராளிகள் அனைவருக்கும் இம்மாநாட்டில் திரண்டிருக்கும் இலட்சக்கணக்கான விடுதலைச் சிறுத்தைகளின் சார்பில் எமது செம்மாந்த வீரவணக்கத்தைச் செலுத்துகிறோம். மேலும் கடந்த 2004 ஆம் ஆண்டு திசம்பர் 26 அன்று நடந்த ஆழிப்பேரலையின் தாக்குதலில் உயிர்நீத்த அனைவருக்கும் இந்நேரத்தில் எமது அஞ்சலியைச் செலுத்துகிறோம்.


15.இறையாண்மையை வென்றெடுப்போம்


உலகிலுள்ள ஒவ்வொரு இனமும், மொழிவழி தேசியத்தின் அடிப்படையில் அல்லது மதவழி தேசியத்தின் அடிப்படையில் தமக்கான நாடு மற்றும் அரசை உருவாக்கி தம்மைத்தாமே ஆட்சி செய்து கொள்ளும் இறையாண்மையைப் பெற்றுள்ளது. மேலும் பல தேசிய இனங்கள் புதிது புதிதான தேசங்களையும், அரசுகளையும் உருவாக்கி தத்தமது இறையாண்மையென்னும் தன்னாட்சி உரிமைகளை வென்றெடுத்து வருகின்றன.

இந்நிலையில் உலகமெங்கும் ஏறத்தாழ பத்து கோடி மக்கள் தொகையைக்கொண்ட உலகின் மூத்தக்குடியும் முதல் குடியுமான தமிழ்க்குடி மக்களுக்கென ஒரு நாடு வேண்டும் என்றும் அது தமிழீழமாக மலர வேண்டுமென்றும் கடந்த அரைநூற்றாண்டுக்கும் மேலாக ஆயுதமில்லா அறவழியிலும் ஆயுதமேந்திய அறவழியிலும் தமிழீழ விடுதலைப்போர் நடந்து வருகிறது. அப்போர்,

தற்போதைய சூழலில் இடைக்காலமாக ஒரு பெரும் பின்னடைவுக்குத் தள்ளப்பட்டிருந்தாலும், அது முற்றும் முழுதாக முடிந்து விட்ட ஒன்றல்ல! ஏனெனில், அது வெறும் மண்மீட்புப்போர் அல்ல ஒரு தேசிய இனத்தின் இறையாண்மை மீட்சிக்கான போர் ! ஏற்கனவே நாடு, அரசு, ஆட்சி என்னும் கட்டமைப்புக்களைக் கொண்ட இறையாண்மையையுடைய ஒரு தேசிய இனமாக வாழ்ந்த தமிழினம், இழந்து போன இறையாண்மையை வென்றெடுக்கவே இன்று இந்த விடுதலைப் போரை நடத்தி வருகிறது.

எனவே தமிழ்த்தேசிய இனத்தின் வரலாற்றத் தேவைகளான தாயகம், தேசியம், தன்னாட்சி என்னும் இறையாண்மைக் கோரிக்கைகளை, அனைத்துலகச் சமூகம் முதலில் கொள்கையளவில் இசைந்தேற்க வேண்டுமென இம்மாநாடு வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது! ஆயுதப்போராட்ட வடிவம் அங்கே இடைக்காலமாக அழித்தொழிக்கப்பட்டாலும், விடுதலைப்போரட்டத்திற்கான தேவைகளும் காரணங்களும் அழித்தொழிக்க முடியாதவைகளாக உள்ளன. எனவே, இலங்கைத் தீவில் நீடிக்கும் இனச்சிக்கலுக்கு, தமிழீழ விடுதலைதான் ஒரே தீர்வாகும் என்பதை அனைத்துலகச் சமூகம் கொள்கையளவில் ஏற்பதுடன், தமிழீழத்தை மீட்பதற்கு அனைத்து வகை ஆதரவையும் வழங்கிட வேண்டுமென இம்மாநாடு கேட்டுக்கொள்கிறது.

16.ஈழத் தமிழர்களின் இறையாண்மை

50 ஆண்டுகளுக்கும் மேலாக சிங்களப் பேரினவாதத்தை எதிர்த்து அனைத்து வழிகளிலும் போராடித் தனித் தமிழ் ஈழ அரசை நடத்தி வந்த ஈழத்தமிழர்களின் இறையாண்மையினையும், அதன் வெளிப்பாடான தமிழ் ஈழ அரசையும் உலக நாடுகள் அங்கீகரிக்க தவறிவிட்டன.

வல்லரசிய நலன்களைக் கருத்தில்கொண்டு, உலக நாடுகளால் ஈழ அரசு அங்கீகரிக்கப்படாமல் புறக்கணிக்கப்பட்டது என்பது அய்.நா.பேரவை தேசிய இனங்களுக்கு வழங்கியுள்ள அரசியல் பாதுகாப்பை மீறிய செயலாகும். உலகிலுள்ள எண்ணற்ற தீவு நாடுகளில், மிகக்குறைந்த மக்கட்தொகையைக் கொண்ட 38 நாடுகளை, உறுப்பு நாடுகளாக அய்.நா.பேரவை ஏற்றுக்கொண்டுள்ளது.

மேலும், மிகக்குறைந்த மக்கட்தொகையைக் கொண்ட 14 தீவு நாடுகளை உறுப்பினரல்லாத அங்கீகரிக்கப்பட்ட நாடுகளாக அய்.நா.பேரவை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. அதனடிப்படையில் தமிழ் ஈழத்தையும் அங்கீகரிக்க வலியுறுத்தி அய்.நா.பேரவைக்கு அழுத்தம் கொடுக்க வேண்டுமென இம்மாநாடு தமிழக மற்றும் இந்தியஅரசுகளுக்கும், உலகத்தமிழர்களுக்கும் வேண்டுகோள் விடுக்கிறது.

17.சிங்களமயப்படுத்தும் போக்கிற்கு கண்டணம்

தமிழீழ மக்களின் பூர்வீகத்தாயகமான இலங்கைத்தீவின் வடக்கு-கிழக்கு மாகாணப் பகுதிகளில், நிலையான சிங்களப்படை முகாம்களை நிறுவியும், படையினரின் குடும்பத்தினர் என்ற பெயரில் சிங்களர்களை வெகுவாக குடியேற்றம் செய்தும், ஊர்கள், நகரங்கள், வீதிகள், என யாவற்றின் தமிழ்ப்பெயர்களையும் அகற்றி சிங்களப்பெயர்களைச் சூட்டியும், ஒட்டு மொத்த தமிழீழத்தையும் சிங்கள-பௌத்த மயமாக்கும் நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர் சிங்கள இன வெறியர்கள்! தமிழீழத்தை ஆக்கிரமிக்கும் இந்தக் கொடூரப்போக்கைத் தடுத்து நிறுத்தவும் அப்புறப்படுத்தவும் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென அய்க்கிய நாடுகள் பேரவை மற்றும் இந்தியா உள்ளிட்ட அனைத்துலகச் சமூகம் உடனடியாக முன்வரவேண்டுமென விடுதலைச்சிறுத்தைகளின் சார்பில் வற்புறுத்திக் கேட்டுக்கொள்கிறோம்.


18.போர்க்குற்றங்களின் மீது விசாரணை


நாடுகளுக்கிடையில் நடக்கும் போர்களாக இருந்தாலும் ஒரு நாட்டுக்குள்ளேயே நடக்கும் உள்நாட்டுப்போர்களாக இருந்தாலும், அப்போரின் போது எத்தகைய மரபுகளை அல்லது விதிமுறைகளைப் பின்பற்ற வேண்டுமென்று அனைத்துலக நாடுகளுக்கிடையே சில வரையறைகள் உள்ளன.

பள்ளிகள் வழிபாட்டுத்தலங்கள், மருத்துவமனைகள் போன்றவற்றின் மீதும் முதியோர், மாற்றுத்திறனாளிகள், கர்ப்பிணிப்பெண்கள், நோயாளிகள் போன்றவர்களின் மீதும் தாக்குதல் நடத்தக்கூடாது என்பதும், பொதுமக்களைக் கொத்துக் கொத்தாகக் கொல்லும் சதிநோக்கில் அதிஉயர் நச்சுவகைப் பொருள்களைப் பயன்படுத்தக்கூடாது என்பதும், உயிருடன் பிடிபடும் போராளிகளைக் கையாளுவதாக இருந்தாலும் போராளிகளின் இறந்த உடல்களைக் கையாளுவதாக இருந்தாலும் மனித உரிமைகளை மீறக்கூடாது என்பதும் போர்க்களத்தில் பின்பற்ற வேண்டிய மரபுகளாகும்.

ஆனால், அத்தகைய போர்மரபுகள் எதனையும் மதிக்காமல் காட்டுமிராண்டித்தனமாக ஈவிரக்கமில்லாமல் இலட்சக்கணக்கானத் தமிழர்களைக் கொன்று குவித்த இராஜபக்சேவையும் இராஜபக்சேவின் சகோதரர்களையும், இன்னும் பிற சிங்கள இனவெறிக் கும்பலையும் போர்க்குற்றவாளிகளாக அறிவித்து அனைத்துலக நீதிமன்றத்தின் போர்க்குற்றவாளிக்கூண்டில் நிறுத்தி தண்டனை வழங்கிட அய்.நா பேரவை உள்ளிட்ட அனைத்துலகச் சமூகத்திற்கு இம்மாநாடு வேண்டுகோள் விடுக்கிறது.


19.போர்க்கைதிகளின் மனித உரிமைகள் பாதுகாப்பு



தமிழீழ விடுதலைப்புலிகளையும், புலிகள் என்ற அய்யத்தின் பெயரில் அப்பாவி இளைஞர் மற்றும் இளம்பெண்களையும் போர்க்கைதிகளாகக் கைது செய்து இருட்டுச் சிறைகளில் அடைத்து விசாரணைகள் ஏதுமின்றி மாந்தநேயமற்ற முறையில் சொல்லொணாக் கொடுமைகளை சிங்கள இன வெறி அரசு ஒவ்வொரு நாளும் அரங்கேற்றி வருகிறது.

