Labels

Monday, December 27, 2010

தனித் தமிழ்நாடு கோரிக்கைக்கான காரணங்களும் தேவைகளும் இன்றும் அப்படியே இருக்கின்றன! தமிழர் இறையாண்மை மாநாட்டில் தொல்.திருமாவளவன் ஆவேசம்!









திசம்பர் 26, 2010 அன்று மலைநகரில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் தமிழர் இறையாண்மை மாநாடு நடைபெற்றது. மாநாட்டிற்கு கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் தலைமை தாங்கினார். திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி சிறப்புரையாற்றினார். முன்னதாக மாலை 4 மணி முதல் இசையரசு ஒருங்கிணைப்பில் பின்னணிப் பாடகர்கள் புதுவை சித்தன் செயமூர்த்தி, சிறுத்தை சின்னப்பொண்ணு, ஆபிரகாம் ஆகியோர் பங்கேற்ற இசை நிகழ்ச்சி நடைபெற்றது. மாலை 6 மணியளவில் மாநாட்டுக் கொடியை தொல்.திருமாவளவன் ஏற்றி வைத்ததையடுத்து, மாநாட்டு நிகழ்ச்சிகள் தொடங்கின. காஞ்சிபுரம் மாவட்டச் செயலாளர் சூ.க. விடுதலைச் செழின் வரவேற்புரையாற்றினார். கட்சியின் பொதுச்செயலாளர்கள் சிந்தனைச்செல்வன், இரவிக்குமார், கா.கலைக்கோட்டுதயம், பொருளாளர் முகம்மது யூசுப் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநாட்டு சிறப்பு மலரை தொல். திருமாவளவன் வெளியிட,

கி. வீரமணி அவர்கள் பெற்றுக்கொண்டார். பின்னர் ஐ.நா. அவை போல் அமைக்கப்பட்டிருந்த மேடையில் தமிழர்க் கொடியை கி.வீரமணி ஏற்றி வைத்து சிறப்புரையாற்றினார்.

பல லட்சக் கணக்கானோர் திரண்டிருந்த தமிழர் இறையாண்மை மாநாட்டில் தொல். திருமாவளவன் ஆற்றிய நிறைவுரை வருமாறு:

அனைவருக்கும் வணக்கம்.

என்னுடைய அழைப்பை ஏற்று இலட்சக்கணக்கில் திரண்டு வந்திருக்கும் உங்களுக்கு முதலில் என் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். தேர்தல் நெருங்குகிற சூழலில் எல்லாக் கட்சிகளும் தேர்தல் பணிகளில் தீவிரமாக இருக்கிறார்கள். ஆனால் நாமோ தமிழர்க்கு இறையாண்மை வேண்டுமென்று கடந்த ஆறு மாத காலமாக தமிழகமெங்கும் தீவிரமாகப் பிரச்சாரம் செய்து இந்த மாபெரும் மாநாட்டை நடத்திக் கொண்டிருக்கிறோம். இந்த மாநாட்டைப் பற்றி பலரும் பலவிதமான கருத்துகளைப் பரப்பி வருகின்றனர். தனித்தமிழ்நாடு வேண்டுமென்று கோருகிற மாநாடாக விடுதலைச் சிறுத்தைகள் நடத்துகிறார்கள் என்று சிலர் கருத்துப் பரப்பி உள்ளனர். எப்படியாவது தி.மு.க. கூட்டணியில் குழப்பம் ஏற்படுத்த வேண்டுமென்பதும், விடுதலைச் சிறுத்தைகளைத் தனிமைப்படுத்த வேண்டுமென்பதும் சிலருடைய விருப்பமாக இருக்கிறது. அதனால் இந்த மாநாட்டின் அடிப்படை நோக்கத்தைத் திசைதிருப்புகிற வகையில் இவ்வாறு வதந்திகளைக் கிளப்பியுள்ளனர். நாங்கள் தனித் தமிழ்நாடு கோரவில்லை. ஆனால் அவ்வாறு கோருவதற்கு காரணங்களும் தேவைகளும் இருப்பதை மட்டும் நான் சுட்டிக்காட்டுகிறேன். திராவிட நாடு கோரிக்கையைக் கைவிட்டபோது, பேரறிஞர் அண்ணா அவர்கள், ""கோரிக்கையை நாங்கள் கைவிட்டாலும், அதற்கான காரணங்கள் அப்படியே உள்ளன'' என்று கூறினார். ஆனால் விடுதலைச் சிறுத்தைகள் தனித்தமிழ்நாடு கோரிக்கையை வைக்கவுமில்லை, கோரிக்கையை கைவிடவுமில்லை. கோருவதற்கான காரணங்கள் இருக்கின்றன என்பதையே சுட்டிக்காட்டுகிறோம்.

