Labels

Tuesday, November 2, 2010

சுப. தமிழ்ச்செல்வன் அவர்களுக்கு பொட்டு அம்மான் இரங்கல்

பிரான்சில் பிரிகேடியர் சுப.தமிழ்ச்செல்வன் அவர்களின் சிலை திறப்பு



பிரான்சு நாட்டு மக்களுக்கு முக்கியமாக கருதப்படும் புனிதர் அனைவரின் பெருவிழா நாளான நவம்பர் 1 அன்று பிரான்சில் தமிழ்மக்கள் அதிகமாக வாழ்கின்ற இடங்களில் ஒன்றான லாக்கூர்னோவ் என்னும் இடத்தில் தமிழீழ அரசியல்துறைப்பொறுப்பாளர் பிரிகேடியர் தமிழ்ச்செல்வன் அவர்களுக்கு சிலை திறப்பு நிகழ்வு நடைபெற்றது.

லாக்கூர்னோவ் மாநகரசபை வளாகத்தின் அருகமையில் 01.11.2010 திங்கட்கிழமை மதியம் 13.00 மணிக்கு மாவீரர் பிரிகேடியர் தமிச்செல்வனுக்கும், அவருடன் உயிர்நீத்த ஏனைய மாவீரர்களுக்கு பொதுச்சுடர் ஏற்றப்பட்டன. ஈகைச்சுடரினை தமிழ்ச்செல்வனின் சிறியதாயார் ஏற்றி வைக்க தமிழே உயிரே வணக்கப்பாடல் நடனம் நடைபெற்றது அதனைத்தொடர்ந்து தமிழ்ச்செல்வன் பற்றியும் சமாதானத்தின் புறாவாக சர்வதேசமெங்கும் திரிந்ததையும் சர்வதேச ராஐதந்திரிகள் உட்பட அரசியல்வாதிகள் பலவற்றை சந்தித்தது பற்றியும் தமிழீழத்தின் நிலவரங்கள், தமிழ்மக்களின் அரசியல் நிலைப்பாடுகள் பற்றியும் தெரிவித்திருந்ததையும் மாபெரும் இனவழிப்பை நடாத்த சிங்கள அரசு தயாரிப்பில் ஈடுபட்டுவருதும் பல்லாயிரக்கணக்கான் தமிழ்மக்கள் படுகொலை செய்யப்படப்போகின்றார்கள் என்பதையும் எடுத்துக்கூறிவந்ததையும் அவர் கூறியது போன்று இன்று எமது மண்ணில் மாபெரும் இனப்படுகொலை நடந்தேறியதையும் இதற்கான தயாரிப்பில் ஒரு நடவடிக்கையே தமிழ்ச்செல்வன் வீமானக்குண்டு வீச்சால் கொல்லப்பட்டதும். 2007 ம் இதே காலப்பகுதியில் தமிழ்ச்செல்வன் இங்கு வருகை தர இருந்ததையும் தெரிவிக்கப்பட்டது.

தமிழில் லாக்கூர்னோவ் தமிழ்ச்சங்க தலைவர் உரையாற்றியதும், பிரெஞ்சு மொழியிலும் இன்னும் சற்று விரிவாக உரையாற்றப்பட்டது. திறான்சி, தமிழ்ச்சங்க மாணவியர் பிரிகேடியர் தமிழ்ச்செல்வன் மற்றும் மாவீரர்களின் நினைவுப்பாடலுக்கு நடனம் வழங்கிய போது பல மக்களின் கண்கள் குழமாகிப்போனதும், கண்ணீர்விட்ட காட்சி மக்கள் நெஞ்சில் இவர்களின் நினைவு எவ்வளவு தூரம் உள்ளது என்பதை காணக்கூடியதொரு காட்சியாக இருந்தது.

இத்துடன் சிலையை வடித்து தந்த பிரஞ்சுப்பெண்மணி தமிழ்ச்செல்வனின் படத்தை மட்டும் வைத்து அல்லாமல் நண்பர்கள் அவர் பற்றி கூறிய செய்திகள் குணாதியங்கள் பற்றி கூறியதையும் வைத்தே தான் மனதில் ஒரு கற்பனையை அவர்பற்றி வளர்த்துக்கொண்டதாகவும் அதன் வடிவமே இது என்று கூறினார்.

லாக்கூர்னோவ் மற்றும் ஒபவில்லியே என்ற அயல்கிராமத்தை சேர்ந்த உதவி முதல்வர்கள் கலந்து கொண்டு உரையாற்றியிருந்தனர். இன்னும் பல்வேறு நாட்டைச்சேர்ந்தவர்களும் உரையாற்றியிருந்தனர். அவர்களின் கருத்துக்கள் சமாதானமும், அமைதியும், எவ்வளவோ முக்கியமானது என்றும் அதே நேரத்தில் அடிமைநிலையற்ற சுதந்திரமான வாழ்வும் ஒவ்வொரு மனிதனுக்கும், இனத்திற்கும் முக்கியமானது என்றும், அல்ஐpரியா நாட்டு நண்பர் ஒருவர் உரையாற்றும் பொழுது தம்முடைய மண்ணிலும் இவ்வாறானதொரு நிகழ்வு நடைபெற்றது என்றும் தாமும் எத்தனையோ இழப்புகளின் பின்பே சுதந்திரமடைந்துள்ள இனமாக உள்ளோம் என்றும் இவ்வாறானதொரு நிகழ்வில் கலந்து கொள்வதானது தனக்கு பெருமை தருகின்றது என்று குறிப்பிட்டிருந்தார்.

இதன் பிற்பாடு பிரிகேடியர் தமிழ்ச்செல்வனின் சிலையை அவரை இரண்டு தடவை தாயகத்திலும், பின்னர் பேச்சுவார்த்தையின் போது சந்தித்து கொண்டவரும் லாக்கூர்னோவ் நகரசபை உறுப்பினரும், தமிழ்மக்களின் நண்பருமாகிய திரு. அந்தோனியோ ருசெல் அவர்கள் பலத்த கரகோசத்திற்கு மத்தியில் திறந்து வைத்தார்.

அதனை தொடர்ந்து பலநூற்றுக்கணக்கான மக்கள் நீண்ட வரிசையாக நின்று மாவீரர்சிலைக்கு மலர்வணக்கம் செலுத்தினர். அரசியல்வாதிகள் பலர் கட்சிபேதமின்றி கலந்து கொண்டதோடு இதுவொரு அரசியல் பிரச்சாரமாக எடுத்துக்கொள்ளாமல் ஒரு மனிதநேய நடிவடிக்கை என்றும் கூறினர். நந்தியார் தமிழ்சங்க மாணவியர்கள் எழுச்சி நடனங்கள் வழங்கியிருந்தனர்.

சிலை செய்த பிரெஞ்சுப்பெண்மணிக்கு தமிழ்ச்சங்கம் நடராஐர் சிலை கொடுத்து மதிப்பளித்தனர். இந்த சிலை திறப்பிற்கு பொருளாதரா உதவி செய்த அனைவருக்கும் இந்நேரத்தில் நன்றியை சங்கத்தினர் தெரிவித்தனர். மாலை 17. 00 மணிவரை மக்கள் இந்த நிகழ்வுக்கு வந்துகொண்டிருந்தனர். ஆயிரத்திற்கு மேற்பட்ட தமிழ்மக்கள் கலந்து கொண்டிருந்தனர்.

தமிழீழ அரசியல்துறைப்பொறுப்பாளருக்கு சிலை வைக்கும் நிகழ்வை தடுப்பதற்கு பல்வேறான நடவடிக்கையை சிறீலங்கா அரசானது தனது தூதரகத்தின் ஊடாக பிரான்சு நாட்டிற்கு கொடுத்திருந்ததும் இதற்கு சில கோடாலிகாப்புகள் துணைபோயிருந்ததும், சிங்களவர் சிலர் அடாவடித்தனங்களை மேற்கொண்டிருந்த போதும் இன்று உயிர் ஈந்த சமாதானப்புறாவுக்கு சிலை எழுப்பியும், தாயகத்தில் மனிநேயமற்ற கொடிய அரசாட்சியில் எமது மாவீரர்கள் துயிலும் இல்லமும், அவர்கள் உடல்களும் அழிக்கப்படும் வேளை புலம்பெயர் மண்ணில் மனிதநேயமிக்கவர்களால் அந்த மாவீரர்களுக்கு சிலையும், நினைவுச்சின்னங்களும் வைக்கபடுவது பெருமை கொள்கின்ற அதேவேளை பிரான்சு வாழ் தமிழீழ மக்கள் வரலாற்றில் மீண்டும் மற்றொரு பதிவையும் இன்று பதிவாக்கிக் கொண்டுள்ளனர்.

Monday, November 1, 2010

சுப. தமிழ்ச்செல்வன் அவர்களுக்கு தலைவர் கலைஞரின் இரங்கல்

சுப. தமிழ்ச்செல்வன் அவர்களுக்கு தலைவர் பிரபாகரன் வழங்கிய இரங்கல்



கடந்த 02.11.2007 அன்று வீரச்சாவடைந்த பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் உள்ளிட்ட ஏழு மாவீரர்களின் இரண்டாம் ஆண்டு நினைவு நாள் இன்று. சிறீலங்கா அரச பயங்கரவாதத்தால் 2007 நவம்பர் 2 ஆம் திகதி‌ வீரச்சாவடைந்த மாவீரர்களின் விபரம் :

* பிரிகேடியர் தமிழ்ச்செல்வன் என்று அழைக்கப்படும் பரமு தமிழ்ச்செல்வன். (சொந்த முகவரி: யாழ். மாவட்டம், தற்காலிக முகவரி: கிளிநொச்சி மாவட்டம்)

* லெப். கேணல் அன்புமணி அல்லது அலெக்ஸ் என்று அழைக்கப்படும் முத்துக்குமாரு சௌந்தரகிருஸ்ணன் (சொந்த முகவரி யாழ். மாவட்டம்)

* மேஜர் மிகுந்தன் என்று அழைக்கப்படுமம் தர்மராசா விஜயகுமார் (சொந்த முகவரி: யாழ். மாவட்டம்)

* மேஜர் கலையரசன் அல்லது நேதாஜி என்று அழைக்கப்படும் கருணாநிதி வசந்தகுமார் (நிலையான முகவரி: யாழ். மாவட்டம், தற்காலிக முகவரி: ஜெயந்திநகர், கிளிநொச்சி)

* லெப். ஆட்சிவேல் என்று அழைக்கப்படும் பஞ்சாட்சரம் கஜீபன் (யாழ். மாவட்டம்)

* லெப். மாவைக்குமரன் என்று அழைக்கப்படும் முத்துக்குமாருக்குருக்கள் சிறீகாயத்திரிநாத சர்மா

* மேஜர் செல்வம்.