இத்தகைய காட்டுமிராண்டித்தனமான அரசப்பயங்கரவாதப் போக்கைத்தடுத்து நிறுத்தி, இலங்கையில் சிறைப்படுத்தப்பட்டுள்ள தமிழர்கள் அனைவரையும் சட்டப்பூர்வமாக விசாரிக்கவும், போர்க்கைதிகளுக்கான மனித உரிமைகளைப்பாதுகாக்கவும் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென அய்.நா பேரவை உள்ளிட்ட அனைத்துலகச் சமூகத்தை இம்மாநாடு கேட்டுக்கொள்கிறது.

20.அகதிகள் மறுவாழ்வு

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையைத் தொடர்ந்து அகதிகளாகச் சிறைப்படுத்தப்பட்ட சுமார் 3.5 இலட்சம் பேரில் இன்னும் ஏறத்தாழ இரண்டு இலட்சம் பேர் முள்வேலி முகாம்களிலேயே அடைக்கப்பட்டுள்ளனர்.

அங்கிருந்து விடுவிக்கப்பட்ட மக்களும் கூட தமது சொந்த வாழிடங்களை இழந்து விட்டதுடன், உடைமைகள் மற்றும் உடனுறை உயிர்களையும் பறிகொடுத்ததனால் நடுத்தெருவில் நிற்கும் நிலைக்கு ஆளாகியுள்ளனர். எனவே, அம்மக்களுக்கு மீள்வாழ்வு அளிக்கும் வகையில் 'மறுவாழ்வு மற்றும் மறுகட்டுமான" பணிகளைத் தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் மூலமாக நேரடியாக மேற்கொள்வதற்கு உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென அய்க்கிய நாடுகள் பேரவை உள்ளிட்ட அனைத்துலகச் சமூகத்திற்கு இம்மாநாடு வேண்டுகோள் விடுக்கிறது.

21. அய்.நா பேரவை அகதிகள் நல ஆவணத்தில் கைச்சாத்து

தமிழ்நாடு உள்ளிட்ட இந்திய மாநிலங்கள் பலவற்றிலும் அகதிகளாக வாழ்ந்து வரும் தமிழீழ மக்களின் வாழ்நிலை, கொத்தடிமைகளின் வாழ்க்கையை விட மிகுந்த வேதனைக்குரியதாகவுள்ளது. தங்குமிடம், குடிநீர், மருந்து போன்ற அடிப்படை வசதிகளும் போதிய அளவில் இன்றி அல்லல்படும் கொடுமைகளுக்கு ஆளாகியுள்ளனர்.

இதற்கு இந்திய அரசின் தமிழின விரோத அணுகுமுறைகளும் அகதிகளுக்கான அய்.நா பேரவை ஆவணத்தில் கையெழுத்திடாத நிலைப்பாடுமே காரணங்களாகும். எனவே, இந்திய அரசின் இத்தகைய தமிழர் விரோதப்போக்கை மாற்றிக்கொள்ள வேண்டுமென்பதுடன், அகதிகளுக்கான அய்.நா பேரவை ஆவணத்தில் கையெழுத்திட வேண்டுமென்றும் இம்மாநாடு இந்திய அரசை வலியுறுத்துகிறது.


22.தமிழீழ விடுதலைப்புலிகளின் மீதான தடை நீக்கம்

ஈழத்தமிழினத்தின் ஒற்றைப் பாதுகாவல் அரணாகவும் ஆயுதமாகவும் விளங்குகிற தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கம் ஒரு மகத்தான விடுதலை இயக்கமாகும். வெகுமக்களின் பேராதரவோடும் பங்களிப்போடும் ஆட்சி நிர்வாகக் கூட்டமைப்புடன் கூடிய ஒரு தனி அரசையே நிறுவி, ஆட்சி நடத்திய ஒரு பேரியக்கமாகும். ஆனால், அமெரிக்க வல்லரசின் ஒருங்கிணைப்பில் அனைத்துலகப் பயங்கரவாத ஒழிப்பு எனும் பெயரில், தமிழீழ விடுதலைப்புலிகளின் மீது பயங்கரவாத முத்திரையைக் குத்தி, அவ்வியக்கத்திற்கு எதிராக இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் தடை விதிக்கப்பட்டு, அடுத்தடுத்து நீட்டிக்கப்பட்டும் வருகிறது. போர்மரபுகளை மீறாமல், சிங்களப் பொதுமக்கள் மீது தாக்குதல்களை நடத்தாமல் சிங்களப்படையினரோடு மட்டுமே போர் நடத்திய-நடத்தி வருகிற தமிழீழ விடுதலைப்புலிகளை ஒரு வெகுமக்கள் இயக்கமாக இசைந்தேற்பு செய்து, அதன் மீதான அனைத்துலகத் தடைகளை நீக்க வேண்டுமென்று, இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட அனைத்துலக நாடுகளுக்கும் இம்மாநாடு வேண்டுகோள் விடுக்கிறது.

23.அநீதியாக சிறைப்படுத்தப்பட்டோரின் விடுதலை

இராஜிவ் கொலை வழக்கில் ஆயுள் தண்டனைக்குரிய சராசரி கால அளவையும் தாண்டி, ஏறத்தாழ 20 ஆண்டுகளாகச் சிறையிலிருந்து வரும் நளினி, பேரறிவாளன், உள்ளிட்ட அனைத்து தண்டனைக் கைதிகளையும், கோவை குண்டு வெடிப்பு வழக்கிலும் இன்னபிற வழக்குகளிலும் சுமார் பத்தாண்டுகளுக்கும் மேலாகச் சிறையிலிருந்து வரும் இசுலாமியர் உள்ளிட்ட தண்டனைக்கைதிகளையும் தமிழக அரசு விடுதலை செய்ய வேண்டுமென இம்மாநாடு கோருகிறது.

அத்துடன், எந்த விசாரணையுமில்லாமல் கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக இலங்கைச்சிறையில் சிக்கி வாடும் தமிழக, கேரளா உள்ளிட்ட தென்னிந்தியர்களை இந்திய நீதிமன்ற விசாரணைக்கு மாற்றி, அனைவரையும் உடனே இந்தியாவுக்கு கொண்டு வர உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென இம்மாநாடு இந்திய அரசைக் கேட்டுக் கொள்கிறது

24. வெளிநாடுகளில் தூதரகங்களில் தமிழ் அதிகாரிகள்

கடல் கடந்து திரவியம் தேடல் என்பது தமிழர்களின் பொருளாதார வாழ்வில் ஒரு பிரிக்கமுடியாத அம்சமாக இருந்து வருகிறது. எனவே தான் கடல் கடந்த நாடுகளில் தமிழர்கள் இன்றும் பணிபுரிந்து வருகின்றனர். தற்போது எழுந்துள்ள பொருளாதார மாற்றங்களினால் இலட்சக்கணக்கான தமிழர்கள் வெளிநாடுகளில் பணிபுரிந்து வருகின்றனர். ஆனால், அவர்கள் பாதுகாப்பாக தங்கி பணிபுரியவில்லை என்ற செய்திகள் நாள்தோறும் வந்தவண்ணம் உள்ளன.

அப்படி சென்ற அவர்கள் அந்நிய நாட்டில் பணிகளை இழந்து, உயிருக்கும் பாதுகாப்பின்றி இருக்கின்ற நிலையில் அந்நிய நாடுகளில் அவர்களுக்கு இருக்கக்கூடிய ஒரே நம்பிக்கை இந்திய தூதரகங்கள்தான். ஆனால் கெடு வாய்ப்பாக இந்திய தூதரகங்கள் வெளிநாடுவாழ் - பணிபுரியும் தமிழர்களுக்கு சரிவர உதவுவதில்லை என்பதுடன், தமிழர்களிடம் பாராமுகமாய் பொறுப்பற்று நடந்து கொள்கின்றன என்கின்ற அதிர்ச்சி தரக்கூடிய தகவல்கள் வருகின்றன.

இதற்கு காரணம் அந்த தூதரகங்களில் பெரும்பாலும் தமிழர் அல்லாதவர்கள் பணிபுரிவது தான். மொழி வேற்றுமைகளால் அவர்கள் இப்படி கடுமையாக நடந்து கொள்வதை இந்த மாநாடு வன்மையாக கண்டிக்கிறது. மேலும் வெளிநாடுவாழ் மற்றும் பணிபுரியும் தமிழர்களின் நலனைக் காக்கும் வகையில் தமிழர்கள் பெரும்பான்மையாக பணி செய்யும் நாடுகளில் உள்ள தூதரகங்களில் தமிழ் அதிகாரிகள் பெருமளவில் நியமிக்கப்பட வேண்டும் என இந்த மாநாடு இந்திய அரசை வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறது.

மேலும் லட்சக்கணக்கான ரூபாய் சம்பளமாக வழங்கப்படும் என்றும் தங்கும் இடம் ஏற்பாடு செய்து தரப்படும் என்று பொய்;யான வாக்குறுதிகளை அளித்து இளைஞர்களை ஏமாற்றி வெளிநாடுகளுக்கு அனுப்பி மோசடியாக பணம் சம்பாதிக்கும் முகமைகளுக்கு தடை விதித்து அவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் இப்போது இருக்கக்கூடிய அனைத்து முகமைகளையும் ஆய்வுக்கு உட்படுத்தப்பட வேண்டுமென இந்த மாநாடு தமிழக அரசை வலியுறுத்துகிறது.

25.தாய்மொழி வழிக் கல்வி

கல்வி என்பது உலகிலுள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் இயற்கையான அடிப்படை உரிமையாகும். ஒவ்வொருவரும் அவரவர; தாய்மொழியில் கல்வி கற்கவும் அதன் மூலம் உலகை புரிந்து கொள்ளவும் சமூகத்துடன் சுமூகமாக கலந்துறவாடவும் சமூக வளர;ச்சியோடு தம்மை மேம்படுத்திக்கொள்ளவும் கல்வி அடிப்படையான ஓர; உரிமையாகும். தாய்மொழி வழியில் கற்பதும், கற்பிப்பதும் அறிவு வளர;ச்சிக்கு அடிப்படையாக இருக்கும் என்பது உலகம் முழுவதும் பல்வேறு ஆய்வுகள் மூலம் நிறுவப்பட்டுள்ளன. இந்த அறிவியல் ஆய்வு முடிவுகளை இந்தியக் கூட்டரசு ஏற்றுக்கொண்டு எல்லா குடிமகனும் அவரவர; தாய்மொழி வழியில் முழுமையான கல்வி பெற இந்திய அரசமைப்புச் சட்டத்தில் தகுந்த காப்புகளை உருவாக்க வேண்டும்.

அ) அதற்கு, முதற்படியாக கல்வி மீது தனக்குள்ள அதிகாரத்தை இந்திய கூட்டரசு விட்டுக்கொடுக்கும் வகையில் கல்வித்துறையை முழுமையாக அரசமைப்புச் சட்டத்தின் பின் இணைப்பில் உள்ள பொதுப்பட்டியலில் இருந்து விடுவித்து மாநில அதிகாரங்களுக்கான பட்டியலில் இணைக்க வேண்டும்.

ஆ) இந்தியத் துணைக்கண்டத்தில் உள்ள 1600க்கும் மேற்பட்ட மொழிகளும் தமது இறையாண்மையைக் காத்துக்கொள்ளும் வகையில், அந்தந்த மொழிகளின் மீது பிற மொழிகளின் ஆதிக்கத்தை ஒழிக்கவும் மொழி இன நலன்களுக்கான தேசிய பேராயம் ஒன்று அமைக்கப்பட்டு, அதன் மூலம் “தாய்மொழி வழிக்கல்வி கண்காணிப்பிற்கும் பாதுகாப்பிற்கும் உட்படுத்த இந்திய அரசமைப்புச் சட்டத்தில் புதிய திருத்தம் கொண்டுவர வேண்டுமென இந்திய, தமிழக அரசுகளை இம்மாநாடு வலியுறுத்துகிறது.

26.எங்கும் தமிழ் எதிலும் தமிழ்

தமிழகத்தில் தமிழ்மொழியைக் காக்கும் வண்ணம் தமிழ்ப்பெயர; ஏற்போருக்கு ‘பெயர;மாற்ற அரசிதழ் பதிவிற்கு முழு கட்டண விலக்கு அளிக்க வேண்டும்.
தமிழ்ப்பெயரில்லாத திரைப்படங்களுக்கு இரட்டிப்பு வரி விதிக்க வேண்டும்.
வணிக நிறுவனங்கள் தமிழ்ப்பெயர; பலகைகள் வைப்பதை தமிழ்நாடு முழுவதும் நடைமுறைப்படுத்த வேண்டும்.
ஆங்கில வழி மழலையர; வகுப்புகள (Pசந.முபுஇ டு.மு.புஇ ரு.மு.பு) முற்றிலும் நீக்கப்பட வேண்டும்.

மருத்துவம், பொறியியல், சட்டம் முதலிய உயர;கல்வி, தமிழ்வழியில் வழங்கப்பட வேண்டும் என்று இந்த மாநாடு வலியுத்துகிறது.

தமிழகத்தில் எங்கும் தமிழ் எதிலும் தமிழ் எனும் நிலையை எட்ட தமிழக அரசின் ஆட்சி மொழியாக தமிழ் இருப்பதுபோல, உயர;நீதிமன்றம் மற்றும் அனைத்து கீழமை நீதிமன்றங்களிலும் தமிழே வழக்காடு மொழியாக இருக்க வேண்டும்.

அதற்கு தமிழக அரசால் எடுக்கப்பட்ட முன்முயற்சி அப்படியே தேங்கிப்போய் உள்ளது. எனவே மாண்புமிகு தமிழக முதல்வர; அவர;கள் இதற்கு முனைப்புக்காட்டி வழக்காடு மொழியாக தமிழை சட்டப்பு+ர;வமாக அறிவிக்க வேண்டுமென இம்மாநாடு வலியுத்துகிறது.

27.மனிதவள மேம்பாட்டுத்துறை பட்டியலில் தமிழ் செம்மொழி

தமிழ்மொழியை “செம்மொழி” என ஏற்பளித்த இந்திய கூட்டரசுக்கு இம்மாநாடு நன்றியை தெரிவித்துக்கொள்வதுடன், தமிழ்மொழியை செம்மொழியாய் அறிவிக்கச் செய்ய உறுதுணையாக இருந்த தமிழக முதல்வர; சமத்துவப் பெரியார; கலைஞர; அவர;களுக்கு இம்மாநாடு நன்றி தெரிவித்துக்கொள்கிறது. மேலும், தமிழ் செம்மொழி என்பதை இந்தியக் கூட்டரசின் பண்பாட்டுத்துறையின் பட்டியலில் இருந்து மனிதவள மேம்பாட்டுத்துறையின் பட்டியலில் சேர;த்து அறிவிக்க வேண்டும். அதன் மூலம் உலக நாடுகளில் உள்ள பல்கலைக்கழகங்களில் தமிழுக்கு ஓர; இருக்கை அமைத்து, தமிழில் உள்ள அரிய இலக்கியங்களை உலக மொழிகளில் மொழிபெயர;க்கவும், பதிப்பித்து வெளியிடவுமான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும் என இந்திய அரசை இம்மாநாடு வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது.

28.தமிழக எல்லைகள் மீட்பு

1956-ம் ஆண்டு நடந்த மாநிலங்கள் எல்லை வரையறையின் போது தமிழகத்தின் பல பகுதிகள், கேரளம், ஆந்திரம், கர;நாடகம் ஆகிய மாநிலங்களோடு இணைக்கப்பட்டுவிட்டன. இது தமிழ் மக்களின் இறையாண்மைக்கு எதிரான செயலாக இம்மாநாடு கருதுகிறது. எனவே, தமிழர;கள் பெரும்பான்மையாக வாழும், தேவிகுளம், பீர;மேடு, மூணாறு முதலிய பகுதிகளிலும், கர்நாடக மாநிலத்தில் சேர்க்கப்பட்டுள்ள கோலார் தங்கவயல் பகுதியிலும் பொதுவாக்கெடுப்பு நடத்தி, அவ்வாக்கெடுப்பின் முடிவின் அடிப்படையில் இப்பகுதிகள் வாழும் தமிழர;கள் விருப்பப்படி இப்பகுதிகள் தமிழ்நாட்டின் எல்லைக்குள் கொண்டுவரப்பட வேண்டுமென இம்மாநாடு வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது.

29.தமிழகத்தில் உள்ள மொழிச் சிறுபான்மையினர் பாதுகாப்பு

பிரிட்டிசார் ஆட்சிக்கு முன்பிருந்தே தமிழகத்தில் திராவிட மொழிக் குடும்பத்தை சேர்ந்த பல இலட்சம் பேர் தமிழகத்தில் குடியேறி வாழ்ந்து வருகின்றனர். இரண்டு, மூன்று நூற்றாண்டுகளுக்கு மேலாக வாழ்ந்துவரும் தெலுங்கு, கன்னடம், மலையாளம், துளு மற்றும் சிறு மொழிகளைப் பேசும் பழங்குடிகள் ஆகியோர் தமிழகத்தின் தாயக மக்களாகவே கருதப்பட்டு, அவர்களின் தாய் மொழி பாதுகாக்க அவர்களின் விருப்பப்படியான திட்டங்கள் தீட்டப்பட வேண்டுமென தமிழக அரசை இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது.

30.நதிநீர; உரிமை

ஒவ்வொரு மாநிலத்திலும் அந்தந்த மாநில எல்லைக்குள் ஓடும் நதிகள் அந்தந்த மாநிலத்தின் ஆளுகைக்கு உட்படும், அதற்கு முன்னோட்டமாக தமிழக அரசு தமிழக எல்லைக்குள் ஓடும் நதிகளைப் பாதுகாக்கும் வகையிலும் நீர்வள ஆதாரங்களைப் பாதுகாக்கும் வகையிலும் சட்டப்படி செயல் அதிகாரம் பெற்ற நதிகள் மற்றும் நீர்வள பாதுகாப்பு ஆணையம் உருவாக்கப்பட வேண்டும்.

ஒன்றுக்கும் மேற்பட்ட மாநிலங்களுக்கிடையே ஓடும் நதிகள் அனைத்தும் இந்திய கூட்டரசின் உடைமையாக்கப்பட வேண்டும். அதற்கு ஏதுவாக, மாநிலங்களுக்கிடையே ஓடும் நதிகள் அனைத்தையும் இந்திய அரசமைப்புச் சட்டத்தின் பின் இணைப்பில் கூட்டரசின் பட்டியலில் அறிவிக்க வேண்டும்.
ஆறுகள், நீர; நிலைகள், நீர;வழிகள் ஆகியன இயற்கை அன்னையின் உயிர;நாடிகள் இவற்றின் இயற்கைத் தன்மையில் எந்த ஒரு குறைபாடு ஏற்பட்டாலும் அது நிகழ்காலம் மற்றும் எதிர;கால சந்ததியை கடுமையாக பாதிக்கும். எனவே ஆறுகள், கனிமவள வரையறையில் இருந்து நீக்கப்பட வேண்டும். ஆறுகளில் மணல் அள்ளுவது தடை செய்யப்பட வேண்டும். மணலுக்கு மாற்றான பொருளை மக்களிடையே பிரபலப்படுத்த வேண்டும். மேலும், ஆறுகளிலிருந்து மணல் கொள்ளயடிப்போர; மீது ஆயுள் தண்டனை வழங்கக்கூடிய அளவில் சட்டங்கள் கடுமையாக்கப்பட வேண்டும். அதைப்போலவே ஏரிகள் மற்றும் குளங்கள் போன்ற நீர; நிலைகளில் கருவேல மரங்கள் வளர;ப்பது போன்ற நீர; வள ஆதாரங்களை சீர;குலைக்கும் நடவடிக்கை முற்றிலும் தடுக்க வேண்டும்.