இந்த உலகில் தமிழருக்கு ஒரு நாடு வேண்டுமென்றும், அது தமிழீழமாக மலர வேண்டும் என்றும், அதனைச் சர்வதேசச் சமூகம் அங்கீகரிக்க வேண்டுமென்றும் கோருவதே இம்மாநாட்டின் முதன்மையான நோக்கம். ஈழத் தமிழர்கள் வாழும் வடகிழக்கு மாநிலங்கள் அவர்களது பூர்வீகத் தாயகமாகும். அதனை அங்கீகரிக்க வேண்டுமென்பதே ஈழத் தமிழர்களின் கோரிக்கை. அதன் அடிப்படையில்தான் தாயகம், தேசியம், தன்னாட்சி என்கிற கொள்கை முழக்கங்களை விடுதலைப் புலிகள் முன்வைத்தனர். தொடர்ந்து அதனை உலகம் தழுவிய அளவில் முன்னெடுத்துச் செல்வது ஒவ்வொரு தமிழரின் கடமை என்று விடுதலைச் சிறுத்தைகள் உணருகிறது. அதன் வெளிப்பாடாகவே இம்மாநாட்டை ஒருங்கிணைத்திருக்கிறோம்.

தமிழீழம் வேண்டுமென்பது ஈழத் தமிழர்களுக்கு மட்டும் உரிய கோரிக்கை அல்ல. ஒட்டுமொத்தத் தமிழர்களுக்குமான கோரிக்கை. இந்திய இறையாண்மை என்கிற பெயரில் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாகக் குரல் கொடுக்கக்கூட முடியாத நிலையில் தமிழ்நாட்டுத் தமிழர்கள் சிக்குண்டு கிடக்கிறோம். தமிழ்நாட்டில் வாழ்கிற தமிழ்த் தேசிய இனத்திற்கும் இறையாண்மை வேண்டுமென்பதே நமது கோரிக்கையாகும். தமிழர்க்கு இறையாண்மை வேண்டுமென்றால் ஒவ்வொரு தேசிய இனத்திற்குமான இறையாண்மையையும் மதிக்கிறோம் என்றே பொருளாகும். தமிழர்கள் பெரும்பான்மையாக வாழும் தமிழ்நாட்டில் பிறமொழி பேசுகிறவர்களும் கணிசமாக வாழ்கின்றனர். குறிப்பாக, தெலுங்கு, கன்னடம், மலையாளம், பஞ்சாபி, உருது போன்ற மொழிகளைப் பேசும் மக்களும் இருநூறு, முந்நூறு ஆண்டுகளுக்கு மேலாக இங்கு வாழ்ந்து வருகின்றனர். அவர்களின் மொழி உரிமை, கலாச்சார உரிமை பாதுகாக்கப்பட வேண்டுமென்பதில் விடுதலைச் சிறுத்தைகள் தெளிவாகவும் உறுதியாகவும் உள்ளோம். இன்னும் சொல்லப்போனால், தமிழ்நாடுதான் அவர்களுக்குத் தாயகமும் ஆகும். இந்நிலையில் தமிழர் இறையாண்மை என்பது தமிழ்த்தேசிய இனத்தின் இறையாண்மையாகும். என்றாலும் தமிழகத்தில் வாழும் அனைவருக்குமான இறையாண்மையாகவும் அமையும். அதாவது தமிழக அரசின் இறையாண்மையையே நாம் இங்கு வலியுறுத்துகிறோம்.