பிரிகேடியர் தமிழ்ச்செல்வனுக்கு வீர வணக்கங்கள்


தமிழ்மக்களின் அரசியல் சுதந்திரத்துக்காக இருபத்து மூன்று ஆண்டுகள் களத்திலும் அரசியல் தளத்திலும் பணிசெய்த பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் அவர்கள் வீரச்சாவை எய்திவிட்டார்.

மரணிக்கும் போது நாற்பது வயதை எட்டிய சு.ப.தமிழ்ச்செல்வன் அவர்கள் பதினேழாவது வயதில் ஒரு போராளியாக விடுதலை இயக்கத்தில் இணைந்து கொண்டு தனது இருபத்து நான்காவது வயதில் செயல் திறன்மிக்க விடுதலை இயக்கத்தின் அரசியல்துறைப் பொறுப்பாளர் என்ற பொறுப்பை ஏற்றதிலிருந்து அவர் மரணிக்கும் வரையான பதினான்கு ஆண்டுகளாகத் தனது பணியை செவ்வனே நிறைவேற்றியுள்ளார்.

பிரிகேடியரைப் பொறுத்த வரையில் அவரை மிகவும் நேசித்த தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்களால் யதார்த்த பூர்வமான சிந்தனையையும், செயலையும் புடம் போடக்கூடிய செயலினூடாக அறிவுபூர்வமாக வளர்க்கப்பட்டார்.

அதனால் தான் பிரிகேடியரால் சமகாலத்தில் அரசியல் ரீதியாகவும் படைத்துறை ரீதியாகவும் செயற்பட முடிந்தது. அத்தோடு அவரது ஆற்றலானது செயல் பூர்வ அறிவாக மிளிர்ந்தது. அரசியல் ரீதியில் தமிழ் மக்களின் விடுதலை குறித்து ஒரு எத்தனிப்பை செய்து கொண்டு படைத்துறை ரீதியாக பலம் பெறுவதொன்றே தமிழ்மக்களின் விடுதலையை செயல் பூர்வமானதாக்கும் என்ற தேசியத் தலைவர் அவர்களின் விடுதலைச் சிந்தனையை அனைத்துலக மேடைகளில் அவரால் உறுதியுடன் முன் கொண்டு செல்ல முடிந்தது.

இத்தகையதொரு அளப்பரிய பணியை தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன் அவர்கள் தாயகத்திலும் புலம்பெயர்ந்த தமிழ்மக்களிடையேயும் அனைத்துலக சமூகத்தின் மத்தியிலும் ஆற்ற முடிந்ததென்றால் அவர் களத்தில் உருவாக்கப்பட்ட ஒரு இராஜதந்திரி என்ற தகைமையே அவருக்கு மூலகாரணமாக அமைந்தது.

பிரிகேடியரின் இருபத்துமூன்றாண்டு கால விடுதலைப் பணியை எதிர்காலத்தில் ஆய்வு செய்கின்ற எந்தவொரு வரலாற்றாசிரியரும் அவருடைய விடுதலைப் பணியை பல்துறைகளினூடாகவும் ஆய்வு செய்யவேண்டியிருக்கும்.

ஏனெனில் அவருடைய விடுதலைப் பணியானது இரு கூறுகளாக நோக்கத் தக்கதாகவுள்ளது.

அரசியல் ரீதியிலானது.
படைத்துறை ரீதியிலானது

1984 ஆம் ஆண்டு தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தில் போராளியாக இணைந்து கொண்ட அவர் அமைப்பின் ஆரம்பகால வளர்ச்சியில் முழுமையாக ஈடுபட்டுள்ளார்.

ஆரம்பத்தில் போராட்டத்தின் பின் தளமாக தமிழ்நாடு இருந்தபோது தமிழ்நாட்டில் ஒரு மருத்துவப் போராளியாக செயற்பட்ட அவர் பின்னர் களத்திற்கும், தளத்திற்குமிடையே தேசியத் தலைவர் அவர்களுக்கான இணைப்புச் செயற்பாட்டாளராக செயற்பட்டதன் மூலமாக அவரது ஆளுமை அன்றே தேசியத் தலைவர் அவர்களால் இனங்காணப்பட்டுள்ளதுடன் முதன்மை யானதாகவுமிருந்துள்ளது.

பிரிகேடியரின் விடுதலைப் பணியை ஒருகால ஒழுங்கில் நோக்கும்போது அமைப்பில் இணைந்து அரசியல்துறைப் பொறுப்பாளராக பொறுப்பேற்ற 1984 ஆம் ஆண்டிலிருந்து 1993 ஆம் ஆண்டு காலப்பகுதி வரையிலான அவரது முதன்மையான படைத்துறை ரீதியிலான செயற்பாட்டையும் 1993 இலிருந்து அவர் வீரச்சாவடைந்த 2007 வரையான காலத்தையும் இரு கூறுகளாக நோக்கலாம்.