இலங்கையில் விசாரணை நடத்த அய்.நா. குழுவுக்கு விசாரணை வரம்பு நீட்டிப்பு



போர் குற்றம் குறித்து இலங்கையில் விசாரணை நடத்துவதற்கு வசதியாக அய்.நா. குழுவின் விசாரணைக் கால வரம்பு இந்த மாத இறுதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் விசாரணை நடத்துவதற்கு அய்.நா. குழுவுக்கு அந்நாட்டு அரசு அனுமதி வழங்கியதை அடுத்து அய்.நா. பொதுச் செயலாளர் பான்கி மூன் இதற்கான உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.

இலங்கையில் கடந்த ஆண்டு மே மாதம் நடைபெற்ற போரில் விடுதலைப் புலிகள் முற்றிலுமாக நிர்மூலமாக்கப் பட்டனர். அப்போது இலங்கை ராணுவம் ஆயிரக்கணக்கான அப்பாவி மக்களை கொன்று குவித்ததாக குற்றம்சாற்றப் பட்டது. நியூயார்க்கைச் சேர்ந்த மனித உரிமை அமைப்பு, லண்டனைச் சேர்ந்த ஆம்நெஸ்டி இண்டர்நேஷனல் உள்பட பல்வேறு அமைப்புகள் இலங்கை அரசின் மனித உரிமை மீறல் நடவடிக் கைகளை படம் பிடித்துக் காட்டின.

இதையடுத்த இறுதிக் கட்ட போரில் நடந்த மனித உரிமை மீறல், ஒட்டு மொத்த படுகொலைகள் உள்பட பல்வேறு போர் குற்றங்களை விசாரிக்க ஒரு உயர் குழுவை அய்.நா. பொதுச் செயலாளர் பான்கி மூன் அமைத்தார்.

இந்த விசாரணைக் குழு, மனித உரிமை அமைப்புகள் உள்பட பல்வேறு தரப்பினருடன் விசாரணை நடத்தியது. இலங்கையில் விசாரணை நடத்த அனு மதிக்க வேண்டும் என்று கோரப்பட்டது. ஆனால் அதை இலங்கை அரசு ஏற்க மறுத்துவிட்டது.

இதனால் இலங்கையில் விசாரணை நடத்தாத நிலையில் டிசம்பர் 15ஆம் தேதியுடன் இந்த குழுவின் விசா ரணைக் கால வரம்பு நிறைவு பெறுவதாக இருந்தது. இந்த நிலையில், அய்.நா. குழு இலங்கையில் விசாரணை நடத்த அந்த நாட்டு அரசு இப்போது அனுமதி வழங்கி உள்ளது.

இதையடுத்து விசாரணை கால வரம்பை மேலும் 15 நாள்களுக்குள் நீட்டிக்க அய்.நா. பொதுச் செயலாளர் பான்கி மூன் உத்தரவிட்டுள்ளார். இந்தக் குழு டிசம்பர் 30ஆம் தேதி அறிக்கையைத் தாக்கல் செய்ய வேண்டும்

Sunday, December 19, 2010

தமிழ் ஈழத் துரோகிகளின் செயல் அம்பலம் விபீடணர்களின் தமிழர் விரோத ஒழுக்கக் கேடுகள் விக்கி லீக் வெளியிட்டுள்ள கருணா, டக்ளஸ் தேவானந்தா பற்றிய உண்மைகள்



இலங்கை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவும், கருணாவும் ராணுவத்தினருக்காக பெண்களை கடத்தி பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியதாக விக்கி லீக் இணையதளத்தில் பரபரப்பான தகவல் வெளி யாகி உள்ளது.

கருணாமீது குற்றச்சாற்று!

அமெரிக்க ராணுவ நடவ டிக்கை, தூதரக செயல்பாடு கள் குறித்து பல்வேறு ரகசிய தகவல்களை வெளியிட்டு உள்ள விக்கி லீக் இணைய தளம், இலங்கையில் நடந்த அட்டூழியங்கள் பற்றிய தகவல்களையும் வெளியிட்டு இருக்கிறது. இது தொடர்பாக இலங்கையில் உள்ள அமெ ரிக்க தூதர் 2007ஆம் ஆண்டு மே 17-ஆம் தேதி அமெரிக்க அரசுக்கு அனுப்பி வைத்த ரகசிய ஆவணங்களில் இந்த விவரங்கள் இடம்பெற்று இருப்பதாக அந்த இணைய தளத்தில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

விக்கி லீக் வெளியிட்ட அமெரிக்க தூதரகத்தின் ரக சிய ஆவணத்தில் கருணா குற்றவாளியாக சித்திரிக்கப் பட்டுள்ளார். அதில் வெளி யாகி இருக்கும் தகவல்களை வருமாறு:-

பெண்கள் கடத்தல்

கிழக்கு மாகாணத்தில் நிலை கொண்டிருந்த ராணு வத்தினருக்காக பாலியல் தொழிலில் ஈடுபடுமாறு பல் வேறு பெண்களை அனுப்பி வைத்தார் கருணா. இதற்காக அவர் பாலியல் தொழில் குழுவை வைத்து இருந்தார். கருணாவின் நிர்ப்பந்தம் மற்றும் உயிர்ப்பயம் காரண மாக அந்த பெண்கள் அவரது உத்தரவுக்குக் கட்டுப்பட நேரிட்டது.

யாழ்ப்பாணத்தில் இருந்த ராணுவ தளபதிகளை அழைத்த கோத்தபய ராஜபக்சே, அங்கு தமிழ் எம்.பி.க் கருணாவும், டக்ளஸ் தேவானந்தாவும் செய்து வரும் சில வேலை களில் தலையிட வேண்டாம் என்று அறிவுறுத்தினார். ராணு வத்தின் செயல்களை சர்வதேச நாடுகள் கண்காணிப்பதால் நம்மால் செய்ய முடியாத வேலைகளை இவர்கள் செய் வார்கள். எனவே இதில் யாரும் தலையிட வேண்டாம் என் றும் கேட்டுக்கொண்டார். வேலைகள் என்று அதில் அவர் குறிப்பிட்டு இருப்பது கடத்தல், பணம் பறித்தல், படுகொலைகள், பாலியல் தொழில் ஆகியவை ஆகும்.

ராணுவத்தினருக்கு எப்போதெல்லாம் பெண்கள் தேவைப்படுகிறதோ, அப்போ தெல்லாம் அனுப்பி வைத்தவர் கருணா.

மிரட்டி பணம் பறிப்பு

2006ஆம் ஆண்டில் இலங்கை அரசின் ஆதரவு காரணமாக கருணா, டக்ளஸ் தேவானந்தா ஆகியோரின் தலைமையில் இயங்கி வந்த குழுக்கள் மிகப்பெரிய அளவில் குற்றச் செயல்களில் ஈடுபட்டன. கருணா, டக்ளஸ் தேவானந்தா கும்பல்கள் குழந்தைகள் கடத் தலிலும் ஈடுபட்டன.

விடுதலைப்புலிகள் என்று சந்தேகப்படுவோரை கடத்தி வரும் பொறுப்பையும் கருணா, டக்ளஸ் தேவானந் தாவிடம் இலங்கை அரசு ஒப் படைத்து இருந்தது. இந்தக் குழுக்களுக்கும், ராணுவத்தின ருக்கும் நெருங்கிய தொடர்பு இருந்தது. வடக்கு மற்றும் கிழக்கு மாகாண வர்த்தகர் களை மிரட்டி பணம் பறிக் கும் வேலையையும் அவர்களி டம் கோத்தபய ராஜபக்சே ஒப்படைத்து இருந்தார்.

இவ்வாறு அதில் செய்தி வெளியாகி உள்ளது.

ராஜபக்சே - தொடரட்டும் அவமானங்கள்







நான் ஒரு அதிபர்...என்னை என்ன செய்ய முடியும் என்ற இறுமாப்புடன் இங்கிலாந்து சென்ற இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சேவுக்கு கைது பயத்தை உண்டாக்கி நடுங்க வைத்திருக்கிறார்கள் அயலகத் தமிழர்கள். 6 கோடி தமிழகத் தமிழர்களால் முடியாததை 3 லட்சம் பிரிட்டன் தமிழர்கள் செய்து முடித்திருக்கிறார்கள். இந்தியாவில் கொலைக்குற்ற வழக்கில் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட டக்ளசோடு இந்திய பிரதமரை சந்தித்து விருந்துண்ண முடிந்த ராஜபக்சேவால் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் உரையாற்றக் கூட முடியவில்லை.

ராஜபக்சேவின் இங்கிலாந்து பயணத்தின் போது தமிழர்களே எதிர்பார்க்காத அளவிற்கு ஒன்றுபட்ட எதிர்ப்பு கிளம்பியிருக்கிறது. கூடவே இங்கிலாந்து தொலைக்காட்சியான சேனல் 4 வெளியிட்ட ஆவணங்கள் ராஜபக்சேவின் போர்க்குற்ற நடவடிக்கைகளை உலகுக்கு வெளிச்சம் போட்டு காட்டின. கொடூரமான முறையில் பாலியல் வன்புணர்ச்சிக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட இசைப்பிரியா உள்ளிட்ட தமிழ்ப்பெண்களின் நிலையைக் கண்டு கொதித்துப்போய் வெள்ளையர்களே ராஜபக்சேவுக்கு எதிராக திரண்டிருக்கிறார்கள்.