மாநில அரசுகளின் அதிகாரங்களிலும் உரிமைகளிலும் குறுக்கீடுகளும் தலையீடுகளும் இருக்கக் கூடாது. இன்று நிலைமை அவ்வாறு இல்லை. மாநில அரசுகளின் உரிமைகளை இந்திய அரசு பறித்து வருகிறது. மத்திய அரசின் ஏஜெண்டுகளாகவே மாநில அரசுகளை இந்திய அரசு நடத்துகிறது. அமெரிக்காவில் உள்ளதுபோல் ஒவ்வொரு மாநில அரசுக்குமான இறையாண்மையோடு மத்தியில் ஒரு கூட்டாட்சியை இங்கு உருவாக்க வேண்டும். இந்திய அரசு தற்போது பல கட்சிகளின் கூட்டணி அரசாக இயங்குகிறது. ஆனால், அது கூட்டரசாக இயங்கவில்லை. ஒவ்வொரு மாநிலத்திற்கும் முழு அதிகாரங்களையும் உரிமைகளையும் வழங்க வேண்டும். அதுதான் ஒவ்வொரு தேசிய இனத்திற்குமான இறையாண்மையாகும். ஆனால், காவல்துறை, கல்வித்துறை போன்ற பல துறைகளிலும் இந்திய அரசின் மேலாண்மையே மேலோங்கி இருக்கிறது. அண்மையில் தேசியப் புலனாய்வுக் கழகம் என்ற ஓர் அமைப்பை இந்திய அரசு உருவாக்கியுள்ளது. இது மாநிலக் காவல்துறையின் அதிகாரங்களில் தலையிடும் அமைப்பாக உள்ளது. இந்த அமைப்பை உடனடியாகக் கலைக்க வேண்டும். மருத்துவக் கல்வி மற்றும் உயர் கல்வி தொடர்பாக முடிவெடுக்கும் அதிகாரத்தைப் பறிக்கிற வகையில் இந்திய அரசு ஓர் அமைப்பை உருவாக்கியுள்ளது. இதுவும் மாநில அரசுகளின் உரிமைகளைப் பறிக்கும் செயலாகும். இந்த அமைப்பையும் உடனடியாகக் கலைக்க வேண்டும் என்பதுடன் கல்வி தொடர்பான அதிகாரங்களை மாநிலப் பட்டியலில் சேர்க்க வேண்டும். அரசமைப்புச் சட்டத்தை உருவாக்குகிறபோதே மாநில அரசுகள், மத்திய அரசின் ஏஜெண்டுகளாக இருக்க முடியாது என்று புரட்சியாளர் அம்பேத்கர் தெளிவுபடுத்தியிருக்கிறார். அதிகாரங்களை மத்திய பட்டியல், மாநிலப் பட்டியல், பொதுப்பட்டியல் என்று வகைப்படுத்தியிருக்கிறார். பொதுப்பட்டியல் என்றால் அவை முழுவதும் மத்திய அரசுக்கே உரியது என்று இந்திய அரசு கருதுகிறது.

இந்நிலையில் பொதுப்பட்டியல் என்ற பட்டியலையே நீக்கிவிட்டு அதிலுள்ள அதிகாரங்களை மாநிலப் பட்டியலில் சேர்க்க வேண்டும். அமெரிக்காவில் உள்ளதுபோல் மாநில அரசுக்கு என்று மாநிலக் கொடி வைத்துக்கொள்ள அனுமதிக்க வேண்டும். ஒவ்வொரு ஆகஸ்டு 15 அன்றும் மாநிலக் கொடிகளை கோட்டையில் ஏற்ற வேண்டும். சனவரி 26 குடியரசு நாளில் மட்டும் இந்திய அரசின் கூட்டரசாக தேசியக் கொடியை ஏற்றலாம். ஆளுநர் பதவியை இந்திய அரசு, மாநில அரசுகளைக் கண்காணிக்கும் ஒரு கங்காணியாகவே நடத்துகிறது. எனவே ஆளுநர் பதவியை இந்திய அரசு திரும்பப் பெற வேண்டும். மாநிலக் கல்வித் துறை அமைச்சர்களே பல்கலைக்கழக வேந்தர்களாகச் செயல்பட அனுமதிக்க வேண்டும். வெளியுறவுக் கொள்கையிலும் தேசிய இனச் சிக்கல் தொடர்பான பிரச்சினைகளிலும் அந்தந்த மாநில அரசுகளுடன் கலந்துபேசித்தான் முடிவெடுக்கவேண்டும். ஈழ விவகாரத்தில் தமிழக அரசுடன் அல்லது தமிழக மக்களுடன் கலந்துபேசாமல் இந்திய அரசு முடிவுகளை எடுத்தது. சிங்கள வெறியர்களை ஆதரித்தது. இது தமிழர் இறையாண்மைக்கு எதிரான செயலாகும்.