ஏனெனில் 1984 ஆம் ஆண்டிலிருந்து 1993 ஆம் ஆண்டு வரையான காலத்தில் படைத்துறை ரீதியாக தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் மிக முக்கியமான ஒரு காலகட்டத்தில் செயற்பட்டுள்ளார். இக்காலப்பகுதியிலேயே தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் முக்கியத்துவம் மிக்க இந்திய ஆக்கிரமிப்புக் கெதிரான இந்திய – புலிகள் போர் நடைபெற்றது.

இந்திய – புலிகள் போரில் அவர் தென்மராட்சி கோட்டத்தின் தளபதியாக நின்று இந்திய இராணுவம் வெளியேறும் வரை சமராடியுள்ளார்.

இந்திய ஆக்கிரமிப்புப் படைகளுக்கு எதிராக அக்காலத்தில் அவர் ஒரு வீரம் செறிந்த போரை நடாத்தியுள்ளதுடன் இன்று அவரோடு கூடவே நின்று களத்தில் போராடிய போராளிகள், தளபதிகள் நினைவு கூருகின்ற வகையில் தலைமையோடு அவருக்கான தொடர்பு துண்டிக்கப்பட்ட நிலையிலும் எந்தவித சிக்கலுமின்றி போராளிகளை வழி நடாத்தியமை எந்தவொரு சூழ்நிலையிலும் திறமையாக படை நடத்தும் அவரது திறனை வெளிப்படுத்துகின்றது.

அத்தோடு இக்காலப்பகுதியில் குறைந்தளவு போராளிகளையும், குறைந்தளவு ஆயுத தளவாடங்களையும் கொண்டு இந்தியப் படைகளுக்கு எதிராகப் பல்வேறு தாக்குதல்களை வெற்றிகரமாக மேற்கொண்டதுடன் பின்னர் தலைமையோடு தொடர்பினை ஏற்படுத்தியதன் மூலம் ஒரு வரலாற்று நெருக்கடிமிக்க காலத்தில் சிறப்பாகச் செயற்பட்டுள்ளார்.

உண்மையில் ஒரு சிகரெட்டைப் புகைத்து முடிப்பதற்குள் புலிகளை அழித்து விடுதலைப் போரை முடிவுக்குக் கொண்டுவர முடியும் என்ற இந்திய அரசின் எண்ணத்திற்கு யாழ்ப்பாணத்திற்குள் நின்றபடி இந்தியப் படை வெளியேறும் வரை புலிகள் குறித்த இந்திய அரசின் கணிப்பீடுகளையும் அனுமானங்களையும் பொய்த்துப்போக வைத்த புலிகள் இயக்கத்தின் திறனில் பிரிகேடியரின் பங்கு அளப்பரியது.

இதேவேளை பிரிகேடியரின் இரண்டாவது கட்ட (படைத்துறை ரீதியிலான) செயற்பாட்டில் 1991 ஆம் ஆண்டுக் காலப்பகுதியில் யாழ். மாவட்ட சிறப்புத் தளபதியாக பொறுப்பேற்றுச் செயற்பட்ட காலம் முதன்மை பெறுகிறது.

இக்காலப்பகுதி மிக முக்கியமான ஒரு காலப்பகுதியாகும். இக்காலப் பகுதியிலேயே, முதலில் ஒரு கெரில்லா இயக்கமாக இனங்காணப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் மெதுவாக மரபு வழிப்படையாகத் தம்மை நிலைநிறுத்திக் கொள்ள முயன்றனர்.

இக்காலப் பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் படையணிகள் ரீதியாகவும் போர் முறைகளிலும் மாற்றங்களைச் சந்தித்ததுடன் ஒரு அரை மரபு வழிப்படையாக மாற்றம் கண்டு வந்தது.

அதாவது ஒரு மரபு வழிப்படைக்கு இருக்க வேண்டிய படைக்கட்டுமானங்கள் முழுமை பெறாத நிலையில் ஒரு நவீன மரபு வழிப்படைகளை எதிர்த்துக் களமாட வேண்டிய சூழலில் யாழ். மாவட்டச் சிறப்புத் தளபதியாக பிரிகேடியர் செயற்பட்டார்.

அதாவது போராட்டத்தின் பிரதான தளத்தினைப் பாதுகாக்கும் தளபதியாக செயற்பட்டார்.

அத்தோடு அவர் யாழ். மாவட்டத் தளபதியாக பணியாற்றிய அக்காலப் பகுதியில் வட போர்முனையின் கட்டளைப்பீடமாகத் திகழும் பலாலி முக்கூட்டுப் படைத்தளத்தின் அச்சுறுத்தலிலிருந்து போராட்டத்தின் மையத்தளமாக திகழ்ந்த யாழ்ப்பாணத்தை பாதுகாப்பதற்கான ஒரு தற்காப்புச் சமருக்கு முகங்கொடுத்த அதேவேளை இவரது தலைமையில் பல வலிந்த தாக்குதல்களும் முன்னெடுக்கப்பட்டன.

