Labels

Saturday, December 11, 2010

சிறையில் இருந்து சீமான் விடுதலை: நாம் தமிழர் இயக்கத்தினர் சிறப்பான வரவேற்பு















தன் மீதான தேசிய பாதுகாப்பு சட்டத்தை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்ததையடுத்து, வேலூர் சிறையில் இருந்து சீமான் விடுதலை ஆனார். சிறையில் இருந்து விடுதலையான சீமானுக்கு, நாம் தமிழர் இயக்கத்தினர் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.


இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் கொலை செய்யப்படுவதை கண்டித்து கடந்த ஜுலை மாதம் 10ந் தேதி சீமான் தலைமையில் இந்த நாம் தமிழர் இயக்கத்தினர் சென்னை கலெக்டர் அலுவலகம் முன்பு, ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது இலங்கை மீனவர்களுக்கு எதிரான சில கருத்துகளை சீமான் தெரிவித்தார்.


இதுதொடர்பாக அவர்மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் ஜுலை 12ந் தேதி அவர் கைது செய்யப்பட்டார். பிரிவினைவாதத்தை தூண்டுவதாகக் கூறி தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் சீமான் சிறையில் அடைக்கப்பட்டார். இதுதொடர்பான உத்தரவை சென்னை போலீஸ் கமிஷனராக பொறுப்பு வகித்த கூடுதல் போலீஸ் கமிஷனர் (குற்றம் மற்றும் தலைமையகம்) ஜுலை 16ந் தேதி உத்தரவிட்டார்.


இதை எதிர்த்து சீமான் சகோதரர் ஜேம்ஸ் பீட்டர் சென்னை ஐகோர்ட்டில் ஆள் கொணர்வு மனுவை தாக்கல் செய்தார். இந்த வழக்கு, நீதிபதிகள் தர்மாராவ், ஹரிபரந்தாமன் ஆகியோரைக் கொண்ட பெஞ்சுக்கு மாற்றப்பட்டது.


இந்நிலையில் 09.12.2010 அன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. போலீஸ் கமிஷனர் அதிகாரத்தில் உள்ளவர்தான் இதுபோன்ற உத்தரவில் கையெழுத்திட வேண்டும் என்றும், அவருக்கு அடுத்தபடியாக பதவி வகிப்பவர்கள் பிறப்பித்த உத்தரவு செல்லாது என்று அறிவிக்க வேண்டுமென்று ஜேம்ஸ் பீட்டர் தரப்பில் வாதிடப்பட்டது.


அரசுத் தரப்பில் அட்வகேட் ஜெனரல் பி.எஸ்.ராமன் ஆஜரானார். அவர், சென்னை போலீஸ் கமிஷனர் பயிற்சிக்காக சென்றிருந்ததால் அந்தப் பொறுப்பை வகிக்க கூடுதல் போலீஸ் கமிஷனர் அனுமதிக்கப்பட்டு இருந்தார். அதற்கான உத்தரவும் வழங்கப்பட்டு இருந்தது. அவர் கையெழுத்திட்டது, தடுப்புக் காவல் உத்தரவு என்பதால் அது செல்லத்தக்கது என்று வாதிட்டார்.


இருதரப்பு வாதத்தையும் கேட்ட நீதிபதிகள், போலீஸ் கமிஷனரின் கீழ் நிலை அதிகாரியாகத்தான் கூடுதல் போலீஸ் கமிஷனர் இருக்கிறார். எனவே தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கூடுதல் போலீஸ் கமிஷனர் செயல்பட முடியாது. எனவே அந்த சட்டத்தின் கீழ் கூடுதல் போலீஸ் கமிஷனர் பிறப்பித்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது என்று உத்தரவிட்டனர்.


தன் மீதான வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்ததையடுத்து, 10.12.2010 அன்று மதியம் 2.35 மணி அளவில் சிறையில் இருந்து சீமான் விடுதலை ஆனார். சீமானை வரவேற்க தமிழகத்தில் பல பகுதிகளில் இருந்து நாம் தமிழர் இயக்கத்தினர் வேலூர் வந்திருந்தனர். சிறையில் இருந்து விடுதலையான சீமானுக்கு, நாம் தமிழர் இயக்கத்தினர் மேள தாளத்துடன் சிறப்பான வரவேற்பு அளித்தனர். பட்டாசு வெடித்து மகிழ்ச்சி அடைந்தனர்.

பெரியார் திராவிடர் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, தமிழ் முழக்கம் அமைப்பைச் சேர்ந்த ஷாகுல் அமீது, இலங்கை தமிழர்களுக்காக தீக்குளித்த முத்துக்குமாரின் தந்தை மனோகரன், பேராசிரியர் தீரன், இயக்குநர் கௌதமன், இயக்குநர் பாலா, மதிமுகவின் மாநில அமைப்புச் செயலாளர் சுப்பிரமணி, மதிமுக திருவண்ணாமலை மாவட்டச் செயலாளர் டி.ராஜா. வேலூர் மதிமுக மாவட்டச் செயலாளர் உதயகுமார் ஆகியோர் சீமானை கைகுலுக்கி கட்டி அணைத்து வரவேற்றனர்.

இயக்குநர் பாலா 12.30 மணிக்கு வந்து காத்திருந்தார். சிறையில் இருந்து சீமான் வெளியே வந்ததும். அவரை பாலா வரவேற்க ஓடினார். பாலாவின் வருகையை சற்றும் எதிர்பார்க்காத சீமான், ‘நீ ஏண்டா வந்தே..?’ என்று பாசமாக கேட்டார். ‘இல்லண்ணே.....’என்று பாலா சிரித்துக்கொண்டிருந்தார். அப்போது வேக வேகமாக வந்து பாலாவை கட்டிப்பிடித்து அவருக்கு பாசமுடன் முத்தம் கொடுத்தார் சீமான்.
செய்தியாளர்கள் சந்திப்பு முடிந்து, சீமான் சிறைக்கு வெளியே அமைக்கப்பட்டிருந்த மேடையேறி நாம் தமிழர் கட்சியினரியே எழுச்சி உரை ஆற்றும் வரை அவர் அருகிலே இருந்தார் பாலா. பின்னர் இருவரும் தனித் தனி காரில் சென்னை திரும்பினர்.

No comments:

Post a Comment