இவ்வாறு மாநில அரசுகளின் உரிமைகளைக் கோருவது இம்மாநாட்டின் நோக்கங்களில் ஒன்றாகும். தமிழக அரசுக்கும் இந்த மாநாட்டின் மூலம் தோழமையுடன் ஒரு கோரிக்கையை முன்வைக்கிறோம். உழைக்கும் ஏழை எளிய மக்களை வெகுவாகப் பாதிக்கிற டாஸ்மாக் மதுக்கடைகளை உடனடியாக இழுத்து மூட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம். எண்ணற்ற நலத் திட்டங்களைத் தீட்டி அவற்றை வெற்றிகரமாக நடத்தும் மாண்புமிகு முதல்வர் அவர்களை விடுதலைச் சிறுத்தைகள் நெஞ்சாரப் பாராட்டுகிறோம். அதே வேளையில் இளைய தலைமுறையினரைப் பாழ்படுத்துகின்ற மதுக் கடைகளை மூட வேண்டியதையும் சுட்டிக்காட்டுகிறோம்.

தமிழகத்தின் நீர்வளத்தை வெகுவாகப் பாதிக்கச் செய்யும் காரணத்தால் ஆறுகளில் மணல் அள்ளுவதைத் தடுக்க வேண்டும் என்றும், மணல் பயன்பாட்டிற்குப் பதிலாக மாற்றுப் பொருளை கண்டறிய வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறோம். அத்துடன் தமிழக நிலவளங்களைப் பாதிக்கச் செய்வதுடன் நீர் ஆதாரத்தையும் பாதிக்கிற வகையில் தமிழகமெங்கும் வேலிக் கருவைக் காடுகளை முற்றிலுமாக ஒழித்திடச் சிறப்புத் திட்டம் ஒன்றை உருவாக்கிடக் கேட்டுக்கொள்கிறோம்.

மதுவிலக்குக் கொள்கையில் காந்தியடிகளை தேசத் தந்தை என்று போற்றும் காங்கிரசார் இதை ஏன் ஒரு தேசியக் கொள்கையாக அறிவிக்கக் கூடாது. மதுவிலக்குத் தொடர்பாக தேர்தல் முடிந்த கையோடு விடுதலைச் சிறுத்தைகள் தீவிரப் பிரச்சாரத்தை மேற்கொள்ளும். இந்தத் தேர்தலில் திமுகவுடன் தேர்தல் கூட்டணி தொடரும். விடுதலைச் சிறுத்தைகள் அனைவரும் தேர்தல் பணிகளைத் தொடங்க வேண்டும். இந்தத் தேர்தலில் தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரத்தை வென்றாக வேண்டும். 2011ஆம் ஆண்டை விடுதலைச் சிறுத்தைகளின் ஆண்டு என்று நாம் பிரகடனப்படுத்தியிருக்கிறோம். தை முதல் நாள் அன்று 2011ஆம் ஆண்டை வரவேற்கும் வகையில் ஆங்காங்கே இனிப்புகள் வழங்க வேண்டும். கடந்த 6 மாத காலத்தில் உறுப்பினர் சேர்க்கையில் இதுவரை 45 இலட்சம் உறுப்பினர்கள் பதிவு செய்துள்ளனர். இதில் 15 லட்சம் பேர் தலா 10 ரூபாய் கட்டணம் செலுத்தி தங்களைத் தீவிர உறுப்பினர்களாகப் பதிவு செய்துள்ளனர். தமிழகமெங்கிலும் 20 ஆயிரம் கிளைகளைக் கொண்ட பேரியக்கமாக நாம் வளர்ந்திருக்கிறோம். தலித்துகளின் விடுதலையும் தமிழீழ விடுதலையும் நமது முதன்மையான இலட்சியம் என்பதை நெஞ்சில் நிறுத்தி களப்பணியைத் தொடருவோம்.