குறிப்பாக

மன்னார் சிலாவத்துறை சிறிலங்கா படைமுகாம் மீதான தாக்குதல்.
ஆகாயக் கடல் வெளிச்சமரில் கடல்வழியிலான படைஇறக்கத்துக்கு எதிரான சமர்.
என்பன பிரிகேடியரின் படைத்துறை ரீதியிலான செயற்பாட்டை வெளிப்படுத்தக் கூடியன

ஆகாயக்கடல் வெளிச்சமரைப் பொறுத்த வரையில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் முன்னெடுத்த முதலாவது மிகப்பெரும் மரபுவழிச்சமராக அது அமைந்ததோடு அனைத்துலக ஊடகங்களினதும், படை ஆய்வாளர்களினதும் கவனத்தை ஈர்த்த ஒரு சமராகவும் அது திகழ்ந்தது. இந்தச் சமரில் கடல் வழியிலான படை இறக்கத்துக்கு எதிரான சமருக்கு பிரிகேடியரே பொறுப்பாகச் செயற்பட்டார்.

இந்தச் சமரில் விழுப்புண்ணடையும் வரை அவர் களத்தை வழிநடத்தினார். இக்காலப் பகுதியில் கடற்புலிகளின் உருவாக்கமோ அல்லது கிட்டுப் பீரங்கிப் படையணி மற்றும் குட்டிசிறி மோட்டார் படைப்பிரிவின் உருவாக்கமோ ஏதும் இல்லையென்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில்தான் 1993 ஆம் ஆண்டு காலப்பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் உள்ளார்ந்த ரீதியாக ஒரு மிகப்பெரும் நெருக்கடிக்கு முகம் கொடுத்த நிலையில் தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளராக பிரிகேடியர் நியமிக்கப்பட்டார்.

படைத்துறை ரீதியாக களங்களை வழிநடத்திய ஒருவர் ஒரு விடுதலை இயக்கத்தின் கடினம் மிக்க அரசியற் பணியை ஆற்றும் பொறுப்பையேற்றார்.

இவரது அரசியற்பணியானது இவர் அரசியல்துறைப் பொறுப்பாளராக பொறுப்பேற்ற 1993 ஆம் ஆண்டிலிருந்து 2007 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதி பல்வேறு வகையிலும் முதன்மை பெற்றதாகவுள்ளது.

ஏனெனில் உலகின் எந்தவொரு விடுதலை இயக்கமும் சந்தித்திராத மிகப்பெரும் நெருக்கடிகளுக்கு தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் முகங்கொடுத்துக் கொண்டிருந்த நிலையில் அரசியற்பணியை முன்னெடுக்க வேண்டிய சூழமைவு அவருக்குக் காணப்பட்டது.

இந்த நிலையிலும் அவர் நெருக்கடிமிக்க பல செயற்றிட்டங்களைச் சீர்செய்யும் வகையிலான வேலைத்திட்டங்களுக்கு தலைமை தாங்க வேண்டியிருந்ததுடன் அதனை வெற்றிகரமாகவும் செயற்படுத்தினார். இப்பணியை நாம் இரண்டு வகையில் நோக்கலாம்.

இராஜதந்திரத் தளத்தில்
மக்களின் தளத்தில்

ஒரு விடுதலை இயக்கத்தின் இலட்சியம், கொள்கை என்பவற்றை செவ்வனே மக்கள் மத்தியில் கொண்டு சென்று மக்கள் ஆதரவுத் தளத்தைக் கட்டியெழுப்பும் பணியை ஆற்றுவது மிகக் கடினமான ஒரு பணியாகும்.

தொடர்ச்சியான போர் நெருக்கடிகளுக்கு மத்தியில் வாழும் மக்களிடையே இப் பணியை ஆற்றுவதென்பது மிகப் பெரும் சிரமத்தைக் கொண்டது. ஆயினும் இப்பணியை பல்வேறு நெருக்குவாரங்களுக்குமிடையே அவர் முன்கொண்டு சென்றார்.

விடுதலை அமைப்பின் கொள்கையை முன்னெடுப்பது, மக்களை அணிதிரட்டுவது, விடுதலை இயக்கத்திற்கு எதிரான அனைத் துலகத்தின் இராஜதந்திர சமர்களுக்கு முகம் கொடுக்கின்ற அதேவேளை இலட்சியத்தின் மீது மக்களைத் தொடர்ந்து உறுதி கொள்ளச் செய்வது என்பவற்றோடு ஒரு நடைமுறை அரசிற்கான கட்டுமானங்களை உருவாக்கும் தலைமையின் எண்ணங்களுக்கு செயல் வடிவம் கொடுப்பது எனப் பரந்துபட்ட வேலைத்திட்டங்களை அவர் முன்னெடுக்க வேண்டியிருந்தது.
ஆயினும் இக்காலப்பகுதியில் இவர் ஒரு மிகப் பெரும் போர் இடப்பெயர்வு நெருக்கடிக்கும், இயற்கை அழிவுகளுக்கும் முகம் கொடுத்த மக்களின் புனர்வாழ்வு அபிவிருத்தி, மீள்குடியேற்றம் என்ற வாழ்வியல் நெருக்கடிகளையும் வெற்றிகரமாகக் கையாண்டார்.

யாழ்ப்பாண இடப்பெயர்வு
சுனாமி ஆழிப்பேரலை அனர்த்தம்
யாழ்ப்பாண இடப்பெயர்வைப் பொறுத்த வரையில் சுமார் ஐந்து இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் ஒரே இரவில் இடம்பெயர்ந்த சூழ்நிலையில் அதற்கு முகம் கொடுத்து வன்னியை நோக்கி இடம்பெயர்ந்த மக்களின் இருப்புக்கு வழிகோலியது அவரது அரசியற்பணிக் காலத்தில் ஈட்டிய மிகப்பெரும் சாதனையாக நோக்கத்தக்கது.

இத்தகையதொரு நிலையிலும் அரசியல்துறைக்கான சிவில் கட்டமைப்புக்கள் குலையாது அவற்றின் மீள் எழுச்சிக்கு பாடுபட்டமையானது முதன்மை மிக்க செயற்பாடாகும். இதேபோன்றுதான் 2004 ஆம் ஆண்டு தென்னாசியப் பிராந்தியத்தில் இந்தோனேசியாவின் சுமாத்திரா ஜாவா கடற்பரப்பில் ஏற்பட்ட நிலவதிர்வு காரணமாக கரையோரப் பிரதேசங்களில் ஏற்பட்ட ஆழிப்பேரலை அழிவிலிருந்து மக்களை துரிதகதியில் மீள்நிலைக்குக் கொண்டுவரும் செயற்றிட்டம் தேசிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டபோது அதனை வெற்றிகரமாக செயற்படுத்தி அனைத்துலக சமூகத்தின் பாராட்டு தலையும், கவனத்தையும் தாயகத்தை நோக்கி ஈர்த்தமையானது இவரது திறனிற்குச் சான்றாகும்.

அனைத்துலகத்தின் உதவிகள் முழுமையாக தமிழ் மக்களுக்கு வந்தடைவதை சிறிலங்கா அரசு தடுத்துக் கொண்டிருந்த நிலையில் எட்டக்கூடிய அனைத்து வளங்களையும் ஒன்றுதிரட்டி சிறிலங்காவை விஞ்சும் அளவுக்கு செயல்பூர்வமாக அதனை எதிர்கொண்டமையானது அனைத் துலக சமூகத்தின் கவனத்தை ஈர்த்தமைக்குக் காரணமாக இருந்தது.

இச்செயற்றிட்டமானது பாதிக்கப்பட்ட மக்களை துரிதகதியில் இயல்பு நிலைக்கு கொண்டுவர மிகவும் பயனுடையதாக அமைந்திருந்தது.

இது பிரிகேடியரின் அரசியற்பணியில் மக்களின் தளத்தில் அவர் ஆற்றிய மகத்தான பணியாக அமைந்தது என்றால் மிகையாகாது.
இதேவேளை தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் இவரது இராஜதந்திரப் பணி வித்தியாசமானதாகும்.

அரசுகளுக்கிடையான இறுக்கமான பிணைப்பினூடாக முன்னெடுக்கப்பட்டு வரும் இராஜீக உறவுகளுக்கு நடுவே விடுதலை அமைப்பொன்றின் புரட்சிகர அரசியலை அனைத்துலக நாடுகளின் ஒத்திசைவுப் போக்கின் நடுவே முன்கொண்டு செல்லுதல் என்பது ஒரு கடினமான பணியாகும்.

விட்டுக் கொடுப்புக்கள் என்ற பேரிலும் இணைந்து செயற்படுதல் என்ற கோதாவிலும் ஒரு விடுதலை அமைப்பை அரசியல் நீரோட்டத்துக்குள் கொண்டுவருதல் என்ற புனிதம் கெட்ட இராஜதந்திர வலைப் பொறிக்குள் வீழ்த்திவிட முயலும் அனைத்துலக இராஜதந்திர முயற்சிகளுக்கு ஈடு கொடுத்து இலட்சியத்தையும், தலைமையின் முடிவுகளையும் பாதுகாக்கின்ற இராஜதந்திரப் பாத்திரத்தை பிரிகேடியர் ஏற்றிருந்தார்.

இன்றைய அனைத்துலக சமூகமானது அனைத்துலக ரீதியாக குருட்டுத்தனப் பார்வையூடாக எல்லா இனங்களின் போராட்டங்கள் மற்றும் முன்னெடுப்புக்கள் மீது பயங்கரவாத முத்திரை குத்த முனைந்து வரும் இன்றைய உலக யதார்த்ததில் ஒரு புரட்சிகர இராஜதந்திரப் பணியை பிரிகேடியர் மேற்கொண்டிருந்தார்.

சமாதானம் அடிமைகளை உருவாக்கு கிறதென்றால் அதற்குச் சுதந்திரத்தை சாகடிக்கும் வல்லமை இருப்பதானாலேயேயாகும்.
அந்தச் சாகடிக்கும் வல்லமைக்குச் சவாலாக தமிழினத்தின் அரசியல் பணியை முன்னெடுத்து விடுதலைப் போராட்டத்திற்கு அரசியல் ரீதியான காப்பை பெறுவதென்பது மிகக் கடினமான பணியாகும்.

அதிலும் பல்வேறு நாடுகளிலும் தடைசெய்யப்பட்ட ஒரு விடுதலை அமைப்பின் அரசியல் பிரிவுத் தலைவராக நின்று சர்வதேச சமூகத்தின் எதிர் முகத்தை எதிர்கொள்வது இலகுவான காரியமல்ல.