“சேனல் 4 தொலைக்காட்சி வெளியிட்ட போர்க்குற்ற காட்சிகளைக் கண்ட வெள்ளையர்கள் கொந்தளித்துப் போனார்கள். மனித உரிமைகளுக்கு அதிகம் மதிப்பளிக்கும் நாடாக இருக்கும் இங்கிலாந்தில் மகிந்தவின் கோரமுகத்தைப் பார்த்தவர்கள் எங்களோடு சேர்ந்து நின்று எதிர்ப்புக்குரல் கொடுத்தனர். மைனஸ் எட்டு டிகிரி என்கிற அளவிற்கு தட்பவெப்பம் இருந்ததால் சாலைகளில் ஒன்றரை அடி உயரத்திற்கு பனி படர்ந்திருந்தது. அந்தக் குளிரிலும் குழந்தைகளோடு பெண்கள் அதிக அளவில் திரண்டு வந்து ராஜபக்சேவுக்கு எதிராக கண்டனக் குரல் எழுப்பினார்கள். ராஜபக்சேவுக்கு எதிராக ஆயிரக்கணக்கான தமிழர்கள் இங்கிலாந்தில் கொலைக்குற்றம் சாட்டி புகார் கொடுத்திருக்கிறார்கள். எங்கள் புகார்கள் அடிப்படையில் ஆயிரக்கணக்கான எஃப்.ஐ.ஆர்.களும் பதிவாகியிருக்கின்றன. 2009ல் நடந்த முள்ளிவாய்க்கால் பேரழிவுக்கு பிறகும் நாங்கள் உறுதியாக நிற்கிறோம். இனி ராஜபக்சேவும் அவருடைய சகோதரர்களும் ஐரோப்பிய நாடுகளில் கால் வைக்கவே முடியாது”- லண்டனில் புலிக்கொடியை ஏந்தியபடி போராட்டத்தில் ஈடுபட்டிருந்த ஈழ சகோதரர் ஒருவர் உணர்வுப்பூர்வமாக இப்படி கூறுகிறார்.

தமிழகத்தில் தன் சகுனி வேலையை சிறப்பாக செய்து முடித்த கையோடு இங்கிலாந்துக்கு போன இலங்கைத் தூதர் அம்சாவுக்கு தான் நன்றி சொல்ல வேண்டும். இங்கிலாந்துக்கு போனால் எதிர்ப்பு வலுவாக இருக்குமே... கைது அபாயம் இருக்குமே என்றெல்லாம் பயந்த ராஜபக்சேவிடம், இங்கே தமிழர்கள் சிதறிக்கிடக்கிறார்கள். அவர்களால் ஒரு பிரச்சனையும் இருக்காது. ராணியும் நமக்கு ஆதரவாக இருக்கிறார் என்று அம்சா கொடுத்த ரிப்போர்ட்டை நம்பியே இங்கிலாந்தில் கால் வைத்தார் ராஜபக்சே. பிறகு வைத்த காலை எடுக்க முடியுமா என்கிற அளவிற்கு பயந்து நடுங்கிப்போனார் ராஜபக்சே.

ஏற்கனவே சிலி அதிபரை கைது செய்திருக்கிறது இங்கிலாந்து என்பதால் இந்த முறை போர்க்குற்றவாளியான ராஜபக்சேவையும் கைது செய்யவேண்டும் என பிரித்தானிய தமிழர் பேரவை உள்ளிட்ட அமைப்புகள் தொடர் முயற்சிகளை மேற்கொண்டன. இங்கிலாந்தை பொறுத்த வரை போலீஸ் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்கலாம் அல்லது ராணி உத்தரவிட்டால் ஒருவரை கைது செய்யலாம் என்கிற சட்டம் நடைமுறையில் இருக்கிறது. ராஜபக்சே ஒரு நாட்டின் அதிபராக இருப்பதால் அவரைக் கைது செய்ய ராணி எலிசபெத்தின் உத்தரவு தேவையாக இருந்திருக்கிறது. அதனால் இந்த முறை கைதாவதில் இருந்து தப்பி விடலாம் ராஜபக்சே. ஆனால் அவர் மீதும் அவருடைய சகோதரர்கள், அதிகாரிகள் உள்ளிட்டவர்கள் மீது வழக்குகள் நிலுவையில் இருக்கிறது. அதிபராக இல்லாமல் இனி இங்கிலாந்தில் ராஜபக்சே குடும்பம் கால் வைக்க முடியாது. இதே நிலையை ஐரோப்பிய நாடுகள் முழுக்கவும் ஏற்படுத்தும் முனைப்பில் இருக்கின்றன தமிழர் அமைப்புகள். ஆஸ்திரேலியாவிலும் இதே நிலைதான் ஏற்படும்.

இங்கிலாந்து வந்திருந்த ராஜபக்சேவை நேர்காணலுக்கு வரும்படி அழைத்தன அங்கிருக்கும் பிரபல தொலைக்காட்சிகள். ஆனால் அதற்கு மறுத்துவிட்டார் ராஜபக்சே. இங்கிலாந்து பத்திரிகையாளர்களின் கேள்விகளை எதிர்கொள்ளவே முடியாத அளவிற்கு போர்க்குற்றங்களை நிகழ்த்தியிருக்கும் ராஜபக்சேவுக்கு இங்கிலாந்து பயணம் என்பது மிகப்பெரும் அவமானத்தை கொடுத்திருக்கிறது. ஆனால் அந்த அவமானத்தை உணரும் நிலையில் இருப்பாரா ராஜபக்சே? இந்த நூற்றாண்டின் மாபெரும் கொடுங்கோலனாக மாறியிருக்கும் ராஜபக்சே சந்திக்க வேண்டிய அவமானங்கள் நிறைய இருக்கின்றன. இங்கிலாந்து தமிழர்களின் உரத்த குரல் அதையே உணர்த்துகிறது.

- கார்த்திகைச்செல்வன்

நன்றி : நக்கீரன் நந்தவனம்.

மானத்தி அவள்; தமிழச்சி !!



செய்தித் தொகுப்பாளர் இசை ப்ரியா!

1
மண்ணின்
விடுதலைக்குப் போராடிய
தமிழச்சியின் நிர்வாணம்
இணையமெங்கும் ஒளிபரப்பு;
உயிரிருந்தும் உலவும் நாம் -
அதை கண்டும் -
சாகாத; இழி பிறப்பு!!
————————————————————–
2
மானத்தில் -
தொட்டால் சுடும் நெருப்பு,
இழிவாய் -
பார்த்தாலே பாயும் மின்சாரம்,
அவள் -
தாயிற்கும் ஒரு படி மேல் என்று
இனி புரியும் – சிங்களனுக்கு!!
————————————————————–
3
அவளுக்கு மட்டும் தெரிந்திருந்தால்
ஒன்று பார்த்தவரையெல்லாம்
எரித்திருப்பாள்,
அல்லது – தன்னையாவது
எரித்துக் கொண்டிருப்பாள்!!
————————————————————–
4
தப்பித் தவறி
அவள் பிள்ளை இதை
பார்த்திருந்தால்-
எத்தனை ராஜபக்ஷேவை அவன்
கொன்றிருப்பானோ!!!!!!!?
————————————————————–
5
எம் மண்ணின்; வீரமென்
தமிழச்சிகள்,
நாய்கள் கொன்றுவிட்டு தான்
கொந்தியிருக்கின்றன!!
————————————————————–
6
ஜென்மம்
எத்தனை எடுத்தாலும் இனி
ரத்தத்தின் ஒரு துளியிலாவது
இருக்கும் -
அவன் மீதான; அவளின் கோபம்!
————————————————————–
7
யாரும் சாட்சிக்கு வேண்டாம்
காற்றும்.. வெளிச்சமும்..
மண்ணும்.. வானும்..
மரமும் செடிகளும் -
பார்த்துக் கொண்டு தானிருந்தன
அந்தக் கயவர்களை!!
————————————————————–
8
கடல் தகதகவெனக்
கொதித்து -
உலகத்தை சூழ்ந்து அழித்திருக்கும்;
அந்த கொடுமைக்கு உடனே
தண்டனை கொடுப்பதெனில்!!
————————————————————–
9
யாரோ ஒருவனுக்கு
துணிவிருந்தால்
அவள் கையில் ஒரு அரிவாளை
கொடுத்துவிட்டு சொல் -
உன்னை இப்படிச் செய்வேனென்று;
அந்த அரிவாளில் -
உன்னைப் போல் – அவள்
நூறு பேரை அறுத்திருப்பாள்!!
————————————————————–
10
எனக்கு
மரணத்தை இப்பொழுதேக் கொடு;
அதற்கு ஈடாக -
இணையத்தில் தெரிந்த
என் தமிழச்சியின் வெற்றுடம்பை
ஈழ விடுதலையால் போற்று,
இன்னொரு மானத்தி மிஞ்சட்டும்!!
————————————————————–
வித்யாசாகர்

நன்றி : நக்கீரன் நந்தவனம்.

உறைபனியில் அக்கினிப் பூக்க(ள்) கண்டேன்!



உறைபனியை உருகவைத்த
வேட்கைத் தீ - பௌத்தத்தின்
புனிதம் மறந்த ராஜபக்சேவை - அச்சத்தில்
வியர்க்க வைத்த வீரத் தீ...!

முள்ளிவாய்க்காலில் -
எக்காளமிட்டவர்களை - கீத்துரு
விமான நிலைய புறக்கடை வழி
ஓடச் செய்த வீர பிரபாகரன் இனத் தீ...!

வீரத் தமிழச்சியர்... எங்கள் தீரத் தமிழச்சியர்...
இசைப்பிரியாவினர் வெற்றுடம்பை
கண்ட பின்பும் வெறுமனே இருக்க - இது
இற்றுப்போன இனமல்லவே ;
பற்றி விட்டது அவள் கொண்ட மானத் தீ...!

வீழ்ந்து விட்டான் வீர தீரன் - இனி
வீழ்ந்தது ஈழம் என்று -
வெறித் தம்பட்டம் கொட்டியதே-
சிங்களக் கூட்டம்...!

என்றும் வீழ்ந்திடக் கூடுமோ
உயிர் பாய்ச்சி வளர்த்த ஈழம்;
வீழவில்லை வீழ்வதில்லை
வீழ்ந்தது என்றால் அது அறிவீனம்...!

ஒரு பிரபாகரன் விதைத்ததில் - இன்று
ஓராயிரம்... ஒரு லட்சம்...
பல கோடி பிரபாகரன்கள் -
வீறுகொண்டு முளைத்திட்டனர் காண்...!

புறப்பட்டார் தன்மானத் தமிழர் - இனி
ஈழக் கொடி வெற்றி நாட்டும்...!

புற்றுபோல் வளர்ந்துவிட்ட
புற்றீசல் சிங்கள வாழ்க்கை -
சிறு நாள் வாழ்க்கை - அது
போய் ஒழியும் காலம் விரைவில்
எண்ணிக் கொள்கவே...!

இங்கிலாந்தில் பற்றி எரிந்தது போல்
இங்கும் கொழுந்துவிட்டிருந்தால் -
என்றோ கருகியிருக்கும்
ஈன இனவெறியர் கொட்டம் ;
அந்தச் சாம்பலைக் -
கரைத்து அன்றே பூத்திருக்கும்
ஈழத் தமிழர் சட்டம்...!

ஆயிரந்தான் இருந்தாலும்
இலங்கையில் மடியும் தமிழன் -
மாற்றான் தாய்ப்பிள்ளை என்று - ஒருவேளை
மடமையர் இங்கு நினைத்ததாலோ!?

பூக்காடான முள்ளிவாய்க்கால் எங்கும் - பூத்ததே
பூவுடல்களின் சாக்காடு ;
கொள்ளை உயிர் போனாலும்
விலைபோகா மானத்தை -
விடநேர்ந்த உடன்பிறப்புக்கள் - தவித்தன
துடித்தன தளிர்நெஞ்சங்கள் அங்கே...!

லட்சம் சொச்சம் உயிரிழந்தப் பின்னும்
மிச்சம் - அந்தோ !
அனாதையாய் தவிக்கிறதே;
அட...! மதிகெட்ட புத்தி இதை
வெற்றி என்று கதைக்கிறதே !?

இவர்களுக்கு -
துக்கப்படத்தான் நேரமில்லை - இதில்
வெட்கப்படவுமா நேரவில்லை... ?

அயலகத் தமிழா !
உம்மை சிரம் தாழ்த்தி வணங்குகிறேன்;
வாழும் இடம் தூரப்பட்டாலும்
எம் சிந்தைக்கு அருகில் வந்து - நீவீர்
உறைக்கச் செய்த - எம்
உள்ளுணர்வு கொண்டு உம்மை வாழ்த்துகிறேன்...!

மக்களால் மக்களுக்காக
மக்களாட்சி நடக்கும் நாட்டில் நீ இருக்கிறாய்;
என் செய்வேன் - நானோ
அரசியலால் அரசியலுக்காக
அரசியலாட்சி ஆளும் நாட்டில் அல்லவோ இருக்கிறேன்...!

இத்தனை நாள் உறைந்து கிடந்த - சில
இதயங்களும் உம் வேகத் தீ கண்டு
இன்று உயிர்ப்பு கொண்டன...!

இனி...
ஈழம் மலரும்... ஈழம் மலரும்... ஈழம் வளரும் - இதை
இறவாத பிரபாகரன் காணக் கூடும்...!

:~ நா. இதயா, ஏனாதி...

நன்றி : நக்கீரன் நந்தவனம்.

அடிமைச் சங்கிலி அறுப்போம்...! -கவிஞர் தணிகைச்செல்வன்



கோவையில் நடந்த உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டில், காவியக் கவிஞர் வாலி தலைமையில் "தமிழுக்கும் அமுதென்று பேர்' என்கிற தலைப்பில் கவியரங்கம் நடைபெற்றது.

கவியரங்கத்தை கவிஞர் மு.மேத்தா தொடங்கி வைத்தார். தொடர்ந்து கவிஞர்கள் பழனிபாரதி, பா.விஜய், தணிகைச் செல்வன், இளம்பிறை, உமாமகேஸ்வரி, தமிழ்தாசன் உள்ளிட்டோர் தங்கள் கவிதைகளை வாசித்தனர்.

ஒவ்வொரு கவிஞரும் ஒவ்வொரு கோணத்தில் வாசித்த நிலையில், ஈழத்தைப் பற்றி அதிகம் பேசிய தணிகைச்செல்வனின் கவிதை வரிகள், திரண்டிருந்த மக்களிடம் உணர்வு தாக்கத்தை ஏற்படுத்தின.

அவரது கவிதையிலிருந்து...


முள்ளிப்போர் முனைமுகத்தில் முணைந்து சரணடைய

வெள்ளைக் கொடிவீசி வந்தாரை; விதிமீறி

கள்ளக் கொலைசெய்த காட்டுவெறி காண்கிலையோ...!

பிள்ளைக் கறிகேட்கும் பேயர்களின் பலிகளமாம்

முள்வேலிக்குள் கதறும் மரணஒலி கேட்கலையோ...!



கொள்ளையர்கள் கொடுங்கரத்தில் குமரியர்கள் குமுறுகின்ற

வல்லுறவின் வதைகண்டும் மனசாட்சி வேர்க்கலையோ...!

ஒரு குவளை நீருக்கும், ஒரு கவளம் சோறுக்கும்

இரவலரைப் போல் ஏங்கும் ஈழவரை காண்கிலையோ...!



அய்யோ உலகே ! அய்யகோ பேருலகே !

பொய்யோ உலகசபை ? புனைவுகளோ சபைவிதிகள் ?



கையேந்தி வந்தாரை கரமேந்தி காத்த இனம்

கையேந்துதல் காண்கிலையோ கஞ்சிக்கும் கருணைக்கும்.



எல்லாம் இழந்தோம் இழப்பதற்கு ஏதுமில்லை...

கணவனை இழந்ததாலே கண்ணகி சீற்றம் நியாயம்

துணியதனை இழந்ததாலே துரோபதி சபதம் நியாயம்

தனதுமண் இழந்ததாலே தருமனின் யுத்தம் நியாயம்

அனைத்தையும் இழந்த எங்கள் ஆவேசம் நியாயம் ! நியாயம் !



தாக்குண்டால் புழுக்கள்கூட தரைவிட்டுத் துள்ளும் , கழுகு

தூக்கிடும் குஞ்சிகாக்க துடித்தெழும் கோழி; சிங்கம்

மூர்க்கமாய் தாக்கும்போது முயல்கூட எதிர்த்து நிற்கும்...



சாக்கடைப் கொசுக்களா நாம் ? சரித்திர சக்கரங்கள் !


சரித்திரம் சுழலும்போதும் சமுத்திரம் குமுறும்போதும்

பொறுத்தவன் பொங்கும்போதும் புயல்காற்று சீறும்போதும்

பறித்தவன் ஆதிக்கத்தைப் பசித்தவன் எதிர்க்கும்போதும்

மறித்தவன் வென்றதுண்டா ? மறுத்தவன் நின்றதுண்டா?



புவியோடி படர்ந்திருக்கும் நவகோடி தமிழினமே !

நீ , இழக்கப்போவது அடிமைச் சங்கிலிகளைத்தான்-

பெறப்போவதோ ஒரு பேருலகம் ! ஒரு பொன்னுலகம் !

அதுதான் தமிழுலகம்...!

நன்றி : நக்கீரன் நந்தவனம்.

மே-18 : விழிமழைக் காலம் விரைவில் மாறும்







காலம் எழுதிய துயரக் காவியம்

கண்களை இன்னும் நனைக்கிறதே-மன

ஓலம் இன்னும் ஓய்ந்திட வில்லை

உலகம் கல்லாய்க் கிடக்கிறதே.



இரவின் உதடுகள் கண்ணீர் சொற்களை

ஏந்திய படியே அழுகிறதே-அலை

புரளும் கடலும் மௌனம் நோற்று

புவியை வெறுத்து எழுகிறதே.

உறக்கம் குதறும் ஊமை நினைவுகள்

உயிரில் வலியாய் வலிக்கிறதே-எம்

உறவுகள் எழுப்பிய மரணக் கூச்சல்

ஒவ்வொரு நொடியிலும் ஒலிக்கிறதே.



முள்ளி வாய்க்கால் கரைகளின் மீது

முளைத்த மரணப் புதர்களிலே-எம்

பிள்ளைகள் ஆடிய பொம்மைகள் கூட

பிணம்போல் வெறித்துக் கிடக்கிறதே.

விழிமழைக் காலம் விரைவில் மாறும்

வெளிச்சம் தேடி நடையிடுவோம்-நம்

வழிநடைப் பயணம் ஈழம் அடையும்

வருத்தங்க ளுக்கு மடையிடுவோம்.


-ஆரூர் தமிழ்நாடன்

நன்றி : நக்கீரன் நந்தவனம்.

ஈழ விடுதலைக் களம் - திருமாவளவன்











“நவம்பர் 26”... உலக நாடுகளை தனி ஈழ விடுதலை குறித்து சிந்திக்க வைத்த மாவீரன், என்றும் சில விடை இல்லா கேள்விகளை தனக்காக தன்னகத்தே கொண்டுள்ள ஈழப்போராளி பிரபாகரனின் பிறந்தநாள். தமிழகத்தில் இந்த வீரத் தமிழனின் பிறந்த நாளை வெளிப்படையாய் கொண்டாட முடியாத நிலை. இந்நிலையில் நூல் வெளியீட்டு விழா கொண்டாடும் போக்கில் பிரபாகரன் பிறந்தநாளை நினைவுப்படுத்தியது விடுதலை சிறுத்தைகள் கட்சி.