நன்றி வணக்கம்.

கி. வீரமணி அவர்களின் உரை

தமிழர்களின் எழுச்சி வரலாற்றில் திருப்புமுனை மாநாடு இது. தமிழர்களின் உணர்வைப் பதிவு செய்யும் மாநாடு (பலத்த கரவொலி!). தமிழர்களின் உணர்வினை உலகம் உணர்ந்து கொள்ளச் செய்யும் அச்சாணி மாநாடு.

இங்கு நிறைவேற்றப்பட்ட 30 தீர்மானங்கள் ஒவ்வொன்றும் உலகத் தேசிய இனங்களால் ஆராயப்படக் கூடியவை.

நானும் வழிமொழிகிறேன்!

பல கோடி தமிழர்கள் சார்பாகவும், தந்தை பெரியாரின் தொண்டன், அண்ணல் அம்பேத்கரின் மாணவன் என்ற முறையிலும் இந்தத் தீர்மானங் களை நானும் ஒருமுறை வழிமொழிகிறேன்.
தமிழினம் தளர்ந்து போய்விட்டது என்று நம் எதிரிகள் கணக்குப் போட்டுக் கொண்டிருக்கும் ஒரு காலகட்டத்தில் அது தப்புக் கணக்கு; சோதனைகளை வெல்லுவோம் தோள் தூக்கிப் புறப்பட்டோம் என்று காட்டுகிற மாநாடு இது! புலிகளை அடக்கிவிட்டோம் என்று மனப்பால் குடித்தவர்களுக்கு இதோ கருஞ்சிறுத்தைகளும், விடுதலைச் சிறுத்தைகளும் இணைந்து புறப்பட்டு விட்டன என்று காட்டக்கூடிய வரலாற்றுச் சிறப்புமிக்க எழுச்சி மாநாடு இது!
மிகப்பெரிய போர்ப் படையை நடத்தும் தளபதியாக எனது அருமைச் சகோதரர் தொல். திருமாவளவன் இந்த எழுச்சி மாநாட்டைக் கூட்டியுள்ளார்.
வெள்ளம்போல் தமிழர் கூட்டம் இது. உடலால் பலராய்க் காண்பினும், உள்ளத்தால் ஒருவராய்க் கூடியிருக்கிறோம்.

பேச்சல்ல - திட்டங்களும் செயல்களுமே முக்கியம்!

நிறைய பேச வேண்டிய அவசியம் இல்லை. இந்த முப்பது தீர்மானங்களையும் எப்படி செயல்படுத்தப் போகிறோம் என்று திட்டம் தீட்டுவதுதான் மிக முக்கியம்.
இத்தீர்மானங்கள் நாடெங்கும் விவாதிக்கப்படும் - விவாதிக்கவும்படட்டும். இன்று இல்லாவிட்டாலும், நாளை அரசு சட்டங்களாக வெளிவர வாய்ப்புள்ள தீர்மானங்கள் இவை.
இதே செங்கற்பட்டு மாவட்டத்தில் செங்கற் பட்டில் 1929 இல் தந்தை பெரியார் அவர்களால் கூட்டப்பெற்ற முதல் மாகாண சுயமரியாதை மாநாட்டில் தந்தை பெரியார் நிறைவேற்றிய தீர்மானங்கள் பிற்காலத்தில் சட்டமானதுண்டு. தமிழ்நாட்டில் மட்டுமல்ல; இந்தியாவில் மட்டுமல்ல; அந்தத் தீர்மானங்களில் பல வெளிநாடு களிலும் கூட சட்டமாகியுள்ளன. அதேபோல்தான் இத்தீர்மானங்களும் செயல்படுத்தப்பட வேண்டி யவை - நாட்டின் சட்டங்களாக ஆகவேண்டியவை.