பேச்சு என்ற சாக்கில் சர்வதேச சாசனங்களின் பொறிக்குள் வீழ்த்தி தமிழினத்தின் விடுதலைக் கனவை கலைத்துவிட முயலும் சூழ்ச்சிக்கு பலியாகாது சுதந்திர இயக்கத்தின் இலட்சியத்தை முன்கொண்டு செல்வதில் பிரிகேடியர் ஆற்றலோடு பணியாற்றினார்.

இதன்போது அனைத்துலக சமூகத்தின் அத்தனை இராஜதந்திரப் பிரயோக வடிவங்களுக்கும் அவர் முகங்கொடுக்க வேண்டியேற்பட்டபோதும் அவர் இலட்சியத்தை எந்தவொரு கட்டத்திலும் சிக்கலுக்கோ, சிரமத்துக்கோ உள்ளாக்க நேரிடும் வகையில் செயற்படவில்லை என்பது நோக்கத்தக்கது.

பிரிகேடியர் அவர்களின் பதின் மூன்றாண்டு கால அரசியற் செயற்பாடுகளின்போது இரண்டு சமாதான பேச்சுக்களை எதிர்கொண்டுள்ளார்.

யாழ்ப்பாணப் பேச்சுவார்த்தை. (முன்னாள் சிறிலங்கா சனாதிபதி சந்திரிகா காலம்)
நோர்வேயின் அனுசரணையுடனான சமாதானப் பேச்சுவார்த்தை.
இவ்விரு சமாதானப் பேச்சுவார்த்தைகளின் போதும் பலகட்ட சமாதானப் பேச்சுவார்த்தைகள் பிரிகேடியரின் தலைமையில் மேற்கொள்ளப்பட்டன.

அனைத்துலக சமூகத்தின் இராஜதந்திர சிக்கல்களுக்குள்ளோ, அனைத்துலக ஊடகங்களின் சிக்கலுக்குள்ளோ அகப்படாது அவர் நேர்த்தியாக முன்கொண்டு சென்றிருந்தார். இதில் நோர்வே அனுசரணையுடன் முன்னெடுக்கப்பட்ட அமைதியில் எட்டாவது கட்ட சமாதானப் பேச்சுவார்த்தையானது அதாவது ஜெனீவா பேச்சுவார்த்தை பிரிகேடியர் தலைமையேற்று முன்னெடுத்திருந்த மிகச் சிறந்த சமாதானப் பேச்சுவார்த்தைகளில் ஒன்றாகும்.

பிரிகேடியரின் இராஜதந்திரப் பணிக்காலத்தில் அவர் ஆற்றிய மிகச் சிறந்ததும் மிகவும் பாராட்டப்பட்டதுமான ஒரு இராஜதந்திரப் பணியாகவே ஜெனீவா நோக்கப்படுகிறது.

தமிழ் மக்களைப் பொறுத்தவரையில் தீர்வுகளோ இணக்கப்பாடுகளோ ஏதுமற்ற நிலையில் ஐந்தாண்டுகளாகப் பேச்சுக்கள் மட்டுமே நீடித்து வந்த நிலையில் தமிழ்மக்களுக்கு ஏற்பட்டிருந்த ஆகக் குறைந்தளவிலான மனிதாபிமான நெருக்கடிகளைக் கூட களையமுனையாத சிறிலங்கா அரசின் போக்கை ஜெனீவா சமாதானப் பேச்சுவார்த்தையில் அனைத்துலக சமூகத்தின் முன்னிலையில் வெளிப்படுத்தி ஜெனீவா சமாதானப் பேச்சுவார்த்தையின் முழுத்தோல்விக்கும் சிறிலங்கா அரசே பொறுப்பென்பதை அந்தச் சமாதானப் பேச்சின் போது அவர் நிரூபித்திருந்தார்.

அத்தோடு ஜெனீவா- சமாதானப் பேச்சுவார்த்தைக்கு தமிழர் தரப்பில் தலைமை தாங்கிய பிரிகேடியர் சிறிலங்கா அரசின் தரப்பில் பேச்சு நாகரிகத்தைக் கூட கடைப்பிடிக்காத அநாகரிகப் போக்கு காணப்பட்ட நிலையிலும் பிரிகேடியர் நிதானமாகவும் அறிவுபூர்வமாகவும் ஜெனீவா- பேச்சுவார்த்தையை கையாண்டிருந்தமையை இராஜதந்திர வட்டாரங்கள் அன்று பாராட்டிப் பேசியிருந்தமை கவனிக்கத்தக்கது.

ஆயினும் இந்தப் பேச்சுவார்த்தை தோல்வியடைந்த நிலையில் மீண்டுமொரு பேச்சுக்கான திகதியை நிர்ணயிக்கும் ஒரு வலுவிழந்த கோரிக்கையை பிரிகேடியரின் முன்னிலையில் அனுசரணையாளர்கள் முன்வைத்த போது அவர் உறுதியாக அக்கோரிக்கையை நிராகரித்து தமிழர் தரப்பின் உறுதியை நிலை நிறுத்தியிருந்தார்.

ஒரு கட்டத்தில் மென்போக்கு இராஜதந்திர அணுகுமுறையிலிருந்து சற்றே விலகி அச்சுறுத்தும் இராஜதந்திர அணுகுமுறையை அனைத்துலக சமூகம் கையாண்டபோது கூட பிரிகேடியர் புலிகளுக்கே உரித்தான உறுதியோடு அவற்றை நிராகரித்திருந்தார்.

அதாவது அடுத்த கட்டப் பேச்சுக்கான திகதி நிர்ணயம் செய்யப்படாது விட்டால் தமிழர் தரப்பு பேச்சுக்குழு கொழும்பினூடாக பயணம் செய்வதில் சிக்கல்கள் ஏற்படும் என்ற தொனியில் மிரட்டல் இராஜதந்திரத்தை பிரயோகித்த போது பிரிகேடியர் ஜெனீவாவில் வைத்து சர்வதேச இராஜதந்திரிகளுக்கு புலிக்குணத்தை வெளிப்படுத்தினார்.

அந்தச் சம்பவத்தைப் பிரிகேடியரே பின்னர் பின்வருமாறு தெரிவித்திருந்தார். அதாவது அடுத்த பேச்சுக்கான திகதியை நிர்ணயம் செய்யாது போகும் பட்சத்தில் கொழும்பு கட்டுநாயக்க விமான நிலையத்தினூடாக பிரயாணம் செய்வதில் சிக்கல்கள் ஏற்படலாம் என்பதற்கு… இதுவொன்றும் எங்களுக்குப் பிரச்சினையில்லை. இந்தியாவினுடைய சமாதான முயற்சியின்போது இந்தியாவின் தவறான செயற்பாடு காரணமாக நாங்கள் அப்போது பன்னிரெண்டு போராளிகளை இழந்தோம். இப்போதும் ஏதேனும் சிக்கலை ஏற்படுத்தினால் மேலும் பதின்மூன்று போராளிகளை எமது விடுதலை இயக்கம் இழக்க நேரிடும். ஆனால் இது நோர்வேயின் சமாதான முயற்சியில் ஒரு புதிய தொடக்கமாக இருக்கும் எனச் சாவிற்கு அஞ்சாத புலிகளின் குண இயல்புநிலையில் மிகக் காட்டமாக அனுசரணையாளர்களுக்கு பதிலளித்தார்.

இது எந்தவொரு சூழலிலும், எந்தவொரு தளத்திலும் தளம்பாத பிரிகேடியரின் உறுதிமிக்க இராஜதந்திரப் பணிக்கு மிகப்பெரும் சான்றாகும். பின்னர் தமிழர் பேச்சுக்குழுவினர் பாதுகாப்பாகப் பயணம் செய்வது குறித்து அனுசரணையாளர்கள் வழமையைவிட அதிக சிரத்தையை எடுத்திருந்ததுடன் அதில் அவர்கள் கூடுதல் கவனம் செலுத்தியதாக தெரிவித்திருந்தார்.

இவ்வாறுதான் பிரிகேடியரின் இராஜதந்திரப் பணியும் மிகக் காத்திரமானதாக அமைந்தது.

பிரிகேடியர் தனது இருபத்து மூன்று வருடகால விடுதலைப் பயணத்தில் பதின்மூன்றாண்டு காலம் தொடர்ச்சியாக படைத்துறைப் பணியையும் பதினான்காண்டு காலம் அரசியல் தளத்தில் இராஜதந்திரப் பணி, மக்கள் பணியென விடுதலை அமைப்பின் வளர்ச்சிக்கும், மக்களின் மேம்பாட்டுக்குமென அயராது உழைத்த விடுதலை இயக்கத்தின் செயற்பாட்டாளராகத் திகழ்கிறார்.

பிரிகேடியரின் இறுதிக் காலப்பகுதியானது அரசியல் ரீதியாகவும், இராஜதந்திர ரீதியாகவும், படைத்துறை ரீதியாகவும் அவர் புடம் போடப்பட்ட ஒரு இளம் தலைவராக, தேசியத் தலைவர் அவர்களின் எண்ணத்திற்கு அமைவாக உருவாகியிருந்தார் என்றால் மிகையாகாது

நன்றி : நெருடல் இணையம்

தமிழ்செல்வனுக்கு சிலை: இலங்கை எதிர்ப்பு


தமிழீழ விடுதலைப்புலிகளின் முன்னாள் அரசியல்துறைப் பொறுப்பாளர் தமிழ்ச்செல்வனின் சிலை பிரான்ஸ் நாட்டில் திறக்கப்படவுள்ளதற்கு இலங்கை அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

2007 ம் ஆண்டு நவம்பர் மாதத்தில் வீரமரணமடைந்த அவரின் மூன்றாம் ஆண்டு நினைவாக பிரான்ஸ் நாட்டில் அவரது சிலை திறக்கப்படவுள்ளது.

ஆனால் இச்சிலை பிரான்ஸில் திறக்கப்படுவதற்கு பிரான்ஸுக்கான இலங்கைத் தூதுவர் எதிர்ப்புத் தெரிவிப்பார் என்று இலங்கை அயலுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இச்சிலை திறக்கப்படவுள்ள நகரின் பிரெஞ்சு மேயருக்கு தமது எதிர்ப்பைத் தெரிவித்து கடிதம் எழுதவுள்ளதாக இலங்கை அயலுறவுத் துறை அமைச்சக பேச்சாளர் பந்துல ஜயசேகர தெரிவித்தார்.