Labels

Wednesday, April 20, 2011

இலங்கை தமிழர்களுக்காக தீக்குளித்த இன்னொரு பச்சை தமிழன்! சங்கரன்கோவில் கிருஷ்ணமூர்த்தி



நெல்லை மாவட்டம் சங்கரன் கோவில் தாலுக்காவில் உள்ள குருவிக்குளம் ஒன்றியத்தில் உள்ளது சீகம்பட்டி கிராமம். இந்த கிராமத்தில் உள்ள ராமசுப்பு நாயக்கரின் மகன் கிருஷ்ணமூர்த்தி. பொறியியல் பட்டதாரியான இவருக்கு திருமணம் ஆகவில்லை. ராஜஸ்தானில் உள்ள ஒரு தனியார் கம்பெனியில் ஐந்து வருட ஒப்பந்தத்தின் அடிப்படையில் வேலை பார்த்தவர். இவர் உடன் பிறந்த இரு தம்பிகளின் படிப்பு செலவுகளை இவரே கவனித்து வந்தார்.


கடந்த சில மாதங்களாகவே, இலங்கையில் அதிபர் ராஜபக்சே நடத்திய இனபடுகொலை, இளம் பெண்களை பாலியல் கொடுமைக்கு உட்படுத்துதல், பச்சிளம் குழந்தை என்றும் பாராமல் நடத்தப்பட்ட படுகொலைகள் போன்றவை கிருஷ்ணமூர்த்தியின் மனதை பாதித்துள்ளன.


தனது உணர்வுகளையும், உணர்ச்சிகளையும் கிருஷ்ணமூர்த்தி வெளிப்படுத்தவில்லை. கடந்த 20 தினங்களுக்கு முன்னர் தனது கிராமத்துக்கு திரும்பினார் கிருஷ்ணமூர்த்தி. தன்னுடைய தாய் தந்தை உள்பட யாரிடமும் தனது உணர்ச்சிகளை காட்டிக்கொள்ளவில்லை. அமைதியாகவே இருந்திருக்கிறார்.


இதற்கிடையில் 18.04.2011 அன்று அதிகாலை 5 மணி அளவில், தான் ஏற்கனவே வாங்கி வைத்திருந்த ஒவ்வொரு லிட்டராக 3 லிட்டர் பெட்ரோலை, தன் மீது ஊற்றி பத்த வைத்துக்கொண்டு ஓடினார். அப்போது அவரது தாய், தந்தை மற்றும் சிலர் அவரை காப்பாற்ற முயற்சி செய்தனர்.


ஆனாலும் தன்னுடைய வேதனையை வெளிக்காட்டிக்கொள்ளாத கிருஷ்ணமூர்த்தி, இலங்கையில் தமிழர்களை கொலை செய்துவிட்டார்கள். பச்சிளம் குழந்தை என்றும் பாராமல் ராஜபக்சே அரசு கொன்று விட்டது. இனி நான் இருந்து என்ன பயன். அதனால் நான் தீக்குளிக்கிறேன். அந்த ராஜபக்சே தண்டிக்கப்பட வேண்டும் என்று கிருஷ்ணமூர்த்தி மயங்கி விழுந்தார்.


மயக்கம் அடைந்த கிருஷ்ணமூர்த்தியை, தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டும், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.


கிருஷ்ணமூர்த்தி தான் கைப்பட எழுதிய கடிதம், அவரது குடும்பத்தாரிடம் கிடைத்தது. அதில்,


இலங்கை


ராமன் - ராவணன்,


ராமன் - ராஜபக்சே,


அன்று ராவணன் செய்த கொடுமையான செயல்களை இன்று சிங்களவர்கள் செய்து விட்டார்கள். அவர்களுக்கும் இப்படி ஒரு நிலை ஏற்பட்டால் என்ன ஆகும் என்று நினைத்துப் பார்த்திருக்க வேண்டும். இலங்கையில் சிங்களவர்களின் இனவெறி தாக்குதலால் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு அதற்குரிய பலனை பெற்றுத் தர வேண்டும். இலங்கை தமிழர்கள் அனைவரையும் ஒன்றிணைத்து அவர்களுக்கு தனி நாடு என்ற சிறப்பை பெற்றுத் தர வேண்டும்.


அதுவரை தமிழகத்தில் ஆட்சி பொறுப்பேற்கக் கூடாது. அப்படி பொறுப்பேற்றால், தயவு செய்து விஷ்ணுவின் பிறப்பு என்று சொல்லிக்கொள்ளும் கோயில்கள் அனைத்தையும் மூடிவிடுங்கள். இந்திய ஆட்சியாளர்கள்தான் இன்றைய சூர்ப்பனகை.


இலங்கை தமிழர்களுக்காக போராடிய போராட்டத்தில் முத்துக்குமாரே சிறந்தவர். இலங்கை தமிழர்களுக்காக போராட மீண்டும் என் ஆஞ்சிநேயரை அழைக்கிறேன்.


அப்பா, அம்மா, சீனி, தினகரன் என்னை மன்னித்துவிடுங்கள். எனக்கு பிறவியில் கொடுக்கப்பட்ட தொழில் இதுதான். இதை நான் செய்யாவிட்டாலும், மிகப்பெரிய குற்றவாளி நான்தான்
.

இவ்வாறு கிருஷ்ணமூர்த்தி தனது கடிதத்தில் எழுதியுள்ளார்.

No comments:

Post a Comment