நான் கலந்துகொள்வதேன்?

இந்த மாநாட்டில் நான் பங்கேற்க வேண்டும் என்று சகோதரர் தொல்.திருமாவளவன் தொலைப்பேசியில் கேட்டார் - உடனே ஒப்புக் கொண்டேன்.
கருஞ்சிறுத்தைகளாகிய எங்களுக்கும், விடுதலைச் சிறுத்தைகளுக்கும் அதிக வேறுபாடு கிடையாது. ஒரே ஒரு கோடுதான் இடையில் வித்தியாசம்.
நாங்கள் சட்டசபைக்கோ, நாடாளுமன்றத் துக்கோ போகக் கூடியவர்கள் அல்லர் - தேர்தலில் நிற்கக் கூடியவர்களும் அல்லர்.
ஆனால், நாங்கள் சட்டமன்றம், நாடாளுமன்றம் செல்லாவிட்டாலும், யார் அந்த இடத்துக்குச் செல்ல வேண்டுமோ, அவர்களை அனுப்பி வைக்கக் கூடியவர்கள் நாங்கள். தி.க.வும் - தி.மு.க.வும் இரட்டைக் குழல் துப்பாக்கி என்பதுபோலவேதான் விடுதலைச் சிறுத்தைகளும் எங்களுக்கு.
தமிழர்களுக்கு ஒரு தாயகம் வேண்டும்; ஈழத்தில் தனிக்கொடி பறக்கவேண்டும் என்ற உணர்வை வெளிப்படுத்திடும் வண்ணம் இந்தக் கொடியை நானும், சகோதரர் திருமாவளவனும் இணைந்து ஏற்றியிருக்கிறோம். இந்தக் கொடி தாழாது - வீழாது. இது ஒரு தொடக்கம்!

மதுரையில் நடத்திய ஈழ விடுதலை மாநாடு

மதுரையிலே தமிழ் ஈழ விடுதலை மாநாட் டினைத் திராவிடர் கழகம் நடத்தியது (1983 டிசம்பர் 18) அந்த மாநாட்டிலே ஈழத்துத் தோழன் குமரி நாடன் ஈழ விடுதலைக் கொடியை ஏற்றினான். அதற்கடுத்து அதே உணர்வோடு இங்கு இந்தக் கொடியை ஏற்றியிருக்கிறோம். இது ஒரு அடையாளம்தான் என்றாலும், நாளையோ, நாளை மறுநாளோ கட்டாயம் நடக்கப் போவதுதான்! (பலத்த கரவொலி!).

உலகிலேயே தலைசிறந்த நிருவாகி என்று பெயர் எடுத்தவர் சிங்கப்பூர் அதிபராகயிருந்த லீக்வான்யூ - அவர் ஒன்றும் நம் இனத்துக்காரர் அல்ல; பொதுவான மனிதர்; அவர் எழுதி வெளிவந்துள்ள நூலில் மிகத் தெளிவாகவே குறிப்பிட்டுள்ளார். தமிழர்களை அழித்துவிடலாம் என்று ராஜபக்சே நினைக்கலாம் - ஆனாலும், அதில் அவர் வெற்றி பெற முடியாது. ஈழத்திலே ஒரு நாள் தமிழர்கள் தங்கள் நாட்டை அடைந்தே தீருவார்கள் என்று எழுதியுள்ளாரே!

அய்.நா. ஏற்றுக்கொண்ட ஒன்றுதான்!

உலக மக்களின் இனவழி தேசிய உணர்வை, இன வாரியான தேசியத்தை அய்.நா. ஏற்றுக் கொண்டி ருக்கிறது. மக்களின் வாழ்வுரிமைக்கு உத்தரவாதம் தேவை என்பதும் உலகம் ஒப்புக்கொண்ட ஒன்றுதான். ஈழத் தமிழர்கள் அதில் விதிவிலக்கல்ல.
அந்த அடிப்படை உரிமை உணர்வோடுதான் இந்த மாநாடு இங்கே நடத்தப்படுகிறது. தீர்மானங் களும் வடிக்கப்பட்டுள்ளன.

