Labels

Tuesday, March 9, 2010

கடலோர காவல் "வடை'


"தம் எல்லைகளையும்

தம் மக்களையும்

காத்தலே முதல் கடமை'

என்ற வரி

கடலோரக் காவல் படையின்

பாடத்திட்டத்தில்

சேர்க்கப்படவில்லை

அல்லது

அது வகுப்பில் சொல்லப்பட்டபோது

க.கா. வீரர்கள் கேன்டீனில்

வடை தின்று கொண்டிருந்திருக்க வேண்டும்...



மக்களின் வரிப்பணத்தை வாரியிறைத்து வாங்கிய பிரம்மாண்டக் கப்பல்களில்

உல்லாசப் பயணம் போகிறார்கள்

தேன்நிலவு கொண்டாடுகிறார்கள்

ஒழிந்த நேரங்களில்

தரையோரக் காவல் படைகளுக்கு

விருந்து கொடுக்கிறார்கள்...

வடையே

முதன்மைப் பண்டம்!



சிங்களப்படை வந்து தமிழ்மீனவனைக்

கொத்தாக அள்ளித் தூக்கும்போது

க.கா. வீரர்கள்

தங்கள் கப்பல்படையில்

வடைக்கு மாவு

தட்டிக் கொண்டிருக்கும்படி

பயிற்றுவிக்கப்பட்டிருக்கிறார்கள்...

முகமெல்லாம் மாவு...

பாவம் தும்மலுக்கு நடுவே

நல்ல வடைக்கு

சாத்தியம் நலிவு!



எண்ணெய் குடிக்காத

வடையைத் தட்ட

அவர்கள் போராடும்போது

வகையாக வந்து சிக்குகிறான் தமிழ்மீனவன்!

படகு நிறைய அவன்

மீன் அள்ளிப்போவதை

எப்படிப் பொறுப்பது?



வலைகளை அறுத்துத் தள்ளுகிறார்கள்

(ஒருவேளை அதில்தான் எண்ணெய்யை

வடிக்கிறார்களோ என்னவோ...!)

மீனவர்களை

நிர்வாணப்படுத்துகிறார்கள்

(ஒருவேளை அவர்களின் லுங்கிகள்

மாவு உலர்த்தத் தேவையோ...?)

கண்மூடித்தனமாகத்

தாக்குகிறார்கள்

(வடையை சரியாகத்

தட்டமுடியாத வயிற்றெரிச்சல்?)



உச்சக்கட்டமும் ஒன்றிருக்கிறது...

பொறுக்கிகள் சுடும் வடையும்

பொறுப்பற்றதாகத்தான் இருக்கிறது...

அப்பாவிகள் மீது

விழுந்து வெடிக்கிறது...

எண்ணெய் குடிக்காத வடை

ரத்தம் குடிக்கிறது!



வகை வகையான

வடைகளைக்

கப்பலில் பார்வைக்கு வைக்கின்றனர்...

அட்மிரல்களும் தளபதிகளும்

உளவுத்துறைகளும் பார்வையிடுகின்றன...

சிறந்த வடை சுட்டவனைத் தேர்ந்தெடுத்து,

(கடாய்) பரிசளிக்கின்றனர்...



சிறந்த இந்திய வடை சுட்டவனை அதிசயித்து

சிங்கள மீனவர்கள் படை எடுத்து வந்து

பணயக் கைதியாகக்

கொண்டு போகிறார்கள்...

வடைசுடுவதன்

தொழில்நுட்ப ரகசியத்தை

அவன் சொல்லும் வரை

"தட்டி' எடுக்கிறார்கள்...



என்னவோ போங்கள்...

வடைசுடவும் வக்கற்ற எனக்கு

வயிற்றெரிச்சலாக

இருக்கிறது...


யாரப்பா அங்கே...

கடலோரக் காவல் கடை...?

எனக்கு ரெண்டு வடை... பார்சல்...!
- கவிதாயினி தாமரை.

No comments:

Post a Comment