தொல். திருமாவளவனின் கவிதைகளின் ஆங்கில மொழியாக்கம் 'Thirst', வெளியீட்டு மையம் சார்பாக மாநில செய்தித் தொடர்பாளர் வன்னிஅரசு தொகுத்த ஈழ யுத்தகாலத்தில் தொல். திருமாவளவன் பேசிய உரைகளின் தொகுப்பு நூல் "ஈழ விடுதலைக்களம்', தமிழர் இறையாண்மை மாநாட்டுச் சிறப்புப் பாடல் இசைவட்டு "எழுச்சித் தமிழ்” ஆகியவற்றின் வெளியீட்டு விழா, வெளியீட்டு மையம் சார்பாக, சென்னை, தேவநேயப் பாவாணர் நூலக அரங்கத்தில், 26.11.2010 அன்று மாலை நடைபெற்றது.

இவ்விழாவில் “ஈழ விடுதலைக் களம்” உரைத் தொகுப்பின் முதல் படியை கவிஞர் இன்குலாப் வெளியிட, கவிஞர் தணிகைச்செல்வன் பெற்றுக்கொண்டார். 'Thirst' ஆங்கில மொழியாக்க கவிதை நூலை கவிக்கோ அப்துல் ரகுமான் வெளியிட, சட்டமன்ற உறுப்பினர் ரவிக்குமார் பெற்றுக்கொண்டார். "எழுச்சித் தமிழ்” இசைவட்டை கவிஞர் அறிவுமதி வெளியிட இயக்குநர் அமீர் பெற்றுக்கொண்டார்.

இவ்விழாவை மாநிலச் செய்தித் தொடர்பாளர் வன்னிஅரசு தொகுத்து வழங்கினார். வெளியீட்டு மையம் மாநிலச் செயலாளர் ஆதிரை நன்றியுரையாற்றினார்.


விழாவின் தொடக்கப் பேச்சாளரக உரையாற்ற வந்த கவிஞர் அறிவுமதி...


பிரபாகரனின் பிறந்த நாளை நினைவுகூர்ந்தார். அத்துடன் “வருவான்” என்னும் ஒற்றை வார்த்தைக் கவிதையினை கூட்டத்தின் ஒருபகுதியினரை ஒவ்வொருவராக வருவான்... வருவான்... என சொல்லவைத்து கடைசியாக திருமாவளவன் ‘வருவான்’ என சொல்லி முடிக்கும் விதம் ஒரே வார்த்தைக் கவிதையாக அமைத்தார்.

‘வருவான்’ என்னும் இந்த ‘ஒரே வார்த்தை ஓஹோ என்ற வாழ்க்கையாக’ பிரபாகரனின் மறு வருகையை பறைசாற்றி அரங்கினை கிளர்ச்சி கொள்ளசெய்தது.

அறிவுமதியை தொடர்ந்து உரையாற்ற வந்த அமீர்,,,

இது நான் பங்கேற்கும் சிறுத்தைகளின் இரண்டாம் விழா. (முன்னதாக நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய வன்னிஅரசு, “விடுதலை சிறுத்தைகளின் விழாவில் முதன்முறையாக அமீர் பங்கேற்க வந்துள்ளார்” என்று கூறியதை மறுத்து அமீர் இப்படி சுட்டிக்காட்டினார்.)

எனக்கு சின்ன வயசிலிருந்தே மிகவும் பிடித்த விலங்கு சிறுத்தையும், புலியும் தான். அதனாலதான் என்னமோ? இன்று புலிகளுக்காக சிறை செல்ல வாய்த்தது. சிறுத்தைகளுடன் நட்புறவாட வாய்த்தது. எனக்கு பிடிக்காத விலங்கு சிங்கம். சிங்கம் சோம்பேறித் தனத்தின் அடையாளம். அதுமட்டுமில்லாமல் தூரத்திலிருந்து பார்த்தால் சிங்கம் அசிங்கமாகத் தொரியும். (இப்படிப் பேசி கூட்டத்தினரின் விசில் சத்தத்தை பெற்றார் அமீர்)

திருமா , சில சமயம் கொள்கை மாறிப்போகிறாரோ என்று நினைக்கத் தோன்றும். பிறகு நெழிவு சுழிவுடன் மீண்டும் தன்னிலைக்கே வந்துவிடுவார். சமீபத்தில் மதுரையில் நடந்த திருமணவிழாவில் இந்த நாடு பெரியாரின் பேரப்பிள்ளைக்களுக்குதான் சொந்தம் என்றார். அதே போல், விரைவில் அது நடக்கும் என எதிர்பார்க்கிறேன்.

கலைஞரை போல், எழுத்தாற்றலும், பேச்சாற்றலும் திருமாவிற்கும் உண்டு. திருமாவிற்காக அரியணையும் காத்திருக்கிறது. இது நடக்க வேண்டும் என்பது எனது ஆசை. இது நடக்கும் என நம்புகின்றேன்.

ஆங்கில மொழியாக்கம் அவசியம் - கவிக்கோ அப்துல் ரகுமான் :

இன்று சில பேர் தமிழில் பெயர் சூட்டி இருக்கிறார்கள். ஆனால், அவர்களின் உணர்வில் தமிழ் இல்லை. இப்படிப்பட்ட இன்றைய தமிழன் இவர் இல்லை. இவர் தமிழ் உணர்வுமிக்க பழமைமிகுந்த (தொல்) திருமா என தன் பெயரிலேயே உணர்த்தி இருக்கிறார்.

நேரு ஒரு கூட்டத்திற்கு சென்றார். அவருக்கு பின்னால் பிரபல இந்திக் கவிஞர் தினகர் சென்றார். அப்போது படியில் ஏறிய நேரு, தடுமாறிவிழ நேருகிறது. அவருக்கு பின்னால் வந்த கவிஞர் தினகர் நேருவை தாங்கிப்பிடித்து விடுகிறார்.

அதற்கு நன்றி கூறிய நேருவிடம், “அரசியல் தடுமாறும் போது தாங்கிப்பிடிப்பது இலக்கியத்தின் கடமை” என்று தினகர் கூறினார். திருமா அரசியலில் தடுக்கி விழுந்தாலும் தாங்கிப்பிடிக்க அவருக்குள்ளேயே இலக்கியம் இருக்கிறது.

அமீர் தனக்கு சிங்கம் பிடிக்காது, சிறுத்தையும் புலியும்தான் பிடிக்கும் என்றார். அவர் ஒன்றை குறிப்பிடாமல் விட்டுவிட்டார். சிங்கம்தான் சிங்களவர்களின் சின்னம். அதனால் சிங்கத்தை ஈழப் போராளிகள் யாருக்குமே பிடிக்காது.

தனது கவிதைகளை 'thirst' என்றப் பெயரில் மொழிப் பெயர்த்துள்ளார். இது எனக்கு மகிழ்ச்சியைத் தருகிறது. தமிழின் 2000 ஆண்டுக்களுக்கு முற்பட்ட இலக்கிய செல்வங்கள் எல்லாம்,மொழிப்பெயர்க்கப் பட்டிருந்தால் தமிழ் என்றோ செம்மொழி என்ற அந்தஸ்தை பெற்றிருக்கும். சமஸ்கிருதம் செம்மொழி அந்தஸ்து பெறக்காரணம் அதன் ஆங்கில மொழியாக்கம் தான்.

காளிதாசனின் சாகுந்தலத்தின் ஆங்கில மொழிபெயர்ப்பை படித்த ஆங்கிலேயரான வில்லியம்ஸ் எழுதிய கட்டுரைதான் சமஸ்கிருதம் செம்மொழி பெற அடிப்படையாக அமைந்தது. சகுந்தலை, தான் வளர்த்த செடி, கொடிகளின் மீது அன்பும் கருணையும் கொண்டு அவற்றை தனது சகோதரிகளாக பாவித்ததை படித்தவுடன் மேலை நாட்டினருக்கு இந்திய பண்பாட்டைப்பற்றி அறிந்து கொள்ளும் ஆர்வம் ஏற்பட்டது. ஏனெனில் மேலை நாட்டு இலக்கியங்களில், செடி, கொடிகளுக்கும் உணர்வுகள் இருப்பதாக கருதி, அவற்றின் மீது அன்பும், கருணையும் கொள்ளும்வகையில் ஏதும் குறிப்பிடப்பட்டதில்லை. இது அவர்களுக்கு புதுமையாக இருந்தது.

ஆனால், சாகுந்தலத்திற்கு முன்பே தமிழின் சங்ககாலப் பாடல்களில் தாவரங்களை தமது உடன்பிறப்பாக, தோழியாக பாவிக்கும் பண்பு குறிப்பிடப்பட்டுள்ளது. “விளையாட்டோடு வெண்மணல் அழுத்தி” என்னும் சங்ககாலப் பாடலில்... புன்னை மரத்தை தனது அக்கா என்று அறிமுகப்படுத்தி... தமது அக்காவான புன்னை மரத்தின் முன்பு தனது காதலன் தன்னிடம் காதல் கொள்வது தனக்கு வெட்கத்தை ஏற்படுத்துவதாக தலைவி கூறுகிறாள். மேலும், திருமணமான பின்பு, தான் தனது கணவனுடன் செல்லக்கூடும். ஆனால் புன்னை மரம் எங்களைவிட்டு எங்கும் செல்லாமல் இவ்விடத்திலேயே இருக்கும். அதனால் தன்னை விட இந்தப் புன்னை உயர்த்தது என்று தனது தாய் தன்னிடம் குறிப்பிட்டதாகவும் தலைவி தனது காதலனிடம் கூறும் வகையில் விளக்கப்பட்டிருக்கும்.

இந்தச் சங்ககாலப் பாடலை, மார்க்ஸ்முல்லர் படித்துவிட்டு அசந்துபோய்விட்டார். இப்படி ஒரு இலக்கிய செல்வம் நிறைந்திருக்கும் தமிழ் நூல்களைப்பற்றி இதுவரை அறிமால் போய்விட்டேனே. தனக்கு வயதாகிவிட்டதால், இது போன்ற தமிழ் நூல்களை ஆங்கிலாக்கம் செய்ய இயலாதே என மாக்ஸ்முல்லர் வருந்தினார்.

மலையாளம், கன்னடம், தெலுங்கில் எல்லாம், உருவாகும் ஒவ்வொரு நூலையும் ஆங்கிலத்திலேயும், ஹிந்தியிலேயும் மொழியாக்கம் செய்து விடுகின்றனர். அதனால் அந்த நூல்களுக்கு உலக அளவில் ஒரு அறிமுகமும், அங்கீகாரமும் கிடைக்கிறது. ஆனால், தமிழ் நூல்கள் எல்லாம் எந்த மொழியாக்கமும் செய்யப்படுதில்லை. அதுதான் நமது பலவீனம். ஆங்கிலத்தில் தமிழ் நூல்கள் மொழியாக்கம் செய்யப் பட்டிருந்தால், செம்மொழி தகுதி பெற இத்தனை காலம் நாம் போராடவேண்டிய நிலை வந்திருக்காது. என்றோ தமிழ் செம்மொழி என்று உலகளவில் ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கும். நானும் கடந்து 20 வருடத்துக்கும் மேலாக,கல்லூரி பல்கலைக் கழகங்கள் தோறும் தமிழில் உள்ள சிறந்த நூலகளை எல்லாம் ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்ய வலியுறுத்தி வருகிறேன் யாரும் கேட்பாரில்லை.

அந்த வகையில் திருமா தனது கவிதைகளை ஆங்கிலத்தில் மொழிப்பெயர்ப்பு செய்து வெளியிடுவதை பாராட்டுகிறேன்.


இது பெரியார் நாடு - திருமாவளவன் :


மகத்தான பேராளி பிரபாகரனின் பிறந்த நாளை இன்று உலகமெங்கு உள்ள தமிழர்கள் கொண்டாடி வருகிறார்கள். ஆனால் நம் தமிழ் நாட்டில், பிரபாகரனின் பிறந்த நாளை வெளிப்படையாகக் கொண்டாட முடியாத சூழல் உள்ளது.

கவிஞர் தணிகைச்செல்வன், 1987ல் கல்லூரி மாணவனாக இருந்த போது பிரபாகரன் பற்றி நான் எழுதிய,

பழந்தமிழர் வீரம் இன்னும் பட்டுப் போகவில்லை
தமிழ் பரம்பரைக்கு சரணாகதி பழக்கம் என்றுமில்லை
பாருக்கு அதை உணர்த்துகிறார் தம்பி வேலு பிள்ளை
அவர் பக்கத்தில் நிற்கும் தகுதி யாருக்குமில்லை...

என்னும் கவிதை பற்றிக்குறிப்பிட்டார். மேலும், ஒவ்வொரு மாவீரர் தினத்திலும் விடுதலைப் புலிகளின் செயற்பாடுகுறித்து பிரபாகரன் உரையாற்றுவது வழக்கம். இனி அந்த மாவீரர் தினத்தில் பிரபாகரனின் குரலாக விடுதலை சிறுத்தைகளுக்காக நான் உரையாற்ற வேண்டும் என்றார். அவர் மட்டுமல்லாமல் அறிவுமதி, அமீர், கவிக்கோ, இன்குலாப் ஆகியோர், தலித் விடுதலை, ஈழ விடுதலைக்கான ஓயாத போராட்டத்தை தொடங்க வேண்டும் என்றும், தமிழகத்தை விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆள வேண்டும் என்றும் என்மீது நம்பிக்கை வைத்து கூறியுள்ளனர். இது எனக்குள் ஒருவித அச்சத்தை ஏற்படுத்துகிறது. இவ்வளவு பெரிய பணியை என்னிடம் ஒப்படைத்துள்ளனர். இதற்காக விடுதலை சிறுத்தைகள் அயராது போராடவேண்டும்.

நாடாளுமன்றத்தில் நான் முதன்முதலாக கன்னி உரையாற்றியபோது, “இந்திய அரசு தமிழுக்கும், தமிழ் சமூகத்துக்கும் துரோகம் செய்கிறது” என்றேன். அது அவைக்குறிப்பிலும் இடம் பெற்றுள்ளது. கோவை செம்மொழி மாநாட்டின் முதல் இரண்டு நாட்களில் ஈழம், ஈழத் தமிழர்கள் என்ற வார்த்தையே இடம்பெறவில்லை. அதைக் கலைஞருக்கு சுட்டிக்காட்டி முதன் முதலாக ஈழம் பற்றி பேசவைத்தேன். இதே போல் கிடைக்கும் இடங்களில் எல்லாம் தமிழ் மக்களுக்காக பயன் படுத்தியிருக்கிறேன்.

மானுடத்தின் தமிழ்க்கூடல் நிகழ்ச்சிக்காக இன்குலாப் போன்றோர்களுடன் யாழ்ப்பாணம் சென்றிருந்தேன். அப்போது நாங்கள் எல்லோருமாக பிரபாகரனை சந்தித்துவிட்டு வந்த மறுநாள் அதிகாலை, என்னைத் தனியாக பார்க்கவேண்டும் என்று விரும்பி பிரபாகரன் என்னை அழைத்ததாக கூறி அழைத்துச் சென்றனர்.

உலகமே வியந்து பார்க்கும், ஒப்பற்ற மாவீரன், நான் அங்கு செல்லும் வரை எனக்காக 1 மணி நேரம் காத்திருந்ததை அறிந்து துடித்து போய்விட்டேன். அப்போதைய எங்கள் சந்திப்பு கிட்டத்தட்ட 1 மணி நேரம் நடந்தது. பல்வேறு விஷயங்கள் குறித்து பேசினோம்.

தமிழ் நாட்டில் நடக்கும் சாதிக்கொடுமைகள், தீண்டாமை குறித்து அவர் மிகுந்த வேதனையுற்றார். அப்போது அவர் தனது திருமணம் குறித்து பேசினார். “நாங்கள் இருவரும், வேறு வேறு சாதியினர். எனது சாதிகுறித்து என் மனைவியின் வீட்டினருக்கு பிடிக்கவில்லை. ஆனால், இன்று எனது மாமனார் மட்டுமல்ல உலகமே என்னை ஏற்றுக்கொண்டுள்ளது. போராளிக்கு சாதி ஒரு தடையில்லை. போராளிகள் சாதியம் பார்க்கவும் கூடாது,” என்றார்.

அவ்வளவு பெரிய மாவீரனையே, தமிழகத்தில் நடக்கும் சாதிவெறிக் கொடுமைகள் பற்றிய தகவல்கள் அதிர்ச்சி அடையவைத்தன.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியில் இருப்பவர் சாதி பார்க்ககூடாது. சாதியை ஒழிக்க முதலில் இந்துத்துவத்தை ஒழிக்கவேண்டும்.

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் அடிப்படை கொள்கை... ஆதிக்கம், ஒடுக்கு முறை, சுரண்டல் ஆகிவற்றை அடியோடு ஒழிப்பதுதான். இந்த மூன்றும் எங்கு இடம்பெற்றாலும் அங்கு விடுதலை சிறுத்தைகளின் எதிர்ப்பு இருக்கும். தமிழ் தேசியம் பற்றி பேசும் மற்றக்கட்சிகள் சாதிஒழிப்பு பற்றி பேசுவதில்லை. ஆனால் சாதி ஒழிப்புக்காக போராடுவதே சிறுத்தைகளின் சிறப்பு.

மதுரை திருமணத்தில், பெரியாரின் பேரப்பிள்ளைகளுக்கே தமிழ் நாடு சொந்தம் என்று நான் பேசியதை அமீர் இங்கு சுட்டிக்காட்டினார்.

அப்படி நான் பேசியதன் அர்த்தம், டெல்லி தாத்தாக்களின் பேரப்பிள்ளைகள் நாட்டை பங்குபோடுவதை ஒரு காலமும் அனுமதிக்கக்கூடாது என்பதே. தமிழ்நாட்டை ஆளுமை செய்வது பெரியாரின் பேரப்பிள்ளைகளாகத்தான் இருக்கவேண்டும்.

இன்று பெரியார், காமராஜர், அம்பேத்காரின் கொள்கைகள் பற்றி சிறிதும் தெரியாதவர்கள் எல்லாம் ஆட்சிக்கு ஆசைப்படுகிறார்கள். 100 சினிமாவில் நடித்தால் போதும் ஆட்சியை கைப்பற்றிவிடலாம் என்று எண்ணுகிறார்கள். ஏன்? ஒரு படம் நடித்தவுடனேகூட ஆட்சிப் பற்றிய ஆசைவந்துவிடுக்கிறது. சமூகத்தை பற்றி சிறிதும் அறியாமல்... நமீதா பற்றி, அசினை பற்றி மட்டும் அறிந்து கொண்டவர்கள் ஆட்சி அமைக்க துடிக்கிறார்கள். இவர்களைப் பற்றிதான் ஊடகங்களும் பெரிதுபடுத்தி காட்டுகிறார்கள், எழுதுகிறார்கள்.

இது பெரியார் நாடு. எனவே சமூக அக்கறையோடு போராடும் பெரியாரின் பேரப்பிள்ளைகளுக்கு மட்டும்தான் இது சொந்தம்.


தொகுப்பு :~ நா. இதயா , ஏனாதி...

நன்றி : நக்கீரன் நந்தவனம்