மேக்னகார்ட்டா!

இவை உலகத் தமிழினத்தின் பேரறிக்கை ஆயபயேஉயசவய (பலத்த கைதட்டல்!). எங்கள் தமிழர் எடுத்த வியூகத்தில் தோற்று இருக்கலாம்; சில களங்கள் தோல்வியிலும் முடிந்திருக்கலாம். அதற்காகப் போரில் தோற்று விட்டோம் - இனி எழ மாட்டோம் என்று அதற்கு அர்த்தமல்ல! எங்கள் தமிழர் மீண்டும் எழுவார்கள் - உரிமைகளை மீட்பார்கள் என்பதற்கான அடை யாளமே இம்மாநாடு.


நானும், திருமாவளவனும் சேர்ந்து பேசுவோம்!


இந்தத் தீர்மானங்கள் இந்த மாநாட்டில் நிறைவேற்றப்பட்டதோடு முடிந்துவிட்டதாகக் கருதக்கூடாது. இது மக்கள் மத்தியில் கொண்டு செல்லப்படவேண்டும். நானும், சகோதரர் திருமாவளவனும் தமிழ்நாட்டின் முக்கிய இடங்களில் இந்தத் தீர்மானங்களை விளக்கிப் பேசுவோம்! (பலத்த கரவொலி! ஆரவாரம்!!)

ஒரு நெல்சன் மண்டேலா 27 ஆண்டுகள் சிறையில் இருக்கவில்லையா? அதனால் என்ன தனி நாடு கிடைக்காமலா போயிற்று? சிறைக்குச் செல்ல வேண்டுமானாலும், உயிரைக் கொடுக்கவேண்டு மானாலும் அதற்காகத் தயாராக இருக்கக் கூடியவர்கள்தான் நாங்கள்.
அதற்காக ஆத்திரப்பட்டு எங்கள் உயிரைக் கொடுத்துவிடுவோம் என்று பொருளல்ல. வெற்றி கிட்டுவதற்காக - ஒருக்கால் அந்த வெற்றியைக் காண முடியாத நேரத்தில், நீங்கள் எல்லாம் அந்த வெற்றியை அனுபவிக்கும் நிலை ஏற்பட்டால், அதற்காக எங்கள் உயிரையும் கொடுக்கத் தயார்.


விகற்பத்தை விதைக்காதீர்கள்!


திராவிடர் கழகமோ, விடுதலைச் சிறுத் தைகளோ, ஈழத் தமிழர் பிரச்சினையைக் கைகழுவி விட்டதாக சிலர் பிரச்சாரங்களைச் செய்து கொண்டிருக்கிறார்கள். இது தேவையற்ற ஒன்று. தயவு செய்து சகோதரர்கள் மத்தியில் விகற்பத்தை ஏற்படுத்த முயலாதீர்கள் - அது தேவையில்லாத ஒன்று. அவரவர்களும் அவரவர்கள் உசிதப்படி அவரவர்களின் எல்லையில் நின்று பணிகளைச் செய்யட்டும். வீண் விமர்சனங்களால் எந்தப் பயனும் இல்லை; தமிழர்களின் ஒற்றுமை உணர்வைக் குலைக்கத்தான் அது பயன்படும்.
தமிழர்களுக்காக ஒரு நாடு!

விடுதலைச் சிறுத்தைகளும், கருஞ்சிறுத்தைகளும் ஒன்றுபட்டு ஒரே களத்தில் நிற்கிறோம் - அவ்வாறு நிற்போம் என்று ஒரு மாநாடு கூட்டி அறிவித்தி ருக்கின்ற விடுதலைச் சிறுத்தைகளுக்கு நன்றி!

பூமிப் பந்தில் தமிழர்களுக்கு ஒரு நாடு உருவாக ஒன்றுபட்டு உழைப்போம்; உறுதி கொள்வோம்!

வாழ்க பெரியார்!
வாழ்க அம்பேத்கர்!
வருக தமிழ் ஈழம்!

என்று தமிழர் தலைவர் கி. வீரமணி அவர்கள் உணர்ச்சிப் பிழம்பாக உரையாற்றினார்.

No comments:

Post a Comment