Labels

Tuesday, June 7, 2011

ஆளுநர் உரையில் ராஜபக்சவைக் கண்டிக்காதது வேதனை அளிக்கிறது: வைகோ



இலங்கையில் பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்களைக் கொன்று குவித்த, தமிழக மீனவர்களைச் சுட்டுக் கொன்ற இலங்கை அரச அதிபர் ராஜபக்சவை கண்டிக்காதது வேதனையையும் ஏமாற்றத்தையும் அளிக்கிறது என ஆளுநர் பர்னாலா உரை குறித்து மதிமுக பொதுச்செயலர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.



ஆளுநர் உரை குறித்து மதிமுக பொதுச்செயலர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில்,

இலங்கைக் கடற்படையின் கொடூரமான தாக்குதலால் தமிழக மீனவர்கள் பலியாகி வரும் நிலையில், தமிழக மீனவர்களைச் சுட்டுக் கொல்லும் இலங்கை அரசுக்குக் கண்டனம் தெரிவிக்கவோ, இந்திய அரசின் துரோகத்தைச் சுட்டிக்காட்டவோ, எதிர்காலத்தில் தமிழக மீனவர்கள் தாக்குதலுக்கு உள்ளாகாமல் பாதுகாக்கப்படும் நிலைக்கு உத்திரவாதம் தரும் வகையிலோ இல்லை என்பதை ஆளுநர் உரை காட்டுகிறது.

இலங்கையில் பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்களைக் கொன்று குவித்த ராஜபட்சவுக்கு எதிராக ஐ.நா. மன்ற விசாரணைக் குழு அறிக்கை வெளியிடப்பட்டு, ராஜபட்ச போர்க் குற்றவாளியாக பன்னாட்டு நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும் என்று உலக நாடுகள் பலவும் கோரி வருகின்றன.

தமிழக சட்டப்பேரவையில் இதுகுறித்து தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று தமிழக மக்களும், உலகெங்கும் வாழும் தமிழர்களும் எதிர்பார்த்திருக்கும் வேளையில் ராஜபக்சவைக் கண்டித்தோ, இனப் படுகொலைக்குத் துணைபோன இந்திய அரசுக்குக் கண்டனம் தெரிவித்தோ அ.தி.மு.க. அரசின் கருத்து ஆளுநர் உரையில் இடம் பெறாதது தமிழகத்திலுள்ள மக்களுக்கும், உலகெங்கும் உள்ள தமிழர்களுக்கும் மிகுந்த ஏமாற்றத்தையும், வேதனையையும் அளிக்கிறது.


இவ்வாறு வைகோ தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment