Labels

Friday, May 21, 2010

இலங்கையின் போர்க் குற்றங்கள்..... சர்வதேச விசாரணை தேவை

மே 18, 2009...

இந்நாளில் தான் 'விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுபிள்ளை பிரபாகரன் உள்ளிட்டோர் கொல்லப்பட்டுவிட்டனர்; போர் முடிவுக்கு வந்தது,' என இலங்கை அரசு அதிகாரப்பூர்மாக அறிவித்தது. ஒரு லட்சத்துக்கும் அதிகமான உயிர்ப் பலிகளுக்கு உள்ளான 37 ஆண்டு கால போராட்டம் முடிவுக்கு வந்தது என ஊடகச் செய்திகள் புள்ளிவிவரங்களை வெளியிட்டன.
கொண்டாட்டத்தைத் தடுத்த மழை...
இதோ போர் முடிந்து ஓராண்டு நிறைவடைந்த நிலையில், புலிகளை வீழ்த்திவிட்டதாக வெற்றிக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகிறது, இலங்கை அரசு. இதையொட்டி பல்வேறு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.
ஆனால், தற்போது இலங்கையில் பல்வேறு பகுதிகளில் மழை விடாமல் கொட்டிக் கொண்டிருக்கிறது. பெருவெள்ளம் காரணமாக, வெற்றிக் கொண்டாட்டத்தை ஒத்திவைக்க முடிவு செய்திருப்பதாக இலங்கை ராணுவம் அறிவித்துள்ளது. சிறப்பு ராணுவ அணிவகுப்பு மற்றும் போரில் உயிரிழந்த வீரர்களுக்கு அஞ்சலி முதலிய நிகழ்ச்சிகள் தள்ளிவைக்கப்பட்டுள்ளதாக இலங்கை ராணுவ அமைச்சகம் அறிவித்துள்ளது.

போர்க்குற்றங்களும் சர்வதேச விசாரணையின் தேவையும்...
இலங்கையில் போர் நடந்து முடிந்து ஓராண்டுகள் நிறைவடைந்துள்ளச் சூழலில், அந்தப் போர் குறித்த ஆய்வறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறது, அமெரிக்காவைச் சேர்ந்த சர்வதேச நெருக்கடிக் குழு (ICG - International Crisis Group).
அந்த ஆய்வறிக்கையில், இலங்கையில் நடந்த போர்க் குற்றங்களையும், மனித உரிமை மீறல்களைப் பற்றியும் அந்நாட்டு அரசு நேர்மையான முறையில் ஒரு விசாரணையை நடத்த தயாராக இல்லாத நிலையில், அங்கு நடந்த போர்க் குற்றங்கள் குறித்து ஒரு சர்வதேச விசாரணையை நடத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
முன்னாள் ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையரும், முன்னாள் கனடா உச்ச நீதிமன்ற நீதிபதியுமான லூயிஸ் ஆர்பர் (Louise Arbour) தான் ICG அமைப்பின் தலைவர். அவர் தலைமையில் இயங்கும் குழுவே இந்த ஆய்வினை மேற்கொண்டு அறிக்கையை வெளியிட்டுள்ளது என்பதால் உலக அளவில் மிகுந்த கவனத்தைப் பெற்றுள்ளது.

இலங்கையில் கடந்த ஆண்டு நடந்து முடிந்த போரின் கடைசி 5 மாத காலத்தில் மட்டும் குழந்தைகள், பெண்கள், முதியோர் உள்பட பல்லாயிரக்கணக்கான அப்பாவித் தமிழ் மக்கள் கொல்லப்பட்டதற்கான ஆதாரங்கள் இருக்கின்றன.
இலங்கை அரசும், விடுதலைப்புலிகள் இயக்கமும் போர் தொடர்பான சர்வதேச சட்டங்களை மீறியுள்ளன. அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டது, அவர்கள் அனுபவித்த மிகுதியான துயரங்கள் முதலியவற்றைப் பார்க்கும்போது, இதற்கு உரிய ஒரு பதில் தரப்படவேண்டும்.
பல ஆண்டுகளாக சர்வதேச மனித நேய சட்டங்களை மீறியிருந்தாலும், போரின் இறுதி மாதங்களில் தான் இந்த மீறல்கள் அதிகளவில் நடந்துள்ளன. அந்த மீறல்களின் தன்மை மிகவும் ஆபத்தானவையாக இருந்திருக்கிறது.
இலங்கையின் ராணுவம் மீண்டும் மீண்டும் வேண்டுமென்றே சர்வதேச சட்டத்தை மீறி, பொதுமக்களைத் தாக்குவது, மருத்துவமனைகளைத் தாக்குவது, மனித நேய நடவடிக்கைகள் நடக்கும் இடங்களை தாக்குவது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டன என்பதற்கு போதிய ஆதாரங்கள் கிடைத்துள்ளன.

நோ ஃபயர் சோன் (No Fire Zone) எனப்படும் மக்களைப் பாதுகாக்கக் கூடியதும், தாக்குதல்கள் தவிர்க்கப்படும் பகுதி என்று இலங்கை அரசால் அறிவிக்கப்பட்ட பகுதிகளின் மீதே ராணுவம் மீண்டும் மீண்டும் தாக்குதல் நடத்தியிருப்பதற்கான சாட்சியங்கள் சேகரிக்கப்பட்டுள்ளன. அதை வைத்துப் பார்க்கும்போது, இந்தப் போர்க் குற்றங்கள் இலங்கை பாதுகாப்புப் படைகளில் இருக்கும் குறிப்பிட்ட சில தனி நபர்களால் இழைக்கப்பட்டன என்று நம்புவதற்கு போதிய காரணங்கள் இருக்கின்றன.
நோ ஃபயர் சோன்பகுதிகளில் கனரக குண்டு தாக்குதலை இலங்கை ராணுவம் நடத்துவதற்கு, விடுதலைப்புலிகளே தூண்டினர் என்று கருதுவதற்கும் இடமில்லை. விடுதலைப்புலிகள் இந்த இலக்குகளுக்கு மிக நெருக்கமாக இருந்ததாலும், அந்த இலக்குகளுக்குள்ளேயே அவர்களது குடும்ப உறுப்பினர்களும் இருந்ததாலும், அவர்கள் இந்தக் கனரக குண்டுத் தாக்குதல்களைத் தூண்டியிருப்பார்கள் எனக் கருத முடியவில்லை.
தாக்குதல்கள் தவிர்க்கப்படும் பகுதிகளுக்கு சேல்லுமாறு பொதுமக்களுக்கு உத்தரவிட்டதே இலங்கை அரசுதான். மக்கள் இருந்த இடமும் அரசுக்குத்தான் தெரியும். அப்பகுதியில் இருக்கும் மக்கள் சிவிலியன்கள் என்றும் அவர்களுக்குத் தெரியும். அரசுக்கு ஐ.நா. அலுவலர்கள் மற்றும் செஞ்சிலுவைச் சங்கம் போன்ற அமைப்புகளிடம் இருந்து தகவல்களும் வந்துகொண்டிருந்தன. அத்துடன், செயற்கைக்கோள் படங்களும் அரசிடமே இருந்தன.
எனவே, அப்பகுதிகள் நேரில் பார்க்கக் கூடியதாகவும் இருந்திருக்கிறது. ஆனால், பல மாதங்களாகவே தொடர்ந்து சிவிலியன்கள் மீது குண்டுவீசித் தாக்குதல்களை நடத்துகிறீர்கள் என்று பலமுறை குற்றம்சாட்டியும் கூட, இலங்கைப் படையினர் தொடர்ந்து அதே பாணியில் தாக்குதல்களை நடத்திவிட்டு, 'சிவிலியன்கள் தாக்கப்படவில்லை,' என்று கூறி வந்தனர்.
அப்பாவி மக்கள் கொல்லப்பட்ட இத்தகைய சம்பவங்களுக்கு பொறுப்பான அதிகாரிகளின் நடத்தை விசாரிக்கப்பட வேண்டும்.
இந்தத் தாக்குதல்களுக்கு ஆளான மக்களுக்கு உணவும் மருந்துகளும் வழங்குவதில் ஏற்பட்ட பிரச்னைகள், மருத்துவமனைகள் மீது நடத்தப்பட்டதாகக் கூறப்படும் தாக்குதல்கள், மனித நேய நடவடிக்கைகள் நடந்த இடங்களில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்கள் போன்றவை மனித குலத்துக்கு எதிராக குற்றங்கள் இழைக்கப்பட்டிருக்கிறது. இதற்கு தனி நபர்களே பொறுப்பா என்ற கேள்வியும் இங்கே எழுகிறது.
இந்தப் போர்க் குற்றச்சாட்டுகளை முன்வைத்து 'இன்டர்நேஷனல் கிரைசிஸ் குரூப்' கருத்து கேட்டதற்கு, இலங்கை அரசு பதிலளிக்க மறுத்துவிட்டது.
விடுதலைப்புலிகள் இயக்கத்தினரும் போர்ப் பகுதியிலிருந்து தப்பி வெளியேற முயன்ற பொதுமக்களை தடுத்து, அவர்கள் மீது தாக்குதல் நடத்தியிருப்பதால், அவர்களும் சர்வதேச சட்டங்களை மீறியிருக்கிறார்கள் என்று தெரிய வந்துள்ளது.
இவ்வாறு இலங்கையில் போர்க்குற்றங்கள் நிகழ்ந்ததையும், ஆயிரக் கணக்கான பொதுமக்களை ராணுவம் கொன்று குவித்ததையும் ஆய்வறிக்கையாக வெளியிட்டுள்ள இன்டர்நேஷனல் கிரைசிஸ் குரூப், மனித இனத்துக்கு எதிரான இந்த நிகழ்வுகளில் சர்வதேச நாடுகள் அக்கறை கொள்ளாதிருந்ததையும் கண்டிப்புடன் சுட்டிக்காட்டியிருக்கிறது.
இலங்கையில் போர்க் குற்றங்களும் மனித உரிமை மீறல்களும் நடந்துகொண்டிருந்தபோது, சர்வதேச அளவில் பெரும்பாலான நாடுகள் மெளனம் காத்திருத்தன என்றும், மாறாக - மனிதத்தைக் கொன்றதப் பொருட்படுத்தாமல், விடுதலைப்புலிகளை தோற்கடிக்கப்பட்டதற்காக இலங்கை அரசுக்கு பல்வேறு நாடுகள் வாழ்த்து தெரிவித்தன என்று குறை கூறியிருக்கிறது அந்த ஆய்வறிக்கை.
ராணுவத்தின் உரிமை மீறலை விசாரிக்கிறது இலங்கை அரசு?!
இலங்கை ராணுவத்துக்கு எதிராக ஐக்கிய நாடுகள் உள்ளிட்ட அமைப்புகள் உரிமை மீறல் புகார்களை அடுக்கி வந்துகொண்டிருந்த நிலையில், இப்போது செவிசாய்த்திருக்கிறது இலங்கை அரசு.
ராணுவத்தினரின் உரிமை மீறல் புகார்கள் குறித்து விசாரிக்க 8 பேர் கொண்ட கமிஷன் ஒன்று அமைக்கபப்ட்டுள்ளதாக இலங்கை அரசு திங்கட்கிழமை அறிவித்தது. சித்தரஞ்சன் டிசில்வா தலைமையிலான இந்த கமிஷன் அமைக்கப்பட்டுள்ளதாக இலங்கை அதிபர் ராஜபக்சேயின் செயலகம் தெரிவித்துள்ளது. இந்த விசாரணை கமிஷனில் சந்திரபால் சண்முகம், மனோகரி ராமநாதன் ஆகிய இரு தமிழர்கள் இடம்பெற்றுள்ளனர்.

கடந்த 2002-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் 2009-ம் ஆண்டு மே மாதம் வரையிலான 7 ஆண்டு கால கட்டத்தில் நடைபெற்ற உரிமை மீறல்கள் குறித்து இந்த கமிஷன் விசாரிக்கும். இந்தக் கால கட்டத்தில் கற்றுக்கொண்ட பாடம், அதுபோன்ற தவறுகள் மேற்கொண்டு நடைபெறாமல் தடுத்து நல்லிணக்கம் ஏற்படுத்துவதற்கான நடவடிக்கை குறித்து இந்த விசாரணை கமிஷன் அரசுக்கு அறிக்கை தாக்கல் செய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.




நன்றி விகடன்

Wednesday, May 19, 2010

நாடு கடந்த தமிழீழ அரசின் முதலாவது அமர்வு!


அமெரிக்காவின் பிலடெல்பியாவில் உள்ள புகழ் பெற்ற சுதந்திர சதுக்கத்தில் நாடு கடந்த தமிழீழ அரசின் முதலாவது அமர்வு நடைபெற்றது. அதில் முதல் கூட்டத்தின் ஒருங்கிணைப்பாளர் வி. ருத்திரகுமாரன் சிறப்புரையாற்றினார்.

அதில் அவர் பேசியதாவது:

தமிழ் ஈழ விடுதலைப் பயிருக்கு தம் உயிர்களை எருவாக்கிய எமது மாவீரர்களுக்கும் சிங்கள பேரினவாதத்தின் இனப்படுகொலைக்கு பலியான பொது மக்களுக்கும் முதற்கண் எனது வணக்கஙகளை தெரிவித்துக் கொள்கின்றேன்.

நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் இம் முதலமர்வு நிகழ்வுக்கு வருகை தந்திருக்கும் ஜனாதிபதி ஜான்சன் அவர்களது ஆட்சிக் காலத்தில் அமெரிக்காவின் சட்ட அமைச்சராகவிளங்கிய ராம்சே கிளார்க் அவர்களே! மதியுரைக்குழு உறுப்பினர்களே! சக தெரிவு செய்யப்பட்ட அரசவை பிரதிநிதிகளே! புலம் பெயர்ந்து வாழும் தமிழீழ மக்களே! எமது தமிழீழத் தாயகத்தில் வாழ்ந்து வரும் எமதருமை உறவுகளே! தமிழ்நாட்டு சகோதரர்களே! உலகத் தமிழ் மக்களே! உங்கள் அனைவருக்கும் முதற்கண் எனது வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இன்றைய நாளில் உலகின் அடுத்த சுதந்திரநாட்டை அமைக்கவிருக்கும் தென்சூடானிய மக்களின் அரசியல் தலைமையான எஸ்பிஎல்எம் அமைப்பின் அமெரிக்கப் பிரதிநிதியும் எம்முடன் இணைந்து கொண்டமை குறித்து நாம் மகிழ்வடைகிறோம்.

அடுத்த வருடம் இடம்பெறவிருக்கும் தென்சூடானிய மக்கள் தமது சுயநிர்ணய உரிமையினைப் பிரயோகிப்பதற்கான பொதுசனவாக்கெடுப்பு முழுமையான வெற்றிபெற நாம் வாழ்த்துவதோடு, அமையப்போகும் புதிய நாடான சுதந்திர, ஜனநாயக, வளம் நிறைந்த தென் சூடான் எமக்கு ஒரு முன்னுதாரணமாக அமையும் என நாம் நம்புகிறோம்.

ஈழத் தமிழர்களின் தேசிய விடுதலைப்போராட்டம் [^] புதிய அணுகுமுறைக்கு ஊடாக தன்னை முன்னெடுத்துச் செல்ல வேண்டிய மிக முக்கிய காலகட்டத்தில் நாங்கள் இங்கு கூடியிருக்கின்றோம்.

கடந்த ஏழு தசாப்தங்களுக்கு மேலாக அரசியல் உரிமைகளுக்காகவும் தன்னாட்சி அதிகாரத்திற்காகவும் எழுப்பப்பட்ட சனநாயகக்குரல்களும் கோரிக்கைகளும் இராணுவ அடக்குமுறையின் கீழும், சட்டத்தின் இரும்புக்கரம் கொண்டும், ஏவிவிடப்பட்ட இனவன்முறைகளினூடாகவும் ஒடுக்கப்பட்டநிலையில், தங்களினை தற்காத்துக் கொள்வதற்காக இலங்கைத் தீவின் ஆள்புல எல்லைகளுக்கு அப்பால் சிதறியோடி, உலகின் பல திக்குகளிலும் ஏதிலிகளாக குடியேறி, இன்று பரந்து வாழுகின்ற சுமார் ஒரு மில்லியன் ஈழத் தமிழர்களின் சார்பாக நாம் இங்கு ஒன்றிணைந்துள்ளோம்.

இந்த தேசிய அரசிலமைப்பு மையத்தில், 223 ஆண்டுகளுக்கு முன்னர், ஜேம்ஸ் மடிசன், அலெக்ஸ்சான்டர் கமில்டன் உட்பட்ட சுதந்திர அமெரிக்க நாட்டின் மூதாதையர் புதியதொரு அரசியல் அமைப்பை உருவாக்குவதற்காக இங்கு கூடியிருந்தனர். இவர்களின் ஒன்று கூடல் அமெரிக்காவின் அரசியலமைப்பைப் பிரசவித்தது.

நாமும், நமது நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் முதலாவது அரசவையின் தெரிவு செய்யப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் நமது முதலமர்வுக்காக இங்கு கூடியிருப்பது மிகவும் பொருத்தப்பாடுடையது. நாம் இங்கு கூடியிருப்பதும், நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசியலமைப்பை உருவாக்குவதற்கே.

அமெரிக்காவின் சுதந்திரப் பிரகடனமும் இந்த பிலடெல்பியா நகரிலேயே நிகழ்ந்தது. நாமும் நமது சுதந்திரப் பிரகடனத்தை மேற்கொள்வதற்கான பயணத்தைத்தான் மேற்கொண்டுள்ளோம்.

ஈழத்தமிழரின் வரலாற்றில் இன்றைய தினம் மிகமுக்கியமான நாளாக அமைகின்றது. கடந்த வருடம் இதே நாளில் எமது தாயகத்தின் முல்லைத்தீவுக் கடற்கரையில் முள்ளிவாய்க்கால் என்ற சிறுநிலப்பரப்பினுள் சுமார் 300,0000 திற்கும் அதிகமான அப்பாவித் தமிழ்மக்கள் கொடுரமான மரணப்பொறிக்குள் தள்ளப்பட்டனர்.

நாகரிக உலகின் நியமங்களினையும், பண்பாடுகளினையும், அரசியல் விழுமியங்களினையும் புறந்தள்ளிவிட்டு, இலங்கையின் சிங்கள தேசியவாத அரசும் அதன் இராணுவமும் இனப்படுகொலையினை நிகழ்த்தியநாள் இது.

21ம்நூற்றாண்டின் மனிதகுலத்திற்கு எதிரான மிகக் கொடுரமான குற்றம் தன் கண்முன்னே நிகழ்வதனை தடுப்பதற்கும் மக்களினைக் காப்பாற்றுவதற்கும் உரிய நடவடிக்கைகளினை முன்னெடுக்காமல் சர்வதேச சமூகம் செயலற்று மௌனித்து நின்ற நாள் இது.

சுமார் 50,000 க்கும் மேற்பட்ட பொதுமக்களின் உயிர்களினைக் காவு கொண்டும், பலபத்தாயிரம் மக்களினை குற்றுயிராக காயப்படுத்தியும், மூன்று இலட்சத்திற்கு மேற்பட்ட மக்களினை ஏதிலிகளாக்கி முட்கம்பி முகாம்களுக்குள் சிறைப்படுத்திய நாள்.

வன்னிப் பெருநிலப்பரப்பில் எமது மக்கள் மீதான போரை இலங்கை அரசு தீவிரப்படுத்திய போது அனைத்துலக தொண்டர் நிறுவனங்களை இப் பகுதியனை விட்டு வெளியேற்றி விட்டுத்தான் இத்தனை கொடுமைகளையும் புரிந்தது.

எமது மக்களுக்கான உணவு, உறையுள், மருத்துவ வசதிகள் மறுக்கப்பட்டன. எமது மக்கள் மீது கொத்துக் கொத்தாக குண்டுகளும் எறிகணைகளும் வீசப்பட்டன. 99% க்கும் கூடுதலாக சிங்கள இனத்தவர்களைக் கொண்ட இலங்கையின் ஆயுதப்படைகளால் தயவு தாட்சண்யமின்றி எமது மக்கள் கொல்லப்பட்டனர். மக்களின் வாழ்விடங்களும் வாழ்வாதாரங்களும் அழிக்கப்பட்டன.

இது ஈழத் தமிழ் தேசத்துக்கு எதிராக இலங்கை அரசின் திட்டமிடப்பட்ட இன அழிப்பு நடவடிக்கையின் பாற்படட்தேயாகும்.

முன்னாள் யூகோஸ்லாவியாவின் இனஅழிப்பு தொடர்பான விசாரனை மன்று, “இனஅழிப்புத் தொடர்பான நோக்கம் புறக்கணிப்புக்களின் தீவிரத்தன்மைகளின் ஊடாக வெளிப்படும்” என்ற கருத்தைத் தெரிவித்துள்ளது.

இவ்விடத்தில் இலங்கை அரசு 1971 ஆம் ஆண்டு இடம் பெற்ற சிங்கள இளைஞர்களின் கிளர்ச்சியினை அடக்குவதற்குப் பிரயோகித்த முறைகளை தமிழ் தேசத்துக்கு பிரயோகித்த முறைகளுடன் ஒப்பிட்டுப் பார்த்தல் அவசியமானதாகும். சிங்கள இளைஞர்களின் ஆயுதப் போராட்டத்தை அடக்க விமானக்குண்டுகள், எறிகணைகள் வீசப்படவில்லை. மக்கள் கிராமங்களை விட்டு வெளியேற்றப்படவில்லை. உணவும் மருந்தும் போர் ஆயுதமாகப் பயன்படுத்தப்படவில்லை. மக்களின் நிறுவனங்கள் அழிக்கப்படவில்லை.

இந்த வேறுபாடு, புறக்கணிக்கும் அணுகுமுறை இலங்கை அரசின் இன அழிப்புக்கான நோக்கத்தை வெளிப்படுத்தப் போதுமானது

இத்தகைய இன அழிப்பு அபாயத்தில் இருந்து தன்னைப் பாதுகாத்துக் கொள்ள ஈழத் தமிழர் தேசம் தனக்கென ஒரு சுதந்திர நாட்டை இன அழிப்புக்கு எதிரான ஈடு செய்பரிகாரமாக அமைத்துக் கொள்வதற்கான கோரிக்கையினை எழுப்புவதற்கு சர்வதேச சட்டங்களில், குறிப்பாக இனப்படுகொலைக்கு எதிரான பிரகடனத்தின் 8 சரத்திலும் ஐக்கிய நாடுகள் சபையின் பிரகடனத்திலும் 7வது அத்தியாயத்திலும் இடம் உண்டு.

இலங்கை அரசும் அதன் ஆட்சியாளர்களும் தமிழ்மக்களின் போராட்டவலுவினை தனது இராணுவ மேலாதிக்கத்தின் வலுக்கொண்டு சிதைத்தது விட்டதாகவும் தமிழ்மக்களின் விடுதலைத்தீயினை அணைத்து விட்டதாகவும் பிரகடனப்படுத்தியுள்ளனர்.

ஆனால் எமது இந்த அமர்வானது தமிழ்த் தேசியம் தோற்கடிக்கப்படமுடியாதது என்ற செய்தியை மிகத் தெளிவாக வெளிப்படுத்துகிறது. நாடு கடந்த தேசமாக நாம் இங்கு கூடி நிற்பது தமிழரின் ஒற்றுமை உடைந்து போகவில்லை என்பதை வெளிப்படுத்துகிறது.

நாம் எமக்கிடையே மேற்கொண்ட ஜனநாயக செயன்முறையின் மூலம் மக்கள் பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுத்து, அம் மக்கள் பிரதிநிதிகள் இவ் அமர்வில் கூடியியிருப்பது தமிழர்கள் [^] தமது இலக்குகளை ஜனநாயகவழியில், சாத்வீக முறையில், வெளிப்படைத் தன்மையும் பன்முகத்தன்மையும் கொண்டு முன்னெடுக்க உறுதி பூண்டுள்ளனர் என்ற செய்தியனை வெளிப்படுத்தி நிற்கிறது.

ஒரு இனத்தின் அபிலாசையினையோ அல்லது உரிமைக்குரலினையோ வன்முறை கொண்டோ அதிகாரத்தின் பலம் கொண்டோ அடக்கிவிட முடியாது. அம்மக்களின் அபிலாசைகள் திருப்தியடையும் போது மட்டுமே விடுதலைக்குரலின் உக்கிரம் தணியும். உரிமைக்கான போராட்டத்தின் தீவிரம் இல்லாது போகும். அதுவரை அம்மக்களின் உரிமைக்குரலும் விடுதலைக்கான வேட்கையும் ஏதோ ஒருவடிவத்தில் எங்கோ ஒரு மூலையில் அணையாது பாதுகாக்கப்படும்.

அத்தகைய பணியினை நிறைவேற்றுவதற்கான மக்கள் அமைப்பினை உருவாக்கும் உன்னத குறிக்கோளுடனேயே புலம்பெயர்தேசங்களில் வாழும் ஈழத்தமிழர்களின் பிரதிநிதிகள் நாங்கள் இங்கு இணைந்துள்ளோம். எமது இணைப்பும் நாங்கள் கட்டியெழுப்பவிருக்கும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் என்கின்ற புதுமையான நிறுவனவடிவமும் இன்றைய நவீன சிந்தனை மரபுகளுக்கும் வளர்த்தெடுக்கப்பட்டுள்ள அரசியல் நாகரீகத்திற்கும் உலகந்தழுவியதாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ள மானிடவிழுமியங்களுக்கும் முன்மாதிரியாக அமையவிருக்கின்றது.

ஒரு சமூகம் தனது தேசிய விடுதலையினை வென்றெடுப்பதற்கான புதிய பாதையினை எம்மால் உருவாக்கப்படவிருக்கும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் இவ்வுலகிற்கும் விடுதலைவேண்டிநிற்கும் ஏனைய சமூகங்களுக்கும் முன்னறிவிக்கும்.

கடந்த வருடத்தின் நடுப்பகுதியில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தினை உருவாக்குவதற்கான அடித்தள வேலைகளினை முன்னெடுக்கும் மிக பாரியபொறுப்பு என்னிடம் கையளிக்கப்பட்டது. நிதானத்துடனும், தேசத்தின் விடுதலையிலும் தங்களின் செழுமைமிக்க எதிர்காலத்திலும் தமிழ்மக்கள் கொண்டிருந்த அசைக்கமுடியாத பற்றுதியில் நம்பிக்கைவைத்தே நான் இப்பொறுப்பினை ஏற்றுக்கொண்டேன்.

எனது பணியின் பாரத்தினை பகிர்ந்து சுமப்பதற்காக பலநூற்றுக்கணக்கான விடுதலை விரும்பிகளும் புத்திஜீவிகளும் செயற்பாட்டாளர்களும் ஆர்வலர்களும் முன்வந்தார்கள். மதியுரைக்குழு உறுப்பினர்களாக, நாடுவாரியான செற்பாட்டுக்குழுக்களின் செயற்பாட்டாளர்களாக இவர்கள் என்னுடன் கைகோர்த்து நின்றார்கள். அவர்களின் அளப்பரிய பங்களிப்பினை இவ்விடத்தில் பெருமனதோடு உங்கள் சார்பாக நினைவுகூருகின்றேன்.

இவ் அரசியல் முன்னெடுப்புக்கு பல தமிழ் ஊடகங்கள் பெரிதும் உறுதுணையாக இருந்து வந்தன. இவ் ஊடக நண்பர்களின் கரங்களை நாம் நன்றியுணர்வுடனும் தோழமையுணர்வுடனும் இறுகப் பற்றிக் கொள்கிறோம்.

எங்களிடம் ஒப்படைக்கப்பட்ட இலக்கின் எல்லைக்குள் நாங்கள் இன்று பிரவேசித்து விட்டோம் என்று கூறுவதில் நிறைவு கொள்கின்றேன். இன்றிலிருந்து புலம்பெயர் ஈழத்தமிழ் சமூகம் தனக்குள் உத்வேகம் பெற்றதாக, தமிழ் மக்களின் தேசியவிடுதலைக்காக தன்னை முழுமையாக அர்ப்பணிக்கும். அதேபோல் தமிழ் மக்களுக்காக புலம் பெயர் மக்களால் கட்டியெழுப்பப்படும். இவ் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தனக்குரிய கூட்டுப்பொறுப்பினை உணர்ந்து செயற்படும்.

சர்வதேச சமூகமே, தனிமனித உரிமைக்காகவும் சமூகங்களின் உரிமைக்காகவும் தேசியஇ னங்களின் சுயநிர்ணயஉரிமைக்காகவும் விடுதலைக்காகவும குரல் கொடுக்கும் ஆர்வலர்களே, அரசுகளே!

இலங்கைத்தீவினுள் வாழுகின்ற ஈழத்தமிழர்கள் தங்களிடமிருநது பிரிக்க முடியாத அரசியல் இறைமையை பிரயோகிப்பதற்காகவும் சுய நிர்ணய உரிமைக்கு முழுமையான செயலுருவம் கொடுப்பதற்காகவும் கடந்த நாலு தசாப்தங்களுக்கு மேலாக போராடிக் கொண்டிருக்கின்றனர். அவர்களது உரிமைக்குரலும் தற்காப்புத் திறனும் தற்சார்பு வாழ்க்கையும் இலங்கையின் ஆட்சியாளர்களினால் சிதைக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது.

சனநாயக ரீதியாக தெரிவுசெய்யப்பட்ட சட்டமுறை அரசு என்கின்ற ஒரு காரணத்தினைக் காட்டி தனது இனப்படுகொலையினையும் தமிழ்மக்கள் மீது நிகழ்த்திய மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களினையும் நியாயப்படுத்த சிறிலங்காவின் தலைவர்கள் முயற்சிக்கின்றனர். ஆயினும் தமிழ் மக்கள் தமது இறைமையை சிங்கள அரசிடம் கொடுக்காத காரணத்தினால் தமிழ் மக்களை பொறுத்த வரையில் சிங்கள அரசை சட்டபூர்வமான அரசாக கருத முடியாது. ஒரு விவாதத்திற்காக சட்டபூர்வமான அரசாக கருதப்பட்டாலும் தமிழ் இனத்திற்கு எதிரான இனப் படுகொலையினால் சிங்கள அரசு அந்த தகுதியை இழந்து விட்டது.

இலங்கைத் தீவினுள் அரசியல் நிர்ப்பந்தத்திற்குள்ளும் இராணுவ அடக்குமுறைக்குள்ளும் சமூகத்தினை அச்சுறுத்தும், சட்டத்திற்கு புறம்பான கொலைக் கரங்களுக்குள்ளும் சிறைப்படுத்தப்பட்டுள்ள மக்களால ; சுதந்திரமாக தங்களது அபிலாசைகளினை எடுத்துரைக்கமுடியவில்லை.

உரிமைகளுக்காகவும் மக்கள் நலன்களினை பாதுகாப்பதற்காக செயற்படும் உங்களாலும் கூட சுதந்திரமாகவும் தன்னியல்பாகவும் அம்மக்களினை அணுகுவதற்கும் அவர்களின் துயரங்களினை கேட்டறிந்து உதவுவதற்கும் இலங்கையின் அரசியற்கட்டமைப்பும் அதன் ஆட்சியாளர்களும் அனுமதிக்கவில்லை.

எமது தாயக மக்கள் சுதந்திரமாக தமது அரசில் அபிலாசைகளை வெளிப்படுத்த வேண்டுமானால் போரினால் பாதிப்படைந்த அவர்களது வாழ்க்கை மீண்டும் கட்டியெழுப்பப்பட வேண்டும். இவர்களை சூழ்ந்துள்ள சிறிலங்கா இராணுவ ஆக்கிரமிப்பு இல்லாதொழிக்கப்படவேண்டும். அடுத்த ஆண்டு தென் சூடானில் நடைபெற உள்ளது போன்று சர்வேச சமூகத்தின் ஏற்பாட்டுடன், ஈழத் தமிழர் தேசம் தனது சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் சுதந்திமும் இறைமையும் கொண்ட தமிழீழத் தனியரவினை அமைத்து வாழ விருபம்புகிறார்களா என்ற ஒரு வாக்கெடுப்பு நடாத்தப்படும் சூழல் உருவாக வேண்டும்.

அப்போது எமது தாயக மக்களுக்கு தமது சுதந்திரவேட்கையினை வெளிப்படுத்துவதற்கான அரசியல்வெளி கிடைக்கும். தற்போது எமது தாயக மக்களின் சுதந்திரவேட்கை இலங்கையின் அரசியல் சட்டங்களினாலும், கொடும் இராணுவ இயந்திரத்தாலும் அடக்கியொடுக்கப்படும் நிலையே நிலவுகிறது.

இந் நிலையிலேயே புலம்பெயர் ஈழத் தமிழ்ச் சமூகம் சர்வதேச அரசியற் தளத்திலே ஈழத்தமிழர்களின் அரசியல் அபிலாசைகளினை ஓங்கி உரத்து ஒலிப்பதற்கும், இராணுவ ஆக்கிரமிப்பிற்குள்ளும் ஏதேச்சாதிகார ஆட்சியின்கீழும் சிக்குப்பட்டுள்ள மக்களின் சுதந்திரத்திற்காகவும் நல்வாழ்வுக்காகவும் பாதுகாப்புமிக்க எதிர்காலத்தினைக் கட்டியெழுப்புவதற்காகவும் இங்கு கூடியுள்ளோம்.

இன்றுவரை உலகின் நாகரீகம் மிக்க சமூகங்கள் கண்டறிந்து கட்டியெழுப்பிய உயர் அரசியல் விழுமியங்களே நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் செயற்படு நியமங்களாக இருக்கும். அவற்றினடிப்படையிலேயே இவ்வமைப்பு ஈழத்தமிழர்களின் தன்னாட்சிஉரிமைக்கு செயலுருவம் கொடுப்பதற்காக, இறைமையை பிரயோகிப்பதற்காக சலிப்பின்றி போராடும். இவ் அடிப்படையில் சகலருடனும், அரசுகள், பொதுஅமைப்புக்கள், நாடுகளின் கூட்டுக்கள் ஆகியோருடன் பொருத்தமானவகையில் இணைந்து செயற்படுவதற்கு தயாராக இருக்கின்றது.

இலங்கையின் ஆட்சியாளர்களே! சிங்கள மக்களே!

தமிழர்களது வாழ்வுரிமைக்கான போராட்டம் தவறான சிந்தனைகளினைக் கொண்ட சிஙகள தேசியவாத தலைவர்களினால் கட்டியெழுப்பப்பட்டு குவிக்கப்பட்ட அதிகார மையத்தினால் இராணுவக்கரங்கள் கொண்டு நசுக்கப்பட்டுள்ளது. எனினும் தமிழ்மக்கள் தங்களது சுயநிர்ணய உரிமைக்கு முழுமையான செயலுருவம் கொடுப்பதற்காக தொடர்ந்தும் போராடிக் கொண்டே இருப்பார்கள், அது வரலாற்றின் நியதியாகும். அது சகல உயிரினங்களுக்கும் பொருத்தமான இயற்கையின் விதியாகும்.

உங்களது மக்கட்தொகைப்பெருக்கத்தினால் கட்டியெழுப்பப்பட்ட ஒரின பெரும்பான்மைகொண்ட ஆட்சியதிகாரத்தின் பலத்தினைக்கொண்டு ஏனைய இனங்களுக்கு எதிராக அரசியலமைப்பினையும் சட்டங்களினையும் நிர்வாக விதிகளினையும் உருவாக்கியுள்ளீர்கள்.

இது சக இனஙகள் தங்களது உரிமைகள் தொடர்பாக பேசுவதற்கும் செயற்படுவதற்கும் வேண்டிய அரசியல் வெளியினை தீவினுள் இல்லாமற்செய்துள்ளது. இராணுவபலத்தினால; நீங்கள் அடைந்துள்ள மேலாதிக்கநிலை உங்கள் கண்களினை முற்றாக மறைத்துள்ளது.

வெற்றி மமதைகாரணமாக தமிழ் மக்கள் அடைந்துள்ள துயரங்களினை உங்களினால் உணர முடியவில்லை. கிடைத்துள்ள வாய்ப்பினைப் பயன்படுத்தி தமிழ் மக்களின் வாழ்வாதாரங்களினையும் வளங்களினையும் கையகப்படுத்துவதிலும் அவர்களினைக் கையறுநிலைக்கு தள்ளுவதிலும் துரிதமாக செயற்படுகின்றீர்கள்.

தமிழ் மக்களின் தேசிய அபிலாசைகளுக்காக தம்முயிரைத்துறந்த வீரர்களின் கல்லறைகளினை சிதைத்து அழிப்பதில் பெருமகிழ்வு கொள்ளுகின்றீர்கள். தற்போது பரிணமித்துவரும் உலகின் புதிய அரசியற் பொருளாதார ஒழுங்கினுள் ஒடுக்கப்படும் சமூகங்களின் குரல்களினை வெளிக் கொண்டு வருவதற்கான வாய்ப்புக்கள் மிக அதிகமாகவே காணப்படுகின்றது. அவற்றில் ஒன்றாகவே எமது நாடுகடந்த தமிழீழ அரசாங்கமும் அமைகின்றது.

தாயக மக்களே!

இலங்கைத்தீவினுள் இறைமையுடனும் தன்னாட்சியுரிமையுடனும் எங்கள் தாயக நிலத்தில் வாழுவதற்கான தேசியவிடுதலைப் போராட்டத்தின் புதிய சூழலில் நாங்கள் இருக்கின்றோம். தேசியத் தலைவர் சுதுமலைக் கூட்டத்தில் கூறியபடி போராட்ட வடிவங்கள் மாறினாலும் குறிக்கோள் ஒன்றுதான்.

இலங்கைத்தீவின் அரசியல்நிர்ப்பந்தங்களுக்குள் உங்களால் முன்னெடுக்க சாத்தியமில்லாத விடயங்களுக்காக பலம்வாய்ந்த புலம்பெயர்சமூகம் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் என்ற கட்டமைப்புக்கு ஊடாக செயற்பட உள்ளோம்.

சமகாலத்தில் உங்களின் துயரங்களின் சுமைகளினைக் குறைப்பதற்கும் வாழ்க்கையினை மீளக்கட்டியெழுப்புவதற்கும் எங்களின் கரங்கள் உங்களினை நோக்கி களைப்பின்றி நீளும். உங்கள்மீது வன்மம் கொண்டு குற்றம் புரிந்தவர்கள் நீதிக்கு முன் நிறுத்தப்படுவார்கள்.

நீங்கள் தனித்து விடப்பட்டவர்கள் அல்ல. உங்கள் பிள்ளைகள் நாங்கள் இருக்கிறோம்.

நாங்களும் நீங்களும் இணைந்தவர்களாக, நிலத்திலும் புலத்திலும் நாடு கடந்த அரசியல் வெளியினுள் வாழும் மக்களாக, தமிழீழ தேச மக்களாகிய நாம் இருக்கிறோம்.

தமிழீழ தேசத்தின் விடிவுக்கும் நம் எல்லோரது வளமான வாழ்வுக்கும் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் ஊடாக நாம் வலுச் சேர்ப்போமாக” என்று ருத்ரகுமாரன் பேசினார்.

Sunday, May 16, 2010

பிரபாவின் சிறு மற்றும் இளமைப் ப‌ராயம் - பாகம் இரண்டு


பிரபாவின் தாய் மாமனான வல்லிபுரம் வேலுப்பிள்ளை பிரபாவின் வாழ்வைப் பொறுத்தவரை ஒரு முக்கியமான‌ நபர்.

பிரபா தனது 17வது வயதில் தனது குடும்பத்துடனான எல்லா உறவுகளையும் முறித்துக் கொண்டார். தனது புகைப்படமோ அல்லது புகைப்படத் தொகுப்போ வீட்டில் இல்லாதவாறு எல்லாவற்றையும் அகற்றினார் பிரபா. பிரபாவை தேடிய பொலிஸார் வைத்திருந்த ஒரே புகைப்பட ஆதாரம் அஞ்சலக அடையாள அட்டை ஒன்று மட்டுமே.

பிரபாவின் போராட்ட வாழ்விற்கு அவரது தகப்பனாரிடமிருந்து எந்தவிதமான உதவியோ ஆதரவோ கிடைக்கவில்லை. ஆனால் உதவிக்கரம் கொடுத்தவர்கள் வல்லிபுரம் வேலுப்பிள்ளையும் மூத்த சகோதரி ஜெகதீஸ்வரியின் கணவரும் மச்சினனுமாகிய மதியாபரணம் ஆகியோர்தான்.

பிரபா பிறந்ததன் பிற்பாடு திருவேங்கடம் வேலுப்பிள்ளை குடும்பத்துக்கும் வல்லிபுரம் வேலுப்பிள்ளை குடும்பத்துக்கும் எழுதப்படாத உடன்பாடு ஒன்று இருந்தது. அது என்னவென்றால் பிரபாவுக்கு தாய் மாமன் மகள்களில் ஒருவரை மணம் முடித்து வைப்பது. ஆனால் பிற்காலத்தில் பிரபா மதிவதனி ஈரம்பு மீது காதல் கொண்டு அவரை திருமணம் செய்து கொண்டபோது தனது சங்கடங்களுக்கு நடுவிலும் பிரபாவிடம் தாலி எடுத்துக் கொடுத்ததும் இதே தாய் மாமன் வேலுப்பிள்ளை தான்.

1984 அக்டோபர் 1 அன்று திருப்போரூர் முருகன் கோயிலில் நடந்த அந்தத் திருமணத்திற்கு திருவேங்கடம் வேலுப்பிள்ளை வரவே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

பிரபாவின் அன்னை பார்வதிப்பிள்ளையின் உடன் பிறந்த சகோதரரான வல்லிபுரம் வேலுப்பிள்ளை யாழ்ப்பாணம் திருநெல்வேலியில் அமைந்திருந்த அரச பண்ணைப் பள்ளியில் வேலை பார்த்து வந்தார். வீட்டுடனான உறவை முறித்துக் கொண்ட பிரபா தாய் மாமன் வீட்டில் தங்குவதே அதிகம். பிரபாவிற்கு அவர் மீது மிகுந்த விருப்பம். வல்லிபுரம் வேலுப்பிள்ளையின் மகள் ஒருவர் தற்போது இலண்டனில் வசிக்கிறார். அவருடைய மகன் ஒருவரும் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் இணைந்து கொண்டார். இறுதி யுத்தத்தின் போது அவருக்கு என்ன நடந்தது என்று இதுவரை தெரியவில்லை.

இவ்வாறாக பிரபாவின் வாழ்வில் மிக முக்கிய பாத்திரம் வகித்த வல்லிபுரம் வேலுப்பிள்ளையும் அவரது மனைவியும் கடந்த 2009ம் ஆண்டு பெப்ரவரி மாதம் 10ம் திகதி நடைபெற்ற ஒரு எறிகணை வீச்சில் படுகொலை செய்யப்பட்டனர் என்பது மிகவும் வேதனைக்குரிய ஒரு விடயம்.

வீட்டை விட்டு வெளியேறிய போதும் பிரபாவிற்கு அவரது தாய் மீது மிகுந்த பாசம் இருந்தது. அவர் ச‌மைக்கும் உணவை சுவைப்பதற்காக‌ பிரபா ஆலடி ஒழுங்கை, வல்வெட்டித்துறையில் உள்ள வீட்டிற்கு களவாக வந்து செல்வது வழக்கம். பிரபா தாயிடமிருந்துதான் தனது சிறப்பான சமையல் கலையைக் கற்றுக் கொண்டார்.

ஒருமுறை வேலுப்பிள்ளை வேலை நிமித்தம் துணுக்காய் சென்றிருந்த சமயம் ஆலடி வீட்டிற்கு சென்றிருந்தார் பிரபா. அவசரமாகச் செய்த உணவை பார்வதி அம்மா தனது மகனுக்கு ஊட்டிக் கொண்டிருந்த சமயம் பார்த்து வீடு வந்தடைந்தார் வேலுப்பிள்ளை. தனது சொல்படி கேளாத தனது இளைய மகனைக் கண்டதும் கோபத்தில் வீட்டை விட்டு வெளியேறியவர் பல மணி நேரம் கழித்தே வீடுதிரும்பினாராம். இது பிராபாவே தனது தோழர்களிடம் சொல்லிச் சிலாகித்த ஒரு விடயம். "அப்பர் ஒரு சொல்லுத்தானும் பறையேல".

பிரபா குட்டிமணி தங்கத்துரை குழுவில் 1969ல் இணைந்து கொண்டபோது அவருக்கு வயது வெறும் 15.

1970ஆம் ஆண்டில் சிறிமாவோ பண்டாராநாயக்கா அரசில் கல்வி அமைச்சராக இருந்த பதியுதீன் கொண்டுவந்த தரப்படுத்துதல் சட்டம் தமிழர்கள் மத்தியில் குறிப்பாக இளைஞர்கள் மத்தியில் பெரும் கோப‌த்தை தூண்டிவிட்டது.

இங்கேதான் சிங்கள இனவாதத்தின் நயவஞ்சகத்தை நாம் உணர வேண்டும். பதியுதீன் தமிழர் மற்றும் முஸ்லீம். தமிழருக்கு எதிரான ஒரு சட்டத்தை தமிழரைக் கொண்டே நிறைவேற்றினார்கள். தமிழர்களை பிளவுபடுத்த இஸ்லாமியர்களை ஒரு கருவியாக பயன்படுத்தும் யுக்தி அப்போதே தொடங்கிவிட்டது, ஈழத்தின் ஒரு பெரும் அவலம் இந்தத் துரோகம் அன்றிலிருந்து இன்று வரை தொடர்கிறது. ஆட்கள் மட்டுமே மாறுகிறார்கள். இனவெறி அடக்குமுறையை தமிழர் மீது பிரயோகிக்க ஒரு ஆயுதமாக மதப்பிணக்கை சிங்களம் கையாண்டு வருகிறது.

இந்த தரப்படுத்துதல் சட்டத்திற்கு தமிழரசுக் கட்சியிலிருந்த இளைஞர்கள் எதிராகத்திரண்டார்கள். பொன்னுதுரை சத்தியசீலன் தலைமையில் ஒன்று திரண்ட அவர்கள் அந்த ஆண்டு நவம்பர் மாதம் தமிழ் மாணவர் பேரவை என்ற அமைப்பைத் துவங்கினார்கள். சிவகுமாரன் அதன் தலைவரானார்.

இந்த சிவகுமாரனே தமிழீழ விடுதலைப்போரில் முதற் தற்கொடையாளியாவார். அவரின் மரண தினம் விடுதலைப்புலிகளால் மாணவர் தினமாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. தமிழ் மாணவர் பேரவைக்குப் போட்டியாக அமிர்தலிங்கத்தால் தமிழ் இளைஞர் பேரவை உருவாக்கப்பட்டது.

தரப்படுத்துதல் சட்டத்தை அரசியலைப்பில் இணைப்பதற்காக அமைச்சவரவை உருவாக்கப்பட்டு அதன் அமைச்சராக கோல்வின் டி சில்வா நியமிக்கப்பட்டார். இவர்மீது தமிழரசுக்கட்சியினருக்கு மரியாதை இருந்தது. அவர் முன்பு நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த போது ஒரு நாடு இரு மொழி அல்லது இரு நாடு ஒரு மொழி என்று முழங்கியிருந்தவர் ஆவார்.

இந்த அரசியலமைப்பு மாற்றத்தில் கூட்டாச்சி தத்துவத்தை இடம்பெற வைக்க முடியும் என்று தமிழரசுக்கட்சியினர் உறுதியாக நம்பினர். அதற்கேற்றார் போல் டட்லி சேனநாயகவின் அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த திருச்செல்வத்திடம் தமிழர்களுக்கு சில சலுகைகள் வழங்கப்படும் என்றும் ஆசை காட்டப்பட்டது.

தமிழரசுக்கட்சியில் தந்தை செல்வாவிற்கு அடுத்த இடத்தில் இருந்த அமிர்தலிங்கத்திடம் இது குறித்து முறையிடப்பட்டது. இன்னொருமுறை சிங்கள இனவாத அரசால் ஏமாற்றப்பட்டால் அது தமிழ் மக்கள் தமிழரசு கட்சியின் மீது வைத்திருக்கும் நம்பிக்கையை தகர்ப்பதாக அமையும் என்று கூறப்பட்டது.

அதற்கு தாங்கள் என்ன செய்ய வேண்டும் என்று பிறர் கூறத்தேவையில்லை என்று அமிர்தலிங்கம் சொல்லிவிட்டார். இது தமிழ்க்கட்சிகள் தொடர்ச்சியாக சிங்கள இனவாதத்தின் வலைக்குள் மீண்டும் மீண்டும் விழுவதை உணர்த்துகிறது.

அரசியல் அமைப்பு திருத்தம் தொடர்பாக விவாதிப்பதற்காக ஒரு குழு அமிர்தலிங்கம் தலைமையில் அமைக்கப்பட்டு கூட்டாச்சி சட்டவரவு ஒன்றும் தயாரிக்கப்பட்டது. அதன்படி அயல்நாட்டு உறவுகள், பாதுகாப்பும் சட்ட ஒழுங்கும், குடியுரிமை, குடிவரவு, சுங்கம், அஞ்சல், தொலைத்தொடர்பு, ரயில் மற்றும் வான் வழிப்போக்குவரத்து, மின்சாரம் கல்வி மற்றும் சுகாதாரக்கொள்கைகள், நிதிக்கொள்கை உட்பட அனேக அதிகாரங்கள் மத்திய அரசின் கையில் இருக்கும் என்று கூறியது.

கிட்டத்தட்ட எல்லா உரிமைகளும் மத்திய அரசுக்கு, அதாவது சிங்கள அரசுக்கு, இந்த்தியாவிலாவது மாநிலங்களிடத்தில் சட்டம் ஒழுங்கு, காவல் மாநில அரசுகளிடம் உண்டு.

சிங்களமும் தமிழும் தேசிய மொழிகளாக இருக்கும் வட கிழக்கில் நீதிமன்றம் தமிழில் இயங்கும் என்றும் ஏனைய பகுதிகளில் சிங்களத்தில் இயங்கும் என்றும் கூறப்பட்டது. ஆனால் சிங்கள பெரும்பான்மையினர் இதை முற்றாக நிராகரித்துவிட்டனர்.

அரசியல் நிர்ணய சபை கூட்டாச்சி தத்துவத்தை நிராகரித்துவிட்டு அதிகாரம் குவிந்த ஒற்றை அரசாங்க அமைப்பை 1971 மார்ச்சில் நிறைவேற்றியது. புதிய அரசியலமைப்பின் சட்டத்தின் படி புத்தமதம் அரசாங்க மதமாக்கப்பட்டது.

1972ஆம் ஆண்டு மே 14 திருகோணமலையில் கூடிய தமிழ்க்கட்சிகள் ஒன்று கூடி தமிழர் ஐக்கிய கூட்டணியை (TUF) ஏற்படுத்தினர். அதன் படி புதிய அரசியலைமைப்புச் சட்டத்தினை முழுதாக நிராகரிப்பது என்று தீர்மானிக்கப்பட்டது.

அந்த அரசியலைமைப்புச் சட்டம் அமுலுக்கு வரும் தினமான மே22 துக்கதினமாக கடைபிடிக்கப்பட்டது. கூட்டணியின் சார்பில் மாபெரும் எதிர்ப்புப் போராட்டமும் நடைபெற்றது. தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 20 பேரில் 15 பேர் அந்த நிகழ்வை புறக்கணித்தனர்.ஐந்து பேர் மட்டும் நாடாளுமன்றத்தில் கலந்து கொண்டார்கள்.ஐவரில் ஒருவரான அருளம்பலத்தின் நண்பர் குமரகுலசிங்கத்தை குட்டிமணி-தங்கத்துரை குழு கொன்றது.

இளைஞர்களை கட்டுப்படுத்தும் பொறுப்பு அமிர்தலிங்கத்திற்கு தரப்பட்டது. புதிய அரசியலைப்புச்சட்டத்தின் படி பதவிப்பிரமாணம் எடுக்க வேண்டாம் என தமிழர் ஐக்கிய கூட்டணித் தலைவர்களை இளைஞர்கள் கேட்டுக்கொண்டனர்.

ஆனால் அதை நிராகரித்துவிட்டு பதவிப்பிரமாணம் எடுத்துக்கொண்டார்கள். எதை எதிர்த்தார்களோ அதையே ஏற்பதாக அறிவித்துவிட்டு பதவிப்பிரமாணம் எடுத்துக்கொண்டார்கள். நாடாளுமன்ற அவைக்குள் உள்நுழைந்து தமிழர் உரிமைகளை பெற்றுவிடலாம் என்று மறுபடியும் தமிழர்களை ஏமாற்றினர்.

தமிழ்க்கட்சிகளின் தொடர்ச்சியான தவறுகள் இளைஞர்களை ஆயுதப்பாதைக்கு திருப்பியது. அப்படிப்பட்ட பல ஆயுதக்குழுக்களில் ஒன்றுதான் பிரபாகரனின் குழுவும்.

அக்குழு 1972-ம் ஆண்டு மே 22-ம் தேதி புதிய தமிழ்ப் புலிகள்(Tamil New Tigers(TNT)) என்ற பெயரில் தொடங்கப்பட்டது.பின்னர் 1976ம் ஆண்டு மே 5ல் தமிழீழ விடுதலைப் புலிகள் என்று பெயர் மாற்றப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. உமா மகேஸ்வரன் அதனது தலைவர். பிரபா அதனது இராணுவப் பொறுப்பாளர்.

இந்த காலகட்டத்தில் பல்வேறு ஆயுதக்குழுக்களுக்கு இடையே நெருக்கமான உறவும் இருந்து வந்தது. யாழ்ப்பாண துரையப்பா மைதானத்தில் 1972ம் ஆண்டு செப்ட‌ம்பர் 17ல் நடந்த விழா ஒன்றில் பிரபா தலைமையிலான‌ குழு குண்டு வீசியது, யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றாலும் இளைஞர்களின் கொதிநிலையை அது உணர்த்துவதாக இருந்தது.

இளைஞர்களின் கோரிக்கையை ஏற்று தந்தை செல்வா தனது காங்கேசன் துறை நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார். துரையப்பா மைதான குண்டுவெடிப்பு தொடர்பான சந்தேகம் குட்டிமணி தங்கத்துரையின் மீதும் தமிழ் மாணவர் பேரவையின் மீதும் திரும்பியது. பலர் கைது செய்யப்பட்டனர்.

தீவிரவாத இளைஞர்களை ஒடுக்கும் பணி இன்ஸ்பெக்டர் ப‌ஸ்தியாம்பிள்ளைக்கு கொடுக்கப்பட்டிருந்தது. தான் ஏற்படுத்தியிருந்த வலுவான உளவு அமைப்புகளின் துணையுடன் தீவிரவாத இளைஞர்களை வேட்டையாடத் துவங்கினார் ப‌ஸ்தியாம்பிள்ளை. சந்தேகம் பிரபாகரன் மீது திரும்பியதும் அவர் வீடு தேடிச்சென்றார் ப‌ஸ்தியாம்பிள்ளை ஆனால் அவர் வரும் முன்பே பிரபாகரன் அங்கிருந்து வெளியேறிவிட்டார். அதன் பிறகு அவர் வீடு திரும்பவே இல்லை என்பது வரலாறு.

தனிநாடு கோரிக்கையை வலியுறுத்தி தமிழ் இளைஞர் மன்றத்தால் கட்சி அலுவலக்ம் முன்பு போராட்டம் ஈழவேந்தன் மற்றும் உமா மகேசுவரன் தலைமையில் நடைபெற்றது. தமிழ் மாணவர் பேரவைக்கு போட்டியாக அமிர்தலிங்கத்தால் உருவாக்க்கப்பட்ட அமைப்பு போராடியது அவருக்கு மிகுந்த தர்மசங்கடத்தை தோற்றுவித்தது.

ஆனாலும் அவர் இளைஞர்களை அமைதிப்படுத்தினார். தனிநாடு கோரிக்கையில் இருந்து தாங்கள் பின்வாங்கப் போவதில்லை என்பதாக‌ உறுதியளித்தார். 1973 ஆண்டு ஜூலையில் நடந்த கட்சி மாநாட்டில் தனிநாடு குறித்தான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இளைஞர்கள் விடுதலைப் போராட்டத்திற்காக தயாராக வேண்டும் என்று அறைகூவல் விடுக்கப்பட்டது. இளைஞர்கள் உற்சாகத்தோடு திரும்பினர். தனிநாடு கோரிக்கைக்காக உண்ணாவிரதம் என்ற அளவோடு நிறுத்திக் கொள்ள இளைஞர்கள் மேலும் விரக்தி அடைந்தனர்.

ஆயுதக்குழுக்கள் பல இருந்தாலும் அவைகள் யாவும் தமிழரசுக்கட்சியையும், தந்தை செல்வாவையும், அமிர்தலிங்கத்தையும் மிக உயர்வாக மதித்திருந்தனர். தலைவர்களின் வார்த்தைகளுக்கு கட்டுப்பட்டும் இருந்தனர். போராளிக்குழுக்கள் இந்த சமயத்தில் அடிக்கடி தமிழகம் வருவதும் போவதுமாக இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது .

யாழ்ப்பாணத்தில் நடந்த நான்காவது உலகத் தமிழாராச்சி மாநாடு சிங்கள காவல்துறை அதிகாரி சந்திரசேகரா வின் வருகைக்குப் பிறகு ரத்தக்களறியாக மாறியது. மொத்தம் ஒன்பது உயிர்களைப் பலிவாங்கிய அந்த துயரச் சம்பவத்தை சிறிமாவோ கண்டுகொள்ளவே இல்லை மாநாட்டில் கலந்துகொண்ட தமிழ் அமைச்சர் குமரசூரியர் வருத்தம் தெரிவிக்கும் அடிப்படை நாகரீகமற்றவராகவே இருந்தார்.

இனத்துரோகிகளான மேயர் ஆல்பிரட் துரையப்பா, குமரசூரியர், சந்திரசேகாராவை தீர்த்துக்கட்ட இளைஞர்கள் முடிவு செய்தனர். ஆல்பிரட் துரையப்பாவை பிரபாகரன் கொலை செய்தார். அதற்கு முன்பே சிவகுமாரன் முயற்சி செய்திருந்தும் துரையப்பா தப்பிவிட்டார்.

கோப்பாய் வங்கிக்கொள்ளையில் ஈடுபட்டு தோல்வியுற்ற சிவகுமாரன் காவல்துறையின் கையில் சிக்கிவிடாதிருக்க சயனட் குப்பியைச் சுவைத்து முதல் த‌ற்கொடையாளியானார். ஈழவரலாற்றில் முதல் அரசியல் கொலை இது. அன்று தொடங்கியது பல ஆண்டுகாலம் தொடர்ந்தது. பிரபாகரனோடு இணைந்திருந்த மற்ற மூவர் காவல்துறையிடம் சிக்கிக்கொள்ள பிரபாகரனின் பெயரும் அவரது புதிய புலிகள் அமைப்பும் வெளிச்சத்திற்கு வந்தன.

துரையப்பாவின் கொலையைத் தொடர்ந்து தேர்ந்தெடுக்கப்பட்ட போராளிகளுக்கு பயிற்சியளிக்கும் முகாம் வவுனியாக்காட்டுக்குள் பூந்தோட்டம் என்னும் பகுதியில் தொடர்ந்தது. பயிற்ச்சிக்குத் தேவையான பணத்தட்டுப்பாட்டை போக்கவும் சிங்கள அரசாங்கம் வரியாக வசூலித்து சிங்கள் நலனுக்கே பயன்படுத்தப்படும் பணத்தை கொள்ளையடிப்பதற்காக வங்கிக்கொள்ளைக்கு திட்டமிடப்பட்டது, அது வெற்றிகரமாகவும் நிறைவேற்றப்பட்டது. ஆயுதக்குழுவாக விளங்கிய போதும் சுதந்திரத் தமிழ் இன உணர்வு பெயரிலும் பிரதிபலிக்க வேண்டும் என்று பிரபாகரன் தன் இயக்கத்திற்கு தமிழீழ விடுதலைப்புலிகள் என்று பெயர் மாற்றம் செய்தார். விடுதலைப்புலிகள் இயக்கம் 1976ஆம் ஆண்டு மே 5ம் தேதி துவங்கப்பட்டது.

விடுதலைப்புலிகள் அமைப்பிற்கான சின்னத்தையும் கொடியையும் வடிவமைக்கும் பொருட்டு பிரபாகரன் தமிழகம் வந்தார், ராஜபாளயத்தை சேர்ந்த ஓவியர் பிரபாகரனின் எண்ணத்திற்கு வடிவம் கொடுத்து அதை அமைத்துத் தந்தார். அந்த ஓவியர் முள்ளிவாய்க்கால் இனப்பேரழிவுற்கு சில காலத்திற்கு பின் மரணம் அடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இயக்கத்திற்கான கொள்கைகளும் வரையறுக்கப்பட்டன. புகை பிடித்தல், மது அருந்துதல், உடலுறவு வைத்துக்கொள்ளுதல் ஆகியவற்றை அறவே தவிர்க்க வேண்டும், குடும்பத்துடனான உறவை முறித்துக்கொள்ள வேண்டும் அதை விட முக்கியமாக இயக்கத்தை விட்டு வெளியேறுபவர் புதிய இயக்கம் காணக்கூடாது என்பது மிக்கியமாகும். இவைகளை தன் இயக்கத்தின் கட்டுப்பாடாக பிரபாகரன் கொண்டுவருவதற்கு காரணமும் இருந்தது.

இலங்கை அரசுக்கெதிரான ஆயுதப்போராட்ட‌த்தில் ஈடுபட்ட ஜேவிபியினர் தங்களது சக தோழர்களின் தங்கைகளோடு உறவு கொண்டதும் அதன் காரணமாக நடந்த கருக்கலைப்புகளுமே.

விடுதலைப்புலிகளின் ஒழுக்கத்திற்கும் கட்டுப்பாட்டிற்கும் எடுத்துக்காட்டாக இந்திய அமைதிப்படை இலங்கையிலிருந்த சமயத்தில் செய்தியாளராக இருந்த அனிதா பிரதாப் அவர்களின் கூற்றை கூறலாம். கிட்டத்தட்ட 20 இளைஞர்களுடன் ஒரு இரவு முழுவதும் இருந்த போதும் ஒரு நொடிப்பொழுது கூட நான் ஒரு பெண்ணாக பாதுகாப்பின்மையை உணரவில்லை என்றும் டெல்லி மேல்வர்க்கத்தினருடன் இயங்கும் போது அத்தகைய பாதுகாப்பின்மையை உணர்ந்ததாகவும் தெரிவித்திருந்தார்.

தமிழீழ விடுதலைப்போராட்ட வரலாற்றில் 1977ம் ஆண்டு முக்கியத்துவம் வாய்ந்த ஆண்டாகும் அந்த ஆண்டு தொடக்கத்தில் ஈழத்தந்தை செல்வா மரணம் அடைந்திருந்தார். தனிநாடு கோரிய வட்டுக்கோட்டை தீர்மானத்தை முன்னிறுத்தி தேர்தலைச் சந்தித்த தமிழர் விடுதலைக்கூட்டணி இரண்டாவது பெரிய கட்சியாக உருவெடுத்தது. தனி ஈழக்கோரிக்கையை ஒத்திவைத்தால் எதிர்க்கட்சி தலைவராகும் வாய்ப்பு அமிர்தலிங்கத்துக்கு வந்தது. அவரும் பயன்படுத்திக்கொண்டார், எதிர்க்கட்சித்தலைவர் ஆனார்.

இது அமிர்தலிங்கத்தின் இரண்டாவது தவறாகவும் தனது நிலைப்பாட்டில் அவர் தெளிவற்றராகவும் சந்தர்ப்பத்திற்கேற்ப தன்னை மாற்றிக்கொள்ளும் மனிதராகவும் அடையாளம் காணப்பட முக்கியமானதொன்றாகிப்போனது. இறுதில் அது அவரது கொலையில் முடிந்தது.

யாழ்ப்பாணத்தில் புற்றுநோய் மருத்துவமனை கட்டுவதற்காக நிதி திரட்டும் நோக்கத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட கலைநிகழ்ச்சி புனித பேட்ரிக் கல்லூரியில் நடைபெற்றது. அந்த சமயத்தில் சீருடை இல்லாமல் சென்ற காவல்துறையினர் உள்நுழைய முயன்ற போது டிக்கெட் வாங்குங்கள் என்று அமைப்பாளர்களால் தடுக்கப்பட்டனர்.

மறுநாள் அவர்கள் போதையேற்றிக்கொண்டு வந்து தகறாறு செய்த போது மக்களால் விரட்டியடிக்கப்பட்டனர். இதற்கு பழிவாங்கும் முகமாக யாழ்ப்பாணக்கடைகள் தீவைத்துக்கொளுத்தப்பட்டன, கலவரமாக உருவெடுத்தது. இந்தக்கலவரம் இனக்கலவரமாக அங்கு படித்துவந்த சிங்கள மாணவர்களே காரணாமாகும். இந்தக் கலவரம் தலைநகர் கொழும்புவிற்கும் பரவியது.

சிங்கள இனவாத நரி ஜெயவர்த்தனேவின் அனல் கக்கும் பேச்சின் விளைவாக தமிழர் உடமைகள் அடித்து நொறுக்கப்பட்டன, 112 தமிழர்கள் கொல்லப்பட்டனர். வாக்காளர் பட்டியலை கையில் வைத்துக்கொண்டு தமிழர்கள் தேடிப்பிடித்து அழிக்கப்பட்டனர். அந்த வகையில் குஜாராத் கலவரத்திற்கும் மோடிக்கும் முன்னோர்களாக ஜெயவர்த்தனாவும் அவரால் வெறியூட்டப்பட்ட சிங்கள இனவாதிகளும் இருந்தனர்.

தமிழர் விடுதலைக்கூட்டணி சார்பில் போட்டியிட்டு வென்ற பொத்துவில் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் கனகரத்தினம் ஜக்கிய தேசியக்கட்சியில் இணைந்தார். ஜெயவர்தனே தமிழர்களுக்கு நல்லது செய்வார் என்றும் கிழக்கு பிராந்திய மக்கள் தமிழர் கூட்டணிக்கு வாக்களித்தாலும் அது தனி ஈழத்திற்கான வாக்காக கருதக்கூடாது என்றும் தன் துரோகத்தை பறைசாற்றினார். அவரை அப்புறப்படுத்தும் பணி பிரபாகரனுக்கும் உமாமகேசுவரனுக்கும் வந்தது. இருவரின் தாக்குதலில் தப்பித்தாலும் பின்பு சிறிது காலத்திலே அவர் மரணமடைந்தார். கொலையாளிகளை கண்டுபிடிக்கும் பொறுப்பு பாஸ்தியம்பிள்ளைக்கு வந்தது.

மன்னாருக்கருகே மறைவாக பயிற்சியில் ஈடுபட்டிருந்த போராளிகளை பிடிப்பதற்காக பஸ்தியம்பிள்ளை வந்தார். அங்கு அவர் செல்லக்கிளியின் நொடி நேர துப்பாக்கித் தாக்குதலில் பலியாகிப் போனார். அவரிடம் இருந்த சப் மிசின் கன்னும் போராளிகளால் கைப்பற்றப்பட்டது. இந்தக்கொலைக்கும், ஆல்பிரட் துரையப்பாவின் கொலைக்கும் தமிழீழ விடுதலைப்புலிகள் பொறுப்பேற்பதாக அறிக்கைவிடப்பட்டது.

அறிக்கையை தட்டச்சு செய்தவர் ஊர்மிளா, இவர் விடுதலைப்புலிகளின் முதல் பெண் உறுப்பினர், விடுதலைப்புலிகளுக்கிடையே முதல் பிளவு உண்டாகவும் காரண‌மாக அமைந்தவர் இவரே.

ஊர்மிளாவுடன் திருமணத்திற்கு அப்பாற்ப்பட்ட பாலியல் உறவில் உமா மகேசுவரன் ஈடுபட்டிருந்தார். அதனால் அவர் இயக்கத்தில் இருந்து நீக்கப்பட்டார்.

தான் நீக்கப்பட்டதை ஏற்காத உமா மகேசுவர‌ன் தன் தலமையில் இருப்பதே உண்மையான இயக்கம் என்றும் கூறினார். அவரது ஆதரவாளர் சுந்தரம் பெருமளவு ஆயுதங்களை மறைத்து வைத்துவிட்டார். எஞ்சியதை பிரபாகரன் கைப்பற்றினார்.

தொடரும்...

பிரபாவின் சிறு மற்றும் இளமைப் ப‌ராயம் - பாகம் ஒன்று



1954ம் ஆண்டு கார்த்திகை மாதம் 26ம் நாளில் தலைவர் பிரபாகரன் அவர்கள் பிறந்தார். அன்று பிரபலமாயிருந்த இணுவில் மகப்பேற்று நிலையத்தில் இவர் அவதரித்தார்.

பிரபாவின் தாய் மாமனான வல்லிபுரம் வேலுப்பிள்ளை தமிழரின் வரலாற்றை மாற்றப்போகும் அக்குழந்தைக்கு பிரபாகரன் என்னும் பெயரை இட்டார்.

1955 ஒக்டோபரில் திருவேங்கடம் வேலுப்பிள்ளை அவர்களுக்கு வேலையின் நிமித்தம் மீண்டுமொருமுறை மட்டக்களப்பிற்கு மாற்றல் கிடைத்தது.

முன்னதாக இதே போன்றதொரு வேலை நிமித்தமான‌ மாற்றலில் தான் 1953 செப்டெம்பரில் மட்டக்களப்பிலிருந்து அநுராதபுரத்துக்கு சென்றார்கள் அவர்கள்.

அநுராதபுரத்திற்கு மூன்று குழந்தைகளுடன் மாற்றலாகிச் சென்ற வேலுப்பிள்ளை தம்பதியினர் நான்காவது மழலைப் பிரபாகரனுடன் மீண்டும் மட்டக்களப்பிற்குத் திரும்பினர்.

முன்பு வேறு இடத்தில் இருந்த வேலுப்பிள்ளை குடும்பத்தினர் இம்முறை மட்டக்களப்பு தாமரைக்கேணி குறுக்கு வீதியில் 7ம் இலக்க வீட்டில் தமது வாழ்க்கையை ஆரம்பித்தனர். அதே தெருவில் 10ஆம் இலக்க வீட்டில் வசித்து வந்த பண்டிதர் சபாபதி என்பவர் வீட்டிலேயே சிறு வயதுப் பிரபாகரன் தனது நேரத்தை அதிகமாகச் செலவிட்டார்.

பாடசாலை செல்லும்வரை பண்டிதர் சபாபதியின் வீட்டில் ஆசிரியையான முத்துலெட்சுமியுடன் தனது நேரங்களை கழித்ததினால் பாடசாலை செல்லுமுன்பேயே பண்டிதர் சபாபதியிடமும் முத்துலெட்சுமியிடமும் தனது ஆரம்பக் கல்வியை ஆரம்பித்துவிட்டார் பிரபா.

பின்னர் 1960ம் ஆண்டு தை மாதம் 25ம் திகதி மட்டக்களப்பு அரசடி வித்தியாசாலை(இன்றைய மஹஜனாக் கல்லூரி)யில் தனது பாலர் வகுப்பினைப் படிக்க ஆரம்பித்தார்.

இவ்வாறு மட்டக்களப்பில் தனது ஆரம்பக் கல்வியை ஆரம்பித்த தலைவர் பிரபாகரன் 1963ல் தனது ஒன்பதாவது வயதில் தனது சொந்த இடமான வல்வெட்டித்துறைக்கு குடும்பத்துடன் வந்து சேர்ந்து வல்வெட்டித்துறை சிவகுரு வித்தியாசாலையில் தனது 3ம் தரத்தினை படிக்க ஆரம்பித்தார்.

முன்னதாக மட்டக்களப்பில் நான்கு வயதிலிருந்து எட்டு வயதுவரை தாயாருடன் கூட இருந்து வீட்டிற்கு பின்புறமாக குடியிருந்த 1958 இனக்கலவரத்தில் தனது கணவரை இழந்த அன்னப்பாக்கியம் ரீச்சரின் ஆதங்கத்தை செவிமடுத்த தலைவரின் பிஞ்சு மனதில் அந்தத் தாயின் சோகமும் அதற்குக் காரணமான சிங்கள இனவெறியும் ஆழப்பதிந்து கொண்டன.

மற்றவர்களுடன் உரையாடும்போது அவர்களின் பேச்சில் இடையூறு செய்யாமல் அமைதியாகக் அதனைக்கேட்டு உள்வாங்கிக்கொள்வது தாயாரிடமிருந்து பிரபா பெற்றுக்கொண்ட ஒரு நல்ல பண்பாகும்.

அன்று பிஞ்சு மனதில் பட்டகாயம் பின்பு அவர் வளர வளர சிங்கள இனவெறியின் பல்வேறு முகங்களும் இனவாத அடக்குமுறையினூடாகவே நடக்கின்றன என அவர் புரிந்து கொண்டபோதும் சிறு வயதில் மட்டக்களப்பில் தாமரைக்கேணியில் சந்தித்த அந்த விதவைத்தாயையும் அவரின் சோகத்தையும் எக்காலத்திலும் தலைவரால் மறக்கமுடியவில்லை.

தனது 3ம்,4ம்,5ம் வகுப்புகளை சிவகுரு வித்தியாசாலையில் கற்ற பிரபா 6ம் வகுப்பை சிதம்பரா கல்லூரியில் பயிலச் சென்றார். அப்போது அறிமுகமானவர் தான் வேணுகோபால் மாஸ்டர். இவரிடம்தான் பிரத்யேக வகுப்பிற்காக பிரபாகரன் போய்ச் சேர்ந்தார். ஏறத்தாழ 7 ஆண்டுகள் அவரிடம் பாடம் படித்தார் பிரபா.

முன்னாள் கைதடி நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழர் சுயாட்சி கழகத்தின் தாபகருமான நவரத்னத்தின் தீவிர ஆதரவாளர் இந்த‌ வேணுகோபால் மாஸ்டர்.

நிராயுதபாணிகளான தமிழர்களுக்கெதிராக ஆயுதத்தை பிரயோகிக்கும் சிங்கள இனவெறி அமைப்பினை ஆயுதம் கொண்டே எதிர்க்கமுடியும் என்பதில் தீர்க்கமான நம்பிக்கை கொண்டிருந்தவர். அவர்தான் துடிப்புமிக்க இளைஞ‌னாகவிருந்த பிரபாவிற்குள் விடுதலை வேட்கையை மூட்டியவர் என்றால் அது மிகையாகாது.

யாழ்ப்பாணத்திலிருந்த மூன்று ஆதிதிராவிடப்பள்ளிகளை சிங்கள பவுத்த பள்ளிகளாக மாற்றும் நிகழ்விற்கு வருகை தரும் அப்போதய கல்வி அமைச்சர் இரியகோலாவிற்கு எதிர்ப்பு தெரிவிக்க தமிழரசுக் கட்சியின் இளைஞர் பிரிவினர் தீவிரமாக இருந்தனர்.

காவல்படை குவிக்கப்பட்ட சூழலில் போராட்டத்தை கைவிடும்படி முன்னணி தலைவர்கள் கேட்டுக்கொள்ள இளைஞர்கள் விரக்திக்குள்ளாகிறார்கள். சிறு சிறு குழுக்களாக வெளியேறுகிறார்கள், அவர்களில் முக்கியமானவர்கள் குட்டிமணி தங்கதுரை. அறுபதுகளில் சாதாரண உணர்வாளர்களாக இருந்த பலர் எழுபதின் மத்தியிலும் எண்பதுகளிலும் ஈழப்போராட்டத்தின் தவிர்க்கமுடியாத அடையாள‌மாக மாற்றம் அடைகிறார்கள்.

இந்தக்கட்டத்தில் இருந்த துடிப்பான இளைஞர்களில் முக்கியமானவர்கள் பெரியசோதி, சின்னசோதி, தனபாலசிங்கம், சிவகுமாரன், சிறிசபாரத்தினம், பிரபாகரன். இவர்களில் வயதில் மிகவும் இளைய‌வர் பிரபாகரன். அதனாலேயே தம்பி என்றும் அழைக்கப்பட்டவர். தம்பி என்னும் சொல்லுக்கு தமிழர் மத்தியில் பிரபாகரன் என்ற அர்த்தம் உண்டு. தம்பியுடையான் படைக்கஞ்சான் என்ற பழமொழியை மெய்ப்பிக்க வந்தவர் போலும்.

ஈழப்போராட்ட வரலாற்றில் தந்தை செல்வநாயகத்தின் பங்கும் அவரது தமிழரசுக் கட்சியின் பங்கும் மிக முக்கியமானது. மலையகத்தமிழர்கள் உரிமைகள் தொடர்பாக எழுந்த கருத்து வேறுபாட்டின் அடிப்படையில் ஜிஜிபொன்னம்பலத்திடம் இருந்து பிரிந்து வந்து 1949ல் தமிழரசு கட்சியை தொடங்கினார்.

அடிப்படையில் காந்தியவாதியான செல்வநாயகம் இந்தியாவைப் போன்றே காந்திய வழியில் தமிழர்களின் உரிமைகளை மீட்டெடுக்க முடியும் என்பதில் உறுதியான நம்பிக்கை கொண்டிருந்தவர். கூட்டாச்சி முறையில் தீர்வு காணலாம் என்பதே தந்தை செல்வாவின் எண்ணமாக இருந்தது.

இந்திய விடுதலைப்போராட்ட வரலாற்றில் காங்கிரசு கட்சி வகித்ததொரு பாத்திரத்தை தந்தை செல்வாவின் தமிழரசுக்கட்சி வகித்தது என்பது குறிப்பிடத்தக்கதாகும். தமிழீழ போராட்டத்த்தின் அனைத்து குழுக்களும் மதித்த ஒரே தலைவர் தந்தை செல்வநாயகம் என்பது குறிப்பிடத்தகுந்தது.

ஆனால் சிங்களப் பேரினவாதிகளின் தொடர்ச்சியான சூழ்ச்சியினால் தொடர்ச்சியாக ஏமாற்றப்பட்டார். சாலமன் பண்டராநாயகே, டட்லி சேனநாயக, ஜெயவர்த்தனா என ஒவ்வொரு சிங்கள அரச தலைவர்களோடு உடன்படிக்கை செய்து கொண்டார். ஆனால் தேர்தல்கள் முடிந்த பின் சிங்களர்கள் அந்த ஒப்பந்தங்களை காற்றில் பறக்கவிட்டதும் தொடர்ச்சியான நிகழ்வுகளாகும்.

1972ல் தான் தனித் தமிழீழமே இனப்பிரச்சனைக்கு தீர்வு என்ற நிலைப்பாட்டிற்கு தந்தை செல்வா வருகிறார். அதையே வாக்குறுதியாக வைத்து 1975ல் காங்கேசன் துறை பாராளுமன்ற தொகுதியில் அவர் வென்றது தமிழீழ தேசத்திற்கான ஆணையை தமிழ் மக்கள் வழங்கிய நிகழ்வாகும்.

வேலுப்பிள்ளை அவர்களின் மச்சான் ஒருவரின் பெயர் ஞானமூர்த்தி. 1972ஆம் ஆண்டு மே 14ல் இவரது வீட்டில் கூடிய சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த ஒரு கூட்டத்தில்தான் தமிழ்க்கட்சிகள் தமிழர் ஐக்கிய கூட்டணியை (TUF) ஏற்படுத்தினர். அதுவே 1976ல் தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணி(TULF) ஆனது. தமிழர் விடுதலைக் கூட்டணியின் வல்வெட்டித்துறைப் பொறுப்பாளர் இந்த ஞானமூர்த்தி. ஞானமூர்த்திதான் தனது மகனின் அரசியல் மீதான ஆர்வத்துக்கு காரணம் என்று அவர் மீது வேலுப்பிள்ளைக்கு கடும் கோபம்.

இளம்பராயத்திலேயே அரசியலில் ஈடுபட்டதால் தகப்பனாரின் கோபத்துக்கு ஆளானார் பிரபா. படிக்கும்போது அரசியலுக்கு என்ன வேலை என்று பிரபாவை அவர் பல முறை கடிந்து கொண்டதுண்டு

கடவுள் பக்தி மிகுந்தவரும் சட்டதிட்டங்களை மதித்து நடப்பவருமான‌ வேலுப்பிள்ளைக்கு அரசியலில் எந்தவித விருப்பமும் இருந்தது கிடையாது. தம்முடைய பிள்ளைகள் நன்றாகப் படித்து உயர்ந்த பதவிகளுக்குச் செல்ல வேண்டும் என்பதே அவரது ஆசையாக இருந்தது. அதனால் பிரபாவை அவர் தனது குடும்பத்தின் கறுப்பு ஆடு என்று கூட சமயத்தில் திட்டியதுண்டு.

ஆனால் தனது மகன் ஒரு ஆயுதப் போராட்டத்துக்கு தலைமை தாங்கப் போகிறார் என்பதை தனது கனவிலும் நினைக்கவில்லை வேலுப்பிள்ளை. அது நிகழ்ந்தபோது உண்மையிலேயே நொறுங்கித்தான் போனார் அவர்.

1970ல் சிறிமாவோ பண்டாராநாயக்கா அரசில் கல்வி அமைச்சராக இருந்த பதியுதீன் கொண்டுவந்த தரப்படுத்துதல் சட்டம் தமிழர்கள் மத்தியில் குறிப்பாக இளைஞர்க‌ள் மத்தியில் பெரும் கோப‌த்தை தூண்டிவிட்டது.

இங்கேதான் சிங்கள இனவாதத்தின் நயவஞ்சகத்தை நாம் உணர வேண்டும். பதியுதீன் தமிழர் மற்றும் முஸ்லீம். தமிழருக்கு எதிரான ஒரு சட்டத்தை தமிழரைக் கொண்டே நிறைவேற்றினார்கள். தமிழர்களை பிளவுபடுத்த இஸ்லாமியர்களை ஒரு கருவியாக பயன்படுத்தும் யுக்தி அப்போதே தொடங்கிவிட்டது, ஈழத்தின் ஒரு பெரும் அவலம் இந்தத் துரோகம் அன்றிலிருந்து இன்று வரை தொடர்கிறது. ஆட்கள் மட்டுமே மாறுகிறார்கள். இனவெறி அடக்குமுறையை தமிழர் மீது பிரயோகிக்க ஒரு ஆயுதமாக மதப்பிணக்கை சிங்களம் கையாண்டு வருகிறது.

இந்த தரப்படுத்துதல் சட்டத்திற்கு தமிழரசுக் கட்சியிலிருந்த இளைஞர்கள் எதிராகத்திரண்டார்கள். பொன்னுதுரை சத்தியசீலன் தலைமையில் ஒன்று திரண்ட அவர்கள் அந்த ஆண்டு நவம்பர் மாதம் தமிழ் மாணவர் பேரவை என்ற அமைப்பைத் துவங்கினார்கள். சிவகுமாரன் அதன் தலைவரானார். இந்த சிவகுமாரனே தமிழீழ விடுதலைப்போரில் முதற் தற்கொடையாளியாவார். அவரின் மரணதினம் விடுதலைப்புலிகளால் மாணவர் தினமாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

தொடரும்...

Saturday, May 15, 2010

அறைந்தேன்..... இனியும் அறைவேன்...


தாயை இது உன் அம்மா அல்ல,
என் அம்மா என்றவனை,
ஓங்கி அறைந்தது குழந்தை....

நீ
என் தாய் மண்ணை உன் தாய் மண் என்றாய்...
அறைந்தேன் இனியும் அறைவேன்....

முள்ளி வாய்கால் நெருப்பில்-

என் தாய் குலத்தில் பத்தாயிரம் உயிர்களை...
பாலியல் நகங்களால் கிழித்தெறிந்தாய்...

பூவும் பிஞ்சும் காயும் கனியுமாய்..
என் தாய் மண்ணில் நாற்பதாயிரம் ...
உயிர்களை ஒரே நாளில் சாம்பல் ஆக்கினாய்...

உன்னிடம் இல்லாத புத்தனை என்னிடம்
எப்படி எதிர்பார்ப்பாய்?

அறைந்தேன்.....
இனியும் அறைவேன்...

குண்டுகளால் தாய்மார் கருப்பை கிழித்து.......
என் தாய் மண்ணில் ஈரிலக்கம் உயிர்களை அழித்த நீ.......
என்னை உன் வாயால் வன்முறையாளன் என்றாய்....

அறைந்தேன்.....
இனியும் அறைவேன்...

உடல் கிழிந்த தாயும்..
ஊர் கிழிந்த தாய் மண்ணுமாய்.......
நிற்கும் என்னிடம்...

இன்னுந்தான் இன்னுந்தான்....
சிங்களவன் மண் இது என்கிறாய்......

நீயும் மாற போவதில்லை......
அது வரை நானும் மாற போவதில்லை.....

அறைந்தேன்.....
இனியும் அறைவேன்...

- உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன்.

Thursday, May 13, 2010

''நான் சீமான் ஆனது எப்படி?'' - ஆனந்த விகடன்



சீமான்... கோபத் தமிழன்!

அநீதிக்கு எதிராக அனல் வார்த்தைகள் பேசும் சீமானின் பேச்சு, சுய மரியாதையின் அடையாளம். ஈழத்தின் இன அழிப்புக்கு எதிராக உலகெங்கும் ஒலிக்கும் குரல். சிவகங்கை பக்கத்துக் கிராமத்தில் பிறந்த சீமான், நவீன தமிழ் தேசிய அரசியலுக்குள் நுழைந்தது எப்படி?

''சிவகங்கை அருகில் அரணையூர் என் கிராமம். வானம் பார்த்த பூமியில் மிளகாயும் நெல்லும் பயிரிட்டு வாழும் எளிய வெள்ளாமைக் குடிகள் நாங்கள். உள்ளூர் தொடக்கப் பள்ளியில் பள்ளிப் படிப்பு. எங்கள் ஊரைச் சுற்றி பல்வேறு கிராமிய நாடகங்களும் கூத்துக்களும் நடக்கும். அதைப் பார்த்துவிட்டு வந்து அதேபோல வீட்டில்நடித்துக் காட்டுவேன். அது படிப்படியாக வளர்ந்து, கலை வடிவங்கள் மீது பெரிய ஈர்ப்பு வந்தது. இளையான்குடியில் பள்ளிப் படிப்புக்குப்போன போதும் கலை ஆர்வம் தொடர்ந்தது

எல்லாவிதச் சாதிய அடக்குமுறைகளும் உயிர்ப்புடன் இருந்த கிராமத்தில், ஊரின் நடவடிக்கைகள் எனக்குள் ஏராளமான கேள்விகளை உருவாக்கின. கண்மாய்ப் பாசனத்தில் விவசாயம் செய்யும் எங்கள் ஊரில், அதே கண்மாயில்தான் குளிப்பார்கள். கண்மாயின் ஓர் இடத்தில் ஒரு கல் போடப்பட்டு இருக்கும். அங்கு ஒரு சாதியினர் குளிப்பார்கள். கொஞ்சம் தள்ளி வேறொரு இடத்தில் இன்னொரு கல். அங்கு வேறொரு சாதியினர் குளிக்க வேண்டும். இப்படி, சாதிக்கு ஒரு கல் போட்டுக் குளித்த கண்மாய், சாதியின் கொடூரத்தை எனக்குப் போதித்தது.

இன்னொரு பக்கம், ஊர் எல்லையில் இருந்த காவல் தெய்வத்தை யாரும் திருடிவிடக் கூடாது என்பதற்காக தினமும் கொஞ்சம் பேர் இரவில் காவல் காப்பார்கள். 'மக்களைக் காக்க வேண்டிய காவல் தெய்வத்தையே நாம் காக்க வேண்டியிருக்கிறது என்றால், அப்புறம் என்ன அது காவல் தெய்வம்?' என்று இயல்பாகவே கேள்வி எழுந்தது. இந்தக் கேள்விகள் என்னை பெரியாரிடம் கொண்டுசேர்த்தன.

இளையான்குடி ஜாஹீர் உசேன் கல்லூரியில் இளங்கலை பொருளாதாரம் படித்தேன். அங்கு அறிமுகமான கார்ல்மார்க்ஸ், வர்க்க அடிப்படையில் இந்தச் சமூகத்தைப் பார்க்கக் கற்றுத்தந்தார். கல்லூரி முடித்ததும் 'சினிமாவுக்குப் போகிறேன்' எனக் கிளம்ப, இரண்டு மூட்டை மிளகாய் விற்ற பணத்தைக் கைச்செலவுக்குத் தந்து என்னைப் பேருந்து ஏற்றிவிட்டார்கள் அப்பாவும் அம்மாவும். சென்னைக்கு வந்து உதவி இயக்குநர் வாய்ப்புத் தேடல்களில் பலகட்டத் தோல்வி அடைந்த நிலையில், 'என்றும் அன்புடன்' இயக்குநர் பாக்கியநாதனைச் சந்தித்தேன். அப்போது அவரும் வாய்ப்பு தேடிக்கொண்டு இருந்தார். தங்குவதற்கு இடம் இல்லாத நிலை யில், பகல் எல்லாம் வாய்ப்புத் தேடிவிட்டு, இரவில் ஏவி.எம். அருகே ஒரு சுடுகாட்டில் படுத்துக்கொள்வோம். இதைப் படிக்கும் தம்பிகள், வாழ்வில் வெற்றி என்பது இவ்வளவு துயரமானதா என எண்ணிவிடக் கூடாது. அது இஷ்டப்பட்டு ஏற்ற கஷ்டம். இலக்கை அடையும்வரை தின வாழ்வின் சுமைகளை ஒருபொருட்டாகக் கருதாதது என் இயல்பு.


பிறகுதான் அப்பா மணிவண்ணனின் தொடர்பு கிடைத்து, அவரிடம் 'அமைதிப் படை', 'தோழர் பாண்டியன்' படங்களில் பணிபுரிந்தேன். 'ராசா மகன்' படத்துக்குக் கதை வசனம் எழுதும்போது, அப்பா பாரதிராஜாவின் தொடர்பு கிடைத்தது. அதன் மூலமாக, 'பசும்பொன்' படத்துக்குக் கதை வசனம் எழுதினேன். அப்போது, அண்ணன் பிரபுவைச் சந்தித்ததுதான் என் திரை வாழ்வின் திருப்புமுனை. அவர் கொடுத்ததுதான் 'பாஞ்சாலங்குறிச்சி' வாய்ப்பு. அதன் மூலம் இயக்குநர் ஆனாலும், என்னால் அடுத்தடுத்து வெற்றிகளைத் தர முடியவில்லை. 'இனியவளே', 'வீரநடை' இரண்டும் தோல்விப் படங்கள் ஆயின. ஆனாலும், மனம் தளராமல் புத்தகங்கள் படித்துக்கொண்டும், உடற்பயிற்சி செய்துகொண்டும் ஏழு வருடங்கள் தன்னம்பிக்கையோடு இருந்தேன். இறுதியாக வந்தது 'தம்பி' திரைப்பட வாய்ப்பு. அது மாபெரும் வெற்றி பெற்றது.

இந்தக் காலகட்டத்தில் எல்லாம் நான் பெரியார் திராவிடர் கழக மேடைகள், மார்க்சிய மேடைகளில் அடக்கப்படும் தமிழர் உரிமைகள் தொடர்பாகவும், தமிழ் இன நலன் சார்ந்தும் பேசத் தொடங்கி இருந்தேன். இலங்கையில் அழிக்கப்படும் தமிழ்ச் சொந்தங்களின் குரலை, உலகம் முழுக்கக் கொண்டுசேர்ப்பது என் கடமை எனக் கருதினேன். இந்தச் சூழ்நிலையில்தான் 'வாழ்த்துக்கள்' படம் முடிந்திருந்த நிலையில், தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரனிடம் இருந்து அழைப்பு வந்தது. என் அரசியல் வாழ்வின் திருப்புமுனைத் தலைவனைச் சந்தித்த தருணத்தை என்னால் மறக்கவே முடியாது. குழந்தையின் சிரிப்பும், போராளியின் கம்பீரமும், தலைவனின் கனிவும் நிரம்பிய மனிதர் தலைவர் பிரபாகரன். அப்போது என் 'வாழ்த்துக்கள்' படம் வெளிவந்து தோல்வி அடைந்திருந்தது. 'நமக்கு எதுக்கு இந்த பூ, கவிதை எல்லாம். அடிக்கணும். திரையிலும் அடிக்கணும், தரையிலும் அடிக்கணும்' என்றார் தலைவர் வெடிச் சிரிப்போடு.

தன் நலம் கருதாத தலைவனைக்கொண்ட ஈழத் தமிழினத்தை, சிங்கள இனவெறியர்களும் இந்திய வல்லாதிக்கமும் சேர்ந்து அழித்தபோது, தமிழர்கள் பதைபதைத்தனர். அப்போது, தமிழ்த் திரை உலகினர் ராமேஸ்வரத்தில் நடத்திய போராட்டத்தில் நான் பேசிய பேச்சு, என்னை உலகம் முழுக்கக் கொண்டுசேர்த்தது. அதற்கு முக்கியக் காரணம், சன் தொலைக்காட்சி, என் 20 நிமிடப் பேச்சை நேரலை செய்ததுதான். பிறகு, எங்கெல்லாமோ கூட்டம் போட்டோம், அழிக்கப்படும் தமிழனைக் காக்க. ஆனால், ஆண்டாண்டு காலமாக ஆண்ட தமிழ்ப் பரம்பரையை நந்திக் கடலோரம் கொத்துக் குண்டுகள் வீசிக் கொன்றார்கள். கேட்க நாதி இல்லை. கேட்ட என்னைத் தூக்கிச் சிறையில் போட்டார்கள். சீமான் பேசினால், அது தங்கள் வாக்கு வங்கியைப் பாதிக்கும் என அச்சப்பட்ட அரசு, என்னை நான்கு முறை கைது செய்து சிறையில் அடைத்தது.

எதிர்ப்பு என்பது தனி நபரிடம் இருந்து வருகிறபோது அது எழும் இடத்திலேயே அடக்கப்படுகிறது. அதை ஒரு கூட்டு நடவடிக்கையாக, இயக் கமாகச் செய்கிறபோது, எதிர்ப்பின் அடர்த்தி இன்னும் கூடுகிறது. அதனால்தான் பறிக்கப்பட்ட தமிழர் நலன்களை மீட்டெடுக்கத் தமிழ் இளைஞர்களின் எழுச்சி இயக்கமாக வரும் மே 18-ம் தேதி மதுரையில் உதயமாகிறது 'நாம் தமிழர்' அரசியல் இயக்கம்.

ஈழப் பிரச்னை மட்டுமல்ல, தமிழ் மக்களின் நலன் சார்ந்த அரசியலே இங்கு வெற்றிடமாக இருக்கிறது. இந்த அரசியல் வெற்றிடத்தைக் கற்றவர்கள் நிரப்ப வேண்டும். இல்லை என்றால், கயவர்கள் நிரப்பிவிடுவார்கள். அதற்கான இயக்கம்தான் 'நாம் தமிழர்'. இது மற்றுமோர் அரசியல் கட்சி இல்லை. மாற்று அரசியல் புரட்சி. எந்த நாளில் நாங்கள் வீழ்ந்தோம் என நினைத்தீர்களோ, அதே நாளில் நாங்கள் எழுகிறோம். வென்றாக வேண்டும் தமிழ். ஒன்றாக வேண்டும் தமிழர். நாம் தமிழர்!''

நம்பிக்கைத் துரோகிகள்...(தினமணி தலையங்கம் உணர்திடும் உண்மை என்ன? )


இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கும் ராணுவத்துக்கும் நடந்த போர் முடிந்து ஓராண்டு நிறைவடையும் இந்த நேரத்தில் வேறொரு விதமான தாக்குதலை தமிழர்கள் மீது தொடுத்திருக்கிறது ராஜபட்ச அரசு.தமிழர்கள் உள்ளிட்ட சிறுபான்மை மக்களுக்கு கெüரவமான பிரதிநிதித்துவம் அளித்துவந்த விகிதாசார பிரதிநிதித்துவ முறையைக் கைவிடுவதற்கு இப்போதுள்ள அரசியல் சட்டத்தைத் திருத்துவது என்பதுதான் அது.இந்தியா உள்ளிட்ட நாடுகளில் கடைப்பிடிக்கப்படும், தொகுதியில் அதிக வாக்குகள் பெற்று முதலிடம் பிடிக்கும் வேட்பாளரே வெற்றியாளர் என்ற தேர்தல் முறைக்கு இலங்கையும் மாறவிருக்கிறது.மேலோட்டமாகப் பார்க்கும்போது இதில் என்ன குறை என்றே கேட்கத் தோன்றும். இந்தியாவைப் போல பல்வேறு மொழி, இன குழுக்கள் அதிக எண்ணிக்கையில் இல்லை என்றாலும் இலங்கையில் சிங்களர், தமிழர்கள், முஸ்லிம்கள் என்ற 3 இனங்களே முக்கியமானவை. கல்வியிலும் பொருளாதாரத்திலும் முன்னேறிய கடும் உழைப்பாளிகளின் வளர்ச்சியை சிங்களர்களால் சகித்துக் கொள்ள முடியாமல் போனதால்தான் அங்கு இனப் பகையே மூண்டது.இப்போது தமிழர்களின் பகுதிகளில் சிங்களர்களைக் குடியமர்த்தும் நடவடிக்கைகள் நேரடியாகவும் மறைமுகமாகவும் வேகவேகமாக நடந்து வருகின்றன. அதற்காகவே இன்னமும் ஏராளமான தமிழர்கள் முள்வேலி முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். வடக்கிலும் கிழக்கிலும் தமிழர்கள் விட்டுவிட்டுப் போன ஊர்களிலும் வீடுகளிலும் இப்போது சிங்களர்கள் குடியிருக்கின்றனர். விவசாயம் செய்யவும் அவர்களுக்கு நிலங்கள் தரப்படுகின்றன. இந்தப் பின்னணியில்தான் விகிதாசாரப் பிரதிநிதித்துவத்துக்கு முற்றுப்புள்ளி வைத்து, அதிக வாக்குகள் பெற்ற வேட்பாளரை வெற்றியாளராக அறிவிக்க சட்டம் திருத்தப்படுகிறது. தமிழர்களின் பகுதிகளில்கூட சிங்கள வேட்பாளர் அதிக எண்ணிக்கையில் வாக்குகளைப் பெறுவது என்பது இனி சாத்தியமே. சிங்களர்களைக் குடியேற்றுவதால் மட்டும் உடனடியாக இதைச் சாதிக்க முடியாது என்பதால், இப்போதுள்ள நாடாளுமன்ற, சட்டமன்றத் தொகுதிகளையும் பிரித்து மறுவரையறை செய்யும் பணியும் தொடங்கவிருக்கிறது.அதில் தமிழர்கள் நெருக்கமாக வசிக்கும் பகுதி ஒரே தொகுதிக்குள் வராமல் சிங்களர்கள் பெரும்பான்மையினராக உள்ள தொகுதிகளில் பரவலாகச் சேர்க்கப்படும் முயற்சிகள் தொடங்கிவிட்டன.225 உறுப்பினர்களைக் கொண்ட இலங்கை நாடாளுமன்றத்தில் தமிழர்களுக்குப் பிரதிநிதித்துவம் குறைந்துவிடுமே என்று கூறுவோருக்குப் பதில் அளிக்கவே, 25 உறுப்பினர்களைக் கொண்ட செனட் என்ற மேலவையைக் கொண்டு வரப்போவதாக அரசு அறிவித்துள்ளது. இதில் அறிஞர்களும்,சிறுபான்மைக் குழுக்களின் பிரதிநிதிகளும் இடம் பெறுவர் என்கிறது அரசு. இதில் அரசின் நியமன உறுப்பினர்களும் இருப்பார்கள்.என்னதான் பிரதிநிதித்துவம் தரப்பட்டாலும் இந்த அவைக்கு அதிகாரங்கள் குறைவுதான். எனவே இதில் இடம் பெறுகிறவர்கள் அமைச்சர்களாக நியமிக்கப்பட்டாலும் கூட இந்த அவையின் அந்தஸ்து என்பது நாடாளுமன்றத்தைப் போல இல்லை என்பது வெளிப்படை.அதிபராக இருப்பவர் இருமுறைதான் அந்தப் பதவிக்கு வர முடியும் என்று இப்போதுள்ள அரசியல் சட்டத்தைத் திருத்தவும் நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. இது, இப்போதுள்ள அதிபர் மகிந்த ராஜபட்சவை ஆயுள்கால அதிபராக்கும் முயற்சி என்றே கூறிவிடலாம்.இந்த திருத்தங்களின் நோக்கம் எல்லோருக்கும் தெரிந்த நிலையில், இனப் பிரச்னைக்குத் தீர்வு காணும் நோக்கில்தான் இந்த நடவடிக்கைகள் என்று இலங்கை அரசு கூறுவதுதான் இரக்கமற்ற நகைச்சுவை.இலங்கை இனப் பிரச்னைக்கு அரசியல் தீர்வு காண ராஜீவ் காந்தியும் ஜெயவர்த்தனவும் செய்துகொண்ட ஒப்பந்தம் பற்றி இப்போது பேச்சே கிடையாது.தமிழர்களை இலங்கை மீது உரிமையுள்ள இனமாக அங்கீகரிக்கும் பேச்சோ, வடக்கும் - தெற்கும் அவர்களுடைய பாரம்பரிய தாயகம் என்பதை ஒப்புக்கொள்ளும் பெருந்தன்மையோ, தமிழர்களின் பகுதிகளுக்கு அதிக அதிகாரங்களை வழங்கி வளப்படுத்தும் நோக்கமோ, வடக்கையும் தெற்கையும் இணைத்து தமிழர்களின் கோரிக்கைகளை முழுமையாக இல்லாவிடினும் ஆறுதல் கொள்ளும் வகையிலாவது நிறைவேற்றும் நல்லெண்ணமோ இலங்கை அரசுக்கு இல்லை என்பது அப்பட்டமாக வெளிப்படுகிறது.இந்த நிலையில்,கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் தமிழர்களுக்கு இலங்கை அரசு எத்தகைய சலுகைகளையும் சமவாய்ப்புகளையும் இனி அளிக்கப்போகிறது என்பது மிகப்பெரிய கேள்விக்குறியாக இருக்கிறது.தமிழர்களைத் தங்களுடைய சகோதரர்களாக பாவிக்காமல் எதிரிகளாகவே கருதுகிறது இலங்கை அரசு என்று அதன் சில நடவடிக்கைகள் உணர்த்துகின்றன.ராணுவத்துடனான போரில் இறந்த வீரர்களின் சமாதிகளை வடக்கிலும் கிழக்கிலும் அமைத்த விடுதலைப் புலிகள், மாவீரர் தினத்தில் அவர்களுக்கு அஞ்சலி செலுத்திவந்தனர். இப்போது அந்தச் சமாதிகளை இடித்து அப்புறப்படுத்திவிட்டு இலங்கை ராணுவ வீரர்களுக்கு நினைவிடங்களை அமைத்து வருகிறது இலங்கை அரசு. தமிழர்களோடு சமரசமாகப் போக வேண்டிய அவசியமும்கூட, கடமையும் தங்களுக்கு இருப்பதாக இலங்கை அரசு கருதவில்லை என்பதையே இந்தச் செயல்கள் உணர்த்துகின்றன.இலங்கையில் இப்போது நிலவும் அதிபர் ஆட்சிமுறை என்பதே பெரும்பான்மையினரின் ஆட்சிமுறை என்பதுதான் உண்மை. பெரும்பான்மை சிங்களவரின் ஆதரவைப் பெற்றால் மட்டுமே, அமெரிககாவில் பராக் ஒபாமா அதிபரானதுபோல, ஒரு தமிழர் இலங்கையின் அதிபராக முடியும். இப்போது நாடாளுமன்றத்திலும் தமிழர்களும் சிறுபான்மையினரும் குரலெழுப்ப முடியாத நிலைமைக்கு புதிய அரசியல் சட்டத்திருத்தம் வழிகோலப் போகிறது.இத்தனைக்கும்பிறகு இந்திய அரசு இது அன்னிய நாட்டு விவகாரம் என்று தலையிடாமல் தவிர்ப்பது ஏன் என்பதும், அப்பாவி ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாகச் செயல்படத் தயங்குவது ஏன் என்பதும் புதிராக இருக்கிறது. "விடுதலைப் புலிகளைத்தான் எதிர்க்கிறோம். அப்பாவி ஈழத் தமிழர்களை அல்ல' என்று சொன்னதெல்லாம் பொய்தானே?தமிழனென்று சொல்லடா தலைநிமிர்ந்து நில்லடா