Labels

Sunday, December 19, 2010

மே-18 : விழிமழைக் காலம் விரைவில் மாறும்







காலம் எழுதிய துயரக் காவியம்

கண்களை இன்னும் நனைக்கிறதே-மன

ஓலம் இன்னும் ஓய்ந்திட வில்லை

உலகம் கல்லாய்க் கிடக்கிறதே.



இரவின் உதடுகள் கண்ணீர் சொற்களை

ஏந்திய படியே அழுகிறதே-அலை

புரளும் கடலும் மௌனம் நோற்று

புவியை வெறுத்து எழுகிறதே.

உறக்கம் குதறும் ஊமை நினைவுகள்

உயிரில் வலியாய் வலிக்கிறதே-எம்

உறவுகள் எழுப்பிய மரணக் கூச்சல்

ஒவ்வொரு நொடியிலும் ஒலிக்கிறதே.



முள்ளி வாய்க்கால் கரைகளின் மீது

முளைத்த மரணப் புதர்களிலே-எம்

பிள்ளைகள் ஆடிய பொம்மைகள் கூட

பிணம்போல் வெறித்துக் கிடக்கிறதே.

விழிமழைக் காலம் விரைவில் மாறும்

வெளிச்சம் தேடி நடையிடுவோம்-நம்

வழிநடைப் பயணம் ஈழம் அடையும்

வருத்தங்க ளுக்கு மடையிடுவோம்.


-ஆரூர் தமிழ்நாடன்

நன்றி : நக்கீரன் நந்தவனம்.

No comments:

Post a